வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 20, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - 6

நான் இப்படி சொன்னதும் அம்மா கண்கள் சிவந்தது. இதுவரை அவரை எதிர்த்து எதையும் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. பி.ஏ படிப்பு வேண்டாம் என்று சொன்ன போது கூட மாமாவுக்காக படிக்க சம்மதித்தேன். இப்போது அம்மா 'வேண்டாம்' என்று சொன்ன பெண்ணை போட்டோ கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறேன்.

 " என்னடா...! ராசியில்லாத பொண்ணு இந்த குடும்பத்துக்கு மருமகளா வரணுமா....?" என்று ரௌத்திர குரலில் கத்தினார்.

" ராசி எல்லாம் ஒண்ணும் கிடையாது. எல்லாம் நம்ப மனசு தான். அது மட்டுமில்ல ! மாமா இந்த பொண்ணு எனக்கு பொருத்தமா இருக்கும்னு வேற சொல்லியிருக்காரு...." என்று சொல்லி இழுத்த போது அம்மா முகம் மாறியிருந்தது. என் வீடு ஒரு நிமிடத்தில் நிசப்தமாக இருந்தது.

"அவரோட கடைசி ஆசை. இது கூட நான் நிறை வேத்தலைன்னா. நாம மனுஷங்களே இல்லமா...." என்றேன்.

மாமாவின் கடைசி ஆசை என்றுவுடன் அம்மா பதில் எதுவும் சொல்லவில்லை. அதே சமயம் அந்த ‘ராசியில்லாதவள்’ என்ற எண்ணம் அவர் மனதில் அழமாய் பதிந்து விட்டது.

மாணிக்கம் மாமா அந்த குடும்பம் சொல்லி கொள்ளும் படி வசதி இல்லை என்றும், சீர் வரிசை எல்லாம் பெரிதாக செய்ய முடியாது என்று எல்லாம் சொன்னார். இதுஎல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மனதில் இருந்த ஒரு நிபந்தனை மட்டும் சொன்னேன். அதற்கு பெண் வீட்டார்கள் சம்மதித்தால், உடனே திருமணம் என்றேன்.

என் திருமணம் தாலியில்லாமல் 'சுய மரியாதை' திருமணமாக இருக்க வேண்டும்.

அம்மா, மாணிக்கம் மாமா இதற்கு மறுப்பு தெரிவித்தும் என் எண்ணத்தில் உறுதியாக இருந்தேன். என் திருமணத்தில் தாலி, சடங்கு எதுவும் இருக்க கூடாது.

" உங்க மாமா போனதும் அப்புறம் எல்லாம் உன் இஷ்டப்படி செய்யுற" என்று சொல்லி கோபமாக அறைக்குள் சென்றார். மாணிக்கம் மாமா எதுவும் பேசமால் பெண் வீட்டார்களிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொல்லி சென்றார்.

இரண்டு நாள் கலித்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்து, பெண் வீட்டில் 'சுய மரியாதை' திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறினார்.

"என்னது தாலியில்லாத கல்யாணத்துக்கு சரி சொல்லுறாங்களா... என்ன குடும்பம் இது !" என்று முகத்தை சுளித்து கொண்டு அம்மா கேட்டார்.

" அங்க பொம்பளைங்க யாரும் இல்ல. பொண்ணுக்கு அப்பா மட்டும் தான். அவரும் தி.க இருக்குறவரு. சுய மரியாதை கல்யாணம்னு சொன்னவுடனே அவருக்கு சந்தோஷம். மாப்பிளைய பார்த்தே ஆகனும் துடிச்சாரு...." என்று பெண் வீட்டில் நடந்ததை ஒவ்வொன்றாக மாணிக்கம் மாமா சொன்னார்.

" தாலிக்காக ஒவ்வொரு பொண்ணும் விரதம் இருக்காங்க. நீங்க எல்லாம் தாலியில்லாம கல்யாணம் பண்ணுறத சொல்லுறீங்க..." என்ற அம்மா கோபமாக கேட்டார்.

மாணிக்கம் மாமா எதுவும் பேசவில்லை. உள்ளே இருந்த வெளியே வந்து, " யாரும் தாலிக்காக விரதம் இருக்குறது இல்ல. புருஷனுக்காக தான் விரதம் இருக்காங்க. பொண்ணுங்க விரதம் இருக்குறது புருஷன் இருந்தா போதும். தாலி தேவையில்ல...." என்றேன். என் நாத்திக வாதத்தை கேட்டவுடன் அம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது. மாணிக்கம் மாமா முன்பு என்னை திட்ட அம்மாவுக்கு மனம் வரவில்லை.

 "எப்படியோ செஞ்சிட்டு போங்க !!" என்றப்படி அம்மா உள்ளே சென்றார். எப்படியோ நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையில்லாமல் 'சுய மரியாதை' நடக்க பெண் வீட்டார் சம்மதித்துவிட்டனர்.

 என் திருமணத்தை பாலசுந்தரம் ஐயா தான் நடத்தி வைக்க வேண்டும். அவர் தான் என் மனதில் 'பகுத்தறிவு' பற்றிய விதையை மனதில் போட்டார்.’ பெரியா’ர் சொற்பொழிவை கேட்க வைத்து முழு பகுத்தறிவாதியாக என்னை மாற்றினார். எனக்கு அவர் திருமணம் நடத்தி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

 நான் கும்பகோணத்திற்கு சென்று என் திருமணத்தை பற்றி சொன்னேன். 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார். நடத்தி வைக்கவும் சம்மதித்தார்.

எங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், சீர்வரிசை, அர்ச்சகர், அக்னி குண்டம் என்று எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க 'சுய மரியாதை'யுடன் நடக்கும் முதல் திருமணம் என்னுடையது தான். எனக்கு மனைவியாக வர போகிறவளை திருமணத்தன்று தான் பார்த்தேன். நல்ல அழகு. அவள் கண்களில் கணிவும், பணிவும் நன்றாக தெரிந்தது. ரம்யாவிடம் இப்படி ஒரு பார்வை இருந்ததா என்ற சந்தேகம். இப்போழுது அவளை பற்றிய நினைப்பு எதற்கு ? இனி என் வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய போகிறவள் இவள் தான்.... இந்த 'சிவகாமி' என்ற என் புது தேவதை.

பாலசுந்தரம் ஐயா திருமண பத்திரம் படித்து முடித்ததும், நானும், சிவகாமி 'ஒன்றாய் வாழ்வதாக' உறுதி மொழி எடுத்து திருமண பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். என் சுயமரியாதை திருமணத்திற்கு நான் எதிர்பார்த்தது போலவே, எங்கள் வீட்டில் இருந்து சொந்தங்கள் பலர் வரவில்லை. நண்பர்கள் தான் அதிகப் பேர் வந்திருந்தார்கள். என் மரியாதை இழந்து சொந்தங்களை வரவழைப்பதை விட, சுயமரியாதையோடு இருப்பது மேல் என்ற எண்ணம் வழுவாக இருந்தது.

எங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் அம்மா காலில் தான் விழுந்தேன். தான் விதவை என்று முதலில் ஒதுங்கிய அம்மா, பிறகு எங்களை ஆசிர்வதித்தார். என் மாமானார் என்னை பார்த்து பெருமை பட்டுக் கொண்டார். தங்கள் மகள் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததை நினைத்து பூரிப்படைந்தார்.

 என்னதான் 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொண்டாலும், தன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து தான் என் அம்மா வரவேற்றார். சாமிப்படத்துக்கு பூ போட்டு விளக்கேற்ற சொன்னார். என் மனைவிக்கும் கடவுள் பக்தி அதிகம் என்று நினைக்கிறேன். அம்மா சொல்ல சொல்ல மறு பேச்சு பேசாமல் முன்பே பழகியவள் போல் எல்லா வேலைகளை செய்தாள். அவள் தந்தை தான் பகுத்தறிவாளர். ‘அவளில்லை’ என்பதை பார்த்துமே புரிந்து கொண்டேன்.

முதல் இரவு எங்கள் வீட்டுலே இருக்கட்டும் என்று மாமனாரிடம் முன்பே சொல்லியிருந்ததால், எங்கள் வீட்டு படுக்கையறை தேவையான அழங்காரம் செய்து இருந்தனர். என் திருமணத்து வந்த பரூக், ஜோசப் தம்பதியர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று இரவே அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன்பே என் மனைவி அங்கு இருந்தாள். நல்ல நேரம் முடிவதற்குள் அறைக்குள் போக வேண்டும் என்பது அம்மாவின் கட்டளையாம்.

 கொஞ்சம் பதட்டமாகவே அவள் காணப்பட்டாள். நானும் பதட்டமாக தான் இருந்தேன். ஒரு தலை காதல் தவிர வேறு எந்த அனுபவமும் இல்லை. என்ன பேசுவது, எதில் இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

 "ம்ம்.. சிவகாமி ! என்ன பயமா இருக்கா...." என்றேன்.

 " அப்படியில்ல...! உங்களுக்கு.... " என்று கிண்டலாக கேட்டாள்.

இவள் அமைதியான பெண்ணா ? .... சந்தர்ப்பம் கிடைத்தால் கேலியும், கிண்டலும் செய்யும் பெண்ணா ? என்று என் மனதில் கேட்டுக் கொண்டேன்.

 "கொஞ்சம் பயமா தான் இருக்கு...." என்றேன்.

பயம் இருந்தாலும் அதை தைரியமாக சொல்லும் மனம் பக்குவம் என்னிடம் உண்டு. என் பயத்தை தைரியமாகவே சொன்னேன். முதலில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு தலை காதலை சொன்னேன். முதலிரவு அன்று அவள் அழகை பற்றி பேசாமல் என்னை பற்றி உண்மைகளை அவள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாக போகும். இந்த இரவு கசப்பாக இருந்தாலும் வர போகும் எல்லா இரவுகளும் இனிக்கும்.

என் ஒரு தலை காதல் கதை கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது. அவளை பிரிந்து வந்த காரணத்தை சொன்னாலும், நாம் தான் கணவர் மனதில் முதலில் குடி புகுந்தோம் என்ற விருப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். அது பொய்யாகி போனது அவள் முகத்தில் தெரிந்தது.

நான் அவளை பார்த்து, " கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஒரு தலை காதல் இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தலை காதல் இருக்க கூடாது. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்பினா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் " என்றேன்.

அறை முழுக்க நிசப்தமாக இருந்தது. முதலிரவு அறைப் போல் இல்லை. இன்று தான் முதன் முதலில் இருவரும் சந்தித்தோம். இன்றே ‘உறவு’ வைத்து கொள்ள முடியும் என்பது எனக்கு அபத்தமாக இருந்தது. அதே சமயம் முதலிரவில் மனைவி ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அவளை அணைத்து முத்தமிட்டு படுத்துக் கொண்டேன். முதல் முறையாக வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கேன். அந்த உணர்ச்சியிலே அவளிடம் எல்லை தாண்ட வேண்டும் போல் இருந்தது. என் ஒரு தலை காதலில் அதிர்ச்சியில் இருப்பவளை என்னால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

இரண்டு நாள் சென்றது. சிவகாமி கோயிலுக்கு போக வேண்டும் என்றாள். நம்பிக்கையில்லாத இடத்துக்கு சென்று என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மறுத்தேன். அவளுடைய அப்பாவும் என்னை போல் நாத்திகன் என்பதால் நிச்சயம் அவரோடு அவள் கோயிலுக்கு சென்றியிருக்க மாட்டாள். திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோயிலுக்கு போக வேண்டும் என்று எல்லா பெண்களுக்கும் ஆசையிருக்கும். முதலிரவில் அவளை வாடியது போல் மீண்டும் வாடி நின்றாள்.

வாடிய அவள் முகத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தேன். கோயிலுக்கு வருவதாக சம்மதித்தேன். என் சிவகாமிக்காக....!!! 

என்னை பொருத்தவரை கோயிலில் இருப்பது 'கல்' தான். தன்னை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற தெரியாத கறுப்பு கல். அவ்வளவு தான். ஆனால், அந்த கல்லை வணங்குவதில் சிவகாமிக்கு எவ்வளவு சந்தோஷம். இதுவரை தன் தோழிகளுடன் தான் கோயிலுக்கு சென்றியிருக்கிறாள். முதல் முறையாக ஒரு ஆண் துணையோடு கோயிலுக்கு வருவதை சொன்னாள். அதுவும் நான் சம்மதிப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையாம். அவளை கோயிலுக்கு அழைத்து வந்த சந்தோஷத்தில் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தாள். நான் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு மாதம் உருண்டோடியது. அவள் மனம் ஒரு நிலையடைந்து எங்களுக்கு சந்தோஷமும், இயல்பான தம்பதியர்கள் போல் நாங்களும் வாழ தொடங்கினோம்.

மாமா இறந்த பிறகு ஹோட்டலை சரியாக பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் முடிவைத்திருந்தோம். என்னால் மீண்டும் ஹோட்டல் வேலை எல்லாம் எடுத்து செய்ய முடியும் என்று தோன்றவில்லை. வழக்கறிஞர் வேலை தான் செய்வதென்று முடிவெடுத்து விட்டேன். ஹோட்டலை பார்க்கும் போதெல்லாம் மாமா சமையல் அறைக்கு செல்வது, கல்லா பெட்டியில் இருந்து பணம் வாங்குவது போல் தெரிந்தது. அங்கு இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் மாமாவை தான் நினைவுப்படுத்தியது.

அம்மாவிடம் ஹோட்டலை விற்று விட்டு சென்னைக்கு போகலாம் என்று சொன்னேன். முதலில் அம்மா சம்மதிக்கவில்லை. நான் கட்டாயப்படுத்திய பிறகு சம்மதித்தார். இவ்வளவு நாள் எங்களை வாழ வைத்த ஹோட்டலை விற்று தருமாறு மாணிக்கம் மாமாவிடம் சொன்னேன். சிதம்பரத்தில் நன்றாக போன ஹோட்டல் என்பதால் இரண்டே நாளில் வாங்குபவரை அழைத்து வந்தார்.

நான் வழக்கறிஞராகி எழுதும் முதல் பத்திரம் எங்கள் ஹோட்டல் விற்பதனை பத்திரம் தான். ஹோட்டலை ஐம்தாயிரத்திற்கு விற்றோம். ஜோசப்பிடம் சென்னையில் ஒரு வீடு வாங்க சொல்லியிருந்தேன். அவனும் சென்னைக்கு ஒதுக்கு புறமான அண்ணா நகரில் ஒரு வீடு விலைக்கு இருப்பதாக சொன்னான். அங்கு சென்று வர மாமாவின் புல்லட் இருப்பதால் ஒதுக்குபுரமாக அந்த வீட்டை வாங்குவதாக ஜோசப்பிடம் கூறினேன். 


