வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 30, 2009

Times Now செய்தது சரியா...??

நேற்று முன் தினம் (26.9.09), இந்தியா vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தேன். வழக்கம் போல் இந்தியா அணி சோதிப்பியது. கொஞ்ச நேரத்தில் மழை வந்து ஆட்டத்தை பாதித்திருந்தது. மழை நிற்க வேண்டும் என்று பலர் ஆர்வமாக கடவுளை வேண்டினர். காரணம், இதில் இந்தியா வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும். அப்போது, Times Nowவில் இந்தியா விளையாடிய 42.3 ஓவர்களை கடுமைகாக விமர்சித்தனர்.

பிரவின் குமார் 'ரன் அவுட்' விட்டதை, அடிப்படை கூட தெரியாமல் Stump முன்னாடி நின்றதையும், சச்சின் டைவ் அடித்ததையும் கடுமையாக விமர்சித்தார்கள். கிட்ட தட்ட 'அடிப்படையே' தெரியாமல் விளையாடுவதாக பேசிக் கொண்டார்கள். இதை சொன்னது கிரிக்கெட் ரசிகர்கள் அல்ல... இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரன் மோரே !!

விளையாட்டு இன்னும் முடியவில்லை. மழை நின்றால் மீண்டும் இந்தியா சிறப்பாக விளையாடலாம். அதற்குள் இந்தியா தோல்வி அடைந்து விட்டது போல் விமர்சித்து Times Now டி.வி. ஒளிபரப்பினர். ஒரு வேலை இந்த ஆட்டம் தொடங்கி இந்தியா விளையாடி இருந்தால், 'What a amazing performance !!' என்று புகழாரம் சூட்டியிருப்பார்கள்.

வெற்றியோ தோல்வியோ விளையாட்டில் சகஜம். இந்தியா தோல்வி பெரும் போது கிரிக்கெட் வீரர்கள் வீடு தாக்கப்படுவதும், உருவ பொம்மை எரிப்பதற்கும் இது போன்ற ஊடகங்களும் ஒரு காரணமாக தான் இருக்கின்றன.

விமர்சிப்பது தவறில்லை. ஆனால், ஆட்டம் முடியாமல் இருக்கும் போது பாமரன் போல் கடுமையான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

Tuesday, September 29, 2009

போக்குவரத்து



பெரும் கூட்டத்துடன் '27C' திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. கோயம்பேடு தாண்டியவுடன் பலரால் சரியாக மூச்சு கூட விட முடியவில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொள்வதும், மற்றவரின் வேர்வை நாற்றத்தை சுவாசிப்பதுமாக பெரூந்தில் பயணம் செய்தனர். சென்னையில் காலை பத்து மணி பேரூந்து பயணம் என்றால் ‘நரகம்’ என்று எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. அந்த கூட்ட நெரிசலிலும் சந்தோஷமாக பத்து கல்லூரி மாணவர்கள் வந்தனர்.

புட் போர்ட்டில் பஸ்யை தட்டி கொண்டு, ‘வந்தனம் வந்தனம்... அள்ளி புசு சந்தனம்’ என்று 'கானா' பாடலை பாடி நரக பேரூந்தில் உல்லாசமாக பயணம் செய்தனர்.

*

“எவ்வளவு நேரம் தான் பஸ்ஸீக்காக காத்திருக்கிறது” - தன் பக்கத்தில் இருந்தவரிடம் ஒரு முதியவன் புலம்பினார்.

அவரைப் போல் பலர் பெரூந்துநிலையத்தில் காத்திருந்தனர்.

அதில் பயணம் செய்த நடுத்தர வயதினர் ஒருவர் " படிக்கிற பசங்களா இது...! எங்க இதுங்க உருப்பட போகுது...." என்று கடிந்துக் கொண்டார். அவர் சொல்வதை கேட்டு பக்கத்தில் இருந்த இன்னொரு நடுத்தர வயதவரும் அந்த மாணவர்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.

கண்டேக்டர் அந்த மாணவர்களிடம் பேரூந்து அடிப்பதை நிருத்த சொல்லியும் அவர்கள் நிருத்தவில்லை. அதில் வந்த நடத்தர வயதினர்களும் அவர்களை திட்டுவதை நிருத்தவில்லை. பேரூந்து ஒவ்வொரு இடத்தில் நிற்க்கும் போதும் பேரூந்துக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அந்த கல்லூரி மாணவர்களுக்கும் வரவில்லை. இப்படி பல 'இல்லை' நகர பேரூந்துக்களுக்கு பொருந்தும்.

*

பெரும் பாலானவர்கள் தி.நகர் செல்பவர்களாக இருந்ததால் அந்த பேரூந்தில் கூட்டம் சிறிது கூட குறையாமல் இருந்தது. எந்த வசை சொற்களுக்கும் கவலைப்படாமல் அந்த மாணவர்கள் ஸ்ருதி குறையாமல் பாடி கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அந்த பேரூந்து மாலிங்கபுரத்தில் வந்துதது. புதிதாய் கட்டிய மேம்பாலத்தின் மெதுவாக ஏற தொடங்கியது. அந்த மேம்பாலத்தில் பாதி இடத்தை தாண்டிய நிலையில், வெட்கப்படும் கன்னிப்பெண் போல் பேரூந்து திடீர் என்று நின்றது.

'27C' பின் தொடர்ந்த எல்லா வண்டிகளும் நின்றன. பொறுமை இழந்த சில வண்டிகள் எதிரில் வரும் வண்டியை பற்றி கவலைபடாமல் '27C' முந்திக் கொண்டு சென்றனர். அப்படி ஒரு கார் முந்த முயற்சிக்க எதிரில் வந்த ஆட்டோ செல்லும் வழியை மறைத்தது. ஆட்டோக்காரன் சரியான வழியில் வந்ததால் காருக்கு வழி கொடுக்காமல் இருந்தான். காரும் பின்னாடி எடுக்க முடியாமல் மற்ற வண்டிகள் நின்றுக் கொண்டு இருந்தன. பத்து நிமிடத்திற்கு மேல் அந்த மேம்பாலம் முழுக்க வண்டிகளால் நிரம்பி வழிந்தது. எல்லோருக்கும் வழி வேண்டும் என்றால் '27C' அந்த மேம்பாலத்தில் இருந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்ற வண்டிகளுக்கும் செல்ல வழி கிடைக்கும்.

கண்டக்டர் தன் கையில் இருந்த விசிலை ஊதி பயணம் செய்த அனைவரையும் பேரூந்தை தள்ள அழைத்தார். அது வரை பேரூந்தில் பாடி கலாட்டா செய்த மாணவர்கள் இறங்கி தள்ள வந்தனர். பேரூந்தில் நின்று பயணம் செய்த சில பேர் தங்கள் அலுவலகம் அருகில் இருப்பதால் இறங்கி நடந்தே சென்றனர். அமர்ந்திருந்த சிலர் இறங்கி தள்ள முன் வந்தது இறங்க, நின்று வந்தவர்கள் அந்த இடத்தில் அமர்ந்தனர். மேம்பாலத்தின் இன்னும் எந்த வண்டியும் முன்னே செல்லவில்லை.

போக்குவரத்து காவல் அதிகாரி வந்து கத்த, ஒரு சிலர் மனமுவந்து இறங்கி வந்து தள்ளினார்கள். பின்னாடி நின்ற வண்டிகள் ஹாரன் அடித்துக் கொண்டு இருந்தனர். அது வரை கல்லூரி மாணவர்களை திட்டிய நடுத்தர வயதினர்கள் ஹாரன் அடிக்கும் வண்டிகளை திட்ட தொடங்கினர். ஒரு சிலர் மனது மாறி பேரூந்தை தள்ள இறங்கியதால் மெல்ல மெல்ல முன்னே சென்றது. பாட்டு பாடிய கல்லூரி மாணவர்கள் பேரூந்தை தள்ள, அந்த நடுத்தர் வயதினர்கள் இளைஞர்கள் முதுகில் சவாரி செய்யும் அரசியல்வாதி போல் அமர்ந்துக் கொண்டு வந்தனர்.

Monday, September 28, 2009

கலைஞரும், கலைவாணரும்

அண்ணா அவர்கள் முன்பே கலைவாணரிடம் கலைஞர் பேச்சு திறனைப் பற்றி பாராட்டி பேசிருந்தார். தனது 'மருமகள்' படத்துக்கு வசனம் எழுத அவரை அழைத்தார்.

"நீ நல்லா பேசுவேன்னு அண்ணா சொல்லியிருக்காரு, நான் இந்த ரெக்கார்டை ஆன் பண்றேன்.ஏதாவது பேசு பார்க்கலாம் !" என்று அங்கிருந்த ரெக்கார்ட் பிளேயரில் பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தார்.

"எதைப் பற்றி பேச ? தலைப்பு கொடுங்க, பேசுறேன் !'

"எதைப் பற்றியாவது பேசுய்யா. படத்துக்கு கதை வசனம் நீதான் எழுதப் போற, அதுல எந்தவிட மாற்றமும் இல்லை. நீ பேசுறதை நாங்க கேக்கணும். ஏதாவது பொதுவா பேசு"

கலைஞர், "எதைப் பற்றி பேச ?" என்று ஆரம்பித்தார். திருவள்ளுவரின் பெருமையைப் பேசவா, அவர் எழுதிய அறத்துப் பால் பற்றிப் பேசவா, சிலப்பதிகாரத்தைப் பற்றி பேசவா ? புகார் காண்டத்தைப் பற்றி பேசவா அல்லது இளங்கோவடிகளைப் பற்றிப் பேசவா, பாரதியைப் பற்றி பேசவா, அவர் பாடிய குயில் பாட்டு பற்றி இப்படியே கலைஞர் பேசிக் கொண்டே இருந்தார்.

ரெக்கார்ட் பிளேயர் முடிந்ததும் தெரியாமல், கலைவாணர் கன்னத்தில் கைவைத்து அவர் பேஉவதையே ரசித்துக் கொண்டிருந்தார்.

**



'மணமகள்' படத்துக்கு வசனம் எழுத அவ்வளவு பணம் வேண்டும் என்றார் கலைவாணர்.

'நீங்களே சொல்லுங்க' என்றார் கலைஞர்.

கலைஞர் கடைசி வரை எவ்வளவு வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லவில்லை.

முடிவாக கலைவாணர் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அதைச் சுருட்டி கலைஞர் கையில் கொடுத்தார். கலைவாணர் அந்த சீட்டில் நான்கு புஜ்ஜியத்தை எழுதியிருந்தார்.

ஏதோ விஷயமிருக்கிறது என்று புரிந்து கொண்ட கலைஞர், 'சரி சம்மதம்' என்று சொல்லிவிட்டார்.

"அப்படியா ! நான்கு பூஜ்ஜியங்கள் போட்டிருக்கிறேன். சம்மதம் என்கிறீர்களே ? நான் நம்பலாமா ?" என்று கலைவாணர் கேட்டார்.

"ஆமாம், சம்மதம் தான்"

"சீட்டைக் கொடுங்கள்" என்று சீட்டைக் கையில் வாங்கிக் கொண்டு, "இதில் எங்கே ஒன்று போடுவது ?" என்று கேட்டார்.

கலைஞர்,"எங்கு வேண்டுமானாலும் போடுங்கள்" என்றார்.

கலைவாணர் '00001' என்று எழுதிக் கொடுத்தார். சீட்டை வாங்கிய கலைஞர் அவருடைய குறும்பைப் புரிந்து கொண்டு அந்தச் சீட்டைத் தலைகீழாகத் திருப்பி 'சரி தான்' என்றார். தலைக்கீழாகத் திருப்பிவிட்டதில் சீட்டு '00001' என்பது '10000' என்று மாறியிருந்தது,

கலைவாணர் சிரித்துக் கொண்டே அந்த தொகையை தருவதாக சம்மதித்தார்.

**


ஒரு முறை கலைஞரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார் கலைவாணர். இருவரும் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது கலைஞரின் டிரைவர் காருக்க்கு பெட்ரோல் போட கலைவாணரின் அலுவலகத்தில் பணம் கேட்டிருக்கிறார். ஒரு பெட்ரோல் கூப்பனை எடுத்துக் கொடுத்த மேனேஜர், 'இனிமேல் இப்படியெல்லாம் கலைவாணர் வீட்டுப் பணத்தை அழிக்காதே' என்று சொல்லிவிட்டார்.

கலைஞருக்கு இந்த விஷயமே தெரியாது.

ஆனால், அடுத்த நாள் அந்த மேனேஜர் கலைவாணரிடம் அக்கறை கொண்டவராகதான் நடந்து கொண்ட விஷயத்தை தன்னுடைய அக்கறையை அவரிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட கலைவாணர் அப்போது ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து காரில் ஏறி நேராக கலைஞர் வீட்டு வாசலில் இறங்கினார். வீட்டில் கலைஞர் இல்லை. அவர் அம்மாதான் இருந்தார். ஆயிரம் பெட்ரோல் கூப்பன்களை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்து, "இதை வைத்துக் கொண்டு தம்பி வந்ததும் வேண்டிய அளவு வெட்ரோல் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

விஷயம் கேள்வி பட்ட கலைஞர், அந்த கூப்பன்களை எடுத்துக் கொண்டு கலைவாணர் வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.

Friday, September 25, 2009

வீர விளையாட்டு

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

Thursday, September 24, 2009

கதை கதையாம் காரணமாம் !!

சிறுகதை பயிற்சி பட்டறையில் கொடுத்த புத்தகம். நண்பர் சிவராமன் மட்டும் இந்த புத்தகம் கொடுக்கவில்லை என்றால், இது போன்ற புத்தகங்களை வாசித்திருப்பேனே என்பது சந்தேகம் தான். போதுவாக, நான் எழுத்தாளர்களின் நேர்காணலை விரும்பி வாசிப்பதில்லை. காரணம், எழுத்தாளரின் எழுத்துகளை நம் கையில் வைத்திருந்தாலும், எழுத்தாளனை தூரத்தில் வைத்திருப்பது தான் ஒரு வாசகனுக்கு நல்லது. பல ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.

சில எழுத்தாளர்கள் அவர்கள் எழுதியதற்கும், நடை முறையில் இருப்பதற்கும் நேர் எதிராக இருப்பார்கள். அது அவர்களின் சொந்த விஷயம். படிக்கும் வாசகன் தான் ஏமாறப்படுகிறான். முடிந்தவரையில் எழுத்தாளர்கள் தள்ளி நின்று வாசிப்பேன். இது என்னுடைய அறிவுரை அல்ல... அனுபவம்.

சரி... புத்தகத்திற்கு வருவோம். இந்த புத்தகத்தில் வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லது தலித் சமூகத்தை பற்றி எழுதுபவர்கள். 19 எழுத்தாளர்களின் பேட்டியை ஒருங்கிணைத்து புத்தகம் தொகுப்பது மிக பெரிய காரியம். சமிபத்தில் புத்தக தொகுப்பில் ஈடுப்படும் போது அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த நேர்காணல் ‘ச.தமிழ்செல்வன் ‘ பேட்டி தான்.

'மன்னரை பாடமாட்டேன் மகேசனைத் தான் பாடுவேன்' என்று சொன்ன தியாகையின் குரல் முற்போக்கானது என்கிறோம். 'கடவுளை மட்டுமே பாடுவேன் மனிதனைப் பாடமாட்டேன்' என்று பின்னை வந்த குரலை பிற்போக்கு என்கிறோம். மனிதனைப் பாட வந்த பாரதியை முற்போக்கானவன் என்போம். காலத்தில் வைத்துத்தான் சொல்ல முடியும்.

முற்போக்கான சிந்தனை அழகாக விளக்கியிருக்கிறார். தமிழ்செல்வனின் எழுத்துக்களில் மட்டுமல்ல பேட்டியிலும் கிராமத்து வெப்பக் காற்று வீசுகிறது.

“தான் பிறந்த சொந்த சாதிக்குத் துரோகம் செய்யவும் தயங்காத மனநிலை உள்ளவன் தானே உண்மையான படைப்பாளி. அவன் எழுதலாம்.”

நல்ல அறிவுரை. ( ம்.... கண்டிப்பா என் சமூகத்தை திட்டி ஒரு கதை எழுதனும். )

“'உன் நண்பனைச் சொல். உன்னைச் சொல்கிறேன்' என்கிற ஆங்கில பழமொழி போல, 'எழுத்தாள யார் என்று சொல். அவன் எழுதியதை படிக்காமலே விமர்சிக்கிறேன்' என்கிற போக்கும் உள்ளது.” என்று சு.சமுத்திரம் சொல்லும் போது படிக்காமல் எழுத்தாளர்களை விமர்சிப்பவர்களை இரண்டு வரியில் விளக்கிவிட்டார்.

'சோலை' சுந்தர பெருமாள், “குடியரசு தலைவராக ஒரு தலித் வர முடிகிறது. ஆனால், பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித் வர முடியவில்லை.” என்று சொல்லும் போது, ஒருவன் வளராமல் இருப்பதற்கு சாதியை காரணம் காட்டும் மன போக்கினை உணர்த்துகிறார். இன்னும் பல கிராமத்தில் இப்படி தான் இருக்கிறது இதில் சொல்லும் பல எழுத்தாளர்களின் பேட்டியில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

கடைசி பக்கம், இமையன் 'பச்' மிகவும் அருமை.

எழுத்தாளன் என்பவன் வியாபாரி அல்ல; தொழில் நுட்பக்காரணுமல்ல. எழுத்தாளன் முதலில் விட வேண்டியது எழுத்தாளன் என்கிற திமிரை. இலக்கியம் எதையும் சொல்லக் கூடாது. உணர்த்த வேண்டும் என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கு தெரிய வேண்டும்.

இதில் பல எழுத்தாளர்கள் தாமரை, செம்மலர் இதழில் எழுதியவர்கள். மூன்று தலைமுறையை சேர்ந்த கதாசிரியர்களுடன் பயணம் செய்த அனுபவம் இந்த புத்தகம் கொடுக்கிறது.

எத்தனை நாவல் நான் வாசிக்காமல் இருக்கிறேன். எத்தனை எழுத்தாளர்கள் பற்றி தெரியாமல் இருக்கிறேன். இன்னும் நான் சரியான வாசகனே இல்லை என்று உணர்த்துவது போல் இருந்தது இந்த புத்தகம். முடிந்தவரை இதில் சொல்லப்படும் பத்து நாவலையாவது படித்துவிட வேண்டும்.

பயிற்சி பட்டறைக்கு வந்தவர்கள் யாராவது இந்த புத்தகம் படிக்காமல் இருந்தால்........... தயவு செய்து படியுங்கள்

சூரியசந்திரன்
விலை.120, பக்கங்கள்.224
சந்தியா பதிப்பகம்.

Wednesday, September 23, 2009

கமலஹாசன் ஒரு தீர்க்கத்தரிசியா ???

சமிபத்தில் எனக்கு வந்த Forward மெயிலில் ….

சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி.



'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான்.

1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம்.

1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின.

2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை.

2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி.

2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர்.

இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'

இந்த மெயில் படித்தவுடன், "எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாங்களோ " நினைச்சேன்.

இப்போது கமல் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படம் வந்துள்ளது. அதே சமயம், அண்ணா பிறந்த நாளுக்காக கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட 10 தீவிரவாதிகளை தமிழக அரசு விடிவித்துள்ளது.

உண்மையிலே, கமல் ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தால் வெளியான தீவிரவாதிகளில் நிலைமை....???

அட பாவிங்களா !!!!!!!

என்னையும் உங்கள மாதிரி யோசிக்க வச்சிட்டிங்களே !!!

Tuesday, September 22, 2009

சிவகுமார் : இது ராஜப்பாட்டை அல்ல

சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கர்வம், ஆணவம், வில்லத்தனம், கருணை, அன்பு என்று எல்லா பாவங்களை முகத்தில் காட்ட கூடிய நடிகர் சிவகுமார். சமிபக் காலமாக நடிப்பு ஓய்வு கொடுத்து விட்டு, ஒரு இலக்கியவாதியாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்.

சமிபத்தில், விஜய் டி.வி அவர் சொர்பொழிவாற்றிய 'கம்பராமாயணம்' கேட்டு அதிர்ந்தே விட்டேன். கைத்தேந்த இலக்கியவாதியை விட மிக அழகாக பேசினார். இவ்வளவு நாள் வெள்ளித்திரை நடிப்புக்குள் தன் திறமை மறைத்து வைத்திருக்கிறார் என்று என்னால் நம்ப முடியவில்லை.



இந்த புத்தகம் அவருடைய சுய வரலாறு என்பதால் முதல் பத்து அத்தியாயங்கள் அவர் அம்மா, குடும்பம், கிராமம் என்று சுற்றி வருகிறது. அதன் பிறகு சினிமாவில் தன்னுடன் வேலை செய்த சக நடிகர், நடிகைகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

இவர் எழுதிய 'சிவாஜி' பற்றின கட்டுரையை முன்பே பதிவு போட்டுயிருக்கிறேன். இந்த புத்தகத்தில் என்னை மிகவும் பாதித்த கட்டுரை இது என்று சொல்லலாம். 'பேராசை பிடித்த அந்த கலைஞன்' சிவாஜி நீங்கள் சொல்லும் போது சிவாஜி ஸார் மேல் சிவகுமார் வைத்திருக்கும் உரிமை தெரிகிறது.

அடுத்த குறிப்பு.... ஜெய் சங்கர் பற்றிய கட்டுரையை சொல்ல வேண்டும். பல தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் இருந்தாலும், முகம் சுளிக்காமல் 'Call sheet' கொடுப்பவர் ஜெய் சங்கர். தன்னால் மற்றவர்களுக்கு என்றும் வேலை இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்.

இவரை போற்ற நல்லவர்களை சினிமா என்றும் ஏமாற்றாமல் விட்டதில்லை. இரண்டாவது நாயகனாக, நோயாளி நாயகனிடம் அடிவாங்கும் வில்லனாகவும் நடித்தார். வல்லவன் ஒருவன், சி.ஐ.டி சங்கர் என்று தமிழ் நாட்டு 'ஜெம்ஸ் பாண்டாக வந்தவர் கடைசி கிடைத்த பாத்திரத்தில் நடித்ததில் தன் பழைய அடையாளத்தை இழந்ததை நினைத்து அவர் வருந்தியதை பதிவு செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், நாகேஷ், கண்ணதாசன்,ரவிசந்திரன், கே.பி., எஸ்.எஸ்.வாசன் என்று தமிழ் சினிமாவின் ஐம்பது ஆண்டு நாயகர்களை இந்த புத்தகத்தின் மூலம் சிவகுமார் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.

டைரக்டர் புல்லய்யா சிவாகுமாரிடம்

" டேய் பேபி.. ( பேரன் வயதிலிருந்து என்னை டைரக்டர் அப்படி தான் அழைப்பார் ) நடிகன் வாழ்க்கை, ரேஸ்ல ஒருடற குதிரை மாதிரி ! ஆரோக்கியமாக இருந்து மைதானத்தில் ஒடற வரைக்கும் தான் அதுக்கு மரியாதை ! அடிபட்டுக் கால் உடைஞ்சாவோ , வேறு ஆபத்து நேர்ந்தாலோ அந்த குதிரையைச் சுட்டுடனும். அது மாதிரி கலைஞன் வாழ்க்கை."

தன் திரையுலக வாழ்க்கையில் தனக்கு அறிவுரை கூறிய மனிதர்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

"வர்றவங்களுக்கு எது பிடிக்குதோ, அதைதான் நாங்க தர்றோம் என்று விலைமாது சொல்வதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு..." என்று சொல்லும் போது மசாலா படம் எடுப்பவர்களை கடுமையாக சாட்டியும் உள்ளார். நல்ல கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க வருவேன் என்ற அவரது நம்பிக்கையை தன் எழுத்துகளால் சொல்கிறார்.

பாவம் ! நல்ல கதை எழுத ஆட்கள் தான் இல்லை.

சிவகுமார் சார்!

இவ்வளவு நாள் எழுதாமல் இருந்தது வாசகரிகளின் துரதிஷ்டம் !
இப்போது நீங்கள் எழுதியது வருங்கால வாசகர்களின் அதிஷ்டம் !

Monday, September 21, 2009

கலைஞர் எழுத்துகளை வெட்டிய சென்சார் போர்ட் !!

இன்று சென்சாரின் 'A' Certificate வாங்கி படம் வெளிவருவதை பெருமையாக பல தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், பழைய தமிழ் சினிமா வசனத்தில் கூட அரசியல், ஆபாசம் இருக்க கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறது என்பதற்கு நான் படித்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறேன். இந்த சம்பவத்திலும் வெட்டப்படுவது கலைஞர் அவர்கள் எழுதிய எழுத்துகள் தான் !



1.

கலைஞர் அவர்கள் திருச்சி சிறைச்சாலை இருந்த நேரம். அவர் வசனம் எழுதிய 'திரும்பி பார்' படம் சென்சாருக்குச் என்ற போது இரண்டாயிரம் அடி வெட்டி விடச் சொல்லிவிட்டார்கள். 'திரும்பிபார்' படத்தின் கதை.... காதலித்த பெண் தந்தையை மணந்துக் கொள்கிறார். இருந்தும், அவளை அன்னையாக பார்க்காமல் காதலியாக பார்க்கும் இளைஞன் பற்றிய கதை. இதில், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அன்னையை காதலிக்கும் இளைஞனாக நடித்திருப்பார். காதலியாகவும், முதியவரை மணந்த மனைவியாகவும் 'பத்மினி' அவர்கள் நடித்திருப்பார்.

இப்போழுது அந்த பாடத்தை யார் பார்த்தாலும் அதிலே வெட்டுவதற்கு எதுவும் இல்லை என்று தான் சொல்லுவார்கள். அன்றைய தேதியில் வெட்டினால் தான் படம் வெளியாகும் என்ற நிலைமை. இதை கேள்விப்பட்ட மார்டன் தியேட்டர் பட அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் கலைஞரை சிறைச்சாலைக்கு வந்து பார்த்து "நான் படத்தை வெளியிடப் போவதில்லை" என்றார்.

உடனே, கலைஞர் " வெளியிடுங்கள்" என்று சொன்னார்.

"இரண்டாயிரம் அடியை வெட்டிவிட்டு எதை வெளியிடுவது ?" என்றார்.

"எந்தெந்த வசங்களை வெட்ட சொல்கிறார்கள்?" என்று கலைஞர் கேட்டார்.

சில வசனங்களைச் சொல்லி, இதையெல்லாம் வெட்டச் சொல்கிறார்கள் என்றார். அதிலே ஒரு வசனம்.

"கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரமேறி நிற்கின்ற தலைவர்களே ! அந்த கொள்கையிலிருந்து எத்தனை முறை நீங்கள் வழுக்கி விழுந்திருக்கிறீர்கள். ஒரு முறை திரும்பி பாருங்கள்". இது தலைவர்களுக்காகச் சொல்லப்பட்டது. அந்த காலத் தலைவர்களும் சரி, இந்த காலத் தலைவர்களும் சரி கொள்கையிலிருந்து வழுக்கி விழும் தலைவர்களுக்காக எழுதப்பட்டது. அதை வெட்டிய சென்சார் அதிகாரி " கோபுரத்திலிருந்து ராமானுஜர் கீழே குதித்தார். அதைக் கருணாநிதி கிண்டல் செய்திருக்கிறார். கோபுரத்திலிருந்து விழுந்த தலைவர்களே என்று சொல்லுவது ராமானுஜரைத்தான். ஆகவே அதை அனுமதிக்க மாட்டோம் " என்று கூறி வெட்டி விட்டார்கள்.

படம் வெளியிட முடியாது என்று டி.ஆர்.சுந்தரம் முடிவெடுத்த போது எவி.எம்., எஸ்.எஸ்.வாசன் அவர்கள் அவரை அழைத்து சென்று சென்சார் அதிகாரியோடு மறுபடியும் சமாதானம் செய்து 2000 அடி என்பதை 1500 அடி என்று வெட்டி, 500 அடியைக் காபாற்றிக் கொடுத்து அந்த படத்தை வெளியிட்டார்கள்.

2.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'காஞ்சி தலைவன்' என்ற படத்திற்கு கலைஞர் வசனம் மட்டும் இல்லாமல் பாடலும் எழுதியிருக்கிறார்.

அதில், எம்.ஜி.ஆர். அவர்கள் 'காஞ்சி மன்னனாக' நடித்திருந்தார். எதிரி நாட்டு படைகளை எதிர்த்து எம்.ஜி.ஆர் படைகள் செல்லும் போது 'வெல்க காஞ்சி... வெல்க காஞ்சி... வெல்க வெல்கவே...' என்ற பாடல் எழுதியிருந்தார்.

இந்த பாடலை கேட்ட சென்சார் அதிகாரி, " இதில் வரும் வெல்க காஞ்சி என்பதை யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்கள்.

எம்.ஜி.ஆர்., கலைஞர் என்று பலர் கூறியும், சென்சார் அதிகாரி இந்த பாடலை "பிரச்சார பாடலாக" இருப்பதால் மறுத்தார்.

இறுதியில், அந்த பாடல் 'வெல்க நாடு... வெல்க நாடு... வெல்க வெல்கவே...' என்று மாற்றப்பட்டு வெளியிட்டார்கள்.

'வெல்க நாடு' என்பதால் எதிரி படைக்கும் இதும் பொருந்தும் என்று அந்த பாடலை கலைஞரே கிண்டலாக சொன்னார்.

Sunday, September 20, 2009

ஒரு தந்தையின் கனவு



பேனா எடுத்தேன்
கவிதை எழுதுவதற்கு...
பிஸிக்ஸ் பாடம் படி
என்று கட்டளையிட்டார் !

கிரிக்கெட் விளையாட
மட்டையை எடுத்தேன்
கணிதப்பாடத்தில்
கவனம் செலுத்து என்றார் !

கல்லூரிக்கு செல்ல
இரு சக்கர வாகனம் கேட்டேன்
கார் வாங்கி தருவதாக
சொல்லி காலத்தை கடத்தினார் !

நடனம் கற்றுக்கொள்ள
அனுமதி கேட்டேன்
நாற்பது மதிப்பெண் எடுத்த
பாடத்தை சுட்டிக் காட்டினார் !

ஒரு கண்ணதாசன்
ஒரு சச்சின்
ஒரு மைக்கில் ஜாக்சன்
எல்லாம் சேர்ந்த கலவையில்
உருவாக கனவு கண்டேன் !
மாத சம்பளம் வாங்குவது
அமைதியான வாழ்க்கை
என்று அறிவுரை கூறினார் !

எத்தனையோ கனவுகள்
பால்யத்தில் பவணி வந்த வேளையில்
தந்தையின் கனவுக்கு
உயிர் கொடுக்க செலவு செய்தேன் !

என் கனவுகள் எல்லாம்
கனவாகி போனாலும்
இறுதியாக...
ஒரு கனவு உயிரோடு இருக்கிறது
என் மகன் நிறைவேற்றுவான் என்று !

Saturday, September 19, 2009

சிவாஜி கணேசனின் கடைசி கண்ணீர் நாட்கள் !

சமிபத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது நடிகர்..... அல்ல எழுத்தாளர் சிவகுமார் அவர்கள் எழுதிய 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம். அந்த புத்தகத்தை பற்றி தனி பதிவு போட வேண்டும். ஆனால், இப்போது நான் குறிப்பிட விரும்புவது அவர் எழுதிய 'சிவாஜி' கணேசன் பற்றின கட்டுரை.

1.
சிவகுமார் ஓவியம் வரைவார் என்பதை தெரிந்த சிவாஜி தன் அம்மா படத்தை வரைந்து தர சொல்லி கேட்டிருந்தார். காலப்போக்கில் சிவகுமார் அவர்கள் அதை மறந்துவிட்டார். மீண்டும் ஒரு முறை சிவகுமாரை சிவாஜி சந்திக்கும் போது, " கவுண்டரே ! என்னடா இப்படி ஏமாத்திக் கிட்டிருக்கே. அம்மா படத்தை வரைஞ்சு கொடுக்கச் சொன்னேனே... மறந்துட்டியா ? அம்மா ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா..." என்று சிவாஜி சொல்லும் போதே மனதை கசியவைக்கிறார்.

2.
'இனி ஒரு சுதந்திரம்' படம் பார்த்த சிவாஜி, " உன் படம் பார்த்தேன். பிரம்மாதமா பண்ணியிருக்க. 'கப்பலோட்டிய தமிழன்' உயிரை கொடுத்துச் செய்தேன். தமிழ் நாட்டு ஜனங்க எனக்குப் பட்டை நாமத்தைப் போட்டுட்டாங்க. உனக்கும்க் குழைச்சிட்டிருக்காங்க" என்று சொல்லும் போது, படம் தோல்வி அடையும் என்பதை எந்த நடிகனும் இவ்வளவு வெளிப்படையாக நடித்தவரிடம் சொல்ல மாட்டார்கள். இதில் அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் தெரிகிறது.



3.
'உறுதிமொழி' படப்பிடிப்பில் தன் மகன் பிரபுவை பார்க்க குடும்பத்தோடு வந்த போது, 'கவுண்டரே ! சிவாஜி கணேசன் தேக்கடிக்கு கெஸ்ட்டா வந்திருக்கேன்" என்று குரல் தடதமுக்க சொல்ல, " அண்ணே ! என்ன பேச்சு பேசுறீங்க..! நீங்க சாப்பிட்டு மிச்சமான சோற்றைத்தான் நாங்க சாப்பிடுறோம். நீங்கள் மிதித்த புல்லுல தான் நாங்க விளையாடுகிறோம். எந்த கொம்பனும் இந்த தமிழ் மண்ணுல உங்க சாதனையை முறியடிக்க முடியாது ?", என்றார் சிவகுமார்.

அப்படியா நினைக்கிறே ?

"இது என் தாய்மேல் சத்தியம் ! தொழில் மேல் சத்தியம் " என்றார் .

"எல்லாரும் அப்படி நினைப்பாங்களா ?" சிவாஜி கேள்வி சிவகுமாரை கண் கலங்க வைத்துவிட்டது.

சிவாஜி கேட்ட கேள்வி படிக்கும் வாசகன் என்னை கண்கலங்க வைத்து விட்டது.

4.

சீங்கப்பூரில் மயங்கி விழுந்த சிவாஜி சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புது ரத்தம், புது பொழிவுடன் திரும்பினார். அப்போது சிவகுமார் தன் குடும்பத்துடன் சிவாஜியை பார்க்க செல்கிறான். ஒரு நாற்காலியை எடுத்து சிவாஜி அருகே அமர்கிறார்.

"நாமெல்லாம் 'Once Upon a time Actor' சிவா ! எல்லாம் முடிஞ்சு போச்சு. நம்பலை இப்போ யார் ஞாபகம் வச்சிருக்கா...! சிங்கபூர்ல பாரு அஞ்சாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான். அஞ்சாயிரம் பேரு விசில் அடிக்கிற்ன்."

"தங்கபதுமை... ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' போட்டா அவனவன் சாமி ஆடுறான். 'தங்கபத்தம்' அரங்கமே குலுங்குது !"

"சிவா ! வாட் என் ஃபைன் மூவமெண்ட் ! உங்க அண்ணன் அப்போ ஏன்டா சாகல ? இப்போ எதுக்கு உயிரோட வந்தேன் ?" என்று சிவாஜி சொன்ன போது கண்ணில் நீர் முட்டி தள்ளியது.


சிவகுமார் அவர்கள் சிவாஜியுடன் தன் அனுபவத்தை பகிவதை படிக்கும் போது என்னையும் அறியாமல் என்னை எதோ செய்தது.

பிஷ்மரை படு வைத்த அர்ஜூனன் சந்தோஷப்பட வில்லை. அவர் கால்களில் கண்ணீர் சிந்தி அழுதான். ஒரு நடிகனின் நல்ல படம் தோல்வி அடையும் என் போன்ற ரசிகர்களிலும் மனம் வருந்துகிறோம்.

நல்ல திறமை மிக்க கலைஞனுக்கு ஓய்வு எவ்வளுவு பெரிய கொடுமை என்று இந்த கட்டுரையில் என்னால் உணர முடிகிறது.யார் யாரோ நடிக்கிற படத்தை பார்த்த ரசிகர்கள் 24 மணி நேரம் சினிமா, நாடகம் இரண்டிலும் நடிப்பை பற்றி யோசித்த பழைய நடிகர்களை மறந்த குற்ற உணர்வு உருத்துகிறது.

தமிழ் படித்த ஒவ்வொரு மனிதனுக்கு இலக்கிய தாகம் மனதின் ஓரத்தில் மறைந்திருக்கும். வேலை சுமை, குடும்ப சூழ்நிலை என்று சமாளிக்க நேரம் சரியாக இருக்கும் நேரத்தில் பலருக்கு எழுதவோ படிக்கவோ நேரம் இருப்பதில்லை. வேலை ஓய்வுக்கு பிறகு ஒரு சிலர் தங்கள் இலக்கிய தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.ஒரு நடிகனுக்கும் இலக்கிய தாகம் இருப்பது 'இது ராஜப்பாட்டை அல்ல' புத்தகம் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

கே.பாலசந்தர் சொல்லுவது போல்

'நடிப்பிற்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால்,
நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் !'

Sunday, September 13, 2009

சிறுகதை பயிற்சி பட்டறை.. சூப்பர் !

இன்று உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதை பயிற்சி பட்டறை இனிதே நன்றாக நடந்து முடிந்தது.

பயிற்சி பட்டறையில் முதலில் பாஸ்கர் சக்தி அவர்கள் பேசினார்.

அவர் பேசும் போதும் போது "எழுதிய கதை வாசகன் உணர வேண்டும். அதை உணர்த்துவதற்காக தூக்கலான வார்த்தைகள் இருக்க கூடாது" என்றார்.

கதைகளுக்கு திட்டமிட்ட வரம்புகள் எதுவும் இல்லை என்பதை கூறினார். அதற்கு எடுத்துக்காட்டாக 'தக்கலி' என்ற கதையை கூறினார்.

ஒரு எழுத்தாளன் தன் உறவினர்களுடன் செல்லும் போது வாசகர்களை சந்திப்பதை நகைச்சுவையாக கூறினார்.

பாஸ்கர் சக்தி பேசி முடித்த பிறகு தேநீர். அதை அடுத்து யுவன் சந்திரசேகர் அவர்கள் பேசினார்.

அவர் எழுதிய 'கானல் நதி' நாவலை படித்த பிறகு மிகவும் சீரியஸான மனிதர் என்று நினைத்தேன். வாசகர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பதில் சொல்லும் போது நகைச்சுவையாக பதிலளித்தார்.

தொடங்கும் போதே கதைக்கும், சம்பவத்திற்கும் உள்ள வேறுபாட்டை கூறினார்.'சம்பவம் கதையானால் தான் ஸ்வாரசியம். காரணம், ஒரு சம்பவம் வந்த பத்திரிகை செய்தி அடுத்த நாள் பழமையாகி விடுகிறது. கதை எந்த காலத்திலும் படிக்க கூடியது' என்றார்.

ஒரு கதையை ஆலோசனை கேட்டு செயல்படுத்தப்படும் வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் 1700 ஆலோசனைகள் வரும். அதில் நமக்கு ஏற்ற ஆலோசனையை ஏற்று கதை எழுதுவதற்கு பதிலாக, முன்பே நம் கற்பனைக்கு தகுந்த போல் கதை எழுதிவிட்டால் நேரத்தை தவிற்கலாம் என்று கூறினார்.

சாலமன் பாப்பையா தனக்கு வகுப்பு எடுத்த அனுபவத்தை மிக நகைச்சுவையாக கூறினார். குறிப்பாக 'எழுப்பு-தொடுப்பு-முடிப்பு' என்று சொல்லும் 'பு'வில் இன்னொரு முக்கியமான 'பு' 'தலைப்பு' என்று சொல்லும் இடத்தில் அருமை.

கதை எழுதுவது 'நிகழ்வுகளை ஸ்வாரஸ்யமாக சொல்லுவது அல்ல. கற்பனைகள் சேர்ந்து சொல்லுவது தான் கதை என்று அவர் பேச்சின் சாரம் இருந்தது.

'I am that' - J.Krishnamoorthy
பிறகு - பூமணி
நெய்வேதியம்
Future Shock

போன்ற புத்தகங்களை பற்றி கூறினார்.

அதன் பிறகு மத்திய சாப்பாடு. 'Non-Veg' இடெம் இரண்டு தான். 'Veg' யில் 'Gobi Machurian' கலக்கியிருக்கிறார்கள்.

மத்திய சாப்பாடு பிறகு, தேவதாஸ் அவர்கள் 'மொழிபெயர்ப்பு சிறுகதைகள்' பற்றி பேசினார்.

உண்ட மயக்கம் என்பதால் அவர் பேசிய பெரும் பகுதி மனதில் பதியவில்லை. கேள்வி - பதில் பகுதியில் விழித்துக் கொண்டு அவர் சொல்லும் விளக்கத்தை கேட்டேன்.

இறுதியாக பா.ரா அவர்கள் பேசினார்.

தன் Laptop மூலம் முன்பே இதை தான் பேச வேண்டும் என்று திட்டமாக வந்ததால் சரியான நேரத்திற்கு பேசி முடித்தார்.

நாம் அனுப்பும் எல்லா கதைகளும் படிக்கிறார்களா ? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக முதல் பத்தி படிப்பார்கள் என்றார். படிப்பவரை உள்ளே இழுக்கும் பட்சத்தில் தொடர்ந்து படிப்பார்கள் என்று கூறினார்.

அவர் 'PPT'யில் எனக்கு மிகவும் பிடித்த ஸ்லைட் 'உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ?' என்பது தான்.

பெருமாலும் அடிப்பட்டவர்கள், கஷ்டஜீவிகள்
பெருமாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
பெருமாலும் நல்லவர்கள்
பெருமாலும் விரக்தி கொண்டவர்கள்
பெருமாலும் குடும்பக்கதைகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
பெருமாலும் நல்ல எழுத்தாளனை கண்டு பிடித்து விடமாட்டோமா என்று ஏங்குபவர்கள்

கதைகளுக்கு முடிவை சொல்லுவதை விட சொல்லாமல் விடுவது நல்லது என்ற கருத்தையும் கூறினார்.

சிறுகதை பயிற்சி பட்டறைக்கு பதிவர்களுக்காக ஏற்பாடு செய்ய நண்பர் பைத்தியக்காரன்.... சிவராமன் அவர்களுக்கு நன்றி.

உடனே நான் 'சிறுகதை' எழுதனும் எங்க பேனா.....????????

Thursday, September 10, 2009

சாமியாரின் மூக்குடைத்த நடிகர் !

பிரபல நடிகர் ஒருவர் சாமியாரை பார்க்க சென்றிருந்தார். பேச்சு வழக்கில் அந்த சாமியார், "விபச்சாரம் செய்த பணத்தை புண்ணியம் பெற செலவழிப்பது போன்ற தான், சினிமாகாரன் செய்யும் இந்த தர்ம காரியங்கள்" என்று நடிகனை பார்த்து சொன்னார்.

ரொம்பவும் அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகள் அந்த நடிகனுக்கு பிய்த்துக் கொண்டு வந்தன.

" ஐயா ! இவ்வளவு தூரம் ஒட்டு மொத்தமாகச் சினிமாக்காரனை நீங்கள் கேவலப்படுத்திய பிறகு ஒன்றைச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். துறவியாக வாழும் உங்களைவிட நடிகன் மேலானவன். குடும்பஸ்தனாக வாழ்ந்து, சிற்றின்ப சுகங்கள் அனைத்தையும் அனுபவித்து ஒய்ந்து முடியாத வயதில் நீங்கள் துறவியாகியுள்ளீர்கள் ! பிள்ளைகள் பெற்றிருக்கிறீர்கள். பேரக் குழந்தைகள் உள்ளனர்."

" ஊரைவிட்டு ஒதுங்கி அசிரமம் போட்டு அமர்ந்து சலங்களுக்கும் அவலங்களுக்கும் இடம் கொடாத சூழ்நிலையில் வாழ்கிறீர்கள். இந்த வயதில் இந்த சுழ்நிலையில் துறவறத்தைக் கடைப்பிடிப்பது அவ்வளவு பெரிய காரியமாக படவில்லை."

"நான் சினிமாக்காரன்...! கூத்தாடி தான். எதையும் அனுபவிக்க ஆசைப்படும் வயது, வசதி வனப்பு எனக்கு இருக்கிறது...! 25 வயதாக இருந்தபோதும் 15 வயது பெண் கதாநாயகி, 40 வயதாகும் போதும் 15 வயதில் புதுப்பெண் கதாநாயகி...! பொழுது கிளம்பி விழும்வரை விதி விதமாக பெண்களோடு, விரும்பாவிட்டாலும் நான் நடித்தாக வேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும் ! உருள வேண்டும்."

" மனிதன் அனுபவிக்க ஆசைப்படும் அனைத்து இன்பங்களும் போகங்களும் என்னை சுற்றி நர்த்தனம் புரிகின்றன. நான் ஸ்ரீ ராம பிரானுமல்ல, புத்தனுமல்ல. ஒரு சராசரி மனிதன். சினிமா எனக்குத் தொழில். என்னை சுற்றி இருப்பவை எல்லாம் காட்சிப் பொருட்கள். அவை அனுபவிக்க அல்ல." என்ற மனப்போக்கை வளர்த்துக் கொண்டு போர்க்களத்தின் நடுவே புத்த பிட்சுவாக வாழ்ந்து கொண்டுவரும் நான், உங்களை விட மேலானவன் தான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு வேகமாக வந்துவிட்டார் அந்த நடிகர்.

அந்த நடிகர் சிவகுமார்.

தகவல் : "இது ராஜப்பாட்டை அல்ல" புத்தகம்

Wednesday, September 9, 2009

ஹிட்லரை அஞ்ச வைத்தவன் !

தனது ஆலோசகர்களை எல்லாம் அவசரமாக அழைத்திருந்தார் ஹிட்லர். தனது நீண்ட நாள் கனவை பற்றி அவர்களிடம் ஆலோசனை செய்தார். ஹிட்லரின் ஆலோசகர்கள் எல்லோரும் சுத்தி வலைத்து ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க வேண்டும் என்றால் நிச்சயம் 'அவர்' உதவி வேண்டும். 'அவர்' ஆதரவில்லாமல் ஆஸ்திரியாவில் ஒரு அடிக்கூட முன்னேற முடியாது. 'அவர்' இத்தாலியில் தான் இருக்கிறார். ஆனால், ஆஸ்திரியாவில் ஜெர்மனி இராணுவம் உள்ளே நுழைய போகிறது என்று திட்டம் போடுகிறோம் தெரிந்தால் போதும், உடனே இத்தாலி இராணுவம் ஜெர்மனியை தாக்கும். ஆஸ்திரியாவின் சான்ஸ்லர் டால்பஸ்க்கும், இத்தாலிக்கும் அப்படி ஒரு நட்பு உள்ளது.

ஆலோசகர் வார்த்தைகளின் உண்மை இருப்பதை உணர்ந்தார். ஹிட்லர் 'அவரை' எதிர்க்க தயங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஹிட்லரின் மானசீக குருவும் அவர் தான். அவர் எதிர்த்து மோதுவது என்பது தற்கொலைக்கு சமம். அதனால், அவரின் ஆதரவு பெற சமாதானமாக போவது தான் நல்லது என்று முடிவுக்கு வந்தார்.

ஹிட்லர் அவரை முதல் முதலில் 1934ஆம் ஆண்டு வென்னிஸ் நகரத்தில் தான் சந்தித்தார். 'அவர்' சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். அதற்கு தகுந்த பருமலான தேக அங்கம்; விசாலமான நெற்றி; நீண்ட கண்கள்; கூரிய மூக்கு; சிரிப்பிலே கம்பீரம் தரும் உதடுகள். வீரம், துணிச்சல், கம்பீரம் எல்லாம் நிறைந்தவரை அன்று தான் பார்த்தார். ஹிட்லரே ஒரு கனம் அஞ்சினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஹிட்லர் அவரிடம் " உங்களை தான் நான் அரசியல் குருவாக கொண்டு ஜெர்மனியில் ஆட்சி புரிகிறேன். நீங்கள் தான் எனக்கு வழிக்காட்டி " என்றெல்லாம் ஹிட்லர் பல புகழ் மாலைகள் அவருக்கு சுட்டினார். அவரும் மௌனமாக எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.



தன் உரையாடல் முடிவில் ஹிட்லர், "ஆஸ்திரியாவில் பல ஜெர்மனி மக்கள் வாழ்கிறார்கள். ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைக்க உங்கள் ஆதரவு வேண்டும்" என்றார். அது வரை மௌனமாக இருந்த அவர் அப்போது தான் பேசினார். ஒரே வார்த்தை..."முடியாது" என்றார். அதற்கு மேல் பேசி எந்த பலனுமில்லை என்று ஹிட்லரும் தன் வாடிய முகத்துடன் ஜெர்மன் திரும்பினார்.

அவர் மறுத்தது ஆஸ்திரிய சான்ஸ்லரான டால்பஸ்க்கு பயங்கர மகிழ்ச்சி. அவருடைய நட்பை நினைத்து மிகவும் பெருமை கொண்டார். ஆனால், அவரின் சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஆஸ்திரிய நாஜி கட்சியினரால் டால்பஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்ட 'அவர்' கோபத்தில் எழுந்தார். அதே சமயத்தில் ஆஸ்திரியாவின் பாதுக்காப்பை பற்றியும் சிந்தித்தார். தனது இராணுவத்தை ஆஸ்திரியாவின் எல்லை பகுதியில் நிரப்பி வைத்தார். இராணுவ உதவி தேவைப்பட்டால் தனக்கு உடனே தகவல் கொடுக்கவும் என்று ஆறுதலும் கூறினார். அவரின் அதிரடி நடவடிக்கையால் ஹிட்லர் ஜெர்மனியை ஆஸ்திரியாவுடன் இணைக்கும் திட்டத்தை தள்ளி வைக்க வேண்டியதாக இருந்தது.

'அவர்' சர்வாதிகாரத்தில் ஹிட்லரை விட சீனியர். ஆனால், அதன் பின் நடந்த அரசியல் நிகழ்வுகளால் அவரை ஹிட்லர் முந்திவிட்டார். அதன் பின் இருவரும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நண்பர்களாக மாறினர். பிறகு இருவரும் சேர்ந்து உலகத்தையே மிரட்ட தொடங்கினர். அந்த 'அவர்' தான் பெனிட்டோ முசோலினி. இருபதாம் நூற்றாண்டின் மறக்க முடியாத இன்னொரு நபர்.

ஹிட்லர் தனிப்பட்ட ஒருவருக்கு பயந்து தன் திட்டத்தை தள்ளி வைத்தார் என்றால் அது பெனிட்டோ முசோலினியாக தான் இருக்கும். பெனிட்டோ முசோலினி ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹிட்லர் உலகத்தையே மிரட்ட ஆரம்பித்தார். பொலாந்தை தாக்கி இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் துவக்கியவுடன், பெனிட்டோ முசோலினி உடனே கலத்தில் குதிக்கவில்லை. சற்று நிதானமாக யோசித்து தான் ஹிட்லருக்கு உதவ முன்வந்தார். இந்த இரண்டு பேர் இறந்தால் தான் உலகப்போர் முடியும் என்று பலரும் கருதிவந்தார்கள்.

அவ்வபோது இருவருக்குள் அரசியல் 'ஈகோ' இருந்தாலும், இருவரின் நட்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துரியோதனன், கர்ணன் போல் இந்த இரண்டு பேரின் நட்பும் இருந்ததா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியும் கற்பனை செய்து பார்த்தால் கூட தவறில்லை. ஒரு கட்டத்தில் சர்வதேச அரசியலில் பெனிட்டோ தனிமையாக்க பட்ட நேரத்தில் ஹிட்லர் அவருடன் கூட்டனி வைத்து கொண்டார். பெனிட்டோ இறந்த இரண்டாவது நாளில் ஹிட்லர் தற்கொலை செய்துக் கொண்டார். மேலோட்டமாக பார்த்தால் நண்பர்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட்ட கூட்டனி என்று தான் சொல்ல வேண்டும்.

Tuesday, September 8, 2009

கற்பனை கதையல்ல...! - 2

இருள் சூழ்ந்த அறையில் எதோ ஒரு சிறு வெளிச்சம் இருப்பது உள்ளூணர்வு சொல்கிறது. இல்லை... எல்லாம் முடிந்துவிட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. பேசாமல் குடும்ப தொழில் பார்க்க வேண்டியது தான் என்று யோசித்தேன்.

"உன்னால் முடியும் . நீ சாதிக்க பிறந்தவன். நாளை சினிமா உலகம் உன்னை பற்றி பேசும்."
என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டான். அறுதல் கூட யாரும் இல்லாமல் இருப்பது போல் இருந்தது.

எதுக்காக கலைப்படத்தை எடுத்தேன். வியாபார ரிதியான படத்தை எடுத்திருக்கலாம். போட்ட பணத்தையாவது பார்த்திருக்கலாம். கலைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் தியேட்டர் பக்கம் கூட்டமே இல்லாமல் இருக்கிறது. நாளை 'ஜிந்தகி' என்று புது படம் வெளிவர போகிறது.

தமிழில் வெற்றி பெற்ற படமாம். இந்தியில் எடுத்திருக்கிறார்கள். இங்கும் வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள். என் படத்தை தியேட்டரில் இருந்து எடுக்க போவது சந்தேகமில்லை.

உலகத்தில் பணம் கொடுத்து எது வேண்டுமானாலும் செய்யலாம். காசு கொடுத்து ரசிகர்களையும், வாசகர்களையும் உருவாக்க முடியாது. அவர்களாக விரும்பி வர வேண்டும். அப்படி என் படத்திற்கு ரசிகர்கள் தேடி வரமாட்டார்களா ? என்று எங்கிக் கொண்டு இருந்தேன்.

யாரோ கதவு தட்டும் சத்தம். படம் பெட்டி வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறார்களோ என்று சந்தேகத்துடன் கதவை திறந்தேன்.

"என் பெயர் வாசன். சென்னையிலிருந்து வருகிறேன்."

'வாழ்க்கை படகு' இந்தியில் 'ஜிந்தகி' என்ற பெயரில் உருவாக்கிய தயாரிப்பாளர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். அதன் வெளியீட்டு விழாவுக்காக வந்த போது கல்கத்தா வந்த தியேட்டர் மேனேஜர் அவர்கள், " புதிய இளைஞன் ஒருவர் உருவாக்கிய ஆர்ட் பிலிம் நம் தியேட்டரில் ஒடுகிறது. கூட்டமே இல்லை. நாளை ' ஜிந்தகி' வெளியிடலாம்" என்றார்.

படத்தை பார்த்து விட்டு விலாசத்தை வாங்கி வந்த விஷயத்தை சொன்னார்.

"உங்கள் படத்தை பார்த்தேன். Simply Superb. இந்த படத்தை கடைசி ஒரு ரசிகன் வரும் வரை, தன் படத்தை இந்தத் தியேட்டரில் வெளியிட மாட்டேன். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பெரிய கலைஞனாக புகழ் பெறுவீர்கள்" என மானதார வாழ்த்திவிட்டு வந்தார்.

தன் படம் ஒரு தயாரிப்பாளர் மனதை மாற்றுமா...? அப்படி என்றால் என் படம் இந்தியாவை மாற்றும்... !! இந்திய திரைப்பட உலகில் என் பெயர் நீங்காமல் இருக்கும் என்று இளைஞன்
சத்யஜித்ரே தனக்கு தானே புகழ் மாலை சுடிக்கொண்டான்.

அந்த படம் 'பதேர் பாஞ்சாலி' ! சத்யஜித்ரே ஆஸ்கர் விருது பெற காரணமாக இருந்த படம்.

Monday, September 7, 2009

கற்பனை கதையல்ல...!

உடம்பில் ஒடுவது சிவப்பு இரத்தம் என்பதை காட்டுவதற்காகவே அடித்தது போல் இருந்தது. அவன் இரத்ததை மண்ணில் சில துளிகளை பார்த்தான். எத்தனை அடி, அத்தனை பூட்ஸ் மீதி.... அனைத்தையும் வாங்கிக் கொண்டு, மெதுவாக 'குடிக்க தண்ணீர்' கேட்டான் அந்த இளைஞன். போலீஸ் கொடுத்தனர். அடிவாங்கிய இளைஞனை போலீஸ் சிறை கம்பிகளில் நடுவே தள்ளி அவள் சகாக்களோடு சாத்தி தள்ளினர்.

அறையில் அந்த இளைஞனை தவிர மற்ற எழு பேர் இருந்தனர். ஜெயில் ஆபிசர்கள் படுக்கை எதுவும் கொடுக்கவில்லை. ஏழு பேருக்கு மேல் படுக்க முடியாத அறை மிகவும் சிரமப்பட்டு துக்கத்தை வரவழைத்தான் அந்த இளைஞன்.

அடுத்த நாள், காலை ஏழு மணிக்கு கதவு திறந்தது. 10 நிமிடங்களுக்குள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்று வார்டர் கூறினார்.

அங்கு இருந்தது மூன்று கழிவறைகள். அந்த இளைஞனோடு கைதானவர்கள் 50 பேர் இருந்தனர். ஒரு சிலர் காலைக் கடன் கழிக்காமல் திரும்பினர். அந்த இளைஞனும் காலைக்கடனை கழிக்கவில்லை.

பல் விளக்க பற்பொடி கேட்டான். சிறை அதிகாரி செங்கல் பொடி, மண் எடுத்து பல் விளக்க சொன்னார். வெறும் தண்ணீரில் வாய்யை கழுவிக் கொண்டு சிறை அறைக்குள் சென்றான்.

சாப்பாடு நேரம். கதவை திறந்து வெளியே வர சொல்லி அந்த இளைஞனை கியூவில் நிற்க சொல்லி களியும், சாம்பார் மாதிரி கிரையும் கொடுத்தனர்.சாப்பிடுவதற்கு தட்டு இல்லை. வேர் கைதியிடம் இருந்து தட்டு வாங்கி தந்தனர். நெளிந்தும் வளைந்தும் மண் படிந்த தட்டில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான் அந்த இளைஞன்.

சாப்பிட்ட பிறகு அந்த இளைஞனை ஏழாவது அறையில் இருந்து மூன்றாவது அறைக்கு மாற்றினர். அங்கு பாபு, வீரசாமி, கோவிந்தராசன், நீல நாராயணன் என்று நான்கு பேர் கைதிகளாக இருந்தனர்.

மாலை சாப்பிட சாப்பாத்தி கொடுத்தனர். அதை கடிக்கக் கூட முடியவில்லை. பொழுது மெதுவாக செல்வது போல் இருந்தது.

இரவு 8.30. மணி இருக்கும். பூட்ஸ் சத்தம் கேட்டது. பத்து கன்விக்ட் வார்டர்களும், ஒரு அஸிஸ்டண்ட் ஜெயிலரும், தலைமை வார்டரும் நுழைவுவாயில் வழியாக பிளாக்குள் நுழைந்தனர். வராண்டா வழியாக கடைசி அறைக்குள் சென்றார்கள்.

"சர்ச்" என்ற சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. வெளியே இழுத்து அடிக்கும் சத்தம் கேட்டது. "அய்யோ, அம்மா " என்ற சத்தமும் கேட்டது.

அந்த இளைஞனின் தொண்டை குழியில் எதோ செய்வது போல் இருந்தது. சோதனையின் பொது வைத்திருக்க கூடாத சாமான்களை எதையாவது வைத்திருப்பானோ என்று எண்ணி தன்னை தானே தேற்றிக் கொண்டான்.

வரிசையாக ஒவ்வொரு அறை திறக்கப்படும் சத்தமும், அடி விழும் சத்தமும், 'அய்யோ, அம்மா' சத்தமும் கேட்டுக் கொண்டு இருந்தது.

"எல்லா அறையில் இருப்பவர்களை அடிப்பது போல் தெரியுதே !" என்றான் அந்த இளைஞன்.

"பயப்படாதே !" என்று பாபு அந்த இளைஞனை ஆறுதல் கூறினான்.

தங்கள் அறைக்குள் வருவதை உணர்ந்த பாபு, " சட்டையை கழற்றாதே அடி பலமாக விழும்" என்றான்.

காவலர்கள் மூன்றாவது அறைக்குள் நுழைந்தனர். அந்த அறையில் இருக்கும் கைதிகளை வர சொன்னார்கள்.

ஒரு வார்டர் துணை ஜெய்லரிடம் காதில் எதோ சொல்ல, " ஓ.... அவனா இவ..." என்று அந்த இளைஞன் பார்த்து சற்று எதிர்பார்க்காத சமயத்தில் அந்த இளைஞனின் கன்னத்தில் அடித்தார். பூட்ஸ் காலால் மிதித்தனர்.

அந்த இளைஞனுடன் இருந்த பாபுவை சுவரில் சாத்தி அடிப்பதை பார்த்தான். அவன் இடது பக்கத்தில் வீராசாமி அடிப்பதை பார்த்தான். பாதி நினைவிழந்தான். பீதியில் ஒன்றுமே புரியவில்லை.

மறுபடியும் அந்த இளைஞனை அடிக்க வரும் போது பாபு ஒடிவந்து அந்த இளைஞனை கட்டிபிடித்துக் கொண்டான். அந்த இளைஞன்னுக்கு விழ வேண்டிய அடியை தான் வாங்கிக் கொண்டான். வார்டரும், கன்விக்ட் வார்டரும் பாபு மீது ஏறி ஏறி பூட்ஸ் காலால் உதைத்தனர். அந்த இளைஞன் பாபு அடிவாங்குவதை பார்த்தான்.

அந்த இளைஞனின் கையில் தடியால் அடித்தார்கள். கை முட்டியில் பலமாக அடிப்பட்டது. வெறி அடங்கிய காவலர்கள், அனைவரையும் உள்ளே பிடித்து தள்ளினர்.

வலி தாங்க முடியாமல் 'அய்யோ அம்மா ' என்று அந்த இளைஞன் முணகிக் கொண்டு இருந்தான். பாபுவையும் தள்ளினர். அந்த இளைஞன் பாபுவை கட்டி பிடித்து உயிர் இருக்கிறதா பார்த்தான். பாபு அந்த இளைஞனின் உடல் காயங்களை தடவி பார்க்கிறான்.

பத்து நிமிடத்தில் மீண்டும் அறையை மாற்றினர். அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிய வேண்டிய நிலை. மனமில்லாமல் அந்த இளைஞன் பாபுவை விட்டு பிரிந்து வேறு அறைக்கு சென்றான்.

அடுத்த நாள் பாபு இறந்ததை அந்த இளைஞனுக்கு தெரிகிறது. தன் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபுக்காக இளைஞரான ஸ்டாலின் கண்ணில் இருந்து வந்த நீர் மண்ணை ஈரமாக்கியது.

Sunday, September 6, 2009

யுவன் சந்திரசேகர் : கானல் நதி

வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் ரனங்களாக தங்கிவிடுவதால், அது என்று ஆராத வடு மாறிவிடுகிறது. அந்த வடுவில் வாழ தெரிந்தவன் தான் வாழ தகுதியாவனாக தெரிகிறான். வடுவை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தால், இந்த உலகத்தில் இருப்பவர்களால் நிராகரிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்படுக்கிறான். அப்படிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை தான் 'கானல் நதி' கதை.

'மோகன முள்' பிறகு முழு முழுக்க ஒரு இசை கலைஞனை மையமாக வைத்து வந்த நாவல் இது தான் என்று நினைக்கிறேன்.



தனஞ்செயன் முகர்ஜி என்ற ஹிந்தூஸ்தானி பாடகனின் சுற்றி நடப்பது கதை.

இந்திய இசைகளில் மிக பழமையான இசை ஹிந்தூஸ்தானி. த்ருபட், கயல், டப்பா, தரனா, தும்ரி, கஜல் என்று பல வகையில் ஹிந்தூஸ்தானி இசை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான், பாங்ளாதேஷ், நேபால், ஆப்கான் என்று பல நாடுகளிலும் ஹிந்தூஸ்தானி இசை பரவியிருக்கிறது. இப்படி பழமை வாய்ந்த இசையை கற்ற தனஞ்செயன் ஒரு காதலால் எப்படி மனம் பித்து பிடித்து, குடித்து, குரல் சீரழிந்து போவதை யுவன் சந்திரசேகர் கண் முன்னே காட்சியாக கொண்டு வந்திருக்கிறார்.

வாழ்க்கையில் நடக்கும் எதிர் பாராத நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், தன்னை தானே நோகும் படி செய்து, மேலும் பல காயங்கள் தேடிக் கொண்டு.... இறுதியில் பரதேசி போல் அலைந்து வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்கிறான் தனஞ்செயன் முகர்ஜி.

தனஞ்சனின் முதல் கச்சேரி, ஸரயுவுடன் காதல், காதல் கை கூடாததால் மது, நண்பன் குருதாஸ்வுடன் சண்டை... இறுதியில் காதலித்த ஸரயு தாசியாக பார்த்து மனம் வேதனை படுவது, பரதேசியாக திரிந்த போது ஒரு முறையாவது ஸரயுவை அனுபவிக்க ஆசைப்பட்டு வேறு ஒரு பெண் தொடுவது, திருடி அடிவாங்குவது என்று பல பரிமாங்களில் வரும் கதாநாயகன் படிப்பவர்கள் நெஞ்சில் நீங்காத காயத்தை ஏற்படுத்துகிறான்.

உண்மையான இசை கலைஞனின் வாழ்க்கை எடுத்து அவரை பற்றி ஒரு வருடம் மேல் பல தகவல்கள் சேகரித்து நாவல் வடிவில் கொடுத்திருந்திருக்கும் யுவன் அவர்கள் கடின உழைப்பு அவர் எழுத்துகளில் பிரதிப்பலிக்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி நான் சொன்னது கொஞ்சம் தான். சொல்லாததை படித்து அனுபவியுங்கள்.

செப்.13 அன்று நல்ல குரு (யுவன் சந்திரசேகர்) சிறுகதை பயிற்சி பெற போகிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.


பக்கங்கள் : 316,
விலை :200
உயிர்மை பதிப்பகம்

Friday, September 4, 2009

ஒரு நாள் அரசு விடுமுறை !

முதலில், ஆந்திர முதல்வர் மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பெல்லாம் தலைவர்கள் இறந்துவிட்டால், டி.டி தொலைக்காட்சியிலும், வானொலியிலும் சோக இசையும், இறந்தவர் பற்றிய செய்திகளும் போடுவார்கள்.

ஆனால், இப்போது பல சேனல் வந்த பிறகு இறந்த தலைவர்களுக்கு ஒரு நாள் அரசு விடுமுறை மட்டுமே மிஞ்சுகிறது. 'அரசு விடுமுறை' என்றதும் சும்மா இருப்பாருக்குமா தனியார் தொலைக்காட்சி....! புது படம் போட்டு தங்கள் டி.ஆர்.பி ரேடிங்கையை உயர்த்திக் கொள்வார்கள். கடைசியில் , உண்மையாக துக்கம் அனுசரிக்க வேண்டிய நோக்கம் நிரைவேறாமல் போய்விடுகிறது.

வெள்ளிக்கிழமை கிடைக்கும் ஒரு நாள் அரசு விடுமுறையை 'Long Weekend' என்று பலர் கொண்டாட தான் நினைப்பார்கள்.

அரசு அலுவலகத்தில் பல வேலைகள் தேங்கி இருக்க... துக்கம் அனுசரிக்க கொடுக்கும் ஒரு நாள் விடுமுறை தொலைக்காட்சியும், கொண்டாட்டமும் என்று இருக்கும் போது விடுமுறைக்கான நோக்கம் தெரிய போவதில்லை.

அப்படி இருக்கும் போது இந்த ஒரு நாள் அரசு விடுமுறை தேவை தானா ???

ஒரு நாள் விடுமுறை என்று அரசு அறிவித்ததும், என் நண்பர் ஒருவர் " நம்ப லீவ் விட்டதால,நாளைக்கு நம்ப ஆளுங்களுக்கு யாருக்காவது இப்படி நடந்தா இதே மாதிரி லீவ்விட தான் இப்படி பண்ணுறாங்களோ ! " என்று கேட்டார்.

அவர் பேச்சில் எந்த உள்குத்தும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்குறிப்பு :அரசு விடுமுறை அறிவித்ததால், சனி கிழமை அலுவலகம் வைத்த ஆதங்கத்தில் இந்த பதிவை இடுகிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails