வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, January 31, 2010

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன் vs கே.ரகோத்தமன்



சென்னை புத்தக மிகவும் எதிர்பார்த்து வாங்கிய புத்தகம். இந்த அளவுக்கு என்னை எந்த புத்தகமும் ஏமாற்றியது இல்லை என்று சொல்லலாம்.ஒரே மூச்சில், படித்து முடித்தேன். படிக்க படிக்க கோபம் தான் வந்தது.

பின்னட்டையில்....
'இதை விட முழுமையான ஆதார பூர்வமான ஒரு கொலை வழக்கு விசாரணை நூல் இதல் முன் தமிழில் வெளிவந்ததில்லை'.

டி.ஆர். கார்த்திகேயன் எழுதிய 'வாய்மையின் வெற்றி' புத்தகத்தை இதற்கு முன் தமிழில் வந்திருப்பதை சொல்லிக் கொள்கிறேன். இது நேரடி தமிழ் நூல் இல்லை. (‘Triumph of Truth – The Rajiv Gandhi Assassination’ புத்தகத்தின் தமிழாக்கம்). ஆங்கில படத்தை பார்த்து படம் எடுத்து விட்டு, தமிழில் இது வரை யாரும் எடுத்ததில்லை என்று சொல்லும் இயக்குனருக்கும், பின்னட்டை விளம்பரத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

கே.ரகோத்தமனின் தனிப்பட்ட எண்ணங்கள் இந்த புத்தகத்தில் இருப்பதை பல இடங்களில் தெரிந்துக் கொள்ள முடிகிறது. பல இடங்களில் விசாரணை கமிஷன் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனை தாக்கியிருப்பது தெரிகிறது. கொஞ்சம் புலம்பலும் இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு தனது மேலாளரை துணிச்சலாக போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் பல கேள்விகளை தான் எழுப்ப வைக்கிறதே தவிர, எதற்கும் விடை சொல்லுவது போல் இல்லை.

1.

இவர் தனது புத்தகத்தில், 'சில சயனைட் மரணங்களைத் தடுத்திருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனத்தாலும் தயக்கத்தினாலும் அது மட்டும் முடியாமல் போனது'.

சி.பி.ஐ பாதுகாப்பில் இருந்த சண்முகம் தப்பித்து தற்கொலை செய்துக் கொண்டதை என்ன சொல்லுவது ? சி.பி.ஐ அஜாக்கிரதை காரணமாக இருந்தாலும், யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கார்த்திகேயன் புத்தகத்தில் தெரிகிறது.

ஆனால், ரகோத்தமன் எழுத்துகளை படிக்கும் போது ஒரு பத்திரிகையாளர் போல் சொல்கிறார்.( இவர் தான் இந்த புத்தகம் எழுதினாரா ? இவர் சொல்ல இன்னொருத்தர் எழுதினாரா?) அதிகாரிகளின் மெத்தனம் என்பதை சாத குடிமக்கள் கூறலாம். ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதால் உங்களையும் சேர்த்து உங்களுடன் பணியாற்றிய அதிகாரிகளை குறை கூறுவது நியாயமில்லை.



2.

ஜெயின் கமிஷன் விசாரணையின் போது, நீதிபதி ஜெயினே தனது விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம், " கார்த்திகேயன் ! நீங்கள் இந்த விசாரணை மிகச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். குறுகிய காலத்தில் எந்த ஆதரத்தையும் விட்டு விடாமல் ஒழுங்காகச் சேகரித்துக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறீர்கள். ஆனால், வழக்கு விவரங்களை மட்டும் எனக்குத் தராமல் மறைத்து வீட்டீர்கள். விசாரணையின் போது பத்திரிக்கைகளுக்கு கசிந்த அளவு செய்திகள் கூட ஜெயின் கமிஷனுக்குக் கிடைத்து விடாதபடி நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டதை அறிந்த பிறகு தான் நானே சுயமாக மீண்டும் அனைத்துத் தரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்று சொன்னார்.

என்னைப் போன்ற விசாரணை அதிகாரிகளுக்கு, மாதக்கணக்கில் இந்த வழக்குக்காக நாயாகா உழைத்தவர்களுக்கு இந்த விமரிசம் எத்தனை மன வேதனை அளித்திருக்கும் !


ஜெயினே கூறியது கார்த்திகேயனை. ஆனால் மன வேதனை இவருக்கா ?? அல்லது கார்த்திகேயனை அவர் விமர்சனம் செய்தது உங்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லையா ?? என்று புரியவில்லை. தன் மேலாளரை குறை சொல்லும் போது நம்மையும் சேர்த்து தான் குறை சொல்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கலாம். தன் மேலாளரிடம் உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததாக இந்த புத்தகத்தில் தெரியவில்லை.

ராஜிவ் காந்தி வழக்கில் ரகோத்தமன் விசாரிக்க விரும்பிய வைகோ மற்றும் மரகதம் சந்திரசேகர் ( ஸ்ரீ பெரும்புதூர் வெட்பாளர்).

3.

'அத்தனை அரசியல்வாதிகளிடமும் நிகழ்த்தப்பட்ட 'மேலதிகாரிகளின் விசாரணை' மிகவும் மேம்போக்காக அமைந்து விட்டதில் தனிபட்ட முறையில் எனக்கு வருத்தம் உண்டு'. (பல இடங்களில் இவரின் தன்னிலை பார்வை தெரிகிறது.)

எங்களுக்கு மேல் விசாரணைக்கு அனுமதியளிக்க வேண்டிய கார்த்திகேயன், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்பது புரியாத புதிர்.


இந்த வரிகள் புத்தகத்திற்கு sensationக்காக பயன் படுத்தியது போல் தான் உள்ளது.

நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ளவும். குற்றம் செய்த அரசியல்வாதியே மேம்போக்காக விசாரணை தான் நடத்தப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் மற்றவர்கள் அடித்து விசாரணை செய்ய வேண்டும் எதிர்பார்த்தாரா ? கலைஞரை போல் ஜெயலலிதாவும் தான் அன்றைய நிகழ்ச்சிக்கு போகவில்லை. அதை பற்றி ஏன் குறிப்பிடவில்லை ?

கார்த்திகேயன் புத்தகத்தில் இல்லாத தகவல், இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.
1. விடுதலை புலிகளின் ஒரு சில கடிதங்கள் ( அவ்வளவு முக்கியத்துவமான கடிதங்கள் இல்லை)
2. சுப்பிரமணியம் சுவாமி கிட்டுவை ராவின் உளவாளி என்று சொல்லுவது.
3. சில அரசியல் தலைவர்கள் மீது சந்தேகம் இருந்தும் விசாரிக்காமல் இருப்பது.
மற்றும்
4. கே.ரகோத்தமனின் தனிப்பட்ட மன குமுறல்கள்.

நான் கார்த்திகேயனுக்காக வக்காளத்து வாங்கவில்லை. கே.ரகோத்தமன் குற்றவாளி குண்டில் இருந்து கொண்டு அடுத்த வரை குறை சொல்ல கூடாது என்பதை தான் சொல்லகிறேன்.

கென்னடி மரணம் போல் ராஜீவ் மரணத்தில் இருக்கும் பல மர்மங்கள் வெளிவர போவதில்லை. சுத்தி சுத்தி விடுதலை புலிகள் மீது தான் குற்றம் சொல்ல போகிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு பிறகு விடுதலை புலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிதி வழங்கியவர் யார் ? பாக், சீனாவின் மறைமுக தொடர்பு உண்டா ? இப்படி பல தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்.

ராஜிவ் காந்தி கொலையை பற்றி நீங்கள் வாசிக்கும் முதல் புத்தகமாக இருந்த, கண்டிப்பாக இது நல்ல அறிமுக புத்தகம் தான். முன்பே கீழ் காணும் புத்தகங்களை வாசித்திருந்தால் இந்த புத்தகத்தால் பெரிய தகவல் ஒன்றுமில்லை.

Triumph of Truth – The Rajiv Gandhi Assassination – The Investigation, by D.R.Kaarthikeyan and Radhavinod Raju, ('தமிழில் : ‘வாய்மையின் வெற்றி' ராஜிவ் கொலை வழக்கு புலனாய்வு’)
Beyond the Tigers – Tracking Rajiv Gandhi Assassination - Rajeev Sharma.
Assassination of Rajiv Gandhi – Unanswered Questions and Unasked Queries - Subramanian Swamy (தமிழில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது என்று நினைக்கிறேன். பெயர் தெரியவில்லை.)

ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் விலகும் நேரம் - எந்த மர்மமும் இந்த புத்தகத்தில் விலகியதாக தெரியவில்லை.

டிஸ்கி : ஒரு நண்பரிடம் இந்த புத்தகத்தை பற்றி பேசும் போது, அவர் " இது சினிமாவுக்கான நல்ல திரைக்கதை புத்தகம்" என்றார்.

Wednesday, January 27, 2010

திருநங்கையை பற்றிய 'கோத்தி' குறும்படம்

கோத்தி

உள்ளத்தால் பெண்ணாக, உருவத்தால் ஆண்ணாக வாழும் திருநங்கையை பற்றிய குறும்படம்.

அன்பு ஆண்ணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். தன் மகனை பற்றி தெரிந்த தந்தை மகள் வாழ்க்கையை நினைத்து அவனை வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார். இரு பாலிலும் தன்னை காட்டிக் கொள்ள முடியாத அன்பு வளர்மதியாக மாறி இந்த சமூதாயத்தில் எப்படி வாழ்கிறான் என்பது தான் மீதி கதை.

பெண்ணாக மாற துடிக்கும் போதும், தெருவில் பிச்சை எடுத்து அடிவாங்கும் போதும் வெண்ணிலாவின் நடிப்பு பிரமாதம்.கதைக்கு பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம்.பல திருநங்கயர்களில் கேள்விகளை வளர்மதி அவர்களின் பிரதிநிதியாக கேட்கும் காட்சி அருமை.

இந்த குறும்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சி.ஜே.முத்துகுமார். ஒரு திரைப்படத்தில் சொல்ல வேண்டிய கதை குறும்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் எடுத்திருப்பதால், பார்வையாளருக்கு உண்டாக்க வேண்டிய பாதிப்பு மனதில் உருவாக்கவில்லை.

படத்தை பார்க்க....

Part - 1


Part - 2



Part - 3



எரிபொருள்

சொல்ல வந்த தகவலுக்கும், கதை களத்திற்கும் சம்மந்தமில்லையோ என்று தோன்றுகிறது.

எரிபொருள் விலை உயர்வால் சாதான நடுத்தர குடும்பத்தினர் எவ்வளவு அவதை படுகிறார்கள் என்பதை தான் சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால், இதில் வெளிநாட்டில் இருக்கும் மகன் வெள்ளைக்காரியுடன் நீச்சல் அடிக்கும் காட்சி, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் நகர வாழ்க்கை, மனைவியின் மரணத்திற்கு அழக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதி போன்ற காட்சிகள் தேவை தானா என்று தோன்றுகிறது.

காய்கறி வாங்கும் காட்சியும், மருந்து வாங்கும் காடியும் தவிர மற்ற காட்சிகள் 'எரிபொருள்' தலைப்புக்கு பொருத்தமாக இருக்கிறது. 'எரிபொருள்' தலைப்பு வைக்காவிட்டால் பார்வையாளருக்கு சொல்ல வந்ததை புரியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

வசனங்களால் புரிய வைக்க வேண்டிய விஷயத்தை காட்சிகளால் புரிய வைத்தால் இயக்குநர் சி.ஜே.முத்துகுமாருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

படம் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

Tuesday, January 26, 2010

ஒரு குழந்தையின் டைரி : க்ரீம் பிஸ்கெட் (பகுதி -4)



சாப்பாடு மறந்து அலுவக வேலை என்னை விழுங்கும் போது, பல நேரங்களில் எனக்கு உணவாய் இருப்பது பிஸ்கெட் தான். பலருக்கு அப்படி தான். அவசர அவசரமாக சாப்பிட்டப்படியே பிஸ்கெட் சாப்பிட்டப்படி வேலை செய்ய வேண்டியது வரும். எதோ வயிற்றுக்கு ஒன்று அனுப்பி விட வேண்டும். இல்லை என்றால் நம்மை நிம்மதியாக வேலை செய்ய விடாது. ஏதோ ஒன்று வற்றில் கிள்ளுவது போல் இருக்கும். அதற்காகவாவது பிஸ்கெட்டை சாப்பிடுவோம். நாம் சாப்பிடும் பிஸ்கெட் க்ரீமா, நட்ஸா என்று கவலை இல்லை. சாப்பிட்டால் போதும். இதை சாப்பிட நேரம் இருப்பதே பெரிய விஷயம்.

பால்யத்தில் இதே போல் எத்தனை பிஸ்கெட் சாப்பிடுயிருப்போம். உணவே இருந்தாலும், பிஸ்கெட் வேண்டும் என்று அடம் பிடிப்போம். குறிப்பாக க்ரீம் பிஸ்கெட்டுக்கு. இது மட்டும் இருந்தால் போதும் சாப்பாடே வேண்டாம்.

க்ரீம் பிஸ்கெட்டை ரசித்து சாப்பிடுவது போல் வேறு எதையாவது இவ்வளவு ரசித்து சாப்பிட்டு இருக்கேனா என்று தெரியவில்லை. எடுத்தோம்மா, சாப்பிட்டோமா என்று க்ரீம் பிஸ்கெட்டை சாப்பிடுவதில்லை. க்ரீமால் ஒட்டிய பிஸ்கெட்டை திறந்து, முதலில் க்ரீம் மட்டும் சாப்பிடுவோம். ( உண்மையை சொல்லுவது என்றால் நக்குவோம்). இருக்கும் க்ரீம் சாப்பிட்ட பிறகு தான் பிஸ்கெட்டை சாப்பிட தோன்றும். சில சமயம் க்ரீம்மை மட்டும் சாப்பிட்டு பெரிய மனதோடு பிஸ்கெட்டை ( சிறுவயதில் இருக்கும் போது ) மற்றவர்களுக்கு கொடுப்போம். சிறுவர்களும், பெரியவர்களும் சாப்பிடும் பிஸ்கெட்டுக்கு இருக்கும் வித்தியாசமே இந்த க்ரீம் தான்.

அலுவலக வேலை எப்படி நம்மை விழுங்கியதோ, பிஸ்கெட் கவர்கள் சுற்று புற சுழலை விழுங்கிக் கொண்டு இருக்கிறது. அன்று எந்த பிஸ்கெட் பாக்கெட்டாக இருந்தாலும் காகிதத்தில் தான் தயாரிப்பார்கள். ஆனால், இன்று எல்லாம் பிலாஸ்டிக் மயம். பேப்பர் கவரில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டை கூட நாம் மறந்துவிட்டோம். நிறுவனங்களும் மறந்துவிட்டன.

நமக்கு பெரிய சாபமாக இருப்பது இரண்டு. ஒன்று பண தேவை. இன்னொரு நம்மை பற்றிய தற்போதைய நினைவு. ஒரு நிமிடதிற்கு இந்த இரண்டையும் மறந்து விட்டால் பாலியத்தில் தொலைத்தை இப்போது கூட நாம் பெற முடியும்.

சமிபத்தின் ஒரு ரயில் பயணத்தில் விழுப்புரம் அருகே என் கண்ணில் பட்டது க்ரீம் பிஸ்கெட். இன்று மத்திய சாப்பாடு இதை தான் சாப்பிட வேண்டும் என்று மனம் சொன்னது. வாங்கினேன். ரயில் தண்டவாளத்தில் செல்ல, க்ரீம் பிஸ்கெட் இரண்டாக பிரித்தேன். க்ரீம்மை முதலில் சாப்பிட்டு, பிறகு பிஸ்கெட்டை சாப்பிட்டேன். என் பக்கத்தில் அமர்ந்தவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். கவலையில்லை. நான் இழந்த பாலியத்தை க்ரீம் பிஸ்கெட் சாப்பிடும் வரை கிடைத்தது.

(க்ரீம் பிஸ்கெட் சாப்பிட்டப்படி எழுதிய கட்டுரை)

Wednesday, January 20, 2010

Inside : கொடூரத்தின் உச்சக்கட்ட படம் (18+)



பிரன்ச் மொழி படம் (À l'intérieur). ஆங்கிலத்தில் ‘Inside’.

கண்டிப்பாக 18+ மட்டும். கர்ப்பிணிகள் இந்த படத்தை பார்ப்பவதை தவிற்பது நல்லது.

Saw, Hannibal, Psycho என்று பல சிரியல் கில்லிங் படங்கள் பார்த்திருக்கிறேன். காரணமே இல்லாத பல கொலைகள் நடக்கும். Urban legend, I know what you did last summer போன்ற படங்கள் பழிவாங்குவதற்கு சிரியல் கில்லிங் நடக்கும். ஆனால், இதில் பழிவாங்குவதற்காக அவள் பாதையில் வரும் ஒவ்வொருவரை கொலை செய்கிறாள் ஒரு பெண்.

ஒரு சராசரியான பெண்ணை இந்த அளவுக்கு கொடூரமாக காட்ட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. தன் கருவில் இருக்கும் குழந்தையை சாலை விபத்து மூலம் கொன்ற பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தையை அடைய துடிப்பது தான் கதை.

ஆரம்ப காட்சியே கருவில் இருக்கும் குழந்தையுடன் அம்மா பேசுவது போல் படம் தொடர்கிறது. அடுத்த காட்சியே சாலை விபத்து. சாரா தன் கணவனை இழக்கிறாள். அதிஷ்டவசமாக அவளும், அவள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எதுவுமாகவில்லை. மருத்துவ பரிசோதனை வீட்டுக்கு திரும்பும் சாராவை ஒரு பெண் உருவம் மிரட்டுகிறது.

பயத்தில் தனது பாதுகாப்புக்கு போலீஸ்யை அழைக்கிறாள். பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் வீட்டை சோதனை செய்து விட்டு யாருமில்லை என்று செல்கிறார்கள். மன நிம்மதியுடன் சாரா தூங்கும் போது, மற்ற பெண் உருவம் சாராவில் வயிற்றை கத்தியால் குத்துகிறாள். திட்டுக்கிட்டு எழுந்து அந்த மற்ற உருவத்தை தள்ளிவிட்டு சமையல் அறைக்குள் செல்கிறாள். சாராவை காப்பாற்ற வரும் அவள் அம்மா, முதலாளி, காவலாளி என்று ஒவ்வொராக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.

சாராவை கொல்ல துடிக்கும் மற்ற பெண், முதல் காட்சியில் அவளால் சாலை விபத்தில் கருவில் இருக்கும் குழந்தை இழந்த பெண் டேல். தன் குழந்தையை கருவிலே கொன்றதற்காக சாராவின் கருவில் இருக்கும் குழந்தையை அடைய முயற்சிக்கிறாள் என்று சாராவுக்கு தெரியவருகிறது. சாரா டெல்லிடம் இருந்து தப்பித்தாளா ? டெல் சாராவின் குழந்தையை அடைந்தாளா ? என்பது தான் க்ளைமேக்ஸ்.

பனி குடம் உடைவது, கர்ப்பினி வயிற்றை கத்தறிகோளால் குத்துவது, கொடூரமாக கொலைகள் செய்வது என்று மனதை பதர வைக்கும் பல காட்சிகள் படத்தில் உள்ளது. கடந்த பத்து வருடங்களாக பிரன்ச் மொழி ஹாரர் படங்களில், 12வது இடத்தில் இந்த படம் இருக்கிறது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் வாழ்வா ? சாவா ? போராட்டத்தை ஒரு வீட்டில் நடப்பது போல் இயக்கி இருக்கிறார்கள் Alexandre Bustillo - Julien Maury என்ற இரட்டை இயக்குனர்கள்.

இதில் நடித்த இரண்டு நாயகிகளும் (Alysson Paradis and Béatrice Dalle) Sitges - Catalonian International Film Festivalஇல் Carnet Jove Jury விருது பெற்று இருக்கிறார்கள்.

நாம் புனிதமாக நினைக்கும் கருவறையை இந்த படத்தில் எப்படி எல்லாம் வதைத்திருக்கிறார்கள் என்ற பார்த்த பிறகு அன்று இரவு என்னால் சரியாக தூங்க முடியவில்லை.

மனதை தயார் படுத்துக் கொண்டு படத்தை பார்க்கவும்.

Monday, January 18, 2010

ஒரு குழந்தையின் டைரி : பிள்ளை மனம் அறியாத பெற்றோர்கள் (பகுதி - 3)



ஒரு குட்டி கதை.

எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.

“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.

நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.

நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.

நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.

நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.

நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.


(மின்னஞ்சலில் வந்த கதை)

எந்த குழந்தையும் தன்னை மேதை என்று சொல்லுவதில்லை. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதில்லை. யார் மனதையும் நோகும் படி நடந்துக் கொள்வதில்லை. யாரிடத்திலும் குறைகள் பார்ப்பதில்லை.

பெரும்பாலான பெற்றோருக்கு தான்மை (Ego) இருக்கும். தன் பினளைகள் தன் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கும். தன் பொருத்தமான துணைவனோ துணைவியோ தேடிக் கொண்டால் அவர்கள் தான்மை தடிகஙகிறது. தாங்கள் பார்ககும் பெண்ணை ஆண்ணை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தன் மகன் அவன் மனைவியிடம் அதிக அன்பை காட்டினால் தாய்க்கு அந்த பெண் மீது பொறாமை வந்து விடும். இதுவே மாமியார் மருமகள் சண்டைக்கு காரணமாக அமைகிறது.

இந்த பெற்றோர்களுக்கு இருக்கும் தான்மை மகன்/மகளிடம் மறைமுகமாக திணப்படுகிறது. அவர்களுக்கே தெரியாமல் தங்களுக்கு ஈகோவை வளர்த்துவிடுகிறார்கள்.

இன்று வளர்ந்துவிட்ட நாகரிக மோகத்தை சமாளிக்க கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. தங்கள் பிள்ளைகளை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டு செல்கிறார்கள். பிறகு அதே குழந்தைகள் வளர்ந்த பிறகு மூதியோர் இல்லாத்தில் பெற்றோரை விட்டு செல்கிறார்கள். இல்லற வாழ்க்கை சுலமாக்க எத்தனையோ இல்லங்கள் வந்துக் கொண்டு இருக்கிறது. இல்லறம் சுலமாகிவட்ட பிறகு எந்த பிரச்சனைகளையும் சமாளிக்க தைரியம் இருப்பதில்லை.

தங்களை தொலைத்து தங்களை தேடிக் கொண்டு இருக்கும் பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஏங்குவது குழந்தை வாழ்ககைக்கு தான். குழந்தைகள் போல் வாழ நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுவதில்லை.

செடி, கொடிகளை பராமரிக்க முடியும். இப்படி வளரு, அப்படி வளரு என்று கட்டளையிட முடியாது. குழந்தைகளும் அப்படி தான். பெற்றோர்கள் அவர்களை பராமரிக்க தான் வேண்டும். அவர்கள் கட்டளைகளை நிறை வேற்றும் பொம்மைகளாக நடத்த கூடாது.

அறிவியல் ரீதியாக குழந்தைகளுக்கு 2 வயதிலே ஈகோ வளரத் தொடங்கி விடுகிறது. எந்த விஷயத்தை தானே தெர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களாக ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் அதை மறுத்து வேறோரு பொருளை கேட்கும். தன் வேலையை தானே செய்ய விரும்பும். பெற்றோர்கள் உனக்கு தெரியாது. நான் செய்யுறேன் என்று சொல்வார்கள்.

குழந்தைகளுக்கு எது சரி தவறு சொன்னால் போது, மற்றதை அவர்களே தெர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

இன்னொரு குட்டி கதை

ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.

தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்

“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.

தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”

மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.

தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.

சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.

மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.

அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.

தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.


(எங்கோ படித்த கதை)

இப்படி பிள்ளை மனம் அறியாத பெற்றோர்கள் பல போர் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மனம் தடுமாறுவதற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

இது போன்ற கதை நாளைய குழந்தையின் டைரி குறிப்பில் இடம்பெறாமல் இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையில் வாழ்ந்த பெற்றோர்களுக்கு எழுதவில்லை. நாளை பெற்றோர்களாக போகும் இன்றைய இளைய பெற்றோர்களுக்காக எழுதினேன்.

( பல வருடங்கள் முன்பு எழுதிய கட்டுரை. இப்போது தான் பதிவு ஏற்ற முடிந்தது.)

Sunday, January 17, 2010

'....த்தூ' என்ற குறும்படம்

பிச்சை எடுப்பதை விட '...த்தூ' என்று காரி உமிழும் அளவிற்கு சில மனிதர்களின் ஒழுக்கத்தை காட்டியுள்ளது இந்த குறும்படம்.

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, ஒருவன் மட்டும் ஒரு பெண்ணின் வரவை எதிர்ப்பார்த்து கொண்டுயிருக்கிறான். காதலிக்கும் பெண்ணாக இருக்குமோ என்று எதிர்ப்பார்க்கும் போது... ஒரு பெண் கை குழந்தையுடன் பிச்சை கேட்கிறாள். அவளுக்காகவே தன் பர்ஸ்யில் இருக்கும் பத்து ரூபாயை முன் பாக்கெட்டில் வைக்கிறான். ஆனால், அவள் தன் நண்பனிடம் மட்டும் பிச்சை கேட்டு விட்டு அவனிடம் கேட்காமல் செல்கிறாள்.

அதே போல், அவன் அண்ணனுடன் பேசும் போதும் அவனிடம் கேட்காமல் அண்ணனிடம் மட்டும் பிச்சை கேட்கிறாள். தன்னிடம் ஏன் பிச்சை வாங்கவில்லை என்று அவனுக்கு புரியவில்லை. தன் இரக்க பார்வையை அவள் தப்பாக புரிந்துக் கொண்டாளோ என்று அவளிடம் சென்று பணம் கொடுக்க போகிறான். அவள் வாங்க மறுத்து, இரவு 8 மணிக்கு தன் வீட்டுக்கு வர சொல்கிறாள்.

அங்கு, அவள் அவனிடம் பிச்சை வாங்காத காரணத்தை சொல்லும் போது அவளுக்கு பிச்சை கொடுத்தவர்களை மனதில் '..த்தூ!' என்று காரி உமிழ்ந்தப்படி படம் முடிகிறது.

பிச்சைக்காரியாக வரும் பெண் தவறான தேர்வு என்று நினைக்கும் போது, அவள் யார் என்று தெரிந்தவுடன் சரியான தேர்வு என்று காட்டுகிறது. அதே போல் கதாநாயகனாக வரும் இளைஞன் 'கவிஞன்' என்று காட்ட முயற்சித்திருக்கிறார். தன்னிடம் பிச்சை கேட்காமல் செல்லும் பிச்சைக்காரி பார்க்கும் போது அவள் மனதில் கேட்கும் கேள்விக்கு முகத்தில் நடிப்பை காட்டவில்லை.

தன்னை சுற்றி எங்கும் 'வேசிதனம்' என்று வரிகளில் இருக்கும் அழுத்தம் நடிப்பில் இல்லை.

குறும்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் பொக்கிஷம் போன்றது.

"பக்தி என்பது தனி சொத்து
ஒழுக்கம் என்பது பொது சொத்து"

சினிமாவில் வருவது போல் டைட்டிலில் 'ஒழுக்க'த்தை பற்றி அறிவுரை கூறும் பாடலை தவிற்த்திருக்கலாம். யாரும் அறிவுரை கேட்கும் எண்ணத்தில் படம் பார்ப்பதில்லை. இருந்தாலும், பாடல் வரிகள் மிகவும் அருமை.

இந்த குறும்படத்தை இயக்கியவர் மணிமேகலை நாகலிங்கம். அடிப்படையில் இவர் ஒரு கவிஞர் என்பதால், சில கவிஞர்களுக்குரிய பாணி தெரிகிறது.

கதாநாயகனிடம் அண்ணன் கேள்வி கேட்கும் போது, வாதம் செய்யாமல் அவன் அறையில் இருக்கும் 'பெர்ணார்ட் ஷா'வின் பொன்மொழியை காட்டி வசனத்தை குறைத்திருப்பது நல்ல முயற்சி.

குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்ல தான் என்று விதியில் இருந்த இந்த படமும் தப்பிக்கவில்லை.


படம் வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்க...
மணிமேகலை நாகலிங்கம் - 94444 86055
விலை. ரூ. 60/-

Friday, January 15, 2010

ஒரு குழந்தையின் டைரி : இரும்பு கட்டில் (பகுதி - 2)



ஒவ்வொரு அப்பாவும் தன் மகனை பார்க்கும் போது பொறாமை படும் விஷயம் பாலியத்தில் இழந்ததை, மகன் அனுபவிக்கும் போது தான். சில மகன்கள் செய்யும் செயல் தந்தை பாலியத்தை ஞாபகப்படுத்தும். பொறாமையும், நினைவுகளை ஒன்றாய் கொடுப்பவன் மகனாக தான் இருப்பான் என்று நினைக்கிறேன்.

பாலியத்தில் நாம் செய்த ஒவ்வொரு விஷயங்களை நினைக்கும் போது பசுமையாய் ஏக்கமாய் மனதிலே தங்கிவிடுகிறது. அதை நினைத்து பார்க்கும் நேரம் இல்லாமல் இருப்பது அதை விட கொடுமையாக இருக்கிறது.

அப்படி ஒரு நினைவை என் மகன் எனக்கு காட்டியது எங்கள் வீட்டு இரும்பு கட்டில்.

நான் வீட்டில் காணவில்லை என்றால், என் அம்மா என்னை தேடும் முதல் இடம் எங்கள் வீட்டு இரும்பு கட்டில் தான். சாப்பிட பயந்து, பள்ளி செல்ல அடம் பிடித்து, பேச விரும்பாமல் தனிமையை விரும்பி நான் நாடி சென்ற முதல் இடம் என் வீட்டு இரும்பு கட்டில். சுவரோடு ஒட்டி இருக்கும் இரும்பு கட்டில் ஓரத்தில் செல்லும்போது ஒரு இருட்டான உலகம் தெரியும். அந்த இருட்டு... அன்னை கருவரையில் இருக்கும் போது எப்படி பாதுகாப்பாக உறங்கினேனோ அவ்வளவு பாதுகாப்பு அந்த கட்டில் கீழ் ஓரத்தில் கிடைத்தது. அப்பா, அம்மா, மாமா எல்லோரும் என்னை வெளியே கொண்டு வர வாங்கி தர விருப்பமில்லாத பொருட்களை எல்லாம் வாங்கி தருவதாக சொல்வார்கள். அவர்கள் சொல்வதை நம்பவில்லை என்றாலும், பாதுகாப்பாய் இருந்த இரட்டு பல்லியை பார்த்ததும் பயத்தை கொடுக்க தொடங்கிவிடும். நான் வருவதற்கு முன்பே இரண்டு பல்லிகள் சல்லாபம் செய்து கொண்டு இருக்கும். உள்ளே வரும் போது நான் கவனிக்கவில்லை. திடிர் என்று கவனிததும் பயத்தில் வெளியே வந்து விடுவேன். அந்த பல்லிகள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. இப்படி அந்த இரும்பு கட்டில் ஒரத்தில் கீழ் இருக்கும் கறுப்பு உலகம் எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

உலகத்திற்கு மட்டுமல்ல... என் இரும்பு கட்டிலுக்கும் இரவு பகல் உண்டு. பகலை ரசிக்க விருப்பட்டால் கட்டில் மேல் வந்து விடுவேன். நான் பொம்மைகள் வைத்து விளையாடிய மிக சிறிய மைதானம். இரண்டு கார்களை மோத வைத்து விபத்துக்கள் நடத்துவேன். மர குச்சியில் செய்ய வில், அம்புகளையும், பேனாவை ஈட்டியாகவும், குண்டு பேனாவை கடாயுதமாகவும் கற்பனை செய்து ஒரு மகாபாரதயுத்தத்தையே கட்டிலில் நடத்துவேன். பொம்மை ரயில் தண்டவாளத்தில் என் விரல்களை நடக்க வைப்பேன். பொம்மை சிங்கத்தின் வாயில் தைரியமாக கை விரல் விடுவேன். பென்ஸில், ரப்பர் வைத்துக் கொண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவேன். அடிப்படாது என்று தெரிந்த பின்பே கட்டில் மெத்தை மேல் குதிப்பேன். இந்த இரும்பு கட்டில் என் குழந்தை பருவத்தில் ஒரு அங்கம். (உங்களுக்கு அப்படி தான் என்று நினைக்கிறேன்...)

பல தேவையான பொக்கிஷம் தேவையில்லாமல் கட்டில் ஒரத்தில் கிடக்கும். தேவையில்லாத நேரத்தில் கிடைத்த பொக்கிஷம் குப்பையாய் தெரியும். அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் என் இரும்பு கட்டில் ஒரத்தில் நிறைய கிடைக்கும். சாவி கொத்து, கடித்து துப்பிய வெள்ளை நடராஜ் ரப்பர், உடைந்த பாதி பென்ஸில், ஷார்ப்பனாரில் சீவிய குப்பை எல்லாம் அந்த இரும்பு கட்டிலில் ரகசியமாய் புதைந்து கிடக்கும். குப்பை பெறுக்கும் போது அங்கு மறைந்த இருந்த ரகசியஙளும் கலைப்படும். ஆனால், கட்டில் மேல் ஒரத்தில் எட்டுக் கால் பூச்சி செய்து வைத்த குப்பை வீடு மட்டும் பொக்கிஷமாக அப்படியே இருக்கும்.

இப்படி கட்டில் கீழ் இருந்த எத்தனையோ பொக்கிஷங்களை தொலைத்துவிட்டேன். அன்று எனக்கு சிறு மைதானமாக இருந்த கட்டில் உறங்க மட்டுமே பயன்படுகிறது. சிறு வயதில் விளையாடிய கட்டிலை வீடு காலி செய்யும் போது கட்டிலின் அனடாமியும் தெரிந்தது.

என் அறையில் இருக்கும் புது கட்டில் என் பாலியத்தை ஞாபகப்படுத்தவில்லை. அப்பா அறையில் தான் இருக்கிறது. இன்றும், அந்த கட்டிலோர இருட்டு எனக்கு பாதுகாப்பு கொடுக்க தயாராக தான் இருக்கிறது. அதற்குள் சென்று பாதுகாப்பு தேட நேரம் கிடைக்கவில்லை. கட்டில் கீழ் நுழைவதற்கும் என் உடல் சம்மதிக்கவில்லை.

Thursday, January 14, 2010

சாப்பாட்டு பிரியன்



எனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது. எதை சாப்பிட்டாலும் மறு நிமிடமே பசி வந்துவிடும். 'உனக்கு யானையை விட பெரிய வயிறு' என்று அப்பா அடிக்கடி கேலி செய்வார். அம்மாவுக்கு என் மேல் அதிகம் பிரியம். எனக்கு பிடித்தது எல்லாம் சமைத்துக் கொடுப்பார். இல்லை என்றால் வாங்கி வந்து கொண்டுப்பார். நானும் ஏதாவது தின்றுக் கொண்டே இருப்பேன்.

இன்று எனக்கு பிறந்த நாள். பத்து வயதாகிறது. எனக்கு பிடித்ததை எல்லாம் அம்மா சமைத்தார். பொதுவாக ‘பிறந்த நாள் அன்று மாமிச உணவுகள் சாப்பிட கூடாது’ என்று அப்பா சொல்லுவார். ஆனால், அம்மா எனக்காக சிக்கன் பிரியானி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65 என்று எல்லா சிக்கன் வகைகளையும் சமைத்திருந்தார். மசாலா கொஞ்சம் தூக்கலாக இருந்ததால், தெருவில் நடந்து செல்பவர்களுக்கு கூட வாசனை மூக்கை துழைக்கும். என் அம்மா கையில் சிக்கன் 65 ஆனவுடன் அந்த கோழி தன் ஜென்ம பயன் அடைந்திருப்பதை பார்த்தேன்.

என் அம்மா பார்க்க சுமாராக இருந்தாலும், சமையலுக்காகவே கல்யாணம் செய்துக் கொண்டதை அப்பா அடிக்கடி அம்மாவை மெச்சுவார்.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். பெயர் ராமு. என்னை விட மூன்று வயது சிறியவன். அப்பா செல்லம். அவன் எது செய்தாலும் அப்பா கோபப்பட மாட்டார். ஒரு முறை ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் அப்பா கையெழுத்து போட்டு மாட்டிக் கொண்டான். அப்பாவே வியக்கும் அளவிற்கு கையெழுத்து அவ்வளவு கச்சிதமாக அப்பா கையெழுத்து போல் இருந்தது. ஆனால், ஆர்வ கோழாரில் கையெழுத்தை பென்சிலில் போட்டு மாட்டிக் கொண்டான். அப்பா அவனை அடிக்காமல் கண்டித்ததோடு விட்டுவிட்டார். இதையே நான் செய்திருந்தால் அவ்வளவு தான். அடி பின்னியெடுத்திருப்பார்.

நான் அம்மா செல்லம். அம்மா எது சமைத்தாலும் முதலில் அண்ணாவுக்கு தான் என்று தம்பி ராமுவிடம் சொல்லுவார். ராமுவின் வாலுதனம் அம்மாவிடம் பலிக்கவே பலிக்காது. எங்களுக்குள் ஒத்துவராத ஒரே விஷயம் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் எங்கள் இருவருக்குள் பாரத யுத்தமே வரும்.

போன வருடம் என் ஒன்பதாவது பிறந்த நாளில் அப்படி தான் எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது. எனக்காக அப்பா வாங்கி வந்த ஜிலேபியை தம்பி எடுத்துக் கொண்டான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தம்பி மேல் கோபம் கோபமாக வந்தது. அவனிடம் இருக்கும் ஜிலேபியை வாங்கி ஓடினேன். அவன் என்னை விடுவதாக இல்லை. என்னையே துறத்தி வந்தான். எப்படியோ சமாளித்து மாடி படியில் ஏறினேன். அவனும் வந்தான். அவனுக்கு தெரியாமல் மாடியில் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் சென்றேன். அங்கு இருந்த பெட்டியில் ஒழிந்துக் கொண்டேன். ராமு ஏமாற்றத்துடன் ரூம் கதவை சாத்திவிட்டு சென்றான். காத்து வராமல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அப்பா, அம்மா வந்து பார்த்தார்கள். முதல் முறையாக அப்பா தம்பியை அடிப்பதை பார்த்தேன்.

இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு அப்பா என் பக்கம் சேர்ந்துக் கொண்டார். சிக்கன் வகைகள், ஜிலேபி, மைசூர் பாக் என்று சில இனிப்பு வகைகள் எனக்காக வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அம்மா முதலில் அண்ணாவுக்கு தான் என்று அம்மா தம்பியிடம் சொன்னார். தம்பி வாடிப் போயிருந்தான்.

சென்ற வருடம் என் பிறந்த நாளில் இருந்த சந்தோஷம் அம்மா, அப்பா முகத்தில் இல்லை. கண்ணீர் தழும்ப சமைத்ததையும், வாங்கி வந்ததையும் என் படத்திற்கு முன் வைத்து வணங்கினர். எனக்கு பிடித்தது எல்லாம் கண் முன் இருந்தும் என்னால் எதையும் தொடமுடியவில்லை.

எனக்கு எப்போதுமே பசி தான். எவ்வளவு சாப்பிட்டாலும் எனக்கு இருக்கும் பசி போகவே போகாது.

Wednesday, January 13, 2010

அம்பேத்கர் : ஒரு அமெச்சூர் கவிதை



பொங்கலுக்கு என் அறையை சுத்தம் செய்யும் போது கிடைத்த என் பழைய கவிதை. கல்லூரி நாட்களில் எழுதியது என்று நினைக்கிறேன். 'அம்பேத்கர்' பிறந்த நாளுக்காக எழுதியிருக்கிறேன். அது மட்டும் தலைப்பை பார்த்ததும் நினைவுக்கு வந்தது. இதை படிக்கும் போது கல்லூரி நாட்களில் கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில் எவ்வளவு அராஜகம் செய்திருக்கிறேன் என்று எனக்கே தெரிந்தது.

**
அம்பேத்கர்

தீண்டாமையை தீயாய் சுட்டெரித்தவரே !
தொண்டாய் அரசியலை வழிவகுத்தவரே !
தாழ்த்தப்பட்ட இனத்தில் படித்த முதல் மாணவரே !
பள்ளியில் கிடைத்த அவமானத்தில்
தீண்டாமை பற்றி சிந்தித்தாய் !
தீண்டாமை ஒரு பாவ செயல் என்று
பள்ளிப் புத்தகங்களில் அச்சடித்தாய் !

இந்திய சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தாய் ! - உன்
இந்திய மக்களுக்கு உத்வேகமாய் இருந்தாய் !
நீங்கள் கொடுத்த பாடத்தில்
தீண்டாமை ஒழித்துவிட்டோம் !
நீதி புத்தகளில் மட்டுமே
தீண்டாமையை வாழவிட்டோம் !

நீதி மன்றங்கள் சட்டத்தின்
இருப்பிடமாக இருக்கிறதே !
நீதி இருக்கும் இடமாக்க
இன்னும்
எத்தனை அம்பேதகர் தேவையோ ?

ஒரு சிலர் தங்களுக்கு
சாதகமானதை விட்டு விட்டு
பாதகமானதை மாற்றினர் !
உங்கள் சட்டத்தால்
'தலித்' இனம் வளர்ந்தது
சுயநலத்தின் சிலரால்
மனித நேயம் தளர்ந்தது !

மூவெட்டாய் ஒரு நாளை வகுத்து வாழந்தவரே !
மக்களுக்காக உணர்மிகுந்த சட்டத்தை எழுதியவரே !
இன்று மனித இனம் இறக்காமலிருக்க....
உயிர் கொண்டு புதிய சட்டங்கள் எழுத வாருமய்யா
உங்கள் வரவுக்காக
சில சட்டங்கள் மாறாமல் இருக்குதைய்யா !

Tuesday, January 12, 2010

காதல் திருமண அளைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

"என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

புத்தகத்தை வாங்க இங்கே !

Thursday, January 7, 2010

ஒரு குழந்தையின் டைரி : ஹீ-மேன் பொம்மை



எல்லோரும் சிறு குழந்தையாக இருக்கும் போது ஏதாவது ஒரு பொம்மையை அடம் பிடித்து வாங்கியிருப்போம். சில குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாங்கள் கேட்ட பொம்மை வாங்கி தர மறுக்கும் போது அவர்கள் அடம் பிடிப்பதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். உங்களுக்கு கூட சிரிப்பு வரும். அந்த சமயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு அடித்தாலும் அவர்களது கவனம் அந்த பொம்மை மீது தான் இருக்கும். இதை பார்க்கும் போது நமக்கும் நம் குழந்தை பருவம் ஞயாபகம் வரும். பெற்றோர்களிடம் அடம் பிடித்து பொம்மை வாங்கிய சம்பவம் நினைவில் வரும். பொம்மை வாங்கிய அன்றைய தினம் முழுவதும் அதை வைத்து தான் விளையாடியிருப்போம். சில நாட்களில் அப்பொம்மை தெகட்டிவிடும்.

நம் வீட்டுலேயே இருந்தும் அந்த பொம்மை இருக்கும் இடம் தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் முயற்சி செய்ய மாட்டோம். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு பொம்மை இருக்கும். இதை 'இல்லை' என்று யார் மறுத்தாலும், அது அவர்கள் மறதியே ! நீங்கள் இன்றும் அந்த பொம்மையை நினைவில் வைத்திருந்தால், அதை அவ்வளவு ரசித்து விளையாடி இருந்திருக்கீர்கள் என்று அர்த்தம். அப்படி அடம் பிடித்து நான் வாங்கிய பொம்மையின் பெயர் 'ஹீ-மேன்'.

இருபது வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமை காலை பத்து மணிக்கு ஒலிப்பரப்பிய கார்டூன் நிகழ்ச்சி தான் இந்த 'ஹீ-மேன்' ( இன்று சுட்டி டி.வி வளம் வருகிறான்). இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பார்ப்பேன். ஒரு முறை இந்த கார்டூன் பார்ப்பதற்காக என் சொந்த தாய்மாமன் திருமணத்திற்கே போகவில்லை. அந்த கார்டூன் நிகழ்ச்சி அந்த வயதில் அவ்வளவு பிடிக்கும். இப்படி இருக்கும் போது அந்த பொம்மை கண் முன் இருக்கும் போது எப்படி வாங்காமல் இருக்க முடியும். என் அம்மாவிடம் கேட்டேன். எல்லா அம்மாக்கள் போல் அவர்களும் எனக்கு வாங்கி தர மறுத்தார். பிடிவாதம் தலைக்கேறியது. அன்பு பரிசாக ஐந்தாறு அடியும் விழுந்தது. ‘வாங்க வேண்டும்’ என்று முடிவு செய்த பிறகு இந்த அடியெல்லாம் நம்மை மாற்றி விடவா போகிறது. அப்போது வாங்கி தர அம்மாவிடம் பணம் இல்லை என்பது தான் உண்மை. என் குழந்தை மனது ( இருபது வருடம் முன்பு) கேட்கவில்லை. அந்த பொம்மையின் விலை அறுபது ரூபாய். 'ஆப்ட்ரால் சிக்ஸ்டி ரூபிஸ்' என்று ஆறு வயதில் கூறிய வார்த்தை இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. மறக்க நினைத்தாலும், என் அம்மாவும், தாய்மாமாவும் அந்த வார்த்தையை மறக்க விடவில்லை. இன்றும் என்னை கேலி செய்ய அந்த வார்த்தையை ஞயாபகப்படுத்துவார்கள். கடைசியில், எந்த மாமா திருமணத்திற்க்கு போகவில்லையோ அவர் தான் அந்த பொம்மையை வாங்கிக் கொடுத்தார். முதல் முறையாக அம்மாவிடம் என் பிடிவாதம் வென்றது.

கட்டு மஸ்தான ஹீமேன் பொம்மைக்கு எதிரி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் 'ஸ்கேலட்டான்'. இன்று சுட்டி டி.வியில் எலும்பு மனிதனாக வருகிறானே... அவனே தான். கதாநாயகன் வைத்துக் கொண்டு எப்படி விளையாடுவது ? வில்லன் 'எலும்பு மனிதன்' வேண்டாமா !! அப்போது கேட்க எனக்கு தோன்றவில்லை. ஞயாபகம் வந்த போது பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

என் பொம்மைகளை நான் உடைத்ததை விட உறவுக்கார நண்பர்கள் உடைத்தது தான் அதிகம். எத்தனையோ துப்பாக்கி, ட்ரெயின் என்று பல பொம்மைகளை இழந்திருக்கிறேன். அன்று அவர்கள் கண்ணில் இருந்து என் ஹீமேன் பொம்மையை மட்டும் கவனமாக பாதுகாத்தேன். இன்று என் மகனிடம் இருந்து பாதுகாக்க வீட்டு அலமாரியில் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறேன்.

முன்பெல்லாம் ஹீமேன் பொம்மையை வைத்து விளையாடும் போது அவன் எதிரி 'ஸ்கேலட்டனை' வாங்க வேண்டும் என்று நினைப்பேன். இன்று வரையிலும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். அந்த பொம்மையை வாங்கினாலும் காட்சிப் பொருளாக தான் வைக்க முடியும். இப்போது ஹீமேனுக்கும், ஸ்கேலட்டனுக்கும் சண்டையை போட்டு நான் விளையாடினால் என்னை ஒரு மாதிரியாக தான் பார்ப்பார்கள். காட்சிப் பொருளாக வாங்க மனமில்லாததால் வாங்காமல் விட்டு விட்டேன்.

ஹீமேன் பொம்மையை வாங்கி இருபது வருடங்கள் மேலாகி விட்டது. என் உயரத்தில், உடலில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால், இன்றும் கைக்கு அடக்கமான என் ஹீமேன் பொம்மை அதே கட்டுமஸ்தான உடல் கட்டோடு வீட்டு அலமாரியில் காட்சி பொருளாக இருக்கிறது. இப்படி ஒரு பொம்மை உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்கள் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்கில் அந்த பொம்மையை வாங்கிக் கொடுங்கள். ( என் மகனுக்கு 'ஸ்கேலட்டனை' பொம்மையை வாங்க தர முயற்சிக்கிறேன். எந்த கடையிலும் கிடைக்கவில்லை.)

Wednesday, January 6, 2010

சென்ற வருடம் உருப்படியாய் செய்தது !

டிசம்பர்.31 போட வேண்டும் என்று நினைத்தது. இப்போது தான் இதை பற்றி பதிவு போட முடிந்தது.

சென்ற வருடம் படித்த புத்தகங்கள். (ஜூலை - டிசம்பர் வரை, ஜனவரி - ஜூன் வரை படித்த புத்தகங்கள்)

கிழக்கு பதிப்பகம்

1. மு.க.ஸ்டாலின் - ஜி.ஆர்.சுவாமி
2. இண்டர்வியூ டிப்ஸ் - எஸ்.எல்.வி. மூர்த்தி
3. ஜனகணமன - மாலன்
4. அடடே 2 - மதி
5.ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - எஸ்.எல்.வி. மூர்த்தி
6. ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Arthur Conan Doyle (தமிழில் : பத்ரி சேஷாத்ரி)
7.இரவுக்கு முன்பு வருவது மாலை (ஒலிப்புத்தகம்) - ஆதவன்
8.இட்லியாக இருங்கள்(ஒலிப்புத்தகம்) - சோம.வள்ளியப்பன்
9.அடுத்த வினாடி(ஒலிப்புத்தகம்) - நாகூர் ரூமி
10.மரியதையாக வீட்டுக்கு போங்கள்
11.மால்கம் எக்ஸ் - மருதன்
12.உயிர்ப் புத்தகம் - ஸி.வி.பாலகிருஷ்ணன்
13.ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன் - பாலு சத்யா
14.தொழில் முனைவோர் கையேடு - எஸ்.எல்.வி. மூர்த்தி
15.பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - பா.ராகவன்
16.ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை - ஜே.ராம்கி
17.சுதந்தர பூமி - இந்திரா பார்த்தசாரதி
18.சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - சோம.வள்ளியப்பன்
19.விஜயகாந்த் - யுவ கிருஷ்ணா
20. CMM:ஃபைவ் ஸ்டார் தரம் - சிபி கே.சாலமன்
21. வேதபுரத்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி
22. எனக்கு வேலை கிடைக்குமா? - என்.சொக்கன்
23. ஹலோ, உங்களைத்தான் தேடுகிறார்கள்! - எஸ்.எல்.வி. மூர்த்தி
24. ஹிஸ்புல்லா - பா.ராகவன்

உயிர்மை பதிப்பகம்

25.ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்
26. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
27.வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா
28. அ'ன்னா ஆ'வன்னா - நா.முத்துக்குமார்
29. இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
30. எழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா
31. புதிய நீதி கதைகள் - சுஜாதா
32. பால்ய நதி - எஸ்.ராமகிருஷ்ணன்
33. நடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்

34. நானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள்,நக்கீரன் வெளியீடு
35. கலைஞர் 100 காவியத்துளிகள் - சபீதா ஜோசப், நக்கீரன் வெளியீடு
36. கலைஞரின் நகைச்சுவை நயம் - கவிஞர் தெய்வச்சிலை, நக்கீரன் வெளியீடு

37. மஹாகவி பாப்லோ நெருடா - நிழல் வெளியீடு
38. கடலும் கிழவனும் - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே

39. கதை கதையாம் காரணமாம் !! - சூரியசந்திரன்
40. இது ராஜப்பாட்டை அல்ல - சிவகுமார்
41. கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
42. மரணம் முற்றுப்புள்ளி அல்ல(கவிதை) - அப்துல் ரகுமான்
43. நிர்வாண நகரம் – சுஜாதா
44. திரைக்கதை எழுதுவது எப்படி ? - சுஜாதா
45. யுத்த பூமி லெபானன் - எஸ்.வி.ராஜதுரை
46. சில நேரங்களில் சில அனுபவங்கள் - பாக்கியம் ராமசாமி
47. எப்படி கதை எழுதுவது ? - ரா.கி.ரங்கராஜன்
48. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" – நிலாரசிகன்

49. வெற்றி தரும் மேலாண்மை உத்திகள் - ஜி.வி.ராவ்
50. வாய்மையின் வெற்றி : ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கார்த்திகேயன்
51. வாடா மல்லி - சு.சமுத்திரம்
52. தமிழா ? அமிர்தமா ? - கா.வேழவேந்தன்
53. காலம் வென்ற தமிழக மகளிர் - சரளா ராசகோபாலன்
54. காற்றில் கவிதை உலா(கவிதை) - தனஞ்ஜெயன்
55. மழையில் குடைபிடித்துப் போகாதே (கவிதை) – தனஞ்ஜெயன்
56. The 80/20 Principle – Richard Koch

நியாயமாக பார்த்தால் நான் படித்த புத்தகங்களை பட்டியலிட தேவையில்லை. உண்மையை சொல்லுவதென்றால், ஒரு வருடத்தில் நூறு புத்தகம் படிப்பது பெரிய விஷயமில்லை. பணம் கொடுத்து புத்தகம் வாங்குவதை குறைத்து, நூலகத்தை அதிகமாக பயன்படுத்திக் கொண்டேன். (ஒரு வேளை, படித்த புத்தகம் தெரியாமலே மீண்டும் புத்தகம் வாங்கிவிட கூடாது என்பதற்காக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இத்தனையும் சொன்னேன். )

இந்த பட்டியல் சென்ற வருட வாசிப்பையும், எவ்வளவு உள்வாங்கியிருக்கிறேன் என்று எனக்குள் சென்று என்னை ஆராய்ந்து பார்த்தேன். இதில் மூன்று விஷயம் தெளிவாக தெரிந்தது

1. கவிதை படிப்பது மட்டுமல்ல... கவிதை எழுதுவதையும் குறைத்து விட்டேன் என்பது புத்தக பட்டியலிடும் போது உணர முடிந்தது.
2. கிழக்கு மற்றும் உயிர்மை பதிப்பகங்களை அதிகமாக படித்திருக்கிறேன். மற்ற பதிப்பக புத்தகங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
3. ஆங்கில புத்தகங்கள் வாசிப்பு மிகவும் குறைவு. அடுத்த வருடமாவது அதிகம் படிக்க வேண்டும்

உருப்படியாய் செய்தது.

பல நாள் செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து... ஒரு வழியாய் தைரியமாக 'பதிப்பக' துறையில் இறங்கியிருக்கிறேன். நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதித்திருக்கிறேன், எப்படியோ கரை சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கையில்....

இந்த வருடம் முயற்சி அல்ல... உறுதி மொழி

1. பதிப்பக சாரிபில் குறைந்தது பத்து புத்தகமாவது போட வேண்டும்.
2. என் இன்னொரு நீண்ட நாள் ஆசை ஒரு புத்தக கடை போட வேண்டும். (ஓ.சிலே புது புத்தகங்களை படிக்கலாம்.)

பதிப்பகத்தில் பெயர் எடுக்கும் வரை ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் தான். ( அலுவலக வேலையின் நடுவில் பதிப்பக வேலை.)

Monday, January 4, 2010

நாகரத்னா புத்தகங்கள் சலுகை விலையில் + தபால் இலவசம்

நாகரத்னா பதிப்பக புத்தகங்களை 'Online fund Transfer' மூலம் சலுகை விலையில் வாங்கலாம்.



ஐந்து புத்தகங்கள்

உறங்காத உணர்வுகள் (விலை.30) - கவிதை
எனது கீதை (விலை.40) - கட்டுரை
நடைபாதை(விலை.40) - சிறுகதை
என்னை எழுதிய தேவதைக்கு... (விலை.55) - சிறுகதை
காந்தி வாழ்ந்த தேசம் (விலை.45) - கவிதை தொகுப்பு

210 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், 180 ரூபாய்க்கு... மற்றும் தபால் செலவு இலவசம்.

நான்கு புத்தகங்கள்

எனது கீதை (விலை.40) - கட்டுரை
நடைபாதை(விலை.40) - சிறுகதை
என்னை எழுதிய தேவதைக்கு... (விலை.55) - சிறுகதை
காந்தி வாழ்ந்த தேசம் (விலை.45) - கவிதை தொகுப்பு

180 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், 160 ரூபாய்க்கு... மற்றும் தபால் செலவு இலவசம்.

ரூ.150 மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு, தபால் செலவு இல்லை.

ரூ.150 ரூபாய்க்கு கீழ் புத்தகம் வாங்குபவர்கள், கொரியருக்கு ரூ.10 சேர்த்து அனுப்பவும்.

பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

இணையத்தில் புத்தகம் வாங்க விரும்புபவர்கள் http://ezeebookshop.com/ மூலம் வாங்கலாம்.

Sunday, January 3, 2010

எதிர் வீட்டு தேவதை !



நான் குருடன் என்று உன்னை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன். எதிரில் இருந்த உன்னை இத்தனை நாள் பார்க்காமல் நான் இருந்திருக்கிறேனே....!! என் நண்பர்கள் இன்று தான் உருப்படியாக ஒரு நல்ல காரியம் செய்தனர். உன்னை கண்டெடுத்து எனக்கு காட்டியவர்கள் அவர்கள் தான். என் வண்டியை ஸ்டார்ட் செய்த அடுத்த நோடியில் தெரு முனையை தாண்டி விடுவேன். அதனால் என்னவோ எதிர் வீட்டில் தேவதை குடியிருந்தும் நான் பார்க்காமல் இருந்துவிட்டேன். அவள் எனக்காவே இந்த பூமியில் ஒதுக்கப்பட்டவள் போன்ற உணர்வு...! உன்னுடன் வாழ்வதற்காகவே நான் பிறவி எடுத்தேன் என்ற ரகசியத்தை புரிந்து கொண்டேன்.

அவள் கண்ணில் படும் படி பல முறை தெருவோரம் நடந்தேன். அவள் வீட்டை கடக்கும் போது தெருவில் அனைவரும் காதில் விழும் படி வண்டி ஹாரன் அடித்தேன். அவளை தவிர மற்றவர்கள் பார்வை தான் என் மீது விழுந்தது. அவள் வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்று தெரியாமல் இப்படி பல சேட்டைகள் செய்தேன். ஆனால், ஒன்றும் பலனில்லை.

எத்தனையோ காதல் படங்களை பார்த்தாலும், காதல் புத்தகங்கள் படித்தாலும்... எனக்காக ஒரு காதல்.. ஒரு பெண் என்று பார்க்கும் போது தான் நம் காதலுக்கு ஒரு உருவம் கிடைக்கிறது. என் காதலுக்கு உருவம் கொடுத்த தேவதை அவள் தானே.. !!

என் காதல் பார்வையை விட அவள் பார்வையில் காதல் அதிகமாகவே தெரிந்தது. நான் அவள் வீட்டை கடக்கும் போது பார்த்த பார்வையும், கன்ன குழி சிரிப்பும்.... யப்பா ! என்னை விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது. மேல் மாடியில் இருந்து அவள் என்னை எட்டி பார்ப்பதும், நான் தலையை கோதியப்படி அவளை பார்த்து சிரித்தும் தெருவை கடப்பேன்.

வேலி போட்டு பார்த்து ரசிக்கும் மாம்பழத்தை போல தினமும் அவளை பார்த்து பார்த்து ரசிக்க தான் முடிந்தது. அவள் எப்போது அம்மாவுடன் அல்லது அண்ணாவுடன் தான் வீட்டை விட்டு வருவாள். நான் சமிஞை செய்தும் புரிந்து புரியாமல் புன்னகைத்தப்படி நடப்பாள். ஒரு நிமிடம் நின்றால் போதும் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிவிடுவேன். சந்தர்ப்பம் அமையாமல் தவித்தேன்.

இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தால், அவள் வேறு ஒருவனுக்கு மாட்டிவிட்டால் என்ன செய்வது. ஒரு காகிதம் எடுத்தேன். கவிதை எழுத முயற்சித்தேன். முடியவில்லை. வீண் விபரிதத்தை செய்யாமல் என் செல் நம்பரை எழுதி அவள் பார்க்கும் படி வீசினேன். அவளும் எடுத்தாள். அந்த கணதில் இருந்து என் செல்போன் மணி எப்போது அடிக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போது அவளுடைய அழைப்பாக இருக்குமோ என்று ஆர்வமாக எடுத்தேன். அவள் அந்த காகிதத்தை கிலித்து போட்டாளா அல்லது எடுக்காமல் குப்பையில் விழுந்ததா என்று தெரியாமல் தவித்தேன்.

ஒரு வாரம் கடந்தது. அவளிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையே போய்விட்டது.

செத்து கிடந்த என் நம்பிக்கைக்கு 'ஆக்ஸிஜன்' கொடுப்பது போல் மணி அடித்தது...

" நீங்க ராமசந்திர தானே..." என்று எதிர் முனையில் ஒரு பெண்ணின் குரல்.

அவளே தான். எத்தனை முறை அவள் அம்மாவிடம் பேசும் போது கேட்டிருப்பேன். என் பயரை அவள் உச்சரித்தபோது மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிர் கொண்டு வந்தது. உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் வாழ தொடங்கியது.

" சொல்லுங்க..." என்று ஆவலாக கேட்டேன்.

"ஒரு நிமிஷம் " என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பெண் குரல் கேட்டது.

"டேய்... நீ தான் ராமசந்திரனாடா...." என்று மிரட்டும்படி இருந்தது அந்த குரல். நிச்சயமாக அவள் அம்மா இல்லை. குரல் அச்சுருத்துவது போல் இருந்தாலும் இளமையாக தான் தெரிந்தது.

"டேய்...நாயே... லூசூ... பண்ணாட..." என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை இடியும் மின்னலுமாக பொழிந்தாள்.

அவள் பேசி முடித்ததும், இன்னொரு பெண் பேசினாள்.

" டேய் ! கசுமாலாம்.... டுபுக்கு...." என்று ஆண் சொல்ல கூச்சப்படும் வார்த்தைகளை சொல்லி திட்டினாள்.

அடுத்து இன்னொரு பெண் என்று தன் தோழி படைகளிடம் கொடுத்து என்னை மட்டுமில்லாமல் குடும்பத்தையே சேர்த்து வருத்தெடுத்தார்கள். கோபத்தில் போனை வைத்த போது கூட விடாமல் அவர்கள் அழைப்பு மணி, எனக்கு சாவு மணி போல் ஒலித்தது.

ஒரு பெண்ணின் செல் நம்பர் கிடைத்தால் ஒருவன் மட்டும் தான் பேச ஆசைப்படுவான். ஆனால், ஆணின் நம்பர் பெண்ணுக்கு கிடைத்தால் அவனை போட்டு தாக்க கொலைவெறியோடு பல பெண்கள் அலைவதை அன்று தான் உணர்ந்தேன்.

முகத்தில் வழியும் வேர்வையை துடைத்து விட்டு, என் செல்போனுக்கு புது சிம் வாங்க சென்றேன்.

***

"என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

புத்தகத்தை வாங்க இங்கே !

Saturday, January 2, 2010

கிழக்கு புத்தகங்களை வாங்க மாட்டேன் !

வேலை பளுவால் சென்னை புத்தக கண்காட்சிக்கு முதல் இரண்டு நாள் செல்ல முடியவில்லை. ஒரு வழியாக நேற்று (1.1.10), கையில் இரண்டு ஷாப்பிங் பையுடன் புத்தகக் கண்காட்சிக்கு நுழைந்தேன்.

IT க்காக தங்கள் பதிப்பகம் பெயரில் ஸ்டால் வைக்காமல் வேறு பெயரில் ஸ்டால் வைத்திருப்பதை கவனித்தேன். IT வரும் அளவிற்கு புத்தகம் விற்பனையாகிறது என்பது மிக பெரிய விஷயம். நல்லா இருந்தா சரி !!

நாகரத்னா பதிப்பக புத்தகங்களை வேண்டிய ஸ்டாலில் கொடுத்து விட்டு, ஒவ்வொரு புத்தக ஸ்டாலை பார்த்து பார்த்து புத்தங்களை வாங்கினேன். இது வேறும் முதல் கட்டம் மட்டுமே.

ஆதவன் சிறுகதைகள் (அம்ருதா வெளியீடு)
வண்ணநிலவன் சிறுகதைகள் (அம்ருதா வெளியீடு)
ஆயிஷா - இரா.நடராஜன்
கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஜாக் வெல்ச் - ரவீந்தர்
இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்
அய்யனார் கம்மா - நர்சிம்
பலிபீடம் நோக்கி - கலைஞர் (தி.க. வெளியீடு)
சிதம்பர ரகசியம் - கி.வீரமணி (தி.க. வெளியீடு)
வால்மீகி இராமாயண சம்பாஷனை - பெரியார் (தி.க. வெளியீடு)

வழக்கம் போல் நான் வாங்க எடுத்து சென்ற பணத்தில் பாதிக்கு மேல் களவாட நினைத்தவர்கள் கிழக்கு பதிப்பகம் தான். நல்ல வேலை. கிரடிட் கார்ட் மூலம் வாங்கி விட்டேன். NHMயில் வாங்கிய புத்தகங்கள்

பிராடிஜி வோர்ட் கிலாக் - 24 புத்த்கங்கள்
தி.மு.க உருவானது ஏன் ? - மலர்மண்ணன்
சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்
ராஜிவ் கொலை வழக்கு - கே.ரகோத்தமன்
மாவோயிஸ்ட் - பா.ராகவன்
ஓஷோ ஒரு வாழ்க்கை - பாலு சத்யா

கிழக்கு ஸ்டால் வெளியே பா.ரா அவர்கள் இருந்தார்.அவரிடம் மாவோயிஸ்ட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். ( இந்த புது வருடத்தில் அவர் போடும் முதல் கையெழுத்து.)

தன் பதிவில் இலவச புத்தகம் கொடுக்க கூடாது என்று அவர் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும், என் புத்தகத்தை (என்னை எழுதிய தேவதைக்கு) தைரியமாக கொடுத்தேன். என் மானசீக குருவிடம் அவருக்கே தெரியாமல் நான் எடுத்துக் கொள்ளும் உரிமை. சிரித்தப்படி அவரும் வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டார். என்னை திட்டி பதிவு எழுதுவதாக சொன்னார். இன்னும் பதிவு வரவில்லை. மோதிர விரலில் கொட்டு வாங்க காத்துக் கொண்டு இருக்கிறேன்.

இரண்டு கையில் புத்தகங்களோடு மூன்று மணி நேரம் மேல் நடக்க முடியவில்லை. பாதி மனதோடு திரும்பி வந்தேன்.

மீண்டும் நாளை போகாலாம் என்று இருக்கிறேன். இந்த முறை கிழக்கு புத்தகம் வாங்க கூடாது என்ற முடிவோடு இருக்கிறேன். முடிந்தால் அந்த ஸ்டால் பக்கமே போக கூடாது.

ஐயோ..........!! 'இந்தியா வரலாறு காந்திக்கு பிறகு' புத்தகம் வாங்க மறந்துட்டேனே !!

சென்னை புத்தக கண்காட்சியில் நாகரத்னா புத்தகங்கள் !!

வணக்கம் நண்பர்களே,

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்கள் கீழ் காணும் ஸ்டாலில் கிடைக்கின்றன.

பாலவசந்தா பதிப்பகம் (ஸ்டால் எண்.443)
எனது கீதை ( சலுகை விலை.36)
என்னை எழுதிய தேவதைக்கு (சலுகை விலை.50)
காந்தி வாழ்ந்த தேசம் (சலுகை விலை.40)

நூல்கள் கிடைக்கும்

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால் எண்.182)
எனது கீதை (சலுகை விலை.36)
என்னை எழுதிய தேவதைக்கு (சலுகை விலை.50)
காந்தி வாழ்ந்த தேசம் (சலுகை விலை.40)
நடைபாதை (சலுகை விலை.36)

நூல்கள் கிடைக்கும்.

கண்காட்சி நாட்களில் நண்பர்கள் இந்தத் தொலைபேசி எண்ணில் (9940448599) என்னை அழைக்கலாம்.

அன்புடன்,
குகன்

LinkWithin

Related Posts with Thumbnails