ஹோட்டல் விற்ற பணத்தில் சென்னையில் வீடு வாங்கி அங்கே குடிபுகுந்தோம். நானாவது மூன்றாண்டுகள் இங்கே படித்திருக்கேன். ஆனால், அம்மா திருமணமானதில் இருந்து சிதம்பரதை விட்டு வந்த்தில்லை. முதல் முறையாக சிதம்பரத்தை விட்டு வருகிறாள். அதுவும் நிரந்தரமாக வருகிறாள். இவ்வளவு நாள் வாழ்ந்த ஊரை மனமில்லாமல் காலி செய்து வந்தோம். ஆனால், மாமாவின் நினைவுகள் எங்களோடு தான் வந்தது.

அண்ணா நகர் வீட்டில் முதல் அடி வைத்ததும் முதல் இடி சத்தம் கேட்டது. 'பெரியார் இறந்து விட்டார்' என்று தலையில் அடித்து கொண்டு பலர் அழுதனர்.

Tuesday, December 18, 2012

சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு !!!

கடந்த ஞாயிறு (16.12.12) மாலை 4 மணிக்கு, பிரசாத் லேப் கல்லூரி அரங்கில் சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு நினைவையூட்டி அவரது சிறுகதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது.

இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மாண்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றுள்ளார்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

தன்ஷ் ( A String)

குற்றவுணர்வோடு ஒரு மனிதன் குளிப்பதுப் போல் காட்சி தொடங்குகிறது. ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், அவளை மானபங்கம் படுத்தும் உருவம் வந்து வந்துப் போகிறது. தலைக்கு குளிக்கும் போது அந்த பெண்ணின் வீட்டில் நகைகளை திருடுகிறான். வேறொருவன் அந்த பெண்ணை கற்பழித்து, அவளது சகோதரனை கொலை செய்கிறான். நகையை திருடி செல்லும் போது, நிர்வாணமான பெண்ணின் உடலை பார்த்தும், அவனும் அந்த பெண்ணை புணர்கிறான்.

மீண்டும் அவன் தலைக்கு குளிப்பது போல் காட்சி வருகிறது. திருடிய நகையை தன் மனைவியிடம் கொடுத்து குளிக்க செல்கிறான். இங்கிருந்து முதல் காட்சியோடு படம் தொடர்கிறது. அவன் குளிக்க குளிக்க தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. தன் முகத்தை எவ்வளவு தெய்த்தும், அவன் மனதில் இருக்கும் குற்றவுணர்வை நீக்கமுடியவில்லை.

அவன் மனைவி திருடிய நகையில் தன்னை அழங்கரித்துக் கொள்கிறாள். அவள் அவனிடம் நெருங்கும் போது, குற்றவுணர்வில் அவளை உதாசினப்படுத்துகிறான். அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு, வேறொரு பெண்ணுடன் இருந்தாய்யா என்று கேட்க அவன் “ஆமாம்” என்கிறான். கோபத்தில் கத்தியால் அவள் தனது கணவனின் கழுத்தை வெட்ட, இறக்கும் தருவாயில் “அவள் இறந்திருந்தாள்” என்று சொல்லி இறக்கிறான்.

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது ஆண்கள் அயுதங்களால் இறந்தார்கள் என்றால், பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டே இறந்தார்கள். எத்தனையாவது நபர் கற்பழிக்கும் போது அந்தப் பெண் இறந்திருப்பால் என்று சொல்ல முடியாத அளவுக்கு மத மும், குரோதமும் பலரது தலையில் ஏறி இருந்தது. அப்படி இறந்ததே தெரியாமல் புணர்ந்த ஒருவன், புணர்ந்து முடித்த பிறகு அந்தப் பெண் இறந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் மிருகமான மனதில் கொஞ்சம் மனிதத்தன்மை ஏட்டிப்பார்க்கும் போது குற்றவுணர்வாக மாறுகிறது. அதை இந்த குறும்படத்தில் தெளிவாக காட்டுகிறது.



காரமாட் (The Miracle)

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்தும் குறும்படம்.

1947ல் இந்திய – பாகிஸ்தான் பிரிவினைப் போது ஒரு இஸ்லாமியன் ஒரு இந்து வியாபாரியை கொன்று, அவன் கடையில் இரண்டு மூட்டை சக்கரையை திருடி தனது வீட்டுக்கு கொண்டு வருகிறான். காவலர்கள் திருடிய பொருளை யார் வீட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்வதை கேட்கிறான். பயத்தில் இரண்டு மூட்டை சக்கரையை கிணற்றில் போட்டு, மறைந்துக் கொள்ள நினைக்கும் போது கினற்றில் விழுந்து இறக்கிறான்.

அடுத்து நாள் குழந்தைகள் தண்ணீரை குடித்து இனிப்பாக இருப்பதை கூறுகிறார்கள். 'அல்லா' இறந்தவனை அனுப்பி கசப்பான தண்ணீரை இனிப்பாக மாற்றினார் இறந்த இஸ்லாமியனை தொழுகிறார்கள்.

பாவிகளை மனிதர்கள் தான் கடவுளாக்குகிறார்கள். கடவுளில்லை. என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


 Tob Tek Singh ( தோப் டேக் சிங்) 

பாகிஸ்தானின் இருக்கும் மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று ஒன்றும் புரியாமலையே தங்களை இந்துஸ்தான் என்றும், பாகிஸ்தான் என்றும் பிரித்துக் கொண்டு மனநோயாளிகள் பேசுகிறார்கள். விளையாடும் போது கூட இரண்டு அணிகளும் இதையே பெயராக வைத்து விளையாடுகிறார்கள். அவர்களில் ஒருவனான பிசன் சிங் யாருடனும் ஒட்டாமல் 'தோப் டேக் சிங்' செல்ல வேண்டும் என்கிறான். அவனது மகள் வந்து பார்க்கும் போது கூட தோப் டேக் சிங் செல்ல வேண்டும் என்கிறான்.

இறுதியில் இந்து மற்றும் சீக்கிய மனநோயாளிகளை இந்திய எல்லையில் விட்டுவிட்டு பாகிஸ்தான் காவலாளிகள் செல்கிறார்கள். பிசன் சிங் தோப் டேக் சிங் செல்ல விரும்புவதாக சொல்ல, காவலாளி “அது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. நீ இந்தியாவுக்கு போ !” என்று எல்லையில் விடுகிறார்கள்.

"ஒரு பக்கம் இந்திய முள்வேலி கம்பிகள், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் முள்வேலி கம்பிகள். இரண்டுக்கும் நடுவில் உறங்குகிறது  தோப் டேக் சிங் என்று" சொல்லி, அவன் அங்கையே மயங்கி கீழே விழுகிறான்.

பிரிவினை போது உயிரை விட்டவர்களை விட தனது சுயத்தை இழந்தவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியது என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


திற 

சாதத் ஹசன் மாண்டோவின் “Khol do” (Open it) என்ற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார் பிரின்ஸ் அவர்கள்.

குஜராத் மதக்கலவரத்தில் தனது மகள் சகினாவை தேடுகிறார் தந்தை. முகாமில் இருக்கும் சேவாக்காரர்களிடம் உதவி கேட்கிறார். அவர்களும் அந்த பெண்ணை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அவள் தந்தை இருக்கும் முகாமுக்கு அழைத்து செல்லப்படவில்லை. அந்தப் பெண்ணின் தந்தையிடம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்கின்றனர்.

நினைவற்ற ஒரு பெண்ணின் உடல் மருத்துவ முகாமுக்கு வருவதை அந்த தந்தை கேள்விப்பட்டு செல்கிறார். அவள் தனது மகள் ‘சகினா’ என்று பார்த்ததும் அடையாளம் காண்கிறார். மருத்துவர் அந்த தந்தையிடம் “ஜன்னல் கதவை திறங்கள் காற்று வரட்டும்” என்று சொல்ல, மயங்கிய நிலையில் அந்த பெண் காதில் "திற" என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. அந்த பெண் தனது பெண்ணுருப்பை திறந்து காட்ட செல்கிறாள். கரச் சேவகர்கள் அவளை கற்பழிக்கும் போது ‘திற’ என்று கூறிய வார்த்தைகளோடு சிவப்பாடையில் காட்டியப்படி படம் முடிகிறது.

பூட்டிய மனிதனின் உள்ளத்தை திறப்பது போன்ற கருத்துள்ள படம் என்று நினைத்தால், இறுதிக் காட்சியில் திறக்கப்படும் இடம் நம்மை கண் கலங்க வைக்கிறது. சாதத் ஹசன் மாண்டோ இந்திய - பாகிஸ்தான் பிரிவினை வைத்து எழுதிய கதைக்களனை குஜராத் மதக் கலவரப்பின்னனியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரின்ஸ்.

காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

ராஜாங்கத்தின் முடிவு

ஒரு அறையில் தொலைப்பேசியும், ஒரு மனிதனை வைத்து குறும்படத்தை ஸ்வாரஸ்யமாக எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் இடத்தில் தங்கக் கூடியவனாக இருக்கும் கதாநாயகன் ரவி ஒரு வாரம் தன் நண்பன் வெளியூருக்கு சென்றுயிருப்பதால் அவன் அலுவலகத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கற்பனை உலகத்தில் வாழும் ரவி, நடைமுறை வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கிறான். அப்போது, அந்த அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொள்ள, அவர்கள் இருவருக்குள் நட்பு உருவாகிறது. பல சமயம் ரவி அந்த பெண்ணை வெறுப்பெற்றுவது போல் பேசுகிறான். அந்தப் பெண்ணின் பெயரையோ, எண்ணையோ ரவி கேட்கவில்லை. ஆர்வமில்லாமல் இருந்தவன், அவள் அழைக்காமல் இருக்கும் சமயத்தில் தவிக்கிறான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தவனுக்கு, அந்தப் பெண்ணின் குரல் அவனை மிகவும் பாதித்திருக்கிறது.

ரவியின் நண்பன் தொலைப்பேசியில் ஊர் திரும்புவதாக சொல்ல, அதை கவலையுடன் அந்தப் பெண்ணிடம் கூறுகிறான். அவன் இராஜாங்கம் முடியப்போகிறது என்று கவலையாக சொல்ல, அன்றைய தினம் தன்னை தொடர்புக் கொள்ளும் எண்ணை தருவதாக சொல்கிறாள். இரண்டு நாளுக்கு ஊருக்கு செல்வதாக சொல்லி அழைப்பு தூண்டிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாள் கலித்து அந்தப் பெண் தொலைப்பேசியில் அழைக்க, ரவி இன்றோடு தன் ராஜாங்கம் முடிவதாக சொல்லி அழைப்பை தூண்டித்து இறக்கிறான். தொலைப்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும் போது படம் முடிகிறது.

கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் நடுவில் வாழும் மனிதர்களுக்கு சமர்ப்பணம் என்று இந்தப்படத்தை முடித்திருக்கிறார்கள். படத்தின் முடிவில் ரவி பாத்திர இறந்ததற்கு காரணம் காட்டவில்லை என்ற கேள்விக்கு வேண்டுமென்றே சொல்லவில்லை. அந்த பாத்திரம் வாழ்வதற்கான அர்த்தமில்லாதப் போது இறப்பதற்கான காரணம் தேவையற்றதாக இருக்கிறது இயக்குனர் கூறினார்.

இந்த ஐந்து குறும்படங்களை திரையிட்ட அருணுக்கும், தமிழ் ஸ்டுடியோவிற்கும் நன்றிகள் பல....!!

Wednesday, December 12, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 5

உலகத்திலே மிக கஷ்டமான அவஸ்தையான ஒன்று என்னவென்றால் நாம் அதிகம் நேசிப்பவர்களை வெறுப்பது தான். நாம் எந்த அவளவுக்கு ஒருவரை நேகிக்கிறோமோ அவர் நம்மை ஏமாற்றும் போது அந்த அளவிற்கு கோபம், வெறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்த நபரிடம் வெறுப்பை காட்டும் போதெல்லாம் நாம் முன்பு அவர்கள் மீது வைத்திருந்த அன்பு வந்துக் கொள்ளும். இப்படி ஒரு அவஸ்த்தையை தான் நான் அனுபவித்தேன்.

எனக்கு அவள் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அவள் தன் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். கேவலம் ஒரு புத்தகத்திற்காக திருடியாக மாறுவாள் என்று நினைக்கவில்லை. இதை பற்றி அவளிடம் கேட்கவும் எனக்கு மனமில்லை. முடிந்தவரையில் அவளிடம் பேசாமல் தவிர்ப்பது தான் நல்லது. ஒரு வேளை கோபத்தில் என் மனதில் இருந்த காதலை கூட கொட்டி விட்டால், அதனால் தான் தன் மீது பழி போடுகிறான் என்று விஷயத்தை திருப்பிவிட்டாலும் விடுவாள்.

உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ‘பார்ப்பனர்களை நம்பக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் மேலும் ஆழமாக பதிந்தது. இப்படி சொல்வதால் நான் ஜாதி வெறி பிடித்தவன் என்று நினைக்க தோன்றும். நான் எல்லா மத இனத்தவர்களிடமும் அன்பாக பழக்கூடியவன். என் நண்பர் பரூக், ஜோசப் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். என்னை 'பையா' என்று அழைக்கும் 'பாத்திமா' வேறு மதம். இரண்டு ஆண்டுகளாக 'பாய்' வீட்டில் தான் தங்கி படித்திருக்கிறேன். எல்லா மதத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கும் போது ஏன் பார்ப்பனர்களின் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டு படிப்பு முடிந்து மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை. இது தான் இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாமாவின் கட்டளை. ரம்யா மீது இருந்த காதல் உயிர்யில்லாமல் போனது. படிப்பு முடித்தபின் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ரம்யா கண்ணில் எதிர்படும் போதெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்று விடுவேன். என் சிரிப்பு முகத்தளவு மட்டுமே தெரிந்தது. அவளிடம் பேச எந்த விருப்பமும் இல்லை. அப்படியே அவள் பேச வந்தாலும் ஒரு வார்த்தையில் பதில் அளித்து விடுவேன். அவளும், லக்ஷ்மியும் சேர்ந்து வந்தால் ‘ஆளுங்கட்சியின் மேலுள்ள வெறுப்பினால் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுவது’ போல் நான் அவளிடம் பேச்சை குறைத்து லக்ஷ்மியிடம் பேசுவேன். இப்படியே தொடர்ந்துக் கொண்டு இருந்ததில் அவளும் என்னிடம் பேச குறைத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் அறிமுகமானவர்கள். அவ்வளவு தான். ‘எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்று எனக்குள் சொல்லி நானே நம்ப தொடங்கினேன். அவளும் அப்படியே நடந்துக் கொண்டாள்.

பல போட்டி, பொறாமை, கோபங்களுக்கு நடுவில் இறுதி ஆண்டு படிப்பை படித்து முடித்தேன். இனி என் வாழ்நாளில் ரம்யாவை சந்திக்க கூடாது என்று தீர்மானமாக இருந்தேன்.

ஜோசப், ஜாஸ்மின் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறினார்கள். அவர்கள் காதலுக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் பரூக்கின் அம்மா சாப்பாடு என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. பாத்திமாவின் சகோதர பாசத்தையும் அளவிட முடியாது. பரூக் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் பாரதியார் எழுதிய ஒரு வரி ஞாபகம் வரும்.

"இங்கிவினை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்". 

என் வாழ்நாள் முழுக்க இவர்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரே வீட்டில் இரண்டு பேரின் குடும்பமும் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பரூக்கின் அம்மாவிடம் ஆசி பெற்றுக் கொண்டேன். பாத்திமா கண்ணில் நீர் நிரம்ப என்னை வழி அனுப்பி வைத்தாள்.

"பையா! எங்கள மறந்திட மாட்டீங்ளே...."

" நீங்க எப்போது என் கூடவே இருப்பீங்க.... எப்படி என்னால மறக்க முடியும் " கண்ணில் நிறம்ப பதில் சொன்னேன்.

பரூக் என்னை வாரி கட்டி அணைத்துக் கொண்டான். அவன் சிதம்ரத்தை விட்டு செல்லும் போது எனக்கு இந்த அளவுக்கு துயரம் வரவில்லை. ஆனால், இப்போது இந்த குடும்பத்தை விட்டு பிறிவது நினைத்தால் வேதனையில் வெந்து போகின்றேன். பிரிய முடியாமல் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" நல்ல சாப்பிடுப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்கோ..." என்று பரூக் அம்மாவின் குரலில் நான் பஸ் ஏறும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பரூக் என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். கண்ணில் நீர் நிறம்ப பஸ்ஸில் ஏறி சிதம்பரத்திற்கு சென்றேன்.

மாத விடுமுறைக்கு வந்து கொண்டு இருந்த நான் மீண்டும் நிரந்தரமாக சிதம்பரத்தில் தங்க வந்துவிட்டேன். அதுவும் ஒரு வழக்கறிஞராக !!

பல லட்சிய கனவுகளுடன் என் ஊரில் கால் வைத்தேன். அம்மாவை ராணி போல் வாழ வைக்க வேண்டும். என்னக்காக மாமா வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஹோட்டலை விற்றுவிட்டு அவரை உட்கார வைத்து சோறு போட வேண்டும். இனி அவர் உழைக்கவே கூடாது. ஓய்வு தான் எடுக்க வேண்டும். இப்படி பல ஆசைகளோடு சைக்கிள் ரிக்ஷாவை நோக்கி சென்றேன்.

நான் வீட்டுக்கு செல்ல சைக்கிள் ரிக்ஷா பேசிக் கொண்டு இருக்கும் போது மாணிக்கம் மாமா மருந்து கடையில் மருத்து வாங்கி கொண்டு சென்றார். நீண்ட நாள் பிறகு இன்று தான் அவரை பார்க்கிறேன். சென்ற விடுமுறை கூட அவரை நான் பார்க்கவில்லை. வெளியூர் போய்யிருந்ததாக மாமா சொல்லியிருந்தார்.

" என்ன மாணிக்கம் மாமா ! எப்படி இருக்கீங்க.... போனவாட்டி கூட உங்கள பார்க்க முடியல..." என்று மலர்ந்த முகத்தோடு பேசினேன்.

அவர் கண்கள் அழுது சிருத்துக் கொண்டது போல் இருந்தது. அவர் உறவினர்களுக்கு உடல் சரியில்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். கையில் மருந்தெல்லாம் வைத்திருந்தார்.

" இப்ப தான் ஊருல இருந்து வந்தியா...." என்றார்.

 " ஆமா ..."

 " நல்ல வேல. நீ என் கூட வா..." என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

நான் என் துணி மணியை வீட்டில் வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லியும் என்னை விடவில்லை. அவர் என்னை 'நடராஜர் மருத்துவமனை'க்கு அழைத்து சென்றார். ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. எப்போதும் பேசி குழப்புபவர், இப்போது செய்கையால் குழப்பினார். எதாவது சொல்ல போகிறாரா, காட்ட போகிறாரா... எனக்கு குழப்பம் தான் அதிகமானது. ஒரு முறையாவது இவர் தெளிவாக எந்த வேலையும் செய்யமாட்டாரா என்று நினைத்துக் கொண்டேன்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் அம்மா கண்ணில் தழும்ப நின்றுக் கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கட்டி பிடித்து அழுதார். அப்பா இறந்த போது எப்படி கட்டி பிடித்து அழுதோரோ அதே போல் இருந்தது. அம்மா எதுவும் பேசமால் அழுதுக் கொண்டே இருந்தார்.

" உங்கள் மாமாவுக்கு மாரடைப்பு. நேத்து ராத்திரி தான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்" என்றார். மாணிக்கம் மாமா சொன்னவுடன் திடுக்கிட்டேன்.

அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னை தனியாக விட்டு ஓய்ந்து போககிறார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

மாணிக்கம் மாமா என்னை தனியாக அழைத்து சென்று, " நானே உனக்கு தகவல் கொடுக்கனும்னு இருந்தேன். டாக்டர் காப்பத்த முடியாதுனு சொல்லிட்டாரு. அம்மாவுக்கு நீ தான் ஆருதல் சொல்லனும்..." என்றார்.

"ஐயோ...ஐயோ..." என்று புழம்ப வேண்டும் போல் இருந்தது. யாரை உட்கார வைத்து வாழ்நாள் முழுக்க சாப்பாடு போட்டு ராஜா மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ அவர் நிரந்தரமாக படுக்கப்போககிறார் என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் யார்...?

அப்பா இறந்த பிறகு மாமா தான் எங்களை வாழ வைத்தார். அப்பா இருந்திருந்தால் கூட எங்களை இப்படி கவனித்திருக்க மாட்டார் என்று பல முறை நினைத்திருக்கிறேன். அவர் வாழ்நாள் முழுக்க எங்களுக்கு செய்த உதவியில் திரும்பி செய்ய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டாரே...!

என் தலை அடித்துக் கொண்டு "ஐயோ...ஐயோ...." என்று அழுதேன். அம்மா மாமாவின் மரணத்தை பற்றி சொன்னதும் பிரஷர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். டாக்டர் அம்மா உடலை பார்த்து ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க சொன்னார். மாமாவை பிணமாக பார்க்கும் சக்தி என்னகே இல்லாத போது அம்மாவால் எப்படி பார்க்க முடியும். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மாமாவுக்கு நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தேன்.

"கடமைய முடிச்சிட்டுச்சு இவரு பாட்டுக்கு போய்ட்டாரே. இவருக்கு அப்படி என்ன அவசரம். அவருக்கு செய்யனும்னு நினைச்சது எல்லாம் எப்போ செய்ய முடியும்" என்று மாணிக்கம் மாமாவிடம் சொல்லி புலம்பினேன்.

மாமாவின் உடலை சாஸ்த்திரப்படி தகனம் செய்ய சில செய்ய சொன்னார்கள். இப்போது எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால், மயக்க நிலையில் அம்மாவுக்கு இது தெரிந்தால் தாங்கிக் கொள்ள மாட்டார். கோபத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. என் கொள்கைக்காக சாஸ்த்திரங்களை மதிக்காமல் தகனம் செய்தால், மாமா இறந்ததை விட பெரிய வலியை அம்மாவுக்கு கொடுப்பது போல் இருக்கும். எனக்காக வாழ்ந்த ஒரு உயிருக்கு என் கொள்கையை விட்டு கொடுப்பதில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்படி தவறு என்று யார் சொன்னாலும் கவலையில்லை. என் மாமாவை அடக்கம் செய்ய சொன்ன இறுதி சடங்குகளை, சாஸ்த்திரங்களை செய்து அவர் உடலை மயானத்தில் தகனம் செய்தேன்.



என்னைப் போல் திராவிடக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் இப்படி தான் பல இக்கட்டானா நிலைமை சந்தித்திருப்பார்களா ? அவர்கள் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு இருப்பார்கள் ? சுற்றத்தின் வற்புருத்தலால் பழைய சாஸ்திரங்களை செய்யும் போது, திராவிட கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி எல்லாம் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள் ? கடவுளை வணங்குபவர்கள் கடவுள் சோதிப்பதாக சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள்.

மாமா படத்திற்கு முன்பு விளக்கேற்றி அழுதப்படி அமர்ந்திருந்தேன். மருத்துவமனையில் இருந்து அம்மா மாமா படத்தை பார்த்து கதறி அழுதார்.

"கடைசி வரைக்கும் அவர் முகத்த பார்க்காம பண்ணிட்டீங்களே...." என்று சொல்லி என் தொடையில் படுத்து அழுதார். என் அம்மாவுக்கு நான் அம்மாவாக இருந்து ஆறுதல் சொன்னேன். இப்போது எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அம்மா மட்டும் தான்.

மாமா இறந்து ஒரு வாரம் மேலானது. மாணிக்கம் மாமா கையில் ஒரு போட்டோவோடு வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னேன். தன் கையில் இருக்கும் போட்டோவை அம்மாவிடம் கொடுத்தார்.

" இந்த பொண்ணு தான் ராமா சந்திருவுக்கு பொருத்தமா இருக்கும்னு சொன்னான். சம்மந்தம் பேசுறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...." என்றார்.

" வேண்டாம் அண்ணே. வேற பொண்ணு பாருங்க. இந்த பொண்ண பார்த்த நேரம். என் அண்ணனே என்ன விட்டு போய்ட்டார்" என்று சொல்லி தன் கையில் இருந்த போட்டோவை மாணிக்கம் மாமாவிடம் கொடுத்தார்.

எனக்கு ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. அம்மா, மாமா எனக்கு எது செய்தாலும் நன்மைக்காக தான் செய்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை அவர்கள் மீது வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது இது பேசுவது தவறாக கூட இருக்கலாம். சொல்வது சரி என்று என் மனதில் பட்டது.

" மாணிக்கம் மாமா ! அந்த பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிறேன். பேசி முடிச்சிடுங்க " என்றேன்.

Wednesday, December 5, 2012

தமிழனும் இந்தியனே ! - எதிர்வினை



அன்பிற்குரிய குகனுக்கு,

என் உடல் நிலை சற்று சரியில்லாததால் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உணர்ச்சிகளின் வெளிபாடு கவிதையாகிறது. பீரிட்டு கிளம்பும் பிரவாகப் பெருக்கை ஒரு வடிவத்துக்குள் அமைப்பது கவிதை. இவ்வுல்கில் எத்தனையோ தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கலாம். அதன் பாதிப்பு கவிதையாகக் வெடிக்கலாம். பாரதி எப்படியெல்லாம் பாடியுள்ளான். பூனைக்குட்டியிலிருந்து பூகோலப்படத்தில் காணப்படும் நாடுகளை எல்லாம் தொட்டுவிட்டான். வசன கவிதைக்கு வழிகோலியவனும வந்தான். வாழையடி வாழையாக வரும் கவிஞர் கூட்டம் வரவேற்ப்பிற்க்குறியதே !

"தமிழனும் இந்தியனே! " என்னும் கனியன்செல்வராஜின் நூலை நாகரத்னா பதிப்பகம் வேளியிட்டுள்ளது. அட்டையைப் பார்த்தால் வலைஞர்களின் கவலையைக் கண்முன் நிறுத்தும் கருத்தைக் கொண்ட நூலோ அல்லது உழைப்பாளிகளின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூலோ என எண்ணத்தோன்றுகிறது.

64 பக்கங்களில் 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன . பெயருக்கேற்றபடி முதல் கவிதை நன்றாக உள்ளது. "நீயும் கடவுளாகலாம்" நல்ல சிந்தனை. "தொடரும் பாவத்தின் நீட்சிகள்" என்ற கவிதையின் கடைசி வரிகள் நன்று.

கண்ணகி சிலைக்குப்பின்னாலேயே ஏதேதோ நடக்கும் போது "காந்திசிலைக்குப்பின் நடப்பதற்க்கென்ன? தமக்கையின் துயரம் தம்பிமூலம் பெற்றோர்க்குத் தெரிய வேண்டாம் எண்ணும் தவிப்பை விழி பேசியவார்த்தைகளில் உணரமுடிகிறது. அன்பான மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்தலே அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக தூங்களாம். புனர்ந்தாக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிரியரின் இரண்டாவது ஆவது கவிதை நூல் என அறிகிறேன்.

எளிய தமிழ் சொற்கள் ஏராளமாய்க் கொட்டிக்கிடக்கையில் ஆங்கிலச் சொற்களை நாடுவது தேவையில்லை. "மொழியே நம்முடைய அடையாளம்" என்று பாடலாசிரியர் யுகபாரதி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் எளிதில் விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியரின் முயற்சியையும் ஆர்வத்தையும் பாரட்டுகிறேன்.

 நாகரத்னா பதிப்பகம் மக்களுக்குப் பயன்படும் தரமான நூல்களை எப்போதும் போல் தொடர்ந்து வெளியிட வாழ்த்துகிறேன். 

அரிமா இளங்கண்ணன் 
 வழக்கறிஞர் 
16/11/12

Tuesday, December 4, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 4

ஆறு மாதம் பிறகு மீண்டும் அந்த மூன்று பெண்கள் நாவல் தொடர்கிறது....!!!
**
"அந்த மூன்று பெண்கள்" நாவலை முழுவதும் வாசிக்க

'கடவுள் இல்லை' என்று யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் தான் ஒருவனை ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான். கடவுள் இல்லை என்று சொல்பவன் தன் கருத்தை மற்றவர்கள் மீது தினிப்பதில்லை. பிரச்சாரம் மற்றுமே செய்கிறான். ஆனால், 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் கடவுளை வணங்க கட்டாயப்படுத்துகிறார்கள். கடவுளை வணங்கவில்லை என்று 'சாமி கண்ண குத்தும்' என்று சிறுவயதிலே பயமுறுத்துகிறார்கள்.

தெளிவான மனதோடு இரண்டாம் ஆண்டு சட்ட கல்லூரி வகுப்பில் எடுத்து வைத்தேன். முடிவு எடுத்து விட்டேன். 'கடவுளை வணங்க போவதில்லை', 'கோயிலுக்கு செல்ல போவதில்லை' இது தான் என் முடிவு. நான் ஒரு முழுமையான நாத்திகனாக மாறிவிட்டேன் என்று என்னால் உணர முடிந்தது.

வகுப்புக்குள் நுழைந்தவுடன் ரம்யா, லக்ஷ்மி தான் என் கண்ணில் பட்டார். இருவரையும் பார்த்து சிரித்து விட்டு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன். ஜோசப், ஜாஸ்மின் வகுப்பு தொடங்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு உள்ளே வந்தனர். வகுப்பில் பாடத்தை கவனமாக குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். என்னை அறியாமல் சில சமயம் ரம்யாவை பார்த்தேன். விரும்பும் பெண்ணை கொள்கைக்காக வெறுக்கும் ஒரே முட்டாள் நானாக தான் இருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன்.

பார்ப்பனர்கள் எல்லாம் இப்படி என்று முடிவுக்கு வந்த பிறகு ரம்யா மட்டும் விதிவிளக்காக எப்படி இருக்க முடியும். இனி ரம்யாவோடு தொடர்ந்து பேசலாமா ? வேண்டாமா ? என் மனதில் பட்டி மன்றமே நடத்தினேன். தீர்ப்பு கிடைக்கும் வரை அவளோடு பேசலாம் என்று தீர்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

வகுப்பு நடக்கும் போது ரம்யா என்னை திரும்பி திரும்பி பார்த்தாள். ஒரு மாதம் கலித்து என்னை பார்த்த ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு என் மீது காதல் வந்திருக்குமோ என்ற ஆசையும் மனதில் இருந்தது. கொள்கைக்கும், காதலுக்கும் நடுவில் போராட்டமே நடத்தினேன்.

வகுப்பு முடிந்ததும் ரம்யாவே என்னிடம், ' சந்திரு ! எப்படி இருக்க...? லீவ் எல்லாம் எப்படி போச்சு...? " என்று என்னை பற்றி விசாரித்தாள்.

" நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க... லீவ்ல என்ன பண்ண ? ".

" நான் புதுசா என்ன பண்ண போறேன். சாண்டில்யன் எழுதின 'கடல் புறா' புஸ்தகம் படிச்சேன். அவ்வளவு தான்." என்றாள்.

அவளாக பேச தொடங்கட்டும். ஒவ்வொரு முறையும் நான் ஒரு கேள்வி கேட்பதும், அதற்கு அவள் பதில் சொல்வதுமாக தான் எங்கள் சந்திப்பு இருந்தது. முதல் முறையாக அவள் என்னிடம் கேள்வி கேட்டுயிருக்கிறான். இது அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

" ஆமா, லீவ்ல என்ன பண்ண...?" என்று கேட்டாள்.

"ரொம்ப நாள் கலிச்சு அம்மா கையால சாப்பிட்டேன். ஃபிரண்டோட கும்பகோணம் போனேன். அங்க 'பெரியார் பார்த்தேன். அவர் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..." என்று அவளிடம் சொன்னேன். வேண்டுமென்றே பெரியாரை பற்றின பேச்சை அவள் முன் எடுத்தேன்.

திராவிட கொள்கையை பற்றி அவளுடைய எண்ணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆசையாக இருந்தது.

"என்ன பெரியார் பேச்ச போய் நல்லா இருக்குனு சொல்லுற..." என்று முகத்தை சுலித்துக் கொண்டு கேட்டாள்.

‘பெரியார் பேச்சை நன்றாக இல்லை’ என்றால் யார் பேச்சை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும். அவர் பேச்சை கேட்க எத்தனை பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் பேச்சை கேட்டது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவள் இப்படி சொன்னவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.

" அவர் இல்லனா பொண்ணுங்க படிப்பப்பத்தி நினைச்சு கூட பார்த்திருக்க முடியாது. " என்றேன்.

"கடவுள் இல்லனு சொல்லுறவருக்கு வக்காளத்து வாங்குற..." என்று இழுத்து எதோ சொல்ல வந்தாள். அவள் சொல்வதை முடிக்க விடாமல், நான் " நா இப்ப இருந்தே வக்கில். அதான் நல்லவங்களுக்கு வக்காளத்து வாங்குறேன்" என்றேன்.

அவள் வாதத்தை தொடர விரும்பவில்லை. என்னிடம் பேசாமல் சென்று விட்டாள். இரண்டாம் ஆண்டு, முதல் நாளே இப்படியானதும் கொஞ்சம் சூடாக தான் இருந்தது. இருந்தாலும், ‘பெரியார்’ மீது எந்த அளவுக்கு எனக்கு பற்று வந்திருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பரூக் வீட்டில் கல்யாண வேலை எல்லாம் பரபரப்பாக நடந்தது. மணபெண் பாத்திமா வாணியம்பாடி ஊரை சேர்ந்தவள். மணபெண் வீட்டார்கள் எல்லாம் சென்னைக்கு வரவழைத்து 'நிக்கா' நடத்தினர். பரூக் புது மாப்பிள்ளையாகி விட்டான். இதற்கு மேல் அவன் வீட்டில் நான் தங்கினால் புது தம்பதியர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

நான் செய்த உதவிக்கு பரூக் என்னை அவன் வீட்டில் தங்க வைத்தான். அதே நன்றி அவன் மனைவியிடம் நான் எதிர் பார்ப்பது நியாயமில்லை. முன்பே ஜோசப்பிடம் ஒரு வீடு பார்க்க சொல்லியிருந்தேன். அவனும் எனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருப்பதாக சொன்னான்.

'நிக்கா' முடிந்த கையோடு அவனிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதால் நான் செல்வதை பற்றி எதுவும் அவனிடம் சொல்லவில்லை. நான் அவன் வீட்டில் இருந்தது பெண் வீட்டாரை கவனித்துக் கொள்ள உதவியாக இருந்தது. நிக்கா முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. மணபெண் பாத்திமாவின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் வாணியம்பாடிக்கு சென்றனர்.

" பரூக் ! என் காலேஜ் பிரண்ட் ஜோசப் எனக்கு ஒரு தனி ரூம் பார்த்திருக்கான். நான் அங்க போய் தங்கிடலாம் இருக்கேன்..." என்றேன்.

அவன் அம்மா ஆயிஷா என்னை புரியாமல் பார்த்தார். " என்னடா ஆச்சு...! நிக்காவுல யாராவது உன்ன தப்பா பேசுனாங்களா....இல்ல உன்ன சரியா நடத்தலையா...." என்றான்.

"ச்சச்சே.... இது நம்ம வீட்டு கல்யாணம். என்ன யார் கவனிக்கனும். நான் எல்லாரையும் கவனிச்சேன்." என்றேன்.

"அப்புறம் எதுக்கு என்ன விட்டு தனியா போய் தங்குறேனு சொல்லுற...."

"இல்லடா ! உனக்கு கல்யாணமாடிச்சு. உங்களுக்கு தனிமை தேவப்படும். நான் இருந்தா நல்லா இருக்காது. அதான்...." என்று இழுத்தேன்.

அப்போது பரூக்கின் மனைவி பாத்திமா, " பையா ! நீங்க சொல்லுறத பார்த்தா நாங்க தனி குடுத்தனம் போகனும்னு சொல்லுற மாதிரி இருக்கு..." என்றாள். அவள் என்னை 'அண்ணன்' நினைத்தோடு மட்டுமில்லால் 'அண்ணன்' உரிமையில் பேசியதை என்னால் உணர முடிந்தது.

"நா இந்த வீட்டுக்கு வந்தது வாழுறதுக்கு. அவர் கூட இருக்குறவங்கள பிரிக்கிறதுக்கு இல்ல. நீங்க இப்போ போனா என்னால தான் நீங்க வீட்ட விட்டு போணீங்கனு அவரு என் கிட்ட சரியா பேசமாட்டாரு..." என்றாள்.

பரூக், அவனின் அம்மாவை விட அவன் மனைவி பாத்திமாவின் அன்பு கட்டளையில் இருந்து என்னால் தட்டி கலிக்க முடியவில்லை. நான் அவர்களோடு தங்க சம்மதித்தேன். மறு நாள், கல்லூரியில் ஜோசப்பிடம் நான் புது வீட்டுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தேன். அப்போது தன் புத்தகம் காணோம் என்று ஜாஸ்மின் அங்கும், இங்கும் தேடிக் கொண்டு இருந்தாள். தன் புத்தகத்தை பற்றி லக்ஷ்மி, ரம்யாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். பெண்கள் உட்காரும் ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தாள்.



" என்ன ஆச்சு ஜாஸ்மின். என்ன தேடுற..." என்று ஜோசப் அவள் தேடுவதை பற்றி கேட்டான்.

" என்.டி.கப்பூர் எழுதுன 'மெர்க்கன்டைள் லா' பூக் வச்சிருந்தேன். காணோம். நாளைக்கு முக்கியமான நோட்ஸ் எடுக்கனும். இப்ப என்ன பண்ணுறதுனு தெரியல்ல..." என்று பதரினாள்.

விலை உயர்ந்த புத்தகம். ஜாஸ்மின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. பாவம் எந்த இடத்தில் புத்தகம் வைத்தாளோ தெரியவில்லை.

" இதுக்கு போய் ஏன் அழுவுற. என் கிட்டையும் என்.டி.கப்பூர் புக் இருக்கு. தரேன்." என்று அவளை சமாதானம் சொல்லி ஜோசப் அழைத்து சென்றான். அவர்கள் சென்றவுடன் நான் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்றேன். 

அங்கு ரம்யா, லக்ஷ்மி இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தேன். ரம்யாவிடம் இருந்து லக்ஷ்மி ஒரு புத்தகம் வாங்கினாள். அந்த புத்தகம் பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன்.

 அது ஜாஸ்மின் வைத்திருந்த என்.டி.கப்பூரின் 'மெர்க்கன்டைள் லா' புத்தகம் !!

Thursday, November 29, 2012

மால் அல்ல.... கோல்மால் !

“ஏயேய் ! மச்சி தீபாவளி புதுப்பட ரீலிஸ் சீ.டி வந்திருக்கு… வரியா எங்க ஹோம் தியேட்டர்ல பாக்கலாம்.”

“ நா வரலடா ! அந்த படம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அதனால தியேட்டர்ல போய் பார்க்க போறேன். அதுமட்டுமில்ல, சீ.டி பாக்குறது அடுத்தவங்க உழைப்ப திருடுறதுக்கு சமம்”

“அடபாவி ! என்னடா நல்லவன் மாதிரி பேசுற. இரண்டு வாரம் முன்னாடி தான் நம்ப எல்லோரும் சேர்ந்து புது நடிகர்கள் நடிச்ச படத்த சீ.டியில பாத்தோம்.” 

“அது மொக்கப்படம். சீ.டியிலாவது படத்த பார்த்தது பெரிய விஷயம்” 

நண்பனிடம் பேசி முடித்து புது மாப்பிள்ளை அளவுக்கு டிரெஸ் போட்டுக் கொண்டான் சவுண்ட் சந்தோஷ். யார் கண்டது அங்க கல்யாணத்துக்கு பொண்ணுக் கூட கடைக்கலாம். ஸாரி… கிடைக்கலாம்.

 [‘சவுண்ட்’ சந்தோஷ் எதையுமே சவுண்டாக ஒரு முறை சொல்லுவான். அது அப்புறம், மற்ற குடிமகன் போல் மனதுக்குள் குமுறிக் கொள்வான். வேறென்ன செய்ய முடியும் ? சராசரி இந்தியர்களைப் போல் அவனும் சராரரி குடிமகன் தான்.]

நண்பர்கள் அனைவரும் அந்த படத்தை பார்த்து விட்டதால் தனியாக சென்றான்.

முதல் தடவையா மால்ல சினிமா பாக்க போறோம். பஸ்லைய போவாங்க…!! ஓ.சி பைக்கில ஏ.சி மாலுக்கு நுழைத்தேன். பார்கிங்யில் நுழையவிடாமல் செக்யூரிட்டி நிறுத்தினான். வண்டி நம்பரை பார்த்து எதோ டைப் செய்து ஏ.டி.எம் கார்ட் ஒன்று கொடுத்தான். பார்க்கிங்க்கு பணம் கூட வாங்கல…!!

 “ அட ! இந்த மாலில் செலவு பண்ணுறதுக்கு ஏ.டி.எம் கார்ட் தராங்க…! இப்ப தெரியுது இங்க ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு !!

 “சார் வண்டி பார்க்கிங் டோக்கன்” என்றான்.

 “பராவாயில்லையே ! டோக்கன் பச்ச, சிவப்பு, கலர் டோக்கனா கொடுப்பாங்க… பிட்டு பேப்பர் தருவாங்க. இப்போ கார்ட்டுல தருயிங்க…” 

“இல்ல சார் ! இந்த கார்ட்ல நீங்க வந்த டைம் இருக்கும். வண்டியில வெளியே எடுக்கும் போது ஹவருக்கு பணம் கொடுக்கனும்”

 “ஏய் ! என்ன பார்த்தா உனக்கு என்ன மாதிரி தெரியுது. ஹவர் சைக்கில் கடையில காசு கொடுத்து சைக்கில் எடுப்போம். என் வண்டிய வைக்கிறதுக்கு ஹவர் கணக்கு எதுக்குடா பணம் தரனும்”

 “சார் ! மால்னா அப்படி தான்” என்றான்.

‘போங்கடா’ என்று வண்டிய வைத்தேன். அடுத்த வாட்டி வரும் போது பஸ்ல வரும் வண்டிய வெளியே பார்க் பண்ணணும் நினைத்துக் கொண்டேன். 

நுழையும் போது பை எல்லாம் பரிசோதனை நடந்தது. இப்போ எல்லாம் தீவிரவாதி எங்க குண்டு வைக்கிறாங்கனு யாருக்கு தெரியும். நம்ப நல்லது பேக் செக் பண்ணுறாங்க…!

 ஒரு பெண்மணி பையில் இருந்து உணவு பொருள் எல்லாம் வெளியே எடுத்து, “ உள்ளே எடுத்துப் போக அனுமதியில்லை” என்றனர்.

 “அடபாவிங்களா! வெடிகுண்ட உள்ளவிட்டுடுங்க. சாப்பாடு பொருள எடுத்து போகக்கூடாது சொல்லுங்க..”

என் அப்பத்தா எல்லாம் புலியோதர, எலுமிச்ச சாதம் கட்டிதான் வீட்டைவிட்டு வெளியே வருவாங்க. அவங்க மட்டும் இங்க வந்தாங்க நீ செத்தேடா….!! என்று நினைத்துக் கொண்டேன். தியேட்டரில் படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு…!

ஸ்டைல்லா பெப்ஸி வாங்கி குடிச்சு பொண்ணுங்க சைட், ஒரு புட் ஷாப்பில் பெப்ஸி கேட்டேன். பெப்ஸி டின் வாங்கி திறந்தார். “பிப்டி ரூபிஸ்” என்றான். “என்ன பார்த்தா முட்டாளா தெரியுதா... 300 ml ரூ.18, ரூ.20 தான் இருக்கும். இங்க என்னடா ரூ.50 சொல்லுறீங்க…”

 அவன் எதுவும் பேசாமல் சிரித்தான். டின்னில் எவ்வளவு இருக்குனு பார்த்தா… அட திருட்டு பசங்களா…. Selected Channel போட்டு இருக்காங்க ! அப்போ நீங்க சொல்லுறது தான் விலை..!!!

இவன் கிட்ட பேசுனதுல 15 நிமிஷம் போச்சு. அவசரப்பட்டு ஓபன் பண்ணிட்டேன். இரண்டு பிகரு நம்மைய பாத்திட்டு இருக்கு. மனசு இல்லாம அம்பது ரூபா கொடுத்து தொலைச்சேன்.

நம்மக்கிட்ட இருந்து கொள்ளை அடிக்கிறது அவங்களுக்கு குச்சமாயில்ல. நம்ம பணத்த திருப்பிக் கேட்டா மட்டும் ஒரு மாதிரியா பாக்குறாங்க. என்ன மாலுடா இது !!

அவங்கல ஸ்டைல்லா லுக் விட்டு ஒவ்வொரு கடையா வெடிக்கை பாத்து… தியேட்டர் குள்ளே போலானும் இருக்கும் போது… “சார் ! பெப்ஸியை தியேட்டர் காம்ளேக்ஸ் குள்ள எடுத்து போகக் கூடாது” என்றான்.

“ டேய் ! பெப்ஸிய மால்ல தான் வாங்குன. எதுக்கு வெளியே இருந்து தான் எடுத்து வரக் கூடாது. இங்க வாங்குனது கூடவா ?”

 “ தியேட்டர்ல புட் வொர்ல்ட் இருக்கு. உங்களுக்கு வேணும்னா அங்க வாங்குக…”

 அமாடா ! மறுபடியும் ரூ.20 பெப்ஸிய ரூ.50 வாங்குவாங்க… போடா …ங்கோ… என்று மனதில் திட்டிக் கொண்டேன். மால்க்குள்ள இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படி பிரிச்சு வச்சிருக்காங்க. அங்க இருந்து இங்க கொண்டுப் போகக் கூடாதுனு, இருங்க இருந்து அங்க போகக் கூடாதுனு.

இவங்க இஷ்டத்துக்கு நாம நடந்துக்குறதுக்கு நா எதுக்கு பணம் தந்து மால்குள்ள வரனும் ?



படத்துக்கு நேரமாச்சு. அரை மணி நேரம் பொறுமையா குடிக்கலாம் இருந்தா, இவனால அவசர அவசரமா குடிக்க வேண்டியதா இருக்கு.!

செக்யூரிட்டி பண்ண அக்க போரால ஹீரோவோட இன்ட்ரோ பாட்டை கோட்டைவிட்டேன். ஜாலியா படம் போச்சு. இன்ட்ரவல் வந்ததே தெரியுல. முதல் முதல்லா மால்ல படம் பாக்க வர அவசரத்துல எதுவும் சாப்பிடல. வெளியே வந்து ஏதாவது பிரியாணி சாப்பிடலாம் பார்த்தா… கொய்யால எல்லா பீசா, பர்கர் மட்டும் தான் இருக்கு. ஆனா, சிக்கன் பிரியாணி விக்கிற விலையில விக்குறாங்க.

பசி தாங்க முடியில. ரூ.200க்கு பர்கர் காம்போ ஒன்னு வாங்குன. கொடுக்குற காசுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்னு நினைச்சா. ஐஞ்சு நாள் முன்னாடி வச்ச பண்ண கொடுக்குறான். உள்ள காய்கறி வெட்டி வச்சு இவ்வளவு அநியாய விலைக்கு கொடுக்குறாங்க. நம்ப உருளைகிளங்க அழக வெட்டி ப்ரை பண்ணதால… பிரென்சு நாட்டுல சேத்துட்டாங்க. அதான் பிரென்சு ப்ரை.

 மனசு வராம கொடுத்த ரூ.200 க்கு ரூ.20க்கு தான் சாப்பிட்டேன். இவ்வளவு செலவு பண்ணி மால்ல பார்த்ததுல… படம் நல்லா இருந்துச்சி. படம் மட்டும் கொடுமையா இருந்திருந்து… அவ்வளவு தான். டைரக்டர் வீட்டுக்கு போய் செலவு பண்ண காச திருப்பிக் கேட்டுருப்பேன்.

மொக்கப்படத்த தியேட்டர்ல பார்க்குறவங்களோட கோவம் இப்ப புரியுது.

வெளியே கூட்டத்துல வண்டிய எடுத்து வரும் போது வேலை செய்யுறவன் கொடுத்த ஏ.டி.எம் கார்ட கேட்டான். கொடுத்தேன். மிஷின்ல போட்டு…கொஞ்ச நேரத்துல ரூ.80 சொன்னான்.

ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன். என் வண்டிய வைக்குறதுக்கு ரூ.80 வா ?? ஹவருக்கு ரூ.20 என்றான்.

“அங்க… ரூ.15 போட்டிருக்கே ?” “அது வார நாள்ல… இது விக்கென்ட். ஹவருக்கு ரூ.20 பா” என்றான்.

“ மூனு மணி நேரப் படத்துக்கு கொஞ்ச முன்னாடி வந்ததால ரூ.20 பைன்னாட்டா. நல்லா இருப்பீங்க. இது மால்லா … கோல்மால்லா…”

அடுத்த உழைப்ப திருடக்கூடாதுனு காசுக் கொடுத்து தியேட்டர்ல படம் பாக்க வந்தா… நம்ப உழைப்ப திருடுறாங்க. இப்ப தெரியுது ஏன் எல்லா படத்தையும் சீ.டியில பாக்குறாங்க… பேசாம நானும் சீ.டியில படம் பார்த்திருக்கனும்.


Wednesday, November 7, 2012

கமலஹாசன் வீடியோ !

ஒரு முறை ஏக்நாத் அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கூறியது.

 "1984 - 86 களில் வீடியோ திரையரங்கம் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். பல படங்களை காப்புரிமை வாங்கி வீடியோவாக கொண்டு வந்து ,அதற்கான திரையரங்கை உருவாக்க நினைத்த போது பலர் என்னை எதிர்த்தார்கள். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட கலைஞர்கள் என்று என்னை எதிர்காத ஆளில்லை.


 சிவாஜி தலைமையில் எனக்கு எதிராக புகார் கொடுக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சென்றார்கள். பத்திரிக்கையில் எனது பேட்டி வந்தால், எனக்கு எதிரான பேட்டி அடுத்த நாள் வரும். அந்த சமயத்தில், வீடியோ தொழில் வளர்ச்சியை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தவர் ஒரே ஒருவர் கமல ஹாசன் தான். தொழிற்வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று எனக்கு ஆதரவாக பேசியவர் அவர் மட்டும் தான்.

இப்போது, ஹோம் தியேட்டர் என்று எல்லோர் வீட்டில் இருக்கிறது. வீடியோ வளர்ந்து... அதற்கு மாற்றாக சீ.டி, டி.வி.டி என்று வளர்ந்திருக்கிறது. இப்போது யார் இந்த வளர்ச்சியை தடுக்க முடியும்." என்றார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பலர் எதிர்த்த போதும், அதை அதிகம் ஆதரித்தவர் கமல ஹாசன் என்பது குறிப்பிட தக்கது.


திரு.கமலஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

Thursday, November 1, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியீடு !

வரும் நவம்பர் 17 அன்று மாலை 5 மணிக்கு, தி.நகர் தக்கர் பாபா அரங்கில் நாகரத்னா பதிப்பகத்தின் 7 நூல்கள் வெளியிடப்படுகிறது.


கேபிளின் கதை - கேபிள் சங்கர் 
ரூ.100



 என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - ஜே.டி.ஜீவா
ரூ.70


தமிழனும் இந்தியனே ! - கனியன் செல்வராஜ் 
ரூ.40


இயற்கையைக் காப்போம் - தொகுப்பு : குகன்
ரூ.40




உலக சினிமா : ஒர் பார்வை - குகன் ( கௌதம் பதிப்பக வெளியீடு)
ரூ.50



நூல் அறிமுகம்

விழிப்பறி கொள்ளை - உமா சௌந்தர்யா
ரூ.40


பிணம் தின்னும் தேசம் - கருவை. சண்முக சுந்தரம்
ரூ.40



வெளியீடப்படும் நூல்களை முன் பதிவு செய்துக் கொள்ள.... இங்கே

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களை பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.


வெளியிடப்படும் 7 நூல்களின் விளம்பரப்படம். தங்கள் நண்பர்களுடன் பகிரவும். நன்றி !!

Monday, October 22, 2012

சிரிப்பு சினிமா : The Dictator (2012)

நீண்ட நாட்கள் ஆனது இப்படி ஒரு ஆங்கிலப்படத்திற்கு நான் சிரித்து ரசித்து பார்த்தது. சமக்கால சர்வதேச அரசியலை இந்த அளவுக்கு பகடி செய்யும் அளவிற்கு படம் வந்திருக்காமா என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நல்ல டைம் பாஸ் படம் தான்.

சார்லி சாப்லின் ‘The Great Dictator’(1940) படத்தின் கதை தான். வடையா நாட்டின் சர்வாதிகாரியான அலாதின் வெளிநாட்டுக்கு எண்ணெய் விற்க மறுக்கிறான். ஆனால், அவனின் ஆலோசகர் தமீர் அலாதின்னை கொல்ல முயல, அலாதின் நகல் கொல்லப்படுகிறான். அலாதினின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பல நாடுகள் கண்ட தெரிவித்தும், அவன் கண்டுக் கொள்ளவில்லை. ஐ.நாவில் தலையீட்டால் அங்கு விளக்கம் அளிக்க அலாதின் அழைக்கப்படுகிறான்.



அலாதின் அமெரிக்காவில் கால் பதிய அவனுக்கு எதிர்ப்பலைகள் பெறுகிறது. அங்கு விடுதியில் தங்கியிருக்கும் போது ஒரு உளவாளியால் அலாதின் கடத்தப்படுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், உளவாளியை கொன்று தனது தாடியை இழக்கிறான். தாடி இல்லாததால் அவன் சாமான்ய மனிதனாக அமெரிக்காவில் உளாவுகிறான். இதைப் பயன்ப்படுத்திக் கொண்டு தமீர் அலாதின் நகலை வைத்து, வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வருவதாக ஐ.நா அமைப்பு முன் சொல்கிறான். ஐ.நா உறுப்பினர் கைதட்டி அவனது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சதி திட்டத்திற்கு அலாதின் ஆலோசகர் தமீர் இருக்கிறான். வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வந்து சீனாவுக்கு எண்ணெய் வளத்தை விற்க சதி செய்திருந்தான்.

பெரிய சர்வாதிகாரியான அலாதின் சராசரி காவலர்கள் தாக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறான். அவனுக்கு சொயே என்ற பெண் உதவுகிறாள். இதற்கிடையில், அலாதின் கொல்லச் சொன்ன விஞ்ஞானியான நாடல் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், அவன் கொல்லச் சொன்ன அனைவரும் அமெரிக்காவில் லிட்டில் வடையாவில் உயிருடன் இருப்பதை பார்க்கிறான். நாடல் பின் தொடர்ந்து லிட்டில் வடையாவுக்கு செல்ல, அவனை அடையாளம் கண்டுக் கொள்கிறான் நாடல். அங்கு அலாதினுக்கு என்ன ஆனது ? அவன் எப்படி மீண்டும் தன் சர்வாதிகாரத்தைப் பெற்றானா ? வடையாவில் மக்கள் ஆட்சி வந்து, தமீர் சதி வென்றதா ? என்று வயிறு வலிக்க சிரித்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

சார்லி சாப்லின் “The Great Dictator” படத்தில் எப்படி ஹிட்லரை கிண்டல் செய்தாரோ, அதேப் போல் இதில் இஸ்லாமிய நாடுகளையும், அதன் தீவிரவாதத்தையும், கொஞ்சம் அமெரிக்காவையும் நையாண்டி செய்திருக்கின்றனர்.

அலாதின் அமெரிக்காவில் வளம் வரும் போது, “அமெரிக்கா எயிட்ஸின் பிறப்பிடம்”, ஹோட்டல் அறையில், “ ஒரு மணி நேர இன்டர்நெட்டுக்கு 20$ வாங்குபவர்கள், என்னை சர்வதேச தீவிரவாதி என்கிறார்களா !!!” என்று அதிர்வதில் அமெரிக்காவை நக்கல் செய்திருக்கிறார்.

வடையாவில் மக்கள் ஆட்சி வரும் என்று ‘நகல்’ அலாதின் சொல்ல, சீனா அதிபர் “சீனாக் கூட மக்கள் ஆட்சி நாடு தான்” என்று சொல்லி சிரிப்பது சீனாவுக்கான வசனம். அதுவும், சீனா அதிபரின் மனைவி ஆங்கில அறிவு இல்லாதவர் என்று காட்டுவதும், அதை அதிபரே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் சீனாவின் உளவுத்துறை பகையை சம்பாதித்திருக்கிறார்கள்.

அலாதினின் ஆங்கில புலமை, குறிப்பாக லிட்டில் வடையாவில் தன் பெயரை மறைத்து வேறு பெயர்கள் சொல்லும் இடம், சொயே பெண்ணின் கடையில் வேலை செய்வது, கூலிப்படை பெண்ணுடன் சண்டை, இறுதிக் காட்சியில் இரண்டு கட்டிடத்து நடுவில் தொங்குவது… என்று சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகள்.

மறைந்த லிப்யாவின் சர்வாதிகாரியான கடாபியை நினைவுப்படுத்தும் விதமாக அலாதின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில், சர்வாதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு மக்கள் ஆட்சி எதிராக பேசும் அலாதின் வசனங்கள் பல உண்மைகள் சொல்கிறாது. நகைச்சுவை படமாக இருந்தாலும், சொல்ல வந்த செய்தி ‘ஏ’ ரக நகைச்சுவையை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்த்திருக்கலாம்.

Monday, October 8, 2012

உலக சினிமா - ஓர் பார்வை

ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் தான் ஏழை பணக்காரனை முந்தி செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.


 பணக்காரர்களில் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போது ஒரு படத்தை வியாபார ரிதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாறு நிகழ்வுகளை நினைவு கூறவும், தனி மனித உணர்வுகளை கொள்ளப்படுவதையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

இதில் வரும் பத்தொன்பது படங்களையும் கண்டிப்பாக மூன்று, நான்கு பக்கத்தில் அடக்கி விடமுடியாது. ஒவ்வொரு படங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனி புத்தகமே எழுதலாம். வானத்தில் இருக்கும் நிலவை கண்ணாடியில் பிடித்து நிலவை ரசிக்கும் குழந்தையின் முயற்சி தான் இந்த புத்தகம்.

’கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் ‘உலக சினிமா’ கட்டுரைகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்த இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். தொடர் வந்துக் கொண்டு இருக்கும் போதே புத்தகம் போட சம்மதித்த கௌதம் பதிப்பகத்தார் சந்திரசேகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த புத்தகம், உலக சினிமாவுக்கான அறிமுகம் மட்டுமே. உண்மையான அனுபவத்தை படம் பார்த்து உணருங்கள்.

 அன்புடன்,
குகன்

**

விரைவில் வெளிவர இருக்கும் "உலக சினிமா - ஓர் பார்வை" நூலுக்கு, நான் எழுதிய என்னுரை.

Tuesday, September 25, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா – 3. அந்தர்சாலி யாத்ரா

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்ப்பனர்கள் செய்த கொடுமையை மறந்து விடக்கூடாது. ‘மனு தர்மம்’ என்ற பெயரில் அதர்மத்தை செய்தவர்களை, தற்போதிய பார்ப்பனிய சமூகம் கூட தங்கள் முன்னோர்கள் மீது சானி அடிப்பார்கள். அப்படி, அவர்கள் கடைப்பிடித்த பிற்போக்கான பல சிந்தனைகளில் ‘சதி’ யும் ஒன்று. இறந்த கணவனோடு மனைவியும் உடன் கட்டை இறந்து போவது !

கணவன் இழந்து மனைவி தவிக்கக் கூடாது எனவும், கணவன் - மனைவி இருவரும் இறந்து அடுத்த பிறவியில் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வார்கள் என்று பல காரணங்கள் மனுதர்மத்தில் சொல்லப்படுகிறது. இப்படி, பல பிற்போக்கான சிந்தனையுடனும், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களுடைய தர்மத்தை குருட்டுத் தனமாக நம்பும் கதாப்பாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் “அந்தர்சாலி யாத்ரா” (Antarjali Jatra).



நாடி நரம்புகள் தளர்ந்து இறக்கும் தருவாயில் இரண்டு பிள்ளைகளோடு கங்கை நதிக்கரையில் வருகிறான் முதியவனான சீதாராமன். அவர் உடலை பார்த்த மருத்துவரும் நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டார் என்கிறார். ஆனால், ஜோதிடர் அனந்தா சீதாராமன் கைரேகையை பார்த்து, சீதாராமன் எப்போ வேண்டுமானாலும் இறக்கலாம். அதை தடுக்க அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறான். தன் மகளை திருமணம் வயது வந்தும், திருமணம் செய்து வைக்க முடியாத ஏழை பிராமணன் அங்கு வருகிறான். மனுதர்மப்படி, திருமணம் செய்யாத பெண்ணை வீட்டில் வைத்துக் கொள்வது பாவம். தன் பாவத்தை போக்க ஏழை பிராமணன், தன் பெண்ணை கிழவன் சீதாராமனுக்கு தர சம்மதிக்கிறான்.

ஜோதிடர் ஏழை பிராமணனிடம் அவர் மகளை இறக்க இருக்கும் தன் கணவன் உயிரை மாங்கல்ய பலத்தால் காத்து, அவருடன் உடன் கட்டை இறந்தால் அவன் குடும்ப பாவங்கள் எல்லாம் போகும், அவள் மகளும் கடவுளாகப் போற்றப்படுவாள் என்கிறான்.

ஆனால், சீதாராமனை பரிசோதித்த மருத்துவர் இந்த திருமணத்தையும், ‘சதி’ முறையையும் எதிர்க்கிறார். ஜோதிடர் அனந்தா பிராமண சமூகத்தை விட்டு விரட்டிவிடுவதாக மிரட்ட, மருத்துவர் அமைதியாகிறான். பிராமணர்களின் செயலை ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்க்கும் வெட்டியான் பைஜூ இதை தவறு என்கிறான். தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் அவன் குரல் எடுப்படவில்லை.

ஒரு வழியாக தள்ளாத கிழவனுக்கு தன் மகள் யஷ்யோபதியை திருமண செய்த கையோடு புண்ணியத்தை சேர்த்ததாக எண்ணி செல்கிறார் பெண்ணின் தந்தை. புதிதாக திருமணமான கிழவனும், பெண்ணும் ஆற்றங்கரையில் தனிமையில் விடப்படுகிறார்கள். முதலில் பேசவே சிரமப்பட்ட கிழவன் சீதாராமன், புது மனைவி முத்தம்மிடக் ஆசைப்படுகிறான். ஆனால், தன் புது மனைவியிடம் இன்னும் வாழ வேண்டும் என்ற தன் கனவைக் கூறுகிறான். 

இவர்கள் இருவருக்கு துணையாக இருந்த சீதாராமனின் மகன்கள் கொத்துசாவிக்கு ஆசைப்பட்டு இரண்டு பேரும் சண்டைப்போட்டு ஓடுகிறார்கள். சென்றவர்கள் திரும்பிவரவில்லை. இருவரும் கங்கை நதிக்கரையில் தனிமையில் விடப்படுகின்றனர்.

வெட்டியான் பைஜூ கிழவனை ஆற்றில்ப் போட்டு கொன்று, யஷ்யோபதி காப்பாற்ற நினைக்கிறான். ஆனால், அவளே அவனை தாக்கி தனது கிழட்டு கணவனைக் காப்பாற்றுகிறாள். அடி வாங்கிய பைஜூ மீண்டும் கிழவனை அவர்கள் இருப்பிடத்துக்கே போட, யஷ்யோபதி பைஜூவிடம் மன்னிப்பு கேட்கிறாள். ஒரு கட்டத்தில் அவனை கட்டி தழுவி அழுகிறாள். மறு நாள், தன் கிழட்டு கணவன் காலில் விழுந்து குற்றவுணர்வோடு இருக்கிறாள்.

பெண்ணின் அப்பா, ஜோதிடர் புது மண தம்பதியர்களை வாழ்த்தி, அவர்கள் சமைப்பதற்கான பாத்திரங்களை கொடுக்கின்றனர். ‘சதி’ மூலம் யஷ்யோபதி இறந்தால், அவள் கடவுளாகி தன் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறான் யஷ்யோபதியின் அப்பா. ஆனால், யஷ்யோபதி தன்னுடைய காதலுக்கும், சம்பிரதாயத்துக்கும் நடுவே மாட்டுக் கொண்டு தவிக்கிறாள்.

புது மனைவி வந்த சந்தோஷத்தில் அவனாகவே எழுந்து உட்காரும் அளவிற்கு முன்னேறுகிறான் சீதாராமன். தனக்கு குடிக்க பால் வேண்டும் என்ற சீதாராமன் அடம்பிடிக்க, யஷ்யோபதி பைஜூவிடம் இருந்து ஆட்டு பால் வாங்கிவருகிறாள். பைஜூவுக்கு, யஷ்யோபதிக்கு இருக்கும் மெல்லிய காதல் உரையாடல் நடக்கிறது. இதை தூரத்தில் இருந்து சீதாராமன் பார்க்க, அவளை தண்ணீரில் மூழ்க்கி சாக சொல்கிறான். யஷ்யோபதி அதையே செய்ய நினைக்க, பைஜூ தடுகிறான். யஷ்யோபதி பைஜூவிடம் தன்னை மேலும் மேலும் பாவம் செய்ய வைக்கிறாய் என்று சொல்லி அழுகிறாள்.

கொஞ்ச நேரத்தில் கங்கை ஆற்று நீர் அளவு அதிகரித்து தண்ணீர் கரைக்கு வருகிறது. சீதாராமன் இருந்த பகுதி முழுக்க நீர் சூழ்ந்துக் கொள்ள, அவனை காப்பாற்ற யஷ்யோபதி தண்ணீரில் குதிக்கிறாள். சீதாராமனை காப்பாற்ற முடியாமல் அவளுடம் நீரோடு நீராக அடித்து செல்லப்படுகிறாள். அவளை காப்பாற்ற முடியாமல் கரையில் பைஜூ அழுதுக் கொண்டு இருக்கிறான். அங்கு நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் சாட்சியாக படகு காட்டியப்படி படம் முடிகிறது.

கமல் குமார் முசந்தர் எழுதிய “மஹா யாத்ரா" என்ற நாவலின் அடிப்படையாக கொண்டு எடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதம் கோஷ். சதியின் கொடுமையை படத்தில் காட்டவில்லை என்றாலும், மரணப் பயத்தில் இருக்கும் யஷ்யோபதி பாத்திரத்தில் சதியின் கொடுமையை உணர்த்துகிறார்.

பல திருமணம் செய்துக் கொண்ட கிழவனுக்கு சீதாராமன் என்ற பெயர் வைத்திலே இயக்குனரின் பகடி குணம் தெரிகிறது. அதுவும், எழுந்திரிக்க முடியாத கிழவன் புது மனைவியை முத்தமிட நினைப்பதும், அனுபவிக்க நினைத்து செய்யும் செயல்களும் நகைச்சுவையாக அமைத்திருக்கிறார். தள்ளாத வயதில் திருமணத்துக்கு சம்மதிக்கும் கிழவன், திருமணத்துக்கு முன்பே இறந்துவிடக்கூடாதா என்று பார்வையாளர்களை நினைக்க வைக்கிறார்.

ஒரு பெண்ணை அனுபவிக்க நினைக்கும் கிழவன் பாத்திரத்துக்கு நேர் எதிர் பாத்திரமாக பைஜூ பாத்திரம். பைஜூவை கட்டி தழுவி யஷ்யோபதி அழுதும், தன்னை தொடக் கூடாது என்கிறான். பால் வாங்க வரும் போது கூட பாத்திரத்தில் கையால் வாங்காமல், ஆட்டின் பாலை நேரடியாக அவள் பாத்திரத்திற்கு எடுத்து கொடுக்கிறான்.

மிகவும் பரிதாபப்பட வேண்டிய பாத்திரம் யஷ்யோபதி. மரண பயத்திலும் தன் கிழட்டு கணவனிடம் நாம் இறந்து மீண்டும் புது வாழ்க்கை தொடங்குவோம் என்ற நம்பிக்கையாக பேசுகிறாள். மரணத்தை சாஸ்திரம் என்ற பெயரில் ஒரு பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அதுவும் கிழட்டு கணவன் தன் பெயரைக் கூட தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டதை நினைத்து, முகம் வாடுவதும், மரணப்பயத்தில் நடுங்குவதும்... என்று வாழ்ந்த வரலாற்று பெண்களின் வாழ்க்கையை பிரதிபத்திருக்கிறது.

'உடன் கட்டை எரிதல் பழைய வழக்கம்' என்பது வரலாறாக இருக்கலாம். அதற்கு பின், எத்தனை பெண்களின் வேதனை இருக்கிறது. உணர்வுகள் கொல்லப்பட்டு இருக்கிறது. சாஸ்திரங்கள் எரியப்படுவதற்கு பதிலாக எத்தனையோ மனித உடல்கள் எரிந்திருக்கிறது. இவர்கள் மீது காரி உமிழ ஒரு பெரியார் போதாது என்பதை தான் இந்தப் படம் உணர்த்துகிறது.

அந்தர்சாலி யாத்ரா - 1988ல் பெங்காலி மொழி பிரிவில் இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. 1988 ல் கென்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது என்பது பெருமைக்குரிய அம்சமாகும்.

Friday, September 21, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !! (தொடர்ச்சி)

 நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறையே.... அரசாங்கத்தை ஈசியாக குறை சொல்லிவிடுகிறோம். ஆனால், அவர்கள் சரி செய்ததை பாராட்டவோ அல்லது சரியாகி விட்டது என்று சொல்லவோ செய்வதில்லை.இதே தவறை தான் நானும் மூன்று நாட்களாக செய்திருக்கிறேன்.

சென்ற திங்கள் அன்று பதிவிட வேண்டும் என்று இருந்தேன். நேரமின்மைக் காரணமாக இன்று பதிவிடுகிறேன்.


அதன் பின் TN CM cell க்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒரு வாரம் பொருத்திருந்து பார்த்தேன். பெரிதாக பலனில்லை. இரண்டு நாள் கலித்து, 'கேபிள்' சங்கர் அவர்கள் மேயரின் முக நூலில் போஸ்ட் போட்டதற்கு சரியான பதில் கிடைத்தது என்று கூறியிருந்தார். CM cell சரியாக வேலை செய்யாத போது, மேயர் மின்னஞ்சல் மட்டும் சரியாக வேலை செய்யுமா என்ற அவ நம்பிக்கையோடு தான் மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், அடுத்த இரண்டு நாளில் ஒரு குழி முடப்பட்டது. ( இதில் இருக்கும் அரசியலுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.)

இந்த குழியில் தான் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஆபத்தாக இருந்தது. அப்படியும், இரண்டாவது குழியை அவர்கள் மூடவில்லை. ஐந்து நாளாகியும் ஒரு குழி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

ஏ.ஈ தொடர்பு கொண்டு கேட்டேன். கொஞ்சம் வேலை இருந்தது. இன்று முடிந்துவிடும் என்று அன்றே குழியை முடிவிட்டார். 


நான்கு தெருவும் சேரும் முனை என்பதால் இந்த குழி மூடியதும் ஒரளவு போக்குவரத்து பரவாயில்லை.

 குழி தொண்டிய சுவடு மட்டும் சாலையில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான சாலையின் கதி அது தானே !!!

Tuesday, September 11, 2012

தொடரும் கார்டூன் அரசியல் !!

அசீம் திரிவேதியை கைதுயை சரியா ? தவறா ? என்று விவாதிக்கும் முன் ஊழலுக்கு எதிரான இந்த இணையதளத்தை பாருங்கள். ஊழலுக்கு எதிரான பல கேலி சித்திரங்கள் இதில் உள்ளது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம் தான். ஜனநாயக கடமையும் கூட. ஆனால், தேசிய சின்னம், தேசிய கோடி அவமானப்படுத்தும் கேலி சித்திரத்தை என்னால் ஆதரிக்க முடியவில்லை.

ஊழலில் இடம் பெற்று இருக்கும் அரசியல்வாதிகளை, நீதி மன்ற இழுவையை விமர்சிக்கலாம். மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, மோடி, அன்னா ஹசாரே யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க யாரும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்தவில்லை. ஜனநாயகத்தில் இவர்களை விமர்சிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.




விமர்சனம்... தவறு செய்ததை திருத்த உதவ வேண்டும். நம்மை நாமே அவமானப்படுத்தும் படி இருக்கக் கூடாது.

 “பாராளமன்றத்தை கழிவறையாகிவிட்டார்கள்” என்று சொல்வது வேறு. “பாராளமன்றம் ஒரு கழிவறை” என்று சொல்வது வேறு.

நம் அரசியல் நிர்வாகத்தை விமர்சிக்கலாம். நம் அடையாளத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. 

அதே சமயம், திரிவேதி மீது பாய்ந்த சட்டம், அவரை வரைய தூண்டிய ஊழல் அரசியல்வாதிகள் மேல் ஏன் பாயவில்லை என்ற நிதர்சனக் கேள்வியை கேட்காமல் இருக்கமுடியவில்லை.

***


இந்திய சின்னமான அசோக சின்னத்தை அவமானப்படுத்திய திருவேதியை கைது செய்தது எந்த அளவுக்கு நியாயமோ... அந்த அளவிற்கு இந்த போஸ்டர் வடிவமைத்த காங்கிரஸ் கட்சிக்காரரும் கைது செய்வதும் நியாயம் தான்.

இதை எதிர்த்து யாராவது வழக்கு போட்டார்களா ?

Monday, September 10, 2012

கல்லூரி டைரியில் காதல் கவிதை !

எதற்கோ என் புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடி, எதோ பழைய புத்தகத்தை புரட்ட , அது கல்லூரி வகுப்பில் நோட்ஸ் எடுத்த டைரியாக இருந்தது.

எந்த வகுப்பில் உட்கார்ந்து எழுதிய கவிதை (?) என்று ஞாபகமில்லை. எந்த பெண்ணை நினைத்து எழுதினேன் என்று நினைவில் இல்லை. (ஒன்றா இரண்டா சொல்வதற்கு ?) . எல்லோவற்றிக்கும் மேலாக இது கவிதையா என்ற சந்தேகம் இப்போது படிக்கும் போது தோன்றியது.

சரி ! ஆனது ஆகட்டும். எத்தனையோ மொக்கை பதிவுகளில் நடுவில் என் கல்லூரி கவிதை (?) ஒரு பக்கம் இருந்து விட்டு போகட்டும்.

***

மௌனம் என்பது மொழி
சொன்ன கவிஞர்கள் நூறு உண்டு !
அது என்னைக்ம்கொள்ளும் ஆயுதம்
கண்டேன் உன்னிடத்தில் இன்று

ஒரு பெண் போனால் இன்னொரு பெண்
என்று இது வரை நான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பு
மற்ற பெண்கள் பொய் என்று உரைத்தேன் !

பனித்துளிப் போல எந்தன் காதல்
பகலில் என்றும் தெரிவதில்லை
இரவில் மட்டும் கனவில்
எந்தன் காதல் தினம் தொல்லை !

**

பெண்கள் மனம் தேடுவது
காதலா ? நட்பா ?
ஆண்கள் மனமோ அறிவதில்லை.

நட்பை தேடினால் காதலை விரும்பும்
காதலை தேடினால் நட்பை விரும்பும்
புதிர் போடும் புதிர் நீங்கள் !

விலகிச் சென்றால் விரும்பி வரும்
விரும்பி சென்றால் விலகிப் போகும்
புரியாத வினாத்தாள் நீங்கள் !

விடை அறிந்த வினாக்களே !
எங்களை விரும்ப வைக்கும்
இயந்திரம் நீங்கள் !

உங்கள் மனம் தேவை என்ன ?
தெளிவாய் சொல்லிவிடுங்கள் !
ஆண்கள் தேடும் தேடலுக்கு
நீங்கள் கொஞ்சம் ஓய்வுக் கொடுங்கள் !

பெண்கள் அறிய நினைத்த அறிஞர்கள்
தலை நரைத்தே மடிந்தான் !
வாழுக்கின்ற இளைஞர்கள் நாங்களோ !
மடிவதற்காகவே பெண்களை தேடுகின்றான் !

Thursday, August 30, 2012

நடுரோட்டில் ஆபத்தான குழி !!

பதினைந்து நாள் போராட்டத்திற்கு பிறகு மிகுந்த வெருப்புடன், மன வேதனையுடன் இந்த பதிவு எழுதுகிறேன்.

பெரம்பூர் வடிவேலு முதலி தெருவில் (நெல்வயல் நகர்) நான்கு அடிக்கு இரண்டு குழிகள் தோண்டி ஒன்றரை மாதங்களாக மூடப்படாமல் இருக்கிறது. விவேகானந்தா, மான்போர்ட், ஞானஜோதி, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி என்று பள்ளி மாணவர்கள் அந்த வழியாக பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்களுக்கு ஆபத்தாக அந்த குழி இருக்கிறது. வயதான முதியவர்களும் மார்க்கெட்டுக்கு அந்த வழியாக தான் செல்ல வேண்டும்.

அந்த குழிக்கு மிக அருகில் தமிழ அரசு குடி மக்கள் தஞ்சமடையும் டாஸ்மார்க் இருக்கிறது. இரவு குடி போதையில் செல்பவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

 குழி நெ.1 (வெளிப்புரம்)

 குழி நெ.1 (உள்புரம்)

 இப்படி, முக்கிய பகுதியில் பல நாட்களாக குழி மூடப்படாமல் இருக்கிறதே என்று விசாரிக்க, மெட்ரோ வாட்டர் தோண்டிப் போட்டதாக கூறினர். நானும் அவர்களிடம் சென்று புகார் கொடுத்தேன்.

எதோ எண்ணை அழுத்தினார். நான் பார்த்து முடித்து விடுகிறேன் என்றார். மூன்று நாட்கள் ஆனது. குழி முடப்படவில்லை. (அவர் பெயரை கேட்காமல் விட்டுவிட்ட தவறை இப்போது உணர்கிறேன்.)

மீண்டும் மெட்ரோ வாட்டர் சென்று புகார் கொடுத்தேன். இந்த முறை குரலை உயர்த்தி பேசினேன். "நீங்க போய் கவுன்ஸ்லர் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க" என்றார். எதற்காக குழி தோண்டியிருக்கிறார்கள் என்று சரியான பதில் கூட சொல்லவில்லை.

குழி நெ.2


இவர்கள் குழி தோண்டுவார்கள், அதை மூடிவதற்கு கவுன்ஸ்லர், எம்.எல்.ஏவிடமா செல்ல வேண்டும் ? இதற்கிடையில் இன்னொரு எண் கொடுத்தார்கள். எப்போது போன் செய்தாலும் அவங்க சீட்டுல இல்ல... நாங்க பக்கத்து டிவிஷன் என்கிறார்கள்.

சரி ! இணையத்தில் தேடி http://www.chennaicorporation.gov.in/ ல் இருக்கும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அடித்தேன்.

 “Digged road is not closed more than one month. Vadivelu mudali street and nelvayal road inter section point. ( Near vellayan market), perambur.

என்று 9789951111 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் (22 ஆகஸ்ட்). குழி மூடப்படாமல் இருந்ததால், இரண்டு நாள் கலித்து 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். யாரும் போன் எடுக்கவில்லை. இணையத்தில் போடும் முன்பு, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று மீண்டும் 1913 எண்ணுக்கு போன் போட்டேன். என்னுடைய பெயர், முகவரி, போன் நம்பர் எல்லாம் வாங்கிக் கொண்டு புகார் எண் சொல்லாமல் இணைப்பை தூண்டித்துவிட்டார்.

இவர்கள் என் புகார் எடுத்துக் கொண்டார்களா ? என்று எதை வைத்து நம்புவது. ஒரு வாரம் கலித்து கேட்டால் இப்படி ஒரு புகார் வரவில்லை என்று சொல்லுவார்கள்.

பள்ளிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த .. மாணவர்கள் ஸ்ரூத்தி, ரஞ்சன் மரணமடைய வேண்டியிருக்கிறது.. அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய பிறந்த குழந்தை எலி கடித்து சாக வேண்டியிருக்கிறது. சென்னை கார்ப்ரேஷனில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்ய... இன்னொரு சிறுவன்/சிறுமி உயிர் தேவைப்படுகிறதா ? என்று தெரியவில்லை.

உயிர் பலி வரும் இவர்கள் அலட்சிய போக்கு தொடரும் என்று நினைக்கிறேன்.

Wednesday, August 29, 2012

உலக சினிமா : Declaration of War

சமிபத்தில் பார்த்த இரண்டு பிரென்சு படங்கள் என்னை மிகவும் பாதித்தது. ஒரு படத்தின் இருந்து பாதிப்பு மீண்டு வருவதற்குள் அடுத்த படத்தை பார்த்து தவறு செய்துவிட்டேன். இரண்டு படங்களும் அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த படங்களும் பார்க்க முடியாமல் என்னையே ஆட்கொண்டு விட்டது.

 உலகத்தில் சிறந்த காதலர்கள் என்று ரோமியோ - ஜூலியட் என்று சொல்வோம். காரணம், காதலித்து காதலுக்காக இறந்ததால். ஒரு வேளை இவர்கள் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால், இவர்களை உலக காதலர்கள் பட்டியலில் நாம் சேர்த்திருப்போமா ? கண்டிப்பாக சேர்க்கலாம் என்கிறது ‘Declaration of War'.



எட்டு வயது சிறுவனுடன் மருத்துவ அறையில் நுழைகிறாள் ஜூலியட். உள்ளே நுழையும் முன் தனது காதல் கதையின் நினைவுகளை சொல்கிறாள். நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்தில் ரோமியோவை பார்க்கிறாள் ஜூலியட். பார்த்த மாத்திரத்தில் இருவரும் காதல் கொள்கிறார்கள். திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஷேக்ஸிபியர் வஞ்சத்தால் இறந்த காதலர்கள், மீண்டும் உயிர் கொண்டு வாழ்வது போல் வாழ்கிறார்கள்.

எல்லாம் சுபமாக நடக்க, ஜூலியட்டுக்கு கருத்தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அதுவரை உலக காதலர்களாக இருந்தவர்கள், குழந்தையை பார்த்துக் கொள்வதில் சண்டைப்போடுகிறார்கள். அதுவும், இரவு நேரத்தில் குழந்தை அழும் போது, பசிக்காக அழுகிறது என்று அம்மா சொல்ல, இரவு முழுக்க குழந்தை எப்படி பசிக்காக அழும் என்று அப்பா கேட்கிறார்.

குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவரிடம் செல்ல, குழந்தையை அழுவதை நிறுத்த வழிகள் சொல்கிறார். ஒரு சமயம், குழந்தை வாந்தி எடுப்பதை பதட்டப்பட்டு ரோமியோ ஜூலியட்டுக்கு அலைப்பேசியில் அழைக்க, வேலை நடுவில் இருக்கும் ஜூலியட்டுக்கு கோபம் வருகிறது. குழந்தை விஷயத்தில் இருவருக்கு சிறு சிறு மன கசப்புகள் வருகிறது.

 சில மாதம் கழித்து, குழந்தையை ப்ளே ஸ்கூல் சேர்க்க, அங்கு “உங்கள் குழந்தை மற்ற குழந்தைகள் போல் இல்லை” என்பதை சொல்கிறார்கள். மருத்துவரிடம் குழந்தையை கொண்டு செல்ல, குழந்தைக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த மருத்துவர், மூளைக்கு என்று வேறொரு மருத்துவரை அறிமுக செய்து வைக்கிறார். மூன்று வயது நிறம்பாத குழந்தைக்கு, அருவை சிகிச்சை செய்கிறார். ஆனால், புற்றுநோய் முழுமையாக குணமைடையவில்லை. சரியான மருத்துவம், சுத்தம், காற்று எல்லாம் சேர்த்து குழந்தையை பாதுக்காக்க முடியும் என்கிறார் மருத்துவர். ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தங்கள் மகனை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது மீதி கதை.

குழந்தையை விட பெற்றோர்கள் வியாதியிடம் அதிகம் போராடுகிறார்கள். குழந்தை புற்றுநோயோடு போராடும் போது கணவன் - மனைவி உறவும் போராட்டத்தில் தள்ளப்படுகிறது. சிகிச்சைக்கு பணம், ஆருதலான வார்த்தைகள், தாம்பத்திய உறவு என்று எதிர்பார்க்கும் சராசரி பாத்திரங்களை காட்சியில் கொண்டு வந்துள்ளார்கள். இருவரும் தங்கள் குழந்தையை நினைத்து கலங்காமல், மன உறுதியுடன் இருப்பது நம்மை கலங்க வைக்கிறது.

மருத்துவமனையில் ரோமியோ, ஜூலியட் உறவினர்கள் அவர்களுக்கு ஆருதலாக இருப்பதும், ஜூலியட் அம்மா நம்பிக்கைக்காக கயிறு தருவதும், ஜூலியட் சகோதரி துணையாக இருப்பது.... துன்ப நேரத்தில் நல்ல உறவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இது போன்ற உறவுகள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். வெளிநாட்டில் இல்லை என்ற பொய் பிரச்சாரத்தை உடைத்து எறிகிறது.

மருத்துவர்கள் என்ன தான் வேலை பளுவில் இருந்தாலும், தங்கள் குழந்தை காப்பாற்ற முடியுமா ? குழந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது போன்ற பெற்றோர்களின் கேள்விகள் பெரிய மருத்துவரிடம் கேட்க முடியாமல் சிப்பந்திகள் தடுத்தால் கோபம் வரும். சிப்பந்தியோ, டியூட்டி டாக்டரோ என்ன சொன்னாலும் கேட்க தோன்றாது. இதை அப்படியே இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

84வது ஆஸ்கர் விருதுக்காக அந்நிய மொழி பிரிவுக்கு, பிரென்சு மொழியில் இந்த படத்தை தேர்வு செய்து அனுப்பப்பட்டது. இறுதி சுற்றுக்கு இந்த படம் தேர்வாகவில்லை என்றாலும், பார்க்க வேண்டிய படம் என்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இரண்டாவதாக பார்த்த பிரென்சு படம், "A Happy Event (Un heureux événement)". நேரம் கிடைத்தால் அடுத்த பதிவில் இந்த படத்தைப் பற்றி எழுதுகிறேன்.


Thursday, August 23, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா : 2.சுபர்ண ரேகா

ஜெ.ஜெ.ப்ளிம்ஸ் ( அம்மாவுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தயாரிப்பில் ரித்விக் கட்டக் இயக்கியப் படம் 'சுபர்ண ரேகா'.



சுதந்திர சந்தோஷத்தை விட வலியும், வேதனையும் கொடுத்த இந்திய, பாகிஸ்தான் பிரிவினை பிந்தைய காலமான 1948ல் கதை தொடங்குகிறது. தாக்காவில் சொத்துக்களை இழந்து தன் தங்கை சீதாவுடன் அகதி முகாம்மில் இருக்கிறான் ஈஸ்வர். அவனது நண்பன் ஹரபிரசாத் சமூகத் தொண்டில் அதிக ஆர்வமுள்ளவன். பொதுவுடைமை சிந்தனையாளன். ஈஸ்வரும், ஹரபிரசாத்துக்கும் அகதி முகாம்மில் இருக்கும் சிறுவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இந்த சமயத்தில் அகதி முகாம்மில் புகலிடம் கேட்டு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த சிறுவன் அவிராம், அவனது அம்மா வருகிறார்கள். அகதி முகாமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், குண்டர்கள் கூட்டம் ஒடுக்க இனத்தினரை ஒரு வேன்னில் ஏற்றி இழுத்து செல்கிறார்கள். அதில் இருந்து அவிராம் மட்டும் தப்பிக்கிறான். தாய்யை இழந்த அவிராம்மை ஈஸ்வர் ஆதரவு தருகிறான்.

பொதுவுடமை சிந்தனைவாதியான ஹரபிரசாத் காந்தியின் மரணத்துக்கு அழுகிறான். ஆனால், ஈஸ்வர் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. தன் தங்கைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறான். 

ஈஸ்வரின் நண்பன் ராம்தாஸ் அவனது மில்லில் வேலை செய்ய அழைக்கிறான். தன் தங்கை சீதாவுக்காக அவன் வேலையை ஏற்கிறான். ஆனால், அவனது ஹரபிரசாத் ஈஸ்வரை சுயநலவாதி என்று சொல்லி அவனிடம் பேச மறுக்கிறான். ஈஸ்வரின் தங்கை சீதா தாங்கள் செல்ல விருக்கும் புது வீட்டைப் பற்றி ஈஸ்வரிடம் கேட்கிறாள். அங்கு நீல ஆறு, நீல மலை, எல்லாம் இருக்குமா என்று கேட்கிறாள். ( தாக்காவை நினைவுப்படுத்துபவை). ஆனால், ஈஸ்வர் எதற்கும் பதிலளிக்கவில்லை.

தனக்கு வேலை கிடைத்த மில்லுக்கு சீதாவுடன், அவிராம்மையும் அழைத்து செல்கிறான். அந்த மில் 'சுபர்ண ரேகா' என்ற நதியின் அருகே இருக்கிறது. ரயிலில் இருந்து இறங்கியதும் மில்லில் வேலை செய்யும் முகர்ஜி அவர்களை அழைத்து சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் விடுகிறான். சீதா சங்கீதத்தில் அதிக ஆர்வமுடையவள். எப்போது நதிக்கரையில் பாடுவாள். சிறுவனான அவிராம்மை வெளியூரில் அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று ஈஸ்வர் முடிவெடுக்கிறான். 

அவிராம் ஊருக்கு செல்வதை சீதாவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் மீது கோபப்படுகிறாள். பிறகு, சமாதானமாகி இருவரும் விளையாடுகிறார்கள். நதிக்கரை அருகில் போரால் பாதிக்கப்பட்ட வீடு, விமானம், கோயில் ஒவ்வொன்றையும் சுற்றிப்பார்கிறார்கள். விமானம் தரையிரங்கும் இடத்தில் விளையாடுகிறார்கள். போருக்கு பின் ஒழிந்து இருக்கும் கொடுமை பிஞ்சு சிறுவன், சிறுமிக்கு தெரியவில்லை.

அவிராம் ஊருக்கு சென்றதும், ஆற்றக்கரை அருகே காளி வேடத்தில் ஒருவன் பார்த்து பயப்படுகிறாள் சீதா. அப்போது ஈஸ்வரின் மேனேஜர் அங்கு வர, ‘காளி’ வேடத்தில் இருப்பவனுக்கு காசுக் கொடுத்து அனுப்புகிறார். தன் பெயர் சீதா என்றதும், மேனேஜர் ராமாயணத்தில் வரும் சீதாவின் கதையை சொல்லுகிறார். ( ராம்யாணம் - சீதையுடைய கதை என்று சொல்லுவதை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று)

பல ஆண்டுகள் செல்கிறது.

பழைய மேனேஜர் ஓய்வுப் பெற ஈஸ்வர் மேனேஜர் பொருப் பெற்றுக் கொள்கிறான். படிப்பு முடித்து வரும் அவிராம், தனது முதல் நாவலை சீதாவிடம் படித்து காட்டி தன் காதலை சொல்கிறான். சீதா வெட்கத்தால் அவிராம் காதலுக்கு சம்மதம் சொல்லுகிறாள். இருவரும் காதலிப்பது ஈஸ்வருக்கு தெரியவருகிறது. இதற்கிடையில், வெளியூரில் இருந்து வரும் ராம்தாஸ், தன் மில்லில் இரண்டு சதவீத உரிமையை ஈஸ்வருக்கு தருவதாக சொல்கிறான். அப்போது, ராம்தாஸ் ஈஸ்வர் அவிராமை வளர்த்து, படிக்க வைப்பதை தெரிந்துக் கொண்டு "அவன் என்ன ஜாதி தெரியாமல் ஏன் உதவி செய்கிறாய் ?" என்று கேட்கிறான். அவிராம் ஈஸ்வர் ஆசைப்படி பொறியியல் படிக்க ஜெர்மன் செல்ல நினைக்கும் போது சிறு வயதில் தொலைந்த அம்மாவை சந்திக்கிறான். மகன் பார்த்த சந்தோஷத்தில் அந்த அம்மா இறக்கிறாள். அவிராம் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பது, ஈஸ்வருக்கு இன்னும் உறுதியாகிறது. 


அவிராமை வெளியூருக்கு அனுப்பிவிட்டு, சீதாவுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறான். திருமணத்துக்கு மறுக்கும் சீதாவை, ஈஸ்வர் அடித்து சம்மதிக்க வைக்கிறான். ஆனால், திருமண முதல் நாள் சீதா அவிராமுடன் ஓடி திருமணம் செய்துக் கொள்கிறாள்.

மேலும் சில ஆண்டுகள் செல்கிறது.

ஐந்து வயது மகனுடன் அவிராம், சீதா வறுமையில் வாழ்கிறார்கள். எழுத்தை விட்டு டிரைவராக முடிவெடுக்கிறான் அவிராம். அந்த வறுமையிலும், சீதா தன் அண்ணனை தேடி செல்ல விரும்பவில்லை. அப்படி சென்றால், உயிர் விட்டுவிடுவேன் என்கிறாள்.

ஆசையாய் வளர்த்த தன் தங்கை தன்னை பிரிந்ததில் இருந்து மனது பாதிக்கப்பட்டவனாக திறிக்கிறான் ஈஸ்வர். மில்லில் தன்னை புறம் பேசுவதை உணர்ந்தும், பேசாமல் அமைதியாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது பாலிய நண்பன் ஹரபிரசாத் வருகிறான். தான் வாழ்க்கை தோல்வியுற்று எதுவும் இல்லாதவனாக இருப்பதை சொல்கிறான். ஈஸ்வர், ஹரபிரசாத் வேறு வேறு வழி சென்றாலும், இறுதியில் இருவரும் தோல்வி பெற்றதை பற்றி பேசிக் கொள்கிறார்கள். இறுதி நாட்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்கிறான் ஹரபிரசாத். அவன் சொன்னதை போலவே குடி, சூதாட்டம் என்று பணத்தை செலவு செய்கிறான் ஈஸ்வர்.

அவிராம் டிரைவர் வேலை செய்யும் போது ஒரு சிறுமி மீது வண்டி ஏற்றி கொன்று விட, பொது மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். இது வரை வறுமையில் இருந்த சீதா, மேலும் வறுமையில் வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் விபச்சாரத்தை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுகிறாள். அதை விட பெரிய கொடுமை, முதல் வாடிக்கையாளராக அவன் அண்ணன் ஈஸ்வர் வருவது. அண்ணன் முன் விபச்சாரியாக நிற்க முடியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறாள் சீதா. தற்கொலைக்கு தூண்டியதற்காக ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான். சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவன் வேலை பரிபோனதை தெரிந்துக் கொள்கிறாள். அதாரமற்ற தன் வாழ்க்கை இருக்கிறதே என்று நினைக்கும் போது, சீதாவின் மகன் அவனை 'மாமா' என்று அழைக்கிறான்.

'சுபரணரேகா' ஆற்றங்கரையில் மீண்டும் தன் வாழ்க்கையை ஈஸ்வர் தொடங்குவது படம் முடிகிறது.

சுபரணரேகா என்றால் நிற்காமல் ஓடும் நதி என்று பொருள். 1962 எடுக்கப்பட்ட இத்திரைப்படம், வெளியானது 1965ல் தான்.

பெங்காலி படங்களில் மட்டும் எப்படி சிறுவர்களுக்காக உலகத்தை அழகிய கவிதைப் போல் காட்டுகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட இடத்தில், விமானம் தரையிறங்கும் இடத்தை சிறுவர்கள் பேசும் போது, போரில் கொடுமையை மறந்து இவர்களை ரசிக்க வைக்கிறது.

கருப்புவெள்ளை திரைப்படத்தில் கதாநாயகி இவ்வளவு அழகாக தமிழ் படங்களில் காட்டியிருக்கிறார்களா ? என்று தெரியவில்லை. நாயகி அவ்வளவு அழகாக இருக்கிறார். நாயகி பாத்திரத்துடன் ஒட்டி வரக்கூடிய பாடல், அர்தம் புரியாமல் இருந்தாலும் நெஞ்சய் அழகாக வருடுகிறது.

அவிராமை சகோதரனாக நினைத்து படிக்க வைத்தவர். ஜெர்மன் அனுப்பி பொறியியல் படிக்க வைக்க ஆசைப்படும் ஈஸ்வர், தன் சகோதரியை ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்தவன் என்று ஒரு காரணத்துக்காக மறுக்கிறார் என்பதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன் தங்கைக்காக பொதுவுடைமை சிந்தனை விட்டு, சுய நலமாக முடிவெடுக்கிறார். மேட்டுக்குடியில் பிறந்த ஆணவமோ, அகந்தையோ அந்த பாத்திரத்துக்கு காட்டவில்லை. அவிராம், சீதா திருமணத்துக்கு சம்மதித்தால், ராம்தாஸ் மூலம் வரும் பங்கு பாதுக்கப்படும் என்று அஞ்சுவதாக இருந்தாலும், அச்சத்தை விட இருவர் கோபம் தான் அந்த பாத்திரத்துக்கு இருக்கிறது. அப்படி, ஜாதி பார்ப்பவன் ஏன் ஒடுக்கப்பட்ட இனத்தில் இருப்பவனை படிக்க வைக்க வேண்டும் ?

பொதுவுடைமை சிந்தனையாளரின் தோல்வியையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். ஈஸ்வரின் நண்பன் ஹரபிரசாத், தன் சிந்தனையில் தோல்வி அடைந்து நெழிந்து ஈஸ்வர் வருகிறார். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்று நினைக்கும் அவிராமும் தன் நாவலை தூக்கிப் போட்டு, டிரைவராக மாறுகிறார். எழுத்தை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்வதும் , சமூகத்தீய்மைக்காக போராடுவதும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்பே தோல்வியை  ஏற்றுக் கொள்வதை காட்டியுள்ளார்கள். அதே சமயம், சுய நலமாக முடிவெடுத்த ஈஸ்வரும் இறுதில் தோற்றுப் போகிறான். அதே சமயம், வசதியான ராம்தாஸ் மேலும் மேலும் பணத்தை பெருகி வெளிநாட்டுக்கெல்லாம் செல்கிறான். சிந்தனை, கருத்து என்று இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. அதுவும், எதார்த்த உண்மையே !!!

இந்திய சினிமாவில் ரித்விக் கட்டக்கின் ஆளுமை யை நம்மால் மறக்க முடியாது ஒன்று. இன்று, இந்திய சினிமாவை நாம் பேசுவதாக இருந்தால், பெங்காலி படங்களை தவிர்த்து பேசாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சத்தியஜித்ரே, ரித்விக் கட்டக் பெங்காலி படங்கள் மக்கள் மனதில் பதியவைத்திருக்கிறார்கள்.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையில் எத்தனையோ சோகக் கதைகள் ஒழிந்து இருக்கிறது. அதை சொல்லும் துணிச்சல் நம் இந்திய சினிமாவுக்கு இல்லை என்பது தான் வருத்தமான ஒன்று. ஆரம்ப காட்சியில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வன்முறையால் உணர்த்தாமல் , காட்சியால் உணர்த்திய ரித்விக் கட்டக்கு கோடான கோடி நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails