வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, January 27, 2012

புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை !

அது ஒரு சிற்றிதழில் ஆண்டு விழா நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக 'நாகரத்னா பதிப்பக' சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி அமைப்பாளரின் அனுமதிப் பெற்று தான் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகனாக இருந்த எனக்கு புத்தக விற்பனையாளனாக முதல் அனுபவமும் அது தான்.
நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மேடையில் பேசிய பேச்சாளர் பார்வையாளர்களை வறுத்தெடுக்க்க் கூட்டத்தில் சிலர் புத்தகத்தைச் சூழத்தொடங்கினர்.


நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டவர்களில் பலர் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அவர்களுக்கு பேச்சு சுவாரஸ்யமாக இல்லை என்பதால் வெளியே வந்திருக்கலாம், அங்கே இருந்த எமது பதிப்பக நூல்களைப் பார்வையிட்டார்கள். அதைக் கண்ட நிகழ்ச்சி அமைப்பாளர், " வர கூட்ட எல்லாம் கண்காட்சிக்கு வந்திருச்சுனா... ஹால்ல யாரு இருக்குறது. இதுக்கு தான் யாருக்கு ஸ்டால் போட அனுமதி தரதில்ல...." என்று எல்லோர் முன்பும் என்னை வசைபாடினார்.

இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்திகின்ற பலர் அரங்கின் வெளியே புத்தக்க் கடை வைப்பதால், அரங்கினுள்ளே கூட்டம் குறைகிறது என்று அஞ்சுகிறார்கள்.
ஒரு நிகழ்ச்சியின் கூட்டத்தை புத்தகம் குறைக்க முடியும் என்றால் (எதிர்மறை சிந்தனை) நிகழ்ச்சிக்கு கூட்டத்தை புத்தகத்தால் சேர்க்கவும் முடியும் என்பதை உணர வேண்டும் (நேர்மறை சிந்தனை).

ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் உறுப்பினர் புத்தகங்கள் தங்கள் சங்க நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கலாம். நிகழ்ச்சி கலந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், தன் புத்தகத்தை பார்வைக்கு வைப்பதற்காக கண்டிப்பாக கலந்து கொள்வார்கள்.

அதைப்போல, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ’நூல் விமர்சன’ என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது, நூலுக்கும், எழுத்தாளருக்கும் விளம்பரம் கிடைக்கும்
இன்று எத்தனையோ இலக்கிய அமைப்புகள், சங்கங்கள் பல எழுத்தாளரையும், பேச்சாளரையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் அவர்களை வாசகனிடத்திலோ, பார்வையாளனிடத்திலோ சரியாக கொண்டு சென்றதில்லை.
ஐம்பது புத்தகம் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர்க் கூட தீவிரமாக புத்தகம் வாசிக்கும் வாசகனுக்கு பரிச்சயமாவதில்லை. காரணம், அப்படிப்பட்டவர்கள் நூலக ஆணையை நம்பியே புத்தகம் வெளியிடுகிறார்கள். நூலக ஆணை என்பது எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பலம் மறுப்பதற்கில்லை.

நூலக ஆணை மூலம் பெறப்படும் நூலகங்களில் தேங்கிக் கிடக்கும், நூலகத்திற்கு அனுப்பியது போக மீதமுள்ள நூல்கள் அவரவர் வீட்டின் அலமாரியிலோ பரணையிலோ தேங்கிக்கிடக்கும்.
உண்மையான எழுத்து என்பது உறங்கி கொண்டு இருக்கும் மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்புவது உண்மையான எழுத்து. பலரின் புத்தகங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எப்படி அவர்கள் எழுத்து மனசாட்சியை எழுப்ப போகிறது. இதில் இருந்து நாம் மாறுப்பட வேண்டும்.

காலத்திற்கேற்றாற்போல் நம்மையும் நாம் மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித் தனம்.
நவீனமயமாகிவிட்ட உலகில், ஒர் வாசகன் புத்தகத்தைத் தேடி நூலகத்திற்கோ அல்லது புத்தகக் கடைக்கோ செல்வான் என்று எண்ணாமல், வாசகனைத் தேடி எழுத்தாளர்கள் பயணம் செய்ய வேண்டும். இலக்கிய நிகழ்ச்சிகள் மூலமாகவோ, நூல் விமர்சனம் மூலமாகவோ, நண்பர்களிட்த்திலோ, ஏன்…. ‘இணைய புத்தக அங்காடி தளங்கள்’ உதவியுடனும் புத்தகங்களை விற்பனை செய்யலாம்.


ஒரு பதிப்பகம் போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும் என்ற முயற்சியிலும் இறங்கியுள்ளது. இன்று அந்த பதிப்பகம் முன்னனியில் அடைந்திருப்பதற்கு காரணம் அவர்களின் மாறுப்பட்ட புத்தக விற்பனை சிந்தனை தான்.

வீடு தோறும் பூஜை அறை இருப்பது போல், வீடு தோறும் நூலகம் இருக்க வேண்டும். வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் கொடுக்கும். எந்த கடவுளாலும் தீர்த்து வைக்க முடியாத தீர்வுகளுக்கு புத்தகங்களில் தீர்வு உண்டு. நண்பர்களுக்கு பரிசு பொருள் அளிப்பதற்கு பதிலாக புத்தகங்களை அளிக்கலாம். குறைந்த பட்சம் புத்தக ஆர்வமுள்ளவர்களுக்காவது புத்தகங்களை பரிசளிக்கலாம்.

இப்படி, இலக்கிய அமைப்பு, புத்தக விற்பனையாளர்கள், வாசகன் என்று புத்தகங்களை பற்றி தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டால் தான் நல்ல புத்தகங்கள் அடுத்த அச்சுக்கு மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்.

( ’இலக்கியச் சோலை - பொங்கல் மலர் 2012’ ல் வெளியான நான் எழுதிய கட்டுரை)

Friday, January 20, 2012

இயற்கையை அழிப்போம் !

காடுகள் அழித்து
வீடுகள் கட்டினோம்
மனிதர்கள் வந்தார்கள்
மழை வரவில்லை !

வேலை வாய்ப்பை பெருக்க
தொழிற்சாலை கட்டினோம்
வேலைகள் பெருகியது
குடிநீர் சாக்கடையானது !

மின்சாரத்தின் உற்பத்தியை பெருக்க
அணு மின் நிலையம் தொடங்கினோம்
மின்சாரம் கிடைத்தது
உடம்பில் நோய் பெருகியது !!

மொத்தத்தில்
நம் அடிப்படை வசதிக்காக
நம்மை நாமே அழித்துக் கொண்டோம்
மக்கள் தொகை குறைந்தது !!

**

நான் பாரதியானால்...

நெய்வேலி மின்சாரம்போல்
கடனாய் கொடுத்த வீரத்தை
மீண்டும் உடம்பில் பாய்ச்சிடுவேன்
ஆடைக் குறைப்புப் போட்டிகள் நிறுத்தி
அறிவை வளர்க்கும் போட்டிகள் நடத்துவேன்
பொருட்காட்சியில் வீற்றிருக்கும்ம் தமிழை
அரியணையில் ஏற்றி ஆராதிப்பேன்.

"நம் உரத்தசிந்தனை, ஜனவரி 2012" இதழில் வெளியான என் கவிதை

Thursday, January 19, 2012

வீர விளையாட்டு !

தற்கொலையை கோழைத்தனம் என்று சொல்பவர்கள் கூட மரணத்தோடு விளையாடுவதை வீர விளையாட்டு என்கிறார்கள். இந்த விளையாட்டில் உயிரை ஏன் துச்சமாக கருதுகிறார்களோ தெரியவில்லை. வருடத்திற்கு ஒரு முறை இப்படி ஒரு விளையாட்டு விளையாடி விட வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லி மார் தட்டுபவர்கள் யாரும் களத்தில் குதிப்பதில்லை. பெண்களை கவர நினைப்பவர்களும், பரிசு தொகைக்கும் தான் களத்திற்கு வருகிறார்கள். சில சமயம் ஆணுக்குறிய அடையாளத்தையும் இழக்கிறார்கள்.

கல கலவென்று இருந்த என்னையும் இந்த வருட களத்தில் குதிக்க வைத்துவிட்டனர். எனக்கு இந்த விளையாட்டில் விருப்பமே இல்லை. ஆனால் என்ன செய்வது ? ஒவ்வொரு வருடத்தில் எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவன் கலந்துக் கொள்ள வேண்டுமாம். இந்த வருடம், என் குடும்பத்துக்காக நான் களம் இறங்கியிருக்கிறேன்.



என் சித்தப்பா இந்த விளையாட்டில் இறந்ததாக அம்மா ஒரு முறை கூறியிருக்கிறார். அவரை சின்ன வயதில் பார்த்த ஞாபகம். களத்தில் வந்தவுடன் அவர் என் கண் முன் தெரிவது போல் இருந்தது. வீர விளையாட்டில் மரண பயத்தோடு களத்தில் இருந்தேன்.

'ஜல்லிகட்டு நடத்த கூடாது சொன்னாங்க... விடுவாங்களா நம்ப ஆளுங்க… நடத்தி காட்டிடோம்ள..' என்று விளையாட்டை நடத்துபவர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் பெருமையில் என் உயிர் உஞ்சலாடிக் கொண்டு இருந்தது. எனக்கு சங்குதுவது போல் ஆட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு இளைஞர்களும் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். நான் ஓடியதில் ஒருவன் மேல் ஏறி ஓடினேன். மிதிக்க கூடாத இடத்தில் மிதித்து விட்டேன். ' அவன் நிலைமை என்னவோ' என்ற கவலையுடன் நான்கு கால்களில் நிற்காமல் ஓடினேன்.

**

இந்த மாதம் 'பொதிகை மின்னல்' (ஜனவரி 2012) மாத இதழுக்காக நான் எழுதிய ஒரு பக்க கதை.

Saturday, January 14, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 9 & 10 !!

நாள் – 9

நேற்று(13.1.12) , மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சி செல்ல நினைத்த நான், அலுவலக பணியால் என்னால் செல்ல முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது. எவ்வளவு நேரமானாலும், இன்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும். முக்கியமான ஒரு மனிதரை சந்திக்க வேண்டும். இப்போது தவறவிட்டால், அவரை மீண்டும் இந்தியா வரும் போது தான் பார்க்க முடியும். கேபிள் சங்கருக்கு போன் போட்டு அவர் வருகிறாரா என்று உறுதி செய்துக் கொண்டேன். கேபிள் தன்னுடன் வருவதாக கூறினார்.

எப்படியோ வேலையை முடித்து, அடித்து பிடித்து 7:30 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். நேராக டிஸ்கவரி புக் பேலஸ் அரங்குக்கு(334) சென்ற நான், அங்கு கேபிளுடன் முதுகு காட்டியப்படி அந்த உயரமான மனிதர் பேசிக் கொண்டு இருந்தார். அவர் தான் ‘உ’ பதிப்பக உரிமையாளர் உலகநாதன். மலேஷியாவில் இருந்து ஒரு அபிஷியல் விசிட்காக வந்திருப்பதாக கூறினார். அவருடன் பேசிக் கொண்டு இருக்கும் போது, இயக்குனர் கரு.பழனியப்பன் நின்று இருப்பதை கவனித்தேன்.

அவரிடம் கை குலுக்கி, “ஸார் ! உங்க படத்துல வர வசனம் எல்லாம் சூப்பர்” என்று ஆட்டோகிராப் கேட்டேன். “என்ன தல ! கலாய்க்கிறிங்களா !!” என்றார். அவர் தான், ”சாமியாட்டம்” சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி. உண்மையிலேயே, அவர் ஒரு சைட்டில் பார்க்கும் போது, “இயக்குனர் கரு.பழனியப்பன்” மாதிரி இருந்தார். கிட்ட தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு பாலபாரதியை சந்திக்கிறேன். இடையில், என் நான் எழுதும் “ஓரின சேர்க்கை” பற்றிய கட்டுரைக்காக தொலைப்பேசியில் பேசியதோடு சரி. மீசை, தாடியில்லாமல் பார்த்த நான், இப்போது பார்க்கும் போது ஒரு முதிர்ந்த எழுத்தாளர் போல் காணப்பட்டார். “சாமியாட்டம்” சிறுகதை தொகுப்பு முதிர்ந்த எழுத்தாளர் அந்தஸ்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.

உலகநாதன் புத்தகம் வாங்க வேண்டும் என்பதால், நான் அவருடன் “விகடன்” ஸ்டாலுக்கு சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணன் “தேசாந்தி”, ”சிறிது வெளிச்சம்” புத்தகத்தை வாங்க ஸ்பாரிசு செய்தேன். பிறகு, சுகா எழுதிய கட்டுரை தொகுப்பை வாங்கிறார். நான், விகடனின் “கால பேட்டகம்” மற்றும் “பொக்கிஷம்” புத்தகங்களை வாங்கினேன். விகடனின் புத்தகங்களை வாங்கியதும், “கிழக்கு” ஸ்டாலுக்கு சென்றோம். அங்கு. உலகநாதன் சுஜாதா புத்தகங்களை ஒரு அள்ளு அள்ளிவிட்டார். கேபிள் சொல்ல வண்ணநிலவன், அசோகமித்ரன் புத்தகத்தையும், நான் சொல்லி சாருவின் “எக்ஸைல்” நாவலையும் வாங்கினார். அடுத்து, உயிர்மை பதிப்பகத்தில் சுஜாதாவின் “பதவிக்காக” மற்றும் வாமு.கோமு நாவலை வாங்கினார்.

பேசிக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகக் கண்காட்சி முடிந்தும், உலகநாதன், கேபிள், கே.ஆர்.பி. அப்துல்லா, லக்கி எல்லோரும் பேசிக்கொண்டு வெளியே வந்தோம்.

வாங்கிய புத்தகங்கள்

கால பெட்டகம் 1926 முதல் 2000 வரை – ஆனந்த விகடன் குழு
பொக்கிஷம் - ஆனந்த விகடன் குழு

***

நாள் 10

இன்று புத்தக்க் கண்காட்சி சென்றதும் வண்டியை பார்க்கிங் செய்து நேராக பச்சயப்பன் கல்லூரி அருகில் இருக்கும் ப்ளாட்பாரம் கடையில் இருக்கும் புத்தகங்களை நோட்டம் விட்டேன். கொஞ்சம் நேரம் செல்விட்டால் சில நல்ல பொக்கிஷமான நூல்கள் கிடைக்கும். நால் மேலோட்டமாக பார்த்த நூல்களில் கொஞ்சம் விரும்பி வாங்கினேன். கேபிள்ஜியை சந்திக்க நேரமாகியதால், அவரை பார்க்க அரங்குக்கு விரைந்தேன்.

கேபிள்ஜியை சந்தித்து விட்டு, ”லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்”, “டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்” நூல்களை வேடியப்பன் கடையில் ஒரு இருபது பிரதிகள் கொடுத்தேன். நாளை ஞாயிறுக்கிழமை என்பதால், இரண்டும் சக்கை போடு போடும் என்று நம்புகிறேன். பிறகு, அரை மணி நேரம் புத்தகக் கடைகளை நோட்டம் விட்டேன். எதிர் வெளியீடு ஸ்டாலில் ”ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்” மற்றும் கணேசன் ஐயர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” நூல்களை வாங்கினேன். நாளை வெளியூர் செல்ல வேண்டியது இருப்பதால் அடுத்த இரண்டு நாள் புத்தகக் கண்காட்சிக்கு வர முடியாது. இறுதி நாள் (17.1.12) கண்டிப்பாக புத்தக்க் கண்காட்சிக்கு வருவேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் – தமிழில் உஷாதரன்
ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்)

ப்ளாட்பாரத்தில் வாங்கிய நூல்கள்

பலி பீடம் – கிரீஷ் கார்னாட்
ஒரு நிடிகையின் கதை – மு.பரமசிவம்
க.நா.சு 90 – தொகுப்பு : சா.கந்தசாமி
காவேரி பிரச்சனை அன்று முதல் இன்று வரை – எல். கணேசன்
ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் – க.பஞ்சாங்கம்
லங்கா ராணி – அருளர்
அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன்

Friday, January 13, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 8 !!

நேற்று (12.1.12) புத்தகக் கண்காட்சியில் வேறும் வின்டோ ஷாப்பிங் தான். என் கல்லூரி நண்பனும், சிவாஜி இணைய டி.வி உரிமையாளருமான அருண் சிதம்பரம் வந்திருந்ததால், அவனுக்கு புத்தகங்களை சிபாரிசு செய்யவே சரியாக இருந்தது. தன் இணையத்திற்காக, குழந்தைகளுக்கு டி.வி.டி வெளியீடும் மல்டிமீடியா நிறுவனங்களின் விபரங்களை சேகரித்துக் கொண்டு இருந்தான். அருண் வாங்கி புத்தகங்களில், நான் எழுதிய "நடைபாதை" சிறுகதை (புதுபுனல் ஸ்டால்.442) நூலும் ஒன்று. அவனை வழியனுப்பிய பிறகு டிஸ்கவரி புக் பேலஸ்க்கு (ஸ்டால்.334) சென்றேன்.



வாசகர்களுக்கு கையெழுத்து போட்டு களைப்புடன் கேபிள் சங்கர் அமர்ந்திருந்தார். முந்தைய இரண்டு நாட்களை விட, இன்று கூட்டம் குறைவென்று வேடியப்பன் கூறினார். தண்டோரா, பொன்.வாசுதேவன், கேபிள் சங்கர் அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, 'ஆண்மை தவறேல்' இயக்குனர் குழந்தைவேல் டிஸ்கவரி புக் பேலஸ்க்கு வந்தார்கள். பாஸ்கர் சக்தியின் 'கனக துர்கா', கேபிள் சங்கரின் "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" நூல்களை மீண்டும் வெளியீடுவது போல் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.





நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றதுக்கு, புகைப்படங்கள் மட்டுமே எடுத்தேன். புத்தகம் எதுவும் வாங்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது.


**



பதிவுலகில் 'தல' என்று அழைக்கப்படும் யெஸ்.பாலபாரதி சத்தமே இல்லாமல் 'சாமியாட்டம்' என்ற சிறுகதை தொகுப்பை வெளியீட்டு இருக்கிறார். அந்த நூலை பதிப்பித்திருப்பவர் அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம். அதன் உரிமையாளர் உதயகண்ணன் என் நெருங்கிய நண்பர். 'சாமியாட்டம்' சிறுகதை தொகுப்பு டிஸ்கவரி புக் பேலஸ் (334) கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, January 12, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 7 !!

நேற்று (11.1.12) 6 மணிக்கு ஆபிஸில் இருந்து புத்தகக் கண்காட்சிக்கு கிளம்பிய நான், சரியாக 7:30 மணிக்கு அடைந்தேன். மழைக்கும், சென்னை போக்குவரத்துக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.

புத்தக கண்காட்சிக்கு அரங்குக்கு நுழைந்ததும் நேராக டிஸ்கவரி புக் பேலஸ்க்கு (334) சென்றேன். வெற்றிமாறன் நூல் வெளியீட்டு சென்றுவிட்டார். லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும், டைரி குறிப்பும் காதல் மறுப்பும், நீங்க தான் சாவி சீக்கிரமாகவே தீர்ந்து விடுகிறது. ஐம்பது காபி கொடுங்கள் என்று வேடியப்பன் கேட்டார். அவரசரத்துக்கு என் கையில் பத்து பிரதிகள் மட்டுமே இருப்பதாக கூறினேன். வேடியப்பனிடம் புத்தகம் கொடுத்த சில நிமிடங்களிலே லெமன் ட்ரீயும், டைரி குறிப்பு புத்தகமும் மூன்று பிரதிகள் விற்றுவிட்டது.

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்கிய ராஜராஜேந்திரன் என்ற வாசகர் என்னிடம் வந்து கை குழுக்கினார். என்னுடைய "உலக சினிமா" கட்டுரைகளை வெகுவாக வாசிப்பதாகவும் சொல்லி பாராட்டினார். என்னுடைய "என்னை எழுதிய தேவதைக்கு" (காதல் சிறுகதை) நூலை வாங்கியதோடு இல்லாமல் கையெழுத்தும் பெற்றுக் கொண்டார். என் பதிவையும் படித்து ஒருவர் புத்தகம் வாங்குகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகத்தில் சில சமயம் இதுப் போன்ற அதிசயங்கள் நடக்கும் என்று கேபிள் சங்கர் கூறினார்.

கொஞ்ச நேரம் மார்க்கெட்டிங்காக நேரம் ஒதுக்கலாம் என்று "கருப்பு பிரதிகள்" ஸ்டாலுக்கு (எண். 119) சென்றேன். கொள்கை அடிப்படையில் புத்தகம் வாங்குவதால், கருவை சண்முகசுந்தரத்தின் "பிணம் தின்னும் தேசம்" கவிதை தொகுப்பை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.

பிறகு விழிகள் பதிப்பகம் (எண்.78) ல், கருவை சண்முகசுந்தரத்தின் "பிணம் தின்னும் தேசம்" மற்றும் உமா சௌந்தர்யாவின் "விழிப்பறிக் கொள்ளை" வாங்கிக் கொண்டார்கள். நான் தொகுத்த "கலைஞரின் நினைவலைகள் 100" நூலை நாளை அவசியம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புத்தகக் கண்காட்சி முடியும் தருவாயில், நேசமித்ரன் கையில் "லையன் கம் பேக்" காமிக்ஸ் புத்தகத்தை பார்த்தேன். அடடா ... ! காமிக்ஸ் புத்தகம் வாங்க நினைத்து இன்னும் வாங்க வில்லை என்பது ஞாபகம் வந்தது. உடனே தென்னிந்திய பதிப்பகத்துக்கு (ஸ்டால்.372) விரைந்தேன். அங்கு, விஷ்வா சிரித்த முகத்தோடு வரவேற்றார். புத்தகம் வாங்கிய அன்பிற்காக சர்வே காகிதத்தை நிரப்ப சொன்னார்.

கேபிள், தண்டோரா நட்பு படையுடன் வெளியே வந்தோம்.

நேற்று வாங்கிய புத்தகங்கள்

லையன் கம் பேக் - காமிக்ஸ் புத்தகம்
காமிக்ஸ் பெக் - 5 புத்தகங்கள்

Wednesday, January 11, 2012

35வது சென்னை புத்தகக் கண்காட்சி - முதல் 6 நாட்கள் !!

நாள் – 1 (5.1.12)

இந்த முறை F series ஸ்டால்கள் எல்லாம் முன் பக்கமே அமைந்திருக்கிறது.

சிறு பதிப்பாளர்களுக்கு யானை சாப்பிட்ட மிச்சத்தை ஏறும்புக்கு கிடைப்பது போல் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கலைஞர் தொடங்கி வைக்கவில்லை. அம்மா ஆட்சியில் (சென்ட் ஜார்ஜ் பள்ளியில்) நடக்கும் முதல் புத்தகக் கண்காட்சி. எப்படி விற்பனையாக போகிறது என்று வரும் சனி, ஞாயிறு கூட்டத்தை வைத்து கணித்து விடலாம்.

முதல் நாள் வாங்கிய புத்தகங்கள்:
1. ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன் ( குமரன் பதிப்பகம்)
2.திரைச்சீலை - ஓவியர் ஜீவா (திரிசக்தி பதிப்பகம்)

நாள் – 2 (6.1.12)

போகவில்லை.

நாள் – 3 (7.1.12)

பிணம் தின்னும் தேசம் மற்றும் விழிப்பறி கொள்ளை கவிதை நூல் வெளியீட்டு புத்தகக் கண்காட்சியில் சிறப்பாக நடைப்பெற்றது.

”விழிப்பறி கொள்ளை” நூலை இயக்குனர் சற்குணம் (களவாணி, வாகை சூடவா) வெளியீட எழுத்தாளர் சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) முதல் பிரதி பெற்றுக் கொண்டார்.

”பிணம் தின்னும் தேசம்” நூலை இயக்குனர் அழகப்பன் ( வண்ணத்துப்பூச்சி) வெளியீட “ழ” பதிப்பக உரிமையாளர் கே.ஆர்.பி.செந்தில் முதல் பிரதி பெற்றுக் கொண்டார். கவிதைப் புத்தகம் விற்பனையாகாது என்பதை இந்த நூல் பொய்யாக்கிவிடும் என்று நினைக்கிறேன். வெளியீட்ட தினமே ஐம்பது பிரதிகள் மேல் விற்றுள்ளது.

நூல் வெளியீட்டுக்காக அலைந்துக் கொண்டு இருந்ததால், எந்த நூல்களையும் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை. வாங்கிய ஒரே புத்தகம், “அண்ணா ஹசாரே” – ஜெயமோகன் (கிழக்கு பதிப்பகம்).

நாள் – 4 (8.1.12)

மனைவி, மகனுடன் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். மகனுக்கான இன்று அலைந்தாலும், எனக்காகவும் கொஞ்ச புத்தகம் வாங்கினேன்.

ஐந்தினை பதிப்பகத்தில் (ஸ்டால். 283/284) , தி.ஜா நாவல்கள், சிறுகதைகள் மலிவாக கிடைக்கின்றன. தி.ஜா நூல் வாசிக்க விரும்புபவர்கள் நூல்களை அள்ளிக் கொள்ளலாம்.

நான் வாங்கிய புத்தகங்கள்.

தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள்
அடி – தி.ஜானகிராமன் (ரூ.10/- மட்டுமே)
அன்னை கிரேசியா டெலடா - தி.ஜானகிராமன் (நோபல் பரிசுப் பெற்ற நாவலின் மொழிப்பெயர்பு).
மௌனியுடன் கொஞ்ச தூரம் – திலீப்குமார் (வானதி)
நோபல் பரிசுப் பெற்ற 5 நாவல் (ரூ.213 மதிப்புள்ள நாவல் ரூ.145க்கு கிடைத்தது)
ஒரு காக்கிசட்டை பேசுகிறது – A.P. முகம்மது அலி I.P.S (Retrd) (புத்தக பூங்கா. ஸ்டால் 415)
பின் நவீனத்துவம் என்றால் என்ன ? – எம்.ஜி.சுரேஷ் – (புதுப்புனல். ஸ்டால் 442)
செம்மொழித் தமிழ் – ஆய்வுக்கு இன்று என்ன தேவை - (புதுப்புனல். ஸ்டால் 442)
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – (டிஸ்கவரி புக் பேலஸ். ஸ்டால். 334)

நாள் – 5 (9.1.12)

போகவில்லை

நாள் – 6 (10.1.12)

திங்களன்று (9.1.12) புத்தகக் கண்காட்சிக்கு செல்ல முடியாததால், நேற்று (10.1.12) தலைவலிக் கூட பொருட்படுத்தாமல் புத்தகக கண்காட்சிக்கு சென்றேன். பூவுலக நண்பன் ஸ்டாலில் இரண்டு புத்தகம் வாங்கிவிட்டு சென்றுக் கொண்டு இருக்கும் போது லக்கி, ஆதிஷா, நேசமித்திரனை சந்தித்தேன். தலைவலியில் எந்த புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தேனோ எதுவுமே ஞாபகமில்லை. ஆதிஷா பேசும் போது ‘சாஹித்தியா’ சென்ற சொன்னவுடன் வாங்க நினைத்த இரண்டு புத்தகம் நினைவுக்கு வந்தது.

புத்தகங்களை பார்க்க பார்க்க தலைவலியை மறந்துவிட்டேன். மெல்ல ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்துக் கொண்டு கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு சென்றேன். கம்யூனிச புத்தகத்தைப் பற்றி பிரசன்னா பதிவை படித்தவுடன் கண்டிப்பாக இந்த புத்தக (பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்) வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பிறகு சாருவின் "எக்ஸைல்" மற்று "வில்லாதி வில்லன்" புத்தகங்களையும் வாங்கினேன்.

பல வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறாமல் இருந்த கௌரா ஏஜென்ஸிஸ் இந்த முறை சீதை பதிப்பகம் பெயரில் நான்கு ஸ்டால் (F - 4) எடுத்துள்ளார்கள். அரசுடையாக்கப்பட்ட எல்லா புத்தகங்கள் இங்கு கிடைக்கும். குறிப்பாக கல்கி, அண்ணா படைப்புகள் தரமான காகிதத்தில், மலிவான விலையில் உள்ளது. நான் கல்கியின் "தியாக பூமி" வாங்கினேன்.

அதற்கு மேல் நடக்க முடியாததால், டிஸ்கவரி புக் பெலஸ் ஸ்டாலுக்கு சென்றேன். அங்கு இரண்டு புத்தகம் எடுத்த வாசகரை, என் வாய் திறமையால் பத்து புத்தகம் வாங்க வைத்தேன். (எனக்கே தெரியாமல் என்னுள் ஒரு மார்க்கெட்டிங் மனிதன் ஒழிந்திருக்கிறான்).

வேடியப்பன் தினமும் தன் ஸ்டாலுக்கு வர சொன்னார். இன்று வேடியப்பன் கடையில் (334) புத்தக வெளியீட்டு விழா நடப்பதால் கண்டிப்பாக செல்ல வேண்டும்.

இயக்குனர் வெற்றிமாறன், கவிஞர் தேவந்திர பூபதி வருகிறார்கள். வாசகர்கள் அவசியம் வருக !!!

வாங்கிய புத்தகங்கள்

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் – அ.முத்துக்கிருஷ்ணன் ( Stall. 71)
ஈழம் : பொது ஜன வாக்கெடுப்பு - ஜெ.பிரபாகரன் ( Stall. 71)
கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி (Stall 166-167 )
கு. அழகிரிசாமி கதைகள் - கு.அழகிரிசாமி (Stall 166-167)
தூக்குக் கொட்டையிருந்து ஒரு முறையீட்டு மடல் - அ.ஞா.பேரறிவாளன்.
பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - அரவிந்த் நீலகண்டன் (F-007)
வில்லாதி வில்லன் -பாலா ஜெயராமன் (F-007)
எக்ஸைல் - சாரு நிவேதிதா (F-007)
இந்தியா ஒரு வல்லரசு - அருந்ததி ராய் (Stall 221-222)
தியாக பூமி - கல்கி (F-4)

Tuesday, January 10, 2012

நூறடி ரோடு !!

கடவுளுக்கு மிக அருகில் இருந்து ஒரு குரல் கேட்டது. சரக்கடித்து கொண்டு, நூறடி ரோட்டில் நீண்ட நேரம் வண்டி ஓட்டிய கலைப்பில் தன் அறையில் இருக்கும் விநாயகர் படத்தை பார்த்தான் அரவிந்த். பாதி தூக்க கலக்கத்தில் கண்களை பாதி விழித்தவாரு பார்த்தான்.

“ஏய் ! எந்திரிடா...!”

தன்னை தவிற யாரும் இல்லாத அறையில் விநாயகர் படத்தில் இருந்து எப்படி சத்தம் வந்திருக்கும் என்ற அச்சம். போதையில் தள்ளாடிக் கொண்டு பாத்ரூம் கதவை திறந்து லைட் போட்டான். யாருமில்லை.

ஒரு வேளை, வண்டி ஓட்டிய கலைப்பு, போதை மயக்கத்தில் பிரம்மையாக இருக்குமோ என்று உள்ளுக்குள் நினைத்தான்.

“ஏன்டா செஞ்சே ?” என்ற அசூரக் குரல் ஒலித்தது.

“ஆ..!!!” பயத்தில் விரிட்டான். அரவிந்த் மூன்று மடங்காக மூச்சை உள்ளும், வெளியிலும் இழுத்தான். பிரம்மையல்ல.... யாரோ தன் அறையில் தான் இருக்கிறார். தான் தங்கும் அறை, பாத்ரூம் தவிற வேறு எந்த அறையும் இல்லாத சாதான பேட்சுலர் அறை. கதவும் சரியாக பூட்டியிருக்கிறது. யாரும் உடைத்துக் கொண்டு வந்திருக்க முடியாது. யார் தன்னை மறைந்திருந்து மிரட்டுவது என்று நினைத்து முடிப்பதற்குள் ஒரு உருவம் கட்டில் கீழ் இருந்து வெளியே வந்தது.

”வேஏ... !“ மீண்டும் அலறல்.

வந்தது பெண் உருவம். ரோஸ் சுடிதார். பகலில் வந்து இருந்தால் அந்த பெண்ணிடம் கடலை போட்டுயிருப்பான் அரவிந்த். நடு இரவில், பயமுறுத்திக் கொண்டு, தனக்கு தெரியாமல் தன் அறையில் இருப்பதை பார்த்ததும் நடுக்கம் தான் மிஞ்சியது.

”யாரும்மா நீ...? எப்படி என் ரூம்க்குள்ள வந்த ? “

அந்த உருவம் எதுவும் பேசவில்லை. கண்களில் குரோதம் இருந்தது. கொலைவெறி தெரிந்தது. அரவிந்த் தைரியம் வரவழைத்துக் கொண்டு, “ ஏன் முறைக்குற ! இப்ப பதில் சொல்லுறியா போலீஸ்க்கு போன் போடட்டா ?” என்று சொல்லி தன் செல்போன் எடுக்க சென்றான்.

தன் செல்போன் சுக்குநூறாக உடைந்திருந்தது. அந்த பெண் உருவத்தின் வேளையாக இருக்கும். உள்ளுக்குள் பயம் பெருகியது. தொண்டைக்குழிக்குள் எதோ உருத்தியது. வெளியே சென்று கீழ் வீட்டுக்கார்ர்களை உதவிக்கு அழைக்கலாம். ராத்திரி நேரம் ஒரு பெண் வீட்டுக்கு வந்த்தை தப்பாக நினைப்பார்கள். பயத்தில் என்ன என்னவோ சிந்தித்துக் கொண்டு இருந்தான் அரவிந்த்.



”ஏன்டா ! செஞ்சே ? “ என்றது உருவம்.

“என்ன சொல்லுற...?”

“வண்டிய ஏன்டா வேகமா ஓட்டுன...”

“ச்சே...! “ சற்று பெருமூச்சு வாங்கிக் கொண்டு, “இத கேக்குறத்துக்கா நடு ராத்திரியில் வந்த. காலையில கேட்கக்கூடாது” சற்று பயம் குறைந்து தனது நக்கல் பாணியில் பதிலளித்தான்.

”திமிரு..! நீ கொழுப்பெடுத்து போய் நூறடி ரோட்டுல புகுந்து புகுந்து போவ... சடன் ஓவர்டேக் பண்ணும் போது எத்தன பேர் பயப்படுவாங்க தெரியுமா ??”

“ரோடுனா நாலு பேரு அப்படி தான் வண்டி ஓட்டுவாங்க...அதுக்கு என்ன இப்போ ?”

அந்த உருவத்துக்கு கோபம் அதிகரித்தது.

“எதுவாக இருந்தாலும் காலையில பேசலாம். இப்ப வெளியே போ...!!” என்றான் அரவிந்த்.

“நீ தைரியமா கட் அடிச்சு ஓவர்டேக் பண்ணுவ. பயத்துல மத்தவங்க கண்ரோல் விட்டு கீழ விழுவாங்கனு யோசிக்க மாட்ட... அப்படி விழுந்தவங்க பின்னாடி வேகமா வர வண்டியில அடிப்பட்டு சாகமாட்டாங்க....”

“யாரோ செத்த மாதிரி பேசுற....”

“அமான்டா...!! செத்துட்டாங்க....!” என்று அரவிந்தை அந்த உருவம் ஓங்கி அறைந்தது.

மறுநாள், அரவிந்தின் இறங்கல் செய்தி செய்திதாளில் வந்தது. பக்கத்து தாளில், இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் தடுமாறி கீழே விழுந்ததால் பின்னாடி வந்த லாரியில் அடிப்பட்டு தன் நான்கு வயது மகளோடு இறந்த செய்தி அச்சடிக்கப்படிருந்தது. இறக்கும் போது அந்த பெண் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

Monday, January 9, 2012

காதல் திருமண அழைப்பிதழ் !!



காட்சி 1

இடம் : சென்னை, தமிழ்நாடு.

கதாநாயகனாகிய நான் அண்ணா நகரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன்.

கதாநாயகியாகிய என்னவள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதேயில்லை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியாது. மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டு இருந்தோம்.


காட்சி 2

இடம்: திருச்சி, தமிழ்நாடு.

நாயகன், நாயகியாகிய நாங்கள் ஆர்.ஈ.சி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் எங்களுக்குள் எந்த பினைப்பும் தோன்றவில்லை. ஆனால், இறுதி ஆண்டில் தோன்றியது..... அந்த ‘காதல்’..... அதுவும் ஒரு சண்டையில். தொடங்கியது சண்டை என்றாலும்.... உறவு தொடர்ந்துக் கொண்டு இருப்பது காதலில்........

காட்சி 3

கதையின் இறுதி கட்டம்

நான் - ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

என்னவள் - வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.

இப்பொது மீண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று சண்டை போட முடிவு எடுத்திருக்கிறோம். இந்த முறை வாழ்நாள் முழக்க சண்டை போட போகிறோம். ஆனால், அது இனிமையான சண்டை !

இது வரை ரகசியமாக இருந்த காதல் கதை.... இன்று எல்லோரின் கண்களுக்கு.... உங்கள் ஆசிர்வாதத்தோடு இசை நிகழ்ச்சியுடன் !!

இருப்பதியோறாம் நூற்றாண்டில் ரோமியோ, ஜூலியட் நடிக்கும்

“மற்றுமொரு காதல் கதை”

நாங்கள் எங்களின் திருமணத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த முறை எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுத ஷேக்ஸ்பியர் இல்லை. எங்கள் தலையெழுத்தை நாங்களே எழுதிக் கொண்டோம்.

பெற்றோர்கள் ஆதரவில்லாத எங்கள் காதலுக்கு, ரசிகர்களாகிய நண்பர்களும், உறவினர்களும் வருகை தந்து இந்த காதல் கதை நீண்ட நாள் வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

இருப்பதியோறாம் நூற்றாண்டின் ரோமியோ, ஜூலியட்.

முதல் காட்சி ( திருமணம் நாள்) 21 ஆகஸ்ட், 2009. காலை 9 முதல் 10.30 மணி வரை

சிறப்பு காட்சி ( வரவேற்பு நாள்) 20 ஆகஸ்ட்,2009. மாலை 6.30 முதல் 9 மணி வரை

இடம் : இந்திரலோகம்

தலைமை : தேவந்திரன்

வாழ்த்தி ஆசிர்வதிப்பவர்கள் : பிரம்மா, சிவன், விஷ்ணு

திருமண மண்டப்பதிற்கு வரும் வழி

வேகமாக வண்டி ஓட்டி விபத்தில் வரலாம். விஷம் குடித்து எங்களை போல் தற்கொலை செய்துக் கொள்ளலாம். மலை உச்சிக்கு சென்று கீழே விழலாம்.

எங்கள் நண்பர் எமன் அங்கிருந்து சரியான நேரத்திற்கு திருமணத்திற்கு அழைத்து வருவார்.

அவசியம் குடும்பத்தோடு வாருங்கள் !!

****

நான் எழுதிய "என்னை எழுதிய தேவதைக்கு..." நூலில் இருந்த கதை.

35வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் கிடைக்கும் !!!

பாலவசந்தா பதிப்பகம் : ஸ்டால் எண் - 416 - 417
டிஸ்கவரி புக் பேலஸ் : ஸ்டால் எண் - 334
புதுப்புனல் : ஸ்டால் எண் - 442

Sunday, January 8, 2012

கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் !!!




குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், சங்கர் நாராயண், இயக்குனர் சற்குணம், எழுத்தாளர் உமா சௌந்தர்யா.



குகன், கருவை சு.சண்முகசுந்தரம், இயக்குனர் ராசி அழகப்பன், கே.ஆர்.பி.செந்தில்.




குகன், கருவை சு.சண்முகசுந்தரம், இயக்குனர் ராசி அழகப்பன், கே.ஆர்.பி.செந்தில்.

Saturday, January 7, 2012

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா !!

இன்று (7.1.12) மாலை 5:30 மணிக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் Discovery Book palace (ஸ்டால் 334) யில், நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

நூல் வெளியீடுபவர் : இயக்குனர். ராசி.அழகப்பன்

உமா சௌந்தர்யா எழுதிய
"விழிப்பறிக் கொள்ளை" (காதல் கவிதைகள்)



நூல் பெற்று வாழ்த்துபவர் : சங்கர் நாராயண் ( 'கேபிள்' சங்கர்)

கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய
"பிணம் தின்னும் தேசம்" (ஈழ கவிதைகள்)




நூல் பெற்று வாழ்த்துபவர் : யுவகிருஷ்ணா (லக்கிலுக்)

ஏற்புரை : உமா சௌந்தர்யா, கருவை சு.சண்முகசுந்தரம்

நன்றியுரை : குகன்

இடம் :

Discovery Book Palace (Stall No.334),
35th Chennai Book Fair,
St.George School, kilpauk.

பதிவர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருக...!!!

Tuesday, January 3, 2012

ஆண்பால் பெண்பால் : தமிழ்மகன்

சென்ற வருடம் வாசித்த மிக சிறந்த நாவல். ஒரு வேளை சென்ற வருடம் வெளியான எல்லா நாவல்களை படித்திருந்தால் ‘சிறந்த நாவல்’ என்று பரிசளிக்க எனக்கு தகுதி இருந்திருக்கும்.

ரோஷமன், அந்த நாள், விருமாண்டி போன்ற படங்களில் வருவது போல் ஒரே சம்பவத்தை இரண்டு பேர் பார்வையில் சொல்லுகிறார். கணவன் - மனைவி இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதும், அவர்கள் பிரிவதும் தான் கதை. முதல் பாதி பெண் பார்வையில் சொல்லப்படும் சம்பவங்களும், நியாயங்களும்.... ஆண்ணின் பார்வையில் படிக்கும் போது வேறு பார்வைக் கொடுக்கிறது.



ஒரு மனிதர் இறந்து பதிநான்கு ஆண்டு முடிந்து தனக்கென்று ஒரு ஓட்டு வங்கி வைத்திருக்கிறார் என்றால் அது ‘எம்.ஜி.ஆர்’ அவர்கள் தான். இன்றும், எம்.ஜி.ஆருக்காக அ.தி.மு.கவுக்கு ஓட்டு போடும் கூட்டம் இருக்கிறது. பல கிழவன், கிழவிகளுக்கு எம்.ஜி.ஆர் நாயகனாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். அப்படி, கதாநாயகனான எம்.ஜி.ஆரை இந்த நாவல் மூலம் வில்லனாக்கியிருக்கிறார் தமிழ்மகன்.

வெண்குஷ்டத்தால் ஏற்ப்படும் தாழ்வுபன்மையில் நாயகி பிரியா மனசிதைவு ஏற்ப்படுகிறது. ‘எம்.ஜி.ஆர்’ ஆவி தன் உடலில் இருப்பதாக சொல்கிறாள். சிறு வயதில், தான் படித்த எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களை கணவர் அருணின் நண்பர் ரகுவுடன் விவாதிக்கிறாள். எம்.ஜி.ஆர் மீதான அதீதக ஈடுபாட்டால் நாயகிக்கு ‘பைத்தியம்’ பிடித்தது என்று இருக்க, இறுதி அத்தியாயம் கதையின் கத்திமுனை நாயகனை பார்க்கிறது.

நாவலில் வரும் குறைவான விசனங்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது. குறிப்பாக, முதலிரவில் பேசும் வசனங்களும், இரட்டை அர்த்த வசனங்களும்.

ஒரு நாவலுக்கு அதிக பக்கம் எழுதப்பட்ட விளக்கவுரை இந்த நூலாக தான் இருக்கும். நல்ல வேளை, பதிப்பாளருரை, அணிந்துரை என்று பக்கள் நிரப்படவில்லை. எம்.ஜி.ஆர் இந்த நாவலில் ஒரு அங்கமாக வந்தாலும், இதே கதையை எம்.ஜி.ஆர் சொல்லாமல் கூட சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எம்.ஜி.ஆர் மீது இருக்கும் கோபத்த்தை தீர்த்துக் கொண்டாரோ என்னவோ ?

நாவலை படிக்கும் போது, எண்பதுகளில் சிவகுமார், சரிதா நடித்த 'அக்னிசாட்சி' படம் தான் ஞாபகம் வந்தது. மனநல பாதிக்கப்பட்ட மனைவியால் தன் குடும்பத்தில் ஏற்ப்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் பாத்திரமாக சிவகுமார் நடித்திருப்பார். நாவலின் முடிவில் எல்லா பிம்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஆசிரியர்.

புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் வாங்க வேண்டிய நாவல்.

விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

LinkWithin

Related Posts with Thumbnails