வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 27, 2012

கல்லூரி காதல் - டைரிக்குறிப்பு !!

ஒவ்வொருவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத புத்தகம் இருக்கும். கருத்தும், குணத்திற்கும் அந்த புத்தகம் மாறுபடலாம். ஆனால், எல்லோரும் மிக முக்கியமாக, பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு புத்தகம் ஒன்று உண்டு. அது, அவரவர் டைரி தான்.

பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்து வைக்கும் போது, கல்லூரியில் நான் எழுதிய ‘காதல் சோகப் பாடல்’ கண்ணில் பட்டது. என் நண்பன் ஒரு ட்யூன் சொல்ல, அதற்கு எதோ எழுதியிருக்கிறேன். நண்பன் சொன்ன ட்யூன் ஞாபகமில்லை. காதலை அதிகம் ரசிக்கும் பருவம் கல்லூரி காலங்கள் என்பது என் பழைய டைரிக்குறிப்புகளில் தெரிகிறது.

எல்லா உணர்வுகளை விட காதல் மட்டும் எப்படி கை ரேகைப் போல் உடம்பில் ஒட்டிக் கொள்கிறது என்று புரியவில்லை.

***


மனதென்பது அவளிலுள்ளது
காதலென்பது என்னிலுள்ளது
ஈருயிராலும் ஒர் காதல்
ஒருயிரானாலும் உயர்வனாது காதல்
காதலை நான் தான் சுமந்தேன்
கருத்தரிக்க சொன்னால்
உயிர் துறப்பேன்
(மனதென்பது



வந்தது வரட்டும் என்பதல்ல காதல்
வாழ்க்கையோடு வாழ தேவை காதல்
வருபவர்கள் எல்லாம் செய்வதல்ல காதல்
வலிக் கொடுத்தவளை செய்வது தான் காதல்

புதிரா ! புனிதாமா புரிவதில்லை
பலர் சொன்னாலும் விளங்குவதில்லை
தியாகம், துரோக,
தர்மம் , கர்மம்

எல்லாம் இருப்பது காதல் தான்...
காதல் தான்... காதல் தான் !
(மனதென்பது



ஓடி ஒதுங்கியவர்களை எல்லாம் விரும்பாது காதல்
விரும்பியவர்களை தேடி தேடி அழையும் காதல்
ஒப்பனை செய்தாலும் வருவதில்லை காதல்
வெற்றி தோல்வியிலும் இருப்பது காதல்

தொடங்கியது தொடங்கியது தான்
கல்லறை வரை தொடர்வது தான்
சொர்க்கம், நரகம்,
ஜனனம், மரணம்

எல்லாம் இருப்பது காதல் தான்
காதல் தான்... காதல் தான்...

(மனதென்பது


Thursday, April 26, 2012

ஞாயிறு - மருத்துவர் விடுமுறை ??

சென்ற சனிக்கிழமை (21.4.12), என் உறவினர் ஒருவர் (வயது 56) உடல் நலம் சரியில்லாமல் திருச்சி மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தவர் என்பதால், நர்ஸ்க்கு தண்ணி அடித்திருப்பார் என்ற சந்தேகம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சேர்க்க முடியாது என்றார். ட்யூடி டாக்டர் பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்று சொன்னதால் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ( இவர் பெருமாளை பக்தன் என்பதால், சனிக்கிழமை மட்டும் தண்ணி அடிக்கமாட்டார் என்பது எங்கள் உறவினர்களுக்கு தெரியும். நர்ஸ் சொன்னதால் ஒரு சந்தேகம். அவர் தண்ணியடிக்கவில்லை என்பது தான் உண்மை).

அடுத்த நாள் (22.4.12) வரை, அவருக்கு நினைவு திரும்பாததால் மீண்டும் மூர்த்தி மருத்துவமனையில் அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனை ச்சீஃப் (Chief) டாக்டர் என் உறவினருக்கு நெருக்கமானவர். முதலில், இறுதய பிரச்சனை என்று பரிசோதித்தனர். எல்லாம் சரியாகவே இருந்தது. எதற்கும், Brain CT Scan எடுத்து பார்க்கலாம் என்று பார்த்த போது, 'Brain attack' வந்திருப்பதாக சொன்னார்கள். Neurologist ஞாயிற்றுகிழமை வர மாட்டார் என்பதால், தொலைப்பேசியிலே அவரை தொடர்பு கொண்டு சில மருந்து கொடுக்க சொன்னார். மருத்துவமனையில் இருக்கும் டியூட்டி டாக்டரும் பயப்படும் படி ஒன்று இல்லை என்றனர்.



திங்கள் (23.4.12) காலை வருவதாக சொன்ன Neurologist மதியம் வரை வரவில்லை. அவர் வர மாலை ஆகலாம் என்று சொன்ன பிறகு, ஊரில் இருந்து வந்த மகன் சென்னைக்கு அழைத்து வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவு செய்தார். பரிசோத்த டாக்டரும், தாராளமாக அழைத்து செல்லலாம். கவலைப்படும் நிலை இல்லை என்றே சொன்னார்.

ஆம்பிலென்ஸ் வண்டியில் அழைத்து வரும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் பள்ஸ் பார்த்து சரியாக இருப்பதாக சொன்னார். சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், அவரை பார்த்த டாக்டர் உயிர் போய் இரண்டு மணி நேரமாகிறது என்றார். வரும் வழியில் உயிர் பிரிந்திருக்க வேண்டும்.

என் உறவினர் டெத் சர்ட்டிப்பிக்கெட்டில் 2005ல் இருந்து தற்போது வரை அவர் மேற்கொள்ள மருத்துவ பரிசோதனைகள் எல்லாம் நெருங்கி டாக்டர் குறிப்பிட்டு கொடுத்திருந்தார். அழைத்து செல்லும் போது இரண்டாவது Brain attack வந்து இறந்ததாக சொன்னார்.

Brain attrack என்று சொல்லப்படும் ஒரு நோயாளிக்கு ஒன்றரை நாள் வரை மருத்துவர் இல்லாததால் வைத்தியம் பார்க்கவில்லை. ஞாயிறு, ஒரு Neurologist வரவில்லை என்றால் இன்னொரு Neurologist ஏன் அந்த மருத்துவமனை ஏற்பாடு செய்யவில்லை ?

ஒரு மனிதர் தானே அவர் விடுமுறை எடுக்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒருவர் விடுப்பு எடுத்திருக்கும் போது மாற்று ஏற்பாடு செய்வது மருத்துவமனையின் கடமை. அதை ஏன் இவர்கள் செய்யவில்லை ?

இங்கு Neurologist இல்லை. வேறு மருத்துவமனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஏன் சொல்லவில்லை ? ( நோயாளி மூலம் வரும் பணம் வெளியே போய் விடக்கூடாது )

வழியில் உயிர் பிரிந்தது என்றால், உடன் இருந்த நர்ஸ் பள்ஸ் ஏன் சரியாக இருப்பதாக சொல்ல வேண்டும். ? ( இவர்கள் எங்கு நர்ஸிங் படித்தார்களோ ? ) 

இதைப் பற்றி நண்பர்களிடம் கூறிய போது, "தனியார் மருத்துவமனையில் ஞாயிறு டாக்டர்ஸ் வர மாட்டாங்க... ட்யூடி டாக்டர் வச்சி ஓட்டுவாங்க!! " என்று பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது.

இன்று (26 ஏப்ரல்) இறந்த என் உறவினரின் பிறந்தநாள்.

Heart attack, Brain attack எந்த வியாதியாக இருந்தாலும் இனிமேல் விடுமுறை நாட்களில் வரக் கூடாது. வந்தாலும் தனியார் மருத்துவமனையில் சேரக் கூடாது. ( G.Hயில் சேர்ப்பது வேறு விதமான பிரச்சனை. எங்க தான்டா போறது ??? )

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும் மருத்துவர்களை நம்பிதான் ஆக வேண்டியுள்ளது. நீங்கள் தவறு செய்யக் கூடாது என்பதை தான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான். அதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

Wednesday, April 25, 2012

ஹைக்கூ கவிதைகள் - 11

சேவை செய்ய
அதிகம் தேவை
மருத்துவருக்கு பணம் !

**

உயிருக்கு ஆபத்தான
பகுதியில் வாழும் மக்கள்
இடிந்தக்கரை !

**

ஆற்று நீர் குடித்தும்
தாகம் அடங்கவில்லை
சூரியனுக்கு !

**

மாநிலத்தில் ஓர் கொள்கை
ஊருக்கு ஓர் பேச்சு
கம்யூனிஸ்ட் கட்சி

**

கடலுக்கு மாற்று நிறம்
இரத்த சிவப்பு
தமிழ் மீனவர்கள் !

**
ஆயுளை குறைக்கிறது
நாம் சாப்பிடும்
உணவு பொருள்

**

எந்த உறவும்
உண்மையானதில்லை
டி.வி மெகா தொடர்

Monday, April 23, 2012

ஏ.வி.எம் ஸ்டியோ ஏழாவது தளம் : தமிழ்மகன்

வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால் புகழ் ஆசிரியர் தமிழ்மகன் எழுதிய நாவல். இவரின் இரண்டு நாவலை வாசித்து விரும்பியதாலும், சினிமாவை கதைக்களனாக கொண்டதாலும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இந்த நாவலை வாசித்தேன்.

சினிமாவை கதை களனாக கொண்ட படமாகட்டும், சிறுகதை அல்லது நாவலாகட்டும் ஒரு பெண் சீரழிவதை காட்டும் விதியில் இருந்து இந்த நாவலும் தப்பவில்லை.

தமிழ்மகனுக்கு பால் என்றால் மிக பிடிக்குமோ ? வள்ளுவன் வழியில் இந்த நாவலை இன்பத்துபால். பொருட்பால், அறத்துபால் என மூன்று பாகங்களாக பிரித்துள்ளார். ஒரு நடிகையின் அறிமுக நிலை, ஏறுமுக நிலை, இறங்கு முக நிலை என மூன்று நிலையில் கதையை நகர்த்தி இருக்கிறார். :
சினிமாவில் நாயகியாக வேண்டும் கனவோடு வருகிறாள் சுந்தரி. மல்லிகை பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளன் ஸ்ரீதர் உதவியோடு சுந்தரி தீபிகா என பெயர் மாற்றி நாயகியாகிறாள். சினிமாவில் தன்னை இழக்க தயார் நிலையில் ஷூட்டிங் வருகிறாள். முதலில் புரோடியஸர், டைரக்டர் என ஒவ்வொருவரின் மனநிலையை புரிந்து வளைந்துக் கொடுக்கிறாள்.

முதல் படம் முடியும் முன்பே பெரிய நடிகரான பவன் சுந்தரின் பட வாய்ப்பு கிடைக்கிறது. அவருடனுன் அட்ஜெஸ்மண்ட் செய்துக் கொள்கிறாள். ஒரு பெரிய நடிகனின் கண்ட்ரோலில் இருப்பது தனக்கு நல்லது என்று பவனின் ஆசை நாயகியாக இருக்கிறாள்.

சினிமாவில் பெரிய நிலை அடைந்த பிறகு பவனின் பிடியில் இருந்து விடுப்படுகிறாள். தனது பத்திரிக்கை நண்பன் ஸ்ரீதரை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறாள். நடிகை திருமணம் செய்துக் கொள்ள யோசிக்கிறான். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் அவளை காதலிப்பதை சொல்ல வர, தீபிகா ஒரு இயக்குனரை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

திருமணம் பிறகு அந்த இயக்குனர் சொந்தப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தீபிகா சொத்தையெல்லாம் அழிக்கிறான். இறுதியில் தீபிகா என்ன முடிவு எடுக்கிறாள் என்பது மீதி கதை.

தனது வழக்கமான எம்.ஜி.ஆர் துவேஷத்தை இந்த நாவலிலும் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வழங்கியது, தனக்கு பிடிக்காத ஆளை எம்.ஜி.ஆர் என்ன செய்வார் போன்ற விஷயங்களில் கதாபாத்திரங்கள் வாயிலாக காட்டியுள்ளார்.ஆட்சி மாறினால் எம்.ஜி.ஆரை திட்டி ஒரு புத்தகம் எழுதுவார் என்று நினைக்கிறேன்.

கதாபாத்திரங்களின் குணாதிசயம் என்று பெரிதாக குறிப்பிடவில்லை. இயக்குனர் பரணிகுமார் நல்லவரா ? கெட்டவரா ? என்ற குழப்பதிலே அந்த பாத்திரப்படைப்பை முடித்திருக்கிறார். நாயகி தீபிகாக் கூட அட்ஜஸ்மெண்ட் செய்து கொள்வதற்கு தயாராக சினிமாவுக்குள் வரும் போது அவள் சோடை போகும் போது பெரிய பரிதாபமாக இல்லை.

ஒவ்வொரு நடிகை வாழ்க்கையிலும் இப்படி தான் நடக்கிறது கிசுகிசுவில் படித்து பழக்கப்பட்ட கதை என்பதாலோ தீபிகா நம்மை பாதிக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த நாவலை ஒரு முறை ‘டைம் பாஸ்’ க்காக வாசிக்கலாம்.

**
நூல் விபரங்கள் :
ஏவி.எம் ஸ்டியோ ஏழாவது தளம்
தமிழ்மகன்
பக்.192, விலை.60
முற்றம் பதிப்பகம்
விற்பனை உரிமை : நிவேதிதா புத்தகப் பூங்கா
இராயப்பேட்டை, சென்னை – 14.
பேசி : 98847 14603

Friday, April 20, 2012

துப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல

”காவேரி... ஹரி..” என்று வீரிட்டப்படி தூக்கத்தில் இருந்து எழுந்தான் அஸ்வின். யாரோ தன் வீடு புகுந்து தன் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது.

அஸ்வின் விழித்து எழுந்த போது காவேரி ஹரியை ஸ்கூலுக்கு துணி மாட்டிக் கொண்டு இருந்தாள்.

“ சீக்கிரம் எழுந்திறீங்க... என்ன இவ்வளவு நேரம் தூக்கம். ஹரிய ஸ்கூல்ல விடனும்” கத்தியபடி காவேரி வீட்டு வேலை செய்தாள்.

“குட் மார்னிங் டாடி.. “ ஹரி ஸ்கூலுக்கு ஷூ மாட்டிக் கொண்டு இருந்தான்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் ஸ்கூலுக்கு...?”

“டாடி... இப்ப டைம் 8 ஆவுது...”

“வாட்... 9 மணிக்கு கமிஷனரை மீட் பண்ணனும் “ என்று சொல்லி அவசர அவசரமாக பல் விளக்கி குளித்தான். 8.20 க்குள் தன் காலை கடனையெல்லாம் முடித்துக் கொண்டு வெள்ளை, கருப்பு பெண்ட் போட்டுக் கொண்டான். தன் துப்பாக்கியை இருப்பில் சொருகி, அதற்கு மேல் கருப்பு ஜாக்கெட் ஒன்றை மாட்டான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “

“ உனக்கு எதுக்கு துப்பாக்கி ஷூட் பண்ணுறது...?”

”நீ இல்லாத போது யாராவது வந்தா... நான் சண்டை போடுறதுக்கு...”

“ என்ன மீறி உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது...” என்று ஆசையாய் சொன்னப்படி தன் மகனுக்கு முத்தம் கொடுத்தான்.

“காவேரி... நான் களம்புறேம். கமிஷ்னர் எனக்காக வெயிட் பண்ணுவாரு...”

”கொஞ்சம் சாப்பிட்டு போங்க...”

அஸ்வின் செல்போன் மணி ஒளித்தது.

“அஸ்வின் களம்பியாச்சா... உங்களுக்காக வழக்கமா மீட் பண்ணுற ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ணுறேன். இன்னும் ஹாப் நவர்ல பெரிய ஆபிஸர் எல்லாம் வருவாங்க... நீங்க இல்லாம நல்ல இருக்காது...”

“ஒகே ஸார்.... இன்னும் 10 நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்...” என்று சொல்லி போனை வைத்தான்.

“சாரிம்மா...! நான் சாரோட சாப்பிடுறேன். இன்னைக்கு ஹரிய ஆட்டோவில நீ ஸ்கூல்ல விட்டுடு..” என்று தன் போலீஸ் ஜிப்பில் ஏறினான்.

”டாடி...டாட்டா “ ஹரி கை அசைக்க அஸ்வின் கை அசைத்தப்படி வண்டியில் சென்றான்.



*

சுற்று புறம் பார்த்து, சற்று பதட்டத்துடன் ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தான்.

“குட் மார்னிங் சார் !”

“வெரி குட் மார்னிங் “ நாற்காலியில் அமர சொல்லுவது போல் கை காட்டி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் அந்தோனி.

“யுவர் ஆர்டர் ப்ளிஸ்” என்று வெய்ட்டர் நிற்க, “10 மினிட்ஸ் “ என்றான் அந்தோனி.

பசியிருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அஸ்வின்.

“சார்.. இந்த ஹோட்டல... தந்தூரி சிக்கன் நல்லா இருக்கும்”

அந்தோனி பேப்பர் படித்தப்படி தலையசைத்து, மீண்டும் பேப்பர் படித்தான்.

“கிரில் சிக்கன் கூட ரொம்ப நல்லா இருக்கும்”
“ம்ம்ம்..” என்று சொன்னப்படி மீண்டும் பேப்பர் படித்தான்.

“சாப்பிட்டு...சுடா காபி குடிச்சா..ரொம்ப சூப்பரா இருக்கும்”

படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எடுத்து வைத்து, “ஹாப் கிரில் சிக்கன் கொண்டு வாப்பா..” என்று வையிட்டரிடம் சொன்னார்.

“சரி..! ஏதாவது கத சொல்லு...” என்றார் அந்தோனி.

ஒன்றும் புரியாமல் விழித்தவாரு அஸ்வின் இருந்தான்.

“எப்படியும் சிக்கன் வர வரைக்கும் ஏதாவது பேசி என்ன பேப்பர் படிக்க விட மாட்ட. பேசாம ஒரு கதை சொல்லு..”

“ஒரு ஹாணஸ்ட் போலீஸ் ஆபிஸர்...”

“அக்‌ஷன் ஸ்டோரியா...?”

“அக்‌ஷன், செண்டிமெண்ட்...”

“ம்.. சொல்லு...”

“ துத்துக்குடியில பெரிய ரௌடிய போலிஸ் குருப்போட போய் நம்ம ஹீரோ அரஸ்ட் பண்ணுறாரு. அடுத்த நாள் அந்த ரௌடிய கோர்ட் கூட்டிட்டு போகும் ஒரு கேங் போலீஸ் வேன் அட்டாக் பண்ணுறாங்க. இரண்டு போலீஸ்காரங்க மேல் தலையில பலமான அடி. நம்ப ஹீரோ கன் எடுத்து இரண்டு பேரு ஷூட் பண்ணுறாரு... அதுல அந்த பெரிய ரௌடியும் ஒருத்தன்”

“என்னையா அக்‌ஷன் மட்டும் தான் இருக்கு. செண்டிமெண்ட் இல்ல..!”

“இருங்க.. நம்ப ஹீரோ ஹூட் பண்ணதுல அந்த ரௌடி செத்துட்டான். ஒரு வாரம் களிச்சு ஹீரோவுக்கு கமிஷ்னர் பார்ட்டி வைக்குறாங்க.. அந்த நேரத்துல, அந்த ரௌடியோட மச்சான் மதுரையில இருந்து பெரிய ரௌடி படைய வச்சி சரியா 10 மணிக்கு ஹீரோ வீட்டுல அடிக்க சொல்லுறான். ஹீரோவோட ஒயிப், பையன் செத்துடுறாங்க..”

“உடனே.. நம்ம ஹீரோ அந்த ரௌடியோட மச்சான கொல்லுறானா...?”

“இல்ல... ஒரு வருஷமா வேலைக்கு போகமா.. அவங்க செத்த அதே நாள்ல, அதே நேரத்துல, அன்னைக்கு போட்டிருந்த அதே ட்ரெஸ் போட்டுட்டு கொல்லனும் வெயிட் பண்ணுறான். அவன்கிட்டையே வேலை சேர்ந்து அவன் கூட இருந்த ஒவ்வொருத்தரையும் பிரித்து அவங்களை கொள்ளுறான்.

" அன்னைக்கு மட்டும் அந்த நேரத்துல, அவன் வீட்டுல இருந்திருந்தா அவங்கள சாக விட்டுருக்க மாட்டான்”

அந்தோனிக்கு சேலசாக எதோ போறி தலையில் தட்டுவது போல் இருந்தது.

9:59 மணி இருந்து சரியாக 10 மணியடிக்க...

தன் இடிப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அஸ்வின் அமரை சுட்டுக் கொலை செய்கிறான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “ என்று தன் மகன் அவனிடம் கேட்டது அவன் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

தன் செல்போன் எடுத்து, “ கமிஷ்னர் சார் ! என்னோட லாங் லிவ் இன்னையோட முடியுது. நான் மறுபடியும் வேலையில ஜாயின் பண்ணுறேன்” என்ற சொன்னபடி நடந்தான்.

***

ஒரு குறும்படத்திற்காக சொன்ன கதை, படம் எடுக்காததால் சிறுகதையாக மாற்றிவிட்டேன்.

Thursday, April 19, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 3

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

ஒரு மாத விடுமுறைக்கு சிதம்பரத்திற்கு வந்தேன். அம்மாவும், மாமாவும் உடல் மேலிந்து விட்டேன் என்று கவலை பட்டனர். இந்த ஒரு மாதத்தில் என் உடல் எடையை ஏற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மா தினமும் அசைவ உணவை சமைத்தார்.

" அப்புறம் மருமகனே ! ஒரு வருஷம் படிப்பு முடிஞ்சிடுச்சு. " என்று எதோ சொல்ல வாயெடுத்தார். மாமா சொல்லும் போது அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். அம்மா எதோ பேச சொல்ல ஜாடை செய்ய மாமாவும் பேச்சை தொடர்ந்தார்.

" அங்க சாப்பாடுக்கு ரொம்ப கஷ்டமா மருமகனே...." என்று கேட்டார்.

" இல்ல மாமா ! பரூக் அம்மா நல்ல சமைக்கிறாங்க. பாய் விட்டு அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம். சும்மா பிச்சி உதருவாங்க. " என்று பரூக் அம்மாவின் சமையல் பற்றி சொன்னேன்.

எதோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது போல் அம்மா முகம் வாடியிருந்தது. அவர்கள் என்னிடம் ஏதோ சொல்ல நினைத்து சொல்லமால் இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

" என்ன மாமா விஷயம் ! நீங்களும், அம்மாவும் கண்ணுல பேசிட்டு இருக்கீங்க...." என்று நானே தொடங்கினேன்.

" அது ஒண்ணுமில்ல மருமகனே ! மாணிக்கம் ஒரு பொண்ணு ஜாதகம் கொண்டு வந்தான். உனக்கு பொருத்தமா இருக்கும். நீயும் கல்யாணம் பண்ணிட்டு படிச்சா சமைச்சு போடுறதுக்கு இருப்பாள்ல....." என்று சொல்லி கொண்டு இழுத்தார். நான் அம்மாவையும், மாமாவையும் முறைத்தவாரு பார்த்தேன். ரம்யாவுக்கு என் மீது என்ன எண்ணம் இருக்கிறது என்று தெரியாமல் அவளை பற்றி வீட்டில் சொல்ல முடியாது. அதே சமயம் திருமணம் செய்து கொண்டு படிப்பது நடக்காத காரியம்.

" சமைச்சு போடுறதுக்கு ஆள் வேணும்னா சென்னையில் ஒரு வீடு பார்த்து அம்மாவ நா கூட்டிடு போறேன். இப்போதைக்கு கல்யாணம் எனக்கு வேண்டாம்" என்று திட்ட வட்டமாக கூறினேன்.

மாமாவும், அம்மாவும் என் பிடிவாத குணத்தை புரிந்துக் கொண்டு என் திருமணத்தை பற்றி மேலும் பேசவில்லை. விடுமுறை நாட்கள் வேகமாக நகர தொடங்கியது. எனக்கு ஸ்ரீ ரங்கம் சென்று ரம்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவள் ஊர் ஸ்ரீ ரங்கம் என்று வைத்துக் கொண்டு எங்கு போய் அவளை தேடுவது. அதுமட்டுமில்லாமல், சிதம்ரத்தில் தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக பரூக் வருவதாக சொல்லியிருந்தான். நான் சிதம்பரத்திலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.

விடியற்காலை வீட்டுக்கு வந்த பரூக் எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வேலை விஷயமாக வெளியே சென்றான். மாலை, கும்பகோணத்திற்கு சேர்ந்து போகலாம் என்று சொல்லியிருந்தான். விடுமுறை என்பதால் ஊரை சுற்ற வேண்டும். எங்கு சென்றால் என்ன... என்ன ஏது என்று கேட்காமல் 'சரி' என்று சொன்னேன். தன் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு பரூக் வீட்டுக்கு வந்தான். அம்மா எங்களுக்காக சுவையான மீன் குழம்பு செய்து வைத்திருந்தாள். இருவரும் சாப்பிட்டு, கும்பகோணத்திற்கு பஸ் ஏறினோம்.

மாலை 4.30 மணிக்கு கும்பகோணம் சென்றோம். அங்கு தனக்கு தெரிந்த தலைமை ஆசிரியருக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தான். இருவரும் நடந்து அந்த தலைமை ஆசிரியர் வீட்டை விசாரித்து சென்றோம். அங்கு நாங்கள் அவர் வீட்டுக்கு நுழைந்த போது தான் அது பாலசுந்தரம் அவர்களின் வீடு என்று தெரிந்தது. எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக பரூக் யாரை பார்க்க போகிறோம் என்று சொல்லாமல் வந்தான்.

" உள்ளே வாருங்கள். வீட்டில் அம்மா எல்லாம் நலம் தானே...." என்று பாலசுந்தரம் ஐயா எங்களை பற்றி விசாரித்தார்.

" நாங்க நல்ல இருக்கோம்..." என்று இருவரும் சேர்ந்து சொன்னோம்.

" படித்து முடித்த மாணவர்கள் ஆசிரியரை தேடிவருவது வியப்பான ஒன்று. நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா..." என்று இன்னும் பழைய குணம் மாறாமல் இருந்தார். தான் ஓய்வு பெற்ற போது அடுத்தவருக்கு உதவும் குணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறவில்லை.



" இல்ல ஐயா... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். அதுக்கு பத்திரிக்கை வைக்கலாம்னு..." என்று சொல்லி தன் கையில் இருந்து ஒரு பத்திரிக்கையை பாலசுந்தரம் ஐயாவிடம் பரூக் கொடுத்தான்.

பத்திரிக்கை வாங்கி விட்டு, " நல்லது, அடுத்த மாதம் இந்த தேதியில் எனக்கு சென்னையில் ஒரு கூட்டம் இருக்கிறது. கொஞ்சம் காலதாமதமாக தான் வருவேன். இப்போதே மண்ணித்துக் கொள்ள வேண்டும்...." என்றார்.

" கவல படதீங்க ஐயா. காலதாமதமா வந்தா நீங்க தான் வகுப்புக்குள்ள அனுமதிக்கமாட்டீங்க. நாங்க கண்டிப்பா சாப்பாடு போட்டு தான் அனுப்புவோம் " என்றான் பரூக்.

பரூக் சொல்லும் போது எங்களுக்கு கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது. பாலசுந்தரம் ஐயா அவர்கள் படிப்பு சொல்லிக் கொடுக்கும் போது படிப்பை தவிர எதையும் பேசமாட்டார். கண்டிப்பான சமயத்தில் கண்டிப்பாக இருப்பார். எங்கள் ஞாபக அலை ஓடி ஓயந்தது.

" இன்று மாலை உங்களுக்கு வேறு பணிகள் உள்ளதா...?" என்று பாலசுந்தரம் ஐயா கேட்டார்.

" இல்லை ஐயா... உங்களுக்கு ஏதாவது செய்யனுமா...." என்று பணிவோடு பரூக் கேட்டான்.

" இன்று கும்பகோணத்தில் ஐயா சொர்பொழிவு நிகழ்த்தவுள்ளார். இந்த தள்ளாத வயதிலும் அவர் பேசவருவதை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களும் அவர் பேச்சை கேட்க வேண்டும்" என்று அன்பு வேண்டுக்கோள் விடுத்தார்.

"கரும்பு திங்க கூலியா..." என்று மனதில் நினைத்தேன். முதல் முறையாக பெரியாரை பார்க்க போகிறேன். இது வரை அவர் புத்தகங்களை மட்டும் படித்த எனக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கும். பரூக்கு பெரியாரை பிடிக்காது. ஒரு நாளுக்கு நான்கு முறை தொழுகை செய்பவனுக்கு 'கடவுள் இல்லை' என்று சொல்பவரை பிடிக்காமல் போவது நியாயம் தான். இருந்தாலும், என்னக்காக பரூக் பெரியார் கூட்டத்திற்கு வர சம்மதித்தான்.

நான், பரூக், பாலசுந்தரம் ஐயா மூவரும் 'பெரியார்' கூட்டத்திற்கு சென்றோம். கூட்டம் தொடங்கி பெரியார் பேச தொடங்கி விட்டார்.

முதல் முறையாக தொண்டு செய்த பழுத்த பழத்தை பார்க்கிறேன். இவ்வளவு வயதான போதிலும் அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை போல் ஒலித்தது. வயது காரணமாக அவரால் நின்றுக் கொண்டு பேச முடியவில்லை. உட்கார்ந்து கொண்டு தான் பேசினார்.

"சுதந்திர இந்தியா முன்பும், பின்பும் பாப்பனர் தான் பெரிய பதவியில் இருக்காங்க..."
" கடவுள் எல்லாருக்கும் பொதுனா. ஏன் சூத்திரன் கோயிலுக்குள் போக கூடாது."
" யாரு வேணும்னாலும் பூச பண்ணாலாம். பாப்பன தான் பூச பண்ணனும்னு அவசியமில்லை...."
- பெரியாரின் பேச்சு ஒவ்வொரு வாசகங்களும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பெரியார் பேச பேச என் உள்ளுக்குள் பல கேள்வி எழுந்தது. அது என் காதலின் அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்க தொடங்கியது. அது வரை என் தேவதையாக தெரிந்த ரம்யா பாப்பத்தியாக தெரிந்தாள். லக்ஷ்மியும், ரம்யாவும் பாப்பத்தியாக இருப்பதால் தான் ஜாஸ்மின்னை ஏற்க்காமல் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்றியது.

எந்த காலத்திலும் பார்ப்பனர்களின் 'காலை வாரும் குணம் மாற போவதில்லை' என்று கூட்டத்தில் இருந்த ஒரு தி.க தொண்டரின் வார்த்தைகள் காதில் விழுந்தது.

உலகத்தில் காதலிக்க பல பெண்கள் இருக்க ஒரு பார்ப்பன பெண் தேவையா என்ற எண்ணம் அடி மனதில் பாயத் தொடங்கியது.

Monday, April 16, 2012

கவிதை (எ) பிதற்றல் !

போபால்
------------



ஈசனை சிழுவையில் அறையுங்கள் !
ஏசுவை கழுவில் ஏற்றுங்கள் !
அல்லாவை பிரம்பால் அடியுங்கள் !
எங்களை காக்க வராத கடவுளை
எந்த மத முறைப்படி
தண்டித்தால் என்ன ?

**
ஹைக்கூ
-------------

கை விசிறி காற்றில்
வேர்வை நடுவில் உழைப்பு
மின்சார ஊழியர்கள் !

*
இரண்டு நாடுகள் ஆடும்
டென்னிஸ் பந்து
அகதி !

**
காதல்
---------

உன்னை
பின் தொடர
ஆசையாய் இருக்கிறது !
ஆனால்,
எனக்கு முன் 23455 பேர்
உன்னை
பின் தொடர்கிறார்களே
டிவிட்டரில் !!!

*

கனவில் வந்தாள்
பள்ளிக் காதலி
அவளுக்கு மட்டும்
வயதாகவில்லை !

Tuesday, April 10, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 2

அந்த மூன்று பெண்கள் நாவலை முழுவதும் வாசிக்க

சென்னைக்கு வந்த நாட்களில் என்னைத் திகைப்பூட்டியது, சாலைகள் தான். எல்லா சாலைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். சாலையை நினைவுபடுத்திக் கொள்வதற்கான இடங்களும் குழப்பம் தருவதாக இருக்கும். சிதம்பரத்தில் நுழையும் வழியும், வெளியேறும் வழியும் ஒன்றாக இருக்கும் சில இடங்களில் இரண்டே இரண்டு செல்லும் பாதையிருக்கும். இதனால், ஊருக்குள் வருபவர்கள் எவராக இருந்தாலும் கண்ணில் படாமல் போகவே முடியாது. சிதம்பரத்தில் நான் சைக்கிள் மிதித்து செல்லும் போது என்னுடன் படிப்பவர் யாராவது கண்ணில் பட்டுக்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால், சென்னையில் நூற்றுக்கணக்கான பாதைகள், சாலைகள் கொண்டது. இந்த பாதைகளும், சாலைகளும் ஒன்றோடு ஒன்று குறுகிட்டும் வெட்டியும் கடந்துக் கொண்டே இருக்கின்றன. ஒரே சென்னைக்குள் எத்தனை ஊர்கள் அடங்கி இருக்கிறது என்று பிரம்பித்தேன். சென்னையில் இருந்து கொண்டே உறவினர்கள் முகத்தை பார்க்காமல் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், மூன்று வருடம் சென்னையில் கழிக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. அதற்கு, காரணம் 'ரம்யா' தான்.

லட்சியம், காதல் இரண்டும் ஒரே இடத்தில் சந்திப்பது போல் தினமும் அவளை சந்திப்பதற்காகவே கல்லூரிக்கு சென்றேன். ‘சட்டப்படிப்பு’ என்ற லட்சியத்தில் இருந்து நான் தடமாறவில்லை. அதே சமயம் வகுப்பு நடக்கும் போது அவளை என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

லஷ்மி வீடு சென்னையில் இருப்பதால் கல்லூரி முடிந்ததும், வீட்டுக்கு சென்று விடுவாள். ஜோசப் தன் ஸ்கூட்டரில் ஜாஸ்மினை அழைத்துக்கு வீட்டில் விட்டு செல்வான். ரம்யா தன் விடுதிக்கு செல்வாள். நான் பஸ் ஏறி பரூக் வீட்டுக்கு வந்துவிடுவேன். கல்லூரியில் நன்றாக பேசி கொள்வோம். முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுவோம். ஒன்றாக சேர்ந்து எங்கும் வெளியே செல்வதில்லை. ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்ததும் இப்படி தான் நடந்துக் கொண்டு இருந்தது.

ஒரு முறை ரம்யாவின் வற்புருத்ததால் எல்லோரும் கடற்கரைக்கு சென்றோம். அந்த மாலை பொழுது இனிமையாக தான் இருந்தது. இருந்தாலும், நான் மட்டும் ரம்யாவுடன் தனியாக இந்த கடற்கரையில் நடக்க வேண்டும் போல் இருந்தது. எனக்கு தோன்றும் இதே உணர்வு அவளுக்கும் தோன்றியுக்குமா என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் என்னை போல் சந்தோஷப்படுபவனும் யாருமில்லை.

ஒரு பாட்டி ஜோசியம் பார்க்க எங்கள் அருகில் வந்தாள். எனக்கு நம்பிக்கையில்லாததால் நான் மறுத்து விட்டேன். ஆனால், ரம்யா, லக்ஷ்மி அந்த அம்மாவிடம் தங்கள் கையை காட்டி எதிர்காலத்தை பற்றி கேட்டுக் கொண்டு இருந்தனர். ஜாஸ்மினுக்கு இதில் நம்பிக்கை இல்லாததால் அவள் கை காட்டவில்லை. அந்த அம்மா ரம்யாவுக்கு சொன்னதை கொஞ்சம் மாற்றி லக்ஷ்மிக்கு சொன்னாள். அவர்கள் வயிற்று பிழைப்பு நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று பேசாமல் அமைதியாக இருந்தேன். அந்த அம்மா யோசியம் பார்த்து முடித்தவுடன் என் கையில் இருந்து பணத்தை கொடுத்தேன்.

பெண்களுடன் வந்து விட்டு அவர்களை செலவு செய்ய வைத்தால் நன்றாக இருக்குமா...? ரம்யாகாக லக்ஷ்மிக்கும் சேர்த்து நான் பணம் தந்தேன்.

கொஞ்ச நேரம் மணலில் உட்கார்ந்து பேசினோம். ஜோசப் என்னை பார்த்து தனியாக பேச வேண்டும் என்பது போல் சமிக்ஞை செய்தான். ஒரு வேளை ஜாஸ்மினுக்கு செய்வதை நான் தவறாக புரிந்துக் கொண்டானோ என்று யோசித்தேன். ஆனால், அவன் என்னை அழைக்க தான் இந்த சம்பாஷையில் அழைத்தான் என்று புரிந்துக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் எழுந்தோம். ஜாஸ்மின் "எங்க போறிங்க ?" என்று கேட்டாள். ஜோசப் எதுவும் பேசாமல் தன் சுண்ட விரலை மட்டும் நீட்டினான். ரம்யா, லஷ்மி, ஜாஸ்மின் மூவரும் சேர்ந்து சிரித்தனர். எனக்கு வரவேயில்லை. இவன் அவசரமாக போக வேண்டும் என்றால் தனியாக செல்ல வேண்டியது தானே ! என்னை எதற்கு அழைத்தான். அது கூட பராவியில்லை. சொல்லுவதற்கு காரணமா இல்லை. பெண்கள் முன் அநாகரிகமாக சுண்டு விரலை ஏன் நீட்ட வேண்டும். ஜோசப்பை மனதில் திட்டிக் கொண்டே அவனுடன் நடந்து வந்தேன்.

ஜோசப் ஒரு ஐஸ் வண்டியிடம் சென்று ஐந்து ஐஸ் வாங்கினான். ஜாஸ்மினுக்கு ஐஸ் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவளுக்கு தெரியாமல் வாங்கி தர வேண்டும் என்பதற்காக வந்ததை சொன்னான். " அதுக்கு ஏன்டா ! என் மானத்த வாங்குன" என்றேன். சிரித்தப்படி அவன் கடைக்காரனிடம் இருந்து இரண்டு ஐஸ் வாங்கினான். மூன்று ஐஸ்யை வாங்கி கொண்டேன்.

நாங்கள் இருவரும் அவர்களிடம் சென்ற போது மாங்காய் விற்ப்பவன் ஜாஸ்மின்னிடம் கோபமாக பேசினான். "ஏம்மா...! கையில காசு இல்லாம எதுக்கு சாப்பிடுறீங்க..." என்றான். எங்களுக்கு விஷயம் புரிந்தது. மூன்று பேரும் அவனிடம் மாங்காய் வாங்கி சாப்பிட்டு, கொடுக்க பணம் இல்லாமல் இருந்துள்ளார்கள். ஜோசப் மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுத்து அனுப்பினான். மாங்காய் விற்ப்பவன் கோபமாக பேசியதில் ஜாஸ்மின் அழுதுவிட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், அதை பற்றி கவலைப்படாமல் ரம்யா, லஷ்மி மாங்காய் தின்ற வாயில் ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

ஜோசப் ஜாஸ்மினை சமாதானப்படுத்தினான். ஜாஸ்மின் அழுத முகத்தோடு இருந்ததால் எங்களால் நீண்ட நேரம் இருக்கவில்லை. ஜோசப் ஜாஸ்மின்னை அழைத்துக் கொண்டு சென்றான். நான் ரம்யா, லஷ்மியுடன் பஸ்ஸில் ஏற பஸ் நிலையத்திற்கு சென்றோம். பஸ்ஸில் செல்ல இவர்களிடம் கண்டிப்பாக பணம் இருக்கும். ஏன் இருவரும் அந்த மாங்காய் விற்ப்பவனுக்கு பணம் கொடுக்கவில்லை. மூவரும் சேர்ந்து தான் சாப்பிட்டார்கள். தன் தோழியை ஒருவன் திட்டுவதை எப்படி பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தங்கள் கையில் இருக்கும் பணத்தை ஏன் கொடுக்க இவர்களுக்கு மனம் வரவில்லை.

இதை பற்றி அவர்களிடம் கேட்க நான் அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகவில்லை என்று தோன்றியது. அதனால், அவர்களிடம் இதை பற்றி எதுவும் பேசவில்லை. கடற்கரையில் நடந்தை ஒன்று விடாமல் பரூக்கிடம் சொன்னேன். பெண்களை பற்றி எனக்கு தெரிந்த அளவில் கூட அவனுக்கு தெரியாது. அவன் எல்லாவற்றையும் கேட்டு மௌனமாக இருந்தான். தெரியாத விஷயத்தை பற்றி அவன் வாய் திறக்கமாட்டான். இருந்தாலும், தினமும் ரம்யாவிடம் என்ன பேசினேன் என்பதை அவனிடம் கூறினால் தான் எனக்கு தூக்கமே வரும்.

என் நண்பர்களின் குணம் கொஞ்சமாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஜோசப் ஜாஸ்மின் மீது உயிரே வைத்திருக்கிறான். சிறு வயதில் இருந்தே இவனுக்கு அவள் என்று அவர்கள் வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவனும் அப்படியே வளர்ந்துவிட்டான். ரொம்பவும் வேடிக்கையானவன். சில சமயம் அவன் செய்வது ரசிக்கும் படியாக இருக்கும். பல சமயம் கோபம் வரும் படி இருக்கும். அதற்கு எடித்துகாட்டு.... கடற்கரையில் பெண்கள் முன் சுண்டு விரலை நீட்டியது.

ஜாஸ்மின் நல்ல பெண். அப்பாவி. மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவள். நல்ல படிக்க கூடியவள். ஜோசப்புடன் இருக்கும் போது என்னிடம் அன்பாக பேசியிருக்கிறாள். ஜோசப் தவறாக நினைப்பான் என்று என்னிடம் பேசாமல் இருந்ததில்லை. ரம்யாவை விட இவள் தான் எனக்கு நெருக்கமாக பலகினாள். ஜாஸ்மினின் நல்ல குணத்தை பார்க்கும் போது எனக்கு ஜோசப் மீது பொறாமை கூட வந்திருக்கிறது.

கடற்கரை ஒரு விஷயம் போதும். ரம்யா சுயநலவாதி என்று சொல்லுவதற்கு. தனக்கு வேலையாக வேண்டும் என்றால் தான் அவளாக வந்து பேசுவாள். மற்றப்படி நான் தான் அவளை தேடி பேசியிருக்கிறேன். மற்றவர்களிடம் வாங்க கூச்சப் படமாட்டாள். அதே சமயம், தன்னிடம் இருந்து ஒரு பொருளை கொடுக்கும் போது பல முறை யோசிப்பாள். அப்படி கொடுத்தால் தனக்கு என்ன லாபம் இருக்கும் என்று கணக்கு போடுவாள். அவள் குணத்தை பற்றி தெரிந்தும் என் மனம் அவளை தான் விரும்பியது என்பது தான் துரதிஷ்டம்.

அடுத்து லக்ஷ்மி... இவளை தன் நண்பர்களில் ஒருத்தியாக நினைக்க கூட முடியவில்லை. ரம்யாவின் தோழி என்பதற்காக அவளிடம் பேசிகிறேன். மற்றவர்கள் விஷயம் என்றால் இவளுக்கு ஆர்வம் அதிகம். என்னை பொருத்தவரை இவளும் ஒரு சுயநலவாதி தான். ரம்யாவை காட்டிலும் இவள் பெரிய சுயநலவாதி. மாங்கை விற்றபவன் ஜாஸ்மினை திட்டிய போது கவலைப்படமால் ஜாஸ்மின் ஐஸ்யையும் சேர்த்து சாப்பிட்டவளை என்னவென்று சொல்லுவது...!

காலை வகுப்பு முடிந்தது, மதியம் ரம்யா, ஜாஸ்மின், லக்ஷ்மி மூவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். ஜோசப் இன்று கல்லூரிக்கு வராததால் தனியாக சாப்பிட ஒரு மாதிரியாக இருந்தது. நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதை யாராவது பார்த்தால் என்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருந்தது. நான் யோசித்துக் கொண்டு இருந்த போது, ரம்யா என்னை பார்த்து. " வா சந்திரு. எங்க கூட கூட்கார்ந்து சாப்பிடு..." என்றாள்.

என் தேவதையே சொன்ன பிறகு நான் எப்படி மீற முடியும். அவர்களுடன் உணவு அருந்த சென்றேன். அப்போது, ரம்யாவும், லக்ஷ்மியும் ஜாஸ்மின்னை கேலி செய்துக் கொண்டு இருந்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் நின்று விடும் என்று இருந்தேன். ஆனால், அப்படியும் ஜாஸ்மின்னை கேலி செய்வதை நிருத்தவில்லை.

" ஜாஸ்மின் ! ஜோசப் தினமும் வந்து வீட்டுல விடுறாரே. உங்க வீட்டுல ஒண்ணும் சொல்லமாட்டாங்களா..." என்று கேலி கலந்த குரலில் லக்ஷ்மி கேட்டாள்.

" எங்க வீட்டுல சொல்லி தான் அவர் தினமும் வந்து விடுறாரு...." பதில் அளித்தப்படி தன் கையில் இருந்த சப்பாத்தி எனக்கு கொடுக்க நீட்டினாள். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஒரு ஆண்ணை முன் வைத்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்கிறோமே என்று லக்ஷ்மிக்கு அறிவில்லை. அப்பாவியான ஜாஸ்மினும் அவள் கேட்பத்ற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நான் என் சாப்பாட்டை கொடுக்க ஜாஸ்மினுக்கு நீட்டினேன். அவள் சம்பிரதாயத்திற்கு என்று கொஞ்சம் எடுத்துக் கொண்டாள். ரம்யா, லஷ்மியிடம் என் சாப்பாட்டை நீட்டியும் வேண்டாம் என்றனர். ரம்யாவும், லஷ்மியும் தங்கள் சாப்பாட்டை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவேயில்லை. சாப்பாட்டை நீட்டவுமில்லை.

" இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகாம... வெளியே போயிருக்கீங்க..." என்று ஆரவம் கலந்த பார்வையில் ரம்யா கேட்டாள். எனக்கு அவளை அரைந்து விட வேண்டும் போல் இருந்தது. இன்னும் விட்டால் என் முன்பே காதலன், காதலி அந்தரங்கத்தை பற்றி எல்லாம் கேட்டாலும் கேட்பார்கள். ரம்யாவை எனக்கும் பிடிக்கும் என்றாலும் அவள் செய்வதெல்லாம் 'சரி' என்று சொல்லும் ஆள்ளில்லை. ஆனால், என் மீது என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறாள் என்று தெரியாமல் நான் அவளுக்கு அறிவுரை வழங்க தயாரகயில்லை.

நான் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, " எனக்கு அவசரமா லைப்ரரியில வேலை... நான் போனும்.." என்று சொல்லி அந்த இடத்தை விட்ட நகர முயற்சித்தேன். ஆனால், ரம்யா " இன்னு சந்திரு ! நாங்களும் சாப்பிட்டு வரோம்" என்றாள். சாப்பிடும் வரை காத்திருக்கலாம். ஆனால், ஜாஸ்மின்னை சீண்டுவதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா எப்படி இருப்பது. நான் அவசரபட்டுத்தியதாலோ என்னவோ லக்ஷ்மியும், ரம்யாவும் சீக்கிரம் சாப்பிடு என்னடன் வந்தனர். ஜாஸ்மினும் அவர்கள் பேசிதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடன் வந்தாள்.

மதியம் வகுப்புகள் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானோம். லக்ஷ்மியும், ஜாஸ்மினும் பஸ்ஸில் ஏறி சென்றார்கள். ரம்யா தனியாக விடுதிக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் தனியாக போவதை பார்த்து, இது தான் அவளிடம் பேச சரியான சந்தரப்பம் என்று தோன்றியது. நான் அவள் பின்னாலே சென்று அவளிடம் பேசினேன்.

" ஹாய் ரம்யா....! என்ன ஹாஸ்டல் போரீயா...?" என்று அபத்தமான கேள்வி கேட்டேன். கல்லூரி முடிந்த பிறகு வேறு எங்கு செல்வார்கள் திருப்பி கேட்டால் என் முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்வேன்.

"ம்ம்.... நீ என்ன இந்த பக்கம் " என்றாள்.

" வீட்டுக்கு போய் என்ன பண்ண போறேன். அத சும்மா இங்கையே சுத்திட்டு இருக்கேன்..."

அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை. எதாவது கேட்டால் தான், அவளிடம் பதில் வருகிறது. அவளாக எதாவது பேசினால் நன்றாக இருக்கும். அளவாய் அளவுக்கு அதிகமாய் என்னை கொள்கிறாள்.

" மதியம்...ஏன் பொய் சொன்ன...." என்று திடீர் மதிய நடந்த நிகழ்ச்சியை பற்றி கேட்டாள். எனக்கு ஒன்று புரியவில்லை. பேசிக் கொண்டது இவர்கள். நான் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிட்டேன். அவ்வளவு தான். இங்கு 'பொய்' எங்கிருந்து வந்தது.

" என்ன பொய் சொன்னேன்" செய்ததறியாமல் கேட்டேன்.

" லைப்ரரியில அவரசமா வேலை இருக்கு சொல்லி கலம்ப பார்த்த. ஆனா, லைப்ரரி பக்கம் போக எங்களொட க்ளாஸ்க்கு வந்த. இது வரைக்கு நீ லைப்ரரி பக்கம் போகல. அப்படி தானே..." என்றாள்.

நான் அதிர்ந்தே விட்டேன். நான் சொன்ன ஒரு வார்த்தை இவ்வளவு சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டு பொய் சொன்னதற்கு கோபம் படுகிறாள் என்றால் என் மீது அவளுக்கு எதோ இருந்திருக்க வேண்டும். அதனால், நான் சொன்ன பொய்யை பற்றி கேட்கிறாள்.

" தேவையில்லாம பொய் சொல்லல்ல. பொண்ணுங்க நீங்க பேச்சிட்டு இருந்தீங்க. நான் வந்திருக்க கூடாது. என்ன வெச்சிட்டு ஜாஸ்மின கிண்டல் பண்ணா அவ தப்பா நினைச்சிட்டா என்ன பண்ணுறது. அதான் பொய் சொன்னேன்" என்றேன்.

ரம்யா எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் நான் செய்வதை கவனித்து என்னை பற்றி கேட்டாள். அவளுக்கு என் பொருட்டு மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று நானும்; எனக்கு அவளால் மண்டைக்கனம் ஏறிவிடக்கூடாதென்று அவளும், மிகவும் எச்சரிக்கையாக பேசி கொண்டோம்.

எனக்கு இந்த கல்லூரி சேர்ந்த நாளில் ராம்யாவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவளிடம் ஒரு சந்தேகம் கேட்க தோன்றியது.

"ரம்யா..! நான் ஒண்ணு கேட்கலாமா...."

" என்ன....?"

" லக்ஷ்மியும், ஜாஸ்மினும் நம்ப கூட தான் படிக்கிறாங்க. ஆனா, நீயும் ஜாஸ்மினும் சேர்ந்து ஒரு வாட்டி கூட லக்ஷ்மிய கிண்டல் பண்ணதில்ல. அதே மாதிரி லக்ஷ்மியும், ஜாஸ்மினும் சேர்ந்து உன்ன கிண்டல் பண்ணதில்ல. நீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து ஏன் எப்போவும் ஜாஸ்மின சீண்டிக்கிட்டே இருக்கீங்க...?" என்று மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டேன்.

எனக்கு ஜாஸ்மின் மீது ஈடுபாடோ, அக்கரையோ இல்லை தோழிகள் என்றால், ஒரு முறை ஒருவர் கேலி செய்வார், இன்னொரு முறை இன்னொருத்தர் கேலி செய்வார். ஆனால், இரண்டு பேர் சேர்ந்து எப்போது ஒருவரை சீண்டுவது எனக்கு பிடிக்கவில்லை. இந்த விஷயம் நீண்ட நாட்களாக என் மனதில் உருத்திக் கொண்டு இருந்தது. இது தான் சரியான சந்தர்ப்பம் என்று அவளிடம் கேட்டேன்.

" எனக்கு ஜாஸ்மின்ன விட லக்ஷ்மி தான் நல்ல பிரண்ட். அத தான் லக்ஷ்மி என்னைக்கும் விட்டு கொடுத்து பேச மாட்டேன். ஜாஸ்மின் அப்படியில்லை. ஜோசப் இருந்தா எங்கள கண்டுக்கவே மாட்டா...!" என்றாள்.

" என்னதான் இருந்தாலும் நட்புல பாகுபாடு பார்க்குறது தப்பு ரம்யா...." என்று என்னையும் அறியாமல் அவளுக்கு அறிவுரை கூறினேன். நான் சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்று அவள் பார்வையிலே தெரிந்தது.

" இது பொண்ணுங்க விஷ்யம் சந்திரு. உனக்கு எதுவும் தெரியாது..." என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் விடுதியை நோக்கி சென்றாள்.

அவளிடம் ஏதாவது கூறினால் தனக்கு தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்போக்கு அவளிடம் இருந்ததை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஜாஸ்மின் இதுவரை எந்த பாகுபாடுயில்லாமல் தான் எல்லோரிடமும் பழகுகிறாள். இருந்தும் ரம்யா ஏன் இப்படி சொல்கிறாள். எனக்கு தெரிந்தவரையில் லக்ஷ்மி ஒரு சுயநலவாதி. தன் வேலை முடிந்தால் போதும் என்று இருப்பவள். ஆனால், ஜாஸ்மின் தன் வேலையை மட்டும் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்கும் உதவி செய்வாள்.

இதை தான் பெண்கள் மனம் அறிந்தவன் யாருமில்லை என்று சொல்கிறார்களோ !!!!

ரம்யா பற்றி யோசித்து யோசித்து ஒரு வருடம் முடிந்ததே தெரியவில்லை. அவள் மேல் இருந்த காதலில் படிக்காமல் இருந்துவிடவில்லை. முதலாண்டு தேர்வை நன்றாக தான் எழுதினேன்.

(தொடரும்....)

Monday, April 9, 2012

பெரம்பூர் ரெயில் நிலையம் மிக மிக அருகில் !!



பெரம்பூர் ரயில் நிலைய அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் எடுத்த படம்.

ஒரு வருடம் முன்பு, இங்கு பயணிகளை ஏற்றி, இறக்கி விட ஆட்டோக்கள் அதிகமாக நிற்க்கும். திரு.வி.க நகர், ரெட்டேரி, பெரியார் நகர் செல்பவர்கள் ரயிலில் இறங்கியதும் இன்கு ஷேர் ஆட்டோ ஏறுவதற்கு சுலபமாக இருக்கும்.ஒரு நாளைக்கு இந்த பஸ் ஸ்டாண்டில் பஸ்யை ஷேஎ ஆட்டோக்கள் தான் அதிகம் நிற்கிறது. காலையில் வேலையில் செல்பவர்களுக்கு அதே வழி என்பதால் பஸ், கார், இரு சக்கர வாகன்ங்களோடு அடிக்கடி ஷேர் ஆட்டோக்காரர்க்ளுக்கு வாக்கு வாதம் ஏற்ப்படும்.

ஒரு கட்டத்தில் போக்குவரத்து காவல்துறையினர் "இவ்விடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது" என்று போர்ட் வைத்தார்கள். ஆனால், அப்படியும் ஷேர் ஆட்டோக்கள் கேட்பகதாக இல்லை.தினமும் ஆட்டோ நிற்பதும், வண்டிகள் போகாமல் தடைப்படுவது தொடர்ந்துக் கொண்டே இருந்தது. காவலர்கள் சில சமயம் லத்தியால் ஆட்டோவின் பின்புறம் அடிப்பார்கள். ஒன்றும் பலனில்லை.

பஸ் முன்பு, கார் முன்பு வண்டியை நிறுத்தி பயணிகள் ஏறி, இறங்கும் வரை அங்கு போக்குவரத்து தடங்கள் இருந்துக் கொண்டு இருக்கும்.



காவல்துறையினர் வைத்த போர்ட்க்கு மதிப்பே இல்லாமல் போனது. வேறு வழியில்லாமல், “ஏற்றக்கூடாது” என்ற வார்த்தைக்கு மேல் “ஏற்றும் இடம்” என்று ஸ்டிக்கர் ஓட்டிவிட்டார்கள். அதாவது, டிராபிக் அதிகமாக இருக்கும் இடத்தில் அவர்கள் வண்டியை நிறுத்தி, ஏற்ற வழி வகுத்துக் கொடுத்துள்ளார்கள்.

போர்ட் வைக்கும் முன்பே இங்கு ஷேர் ஆட்டோ நின்றுக் கொண்டு தான் இருந்தது. இப்போது இருக்கும் போர்ட்க்கு என்ன பயன் தெரியுமா ? போது மக்கள் வழியில் நிற்கும் ஆட்டோக்களிடம் சண்டைப் போடாமல் செல்ல வேண்டும். ஏன் என்றால் இங்கு ஆட்டோ பயணிகளை எற்றிவிடும் இடம் மாயிற்றே !!

முன்பு வைத்த போர்ட் ஆட்டோக்காரர்களுக்கு... அவர்கள் அதை கேட்கவில்லை. பின்பு அதே போர்ட்டை மக்களுக்கு மாட்டிவிட்டார்கள்.

இந்த போர்ட்டை பார்த்ததும் சோவின் ‘துக்ளக்’ நாடகத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது.

"Yesterday illegal today’s law.
Today’s illegal tomorrow’s law."


அது சரியாக தான் இருக்குகிறது.

Thursday, April 5, 2012

நான் மகளானேன் !

என் அம்மாவை கொன்று விட வேண்டும் போல் இருந்தது. அவளால் என் தோழிகள் எவ்வளவு அவமானம். எவ்வளவு கிண்டல். அவளால் என் கல்லூரியில் தலை நிமிர்ந்து நடக்கக் கூட முடியவில்லை. ஒரு சாயலில் நான் அம்மா மாதிரி இருப்பதால், என் தோழிகளுக்கு என்னை பார்த்ததும் அம்மா ஞாபகம் வந்து சிரித்துவிடுவார்கள். ரம்யாவை ஏன்டா வீட்டுக்கு அழைத்து சென்றோம் என்று நினைக்கும் அளவிற்கு என் அம்மாவைப் பற்றி பரப்பி விட்டாள். என் அம்மாவின் சைகையை பார்க்க என் தோழிகள் ஒரு முறை வீட்டுக்கு வந்தனர்.

"என்ன நதியா ! இவங்க தான் உன் பிரண்ட்ஸா உள்ள வாங்க..." என்று உள்ளே கையசைத்து அழைத்தாள்.

அப்போதே ஒருத்தி சிரித்து விட்டாள்.

"வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?" வார்த்தைக்கு ஏற்றவாரு கையசைத்து கேட்டார்.

இப்போது இன்னொருத்தி சிரித்தப்படி பதிலளித்தாள்.

"என்னம்மா சாப்பிடுறீங்க ?” விரல்களை சேர்த்து வாய்க்கு கொண்டு சென்று கேட்டார்.

"இப்போ எதுவும் வேண்டாம் ஆன்ட்டி ? என்றாள்.

"நீங்க பேசிட்டு இருங்க, நான் உள்ளே போய்ட்டு சாதம் வடிச்சிட்டு வரேன்” என்று சைகையில் சொன்னப்படி உள்ளே சென்றார்.

அம்மா உள்ளே சென்றதும், " உங்க அம்மா பரத நாட்டியம் டான்ஸரா ! சொல்லவயில்ல...!!" என்று கிண்டலாக ஒருத்தி கேட்டாள்.

சிறு குழந்தைப் போல் கையசைத்து பேச வேண்டாம் என்று பல முறை அம்மாவிடம் சொல்லியிருப்பேன். அம்மா சிறுவயதில் இருந்தே இது பழகிவிட்டது. மாற்ற முடியவில்லை என்பாள். அதைப் பற்றி இன்னும் பேசினால், அழுதுவிடுவார்.



அப்பாவுக்கு அம்மா சைகை காட்டி பேசுவது பிடிக்கும். சில சமயம் அப்பா அம்மாவை கேலி செய்தாலும், அம்மாவின் குழந்தைதனத்தை ரசிப்பார். ஆனால், மகளான எனக்கு அவமானமாக இருந்தது. அம்மாவால் என் கல்லூரியில் நான் கேலிப் பொருளாக இருப்பது வருத்தமாக இருந்தது.

அம்மாவை வைத்து கல்லூரியில் என்னை கேலி செய்வதை அப்பாவும், அம்மாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது என்னை அம்மாவுடன் ஒப்பிட்டு பேசினாலே கோபம் வரும் அளவிற்கு அம்மா மீது வெருப்பு வந்தது.

நாளுக்கு நாள் அம்மா மீது கோபம் வளர்ந்ததே தவிற அன்போ, அனுதாபமோ வரவில்லை.

மாலை அலுவலகம் முடிந்தது அப்பா கொஞ்சம் பதட்டமாக வீட்டு வந்தார்.

"என்ன டென்ஷன வருறீங்க ?" என்று வழக்கமான தன் கையசைவில் அம்மா கேட்டார்.

"உங்க அம்மாவுக்கு சிரீயஸ். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க..." என்றார்.

கண்ணில் நீருடன் என்னவானது கேட்டார். டாக்டர் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதை அப்பா சொன்னார். ஊருக்கு செல்ல துணிகளை என்னை எடுத்து வைக்க சொன்னார்.

அம்மா அழுதப்படி உட்கார்ந்திருந்தார். அம்மாவை தேற்றவோ, ஆறுதல் சொன்னவோ எனக்கு தோன்றவில்லை. அப்பா சொன்னமாதிரிகளை துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.

இரவு, பஸ்ஸில் எங்க சொந்த ஊரான ஆரணிக்கு சென்றோம். என் பாட்டியை ஐந்தாவது படிக்கும் போது பார்த்திருக்கிறேன். அவர் முகம்க் கூட எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. என் பாட்டிக்கு சரியாக காது கேட்காது, வாய் பேச்சு வராது என்று தெரியும். அப்பா டெல்லி, மும்பை, சென்னை என்று வேலை மாற்றமாகிக் கொண்டு இருந்ததால் அம்மாவின் சொந்த ஊருக்கே நான் செல்லவில்லை.

என் பாட்டி வீட்டு அடைந்ததும் சொந்தக்காரர்கள் வாசப்படி நின்றுக் கொண்டு இருந்தார்கள். அது வரை துக்கத்தை தொண்டையில் அடைத்து வைத்த அம்மா, வாய் விட்டு அழ ஆரம்பித்தார். மாமா, அத்தை என்று அம்மாவை சுழ்ந்துக் கொண்டு அழுதார்கள்.

அம்மா உள்ளே நுழைந்ததும் பெரியம்மாவை கட்டி பிடித்து அழத் தொடங்கினார். அவர்கள் இருவரும் தங்கள் அம்மாவைப் பற்றி சொல்லி அழும் போது தான் ஒன்று கவனித்தேன்.

பெரியாம்மாவும் அம்மா மாதிரி வார்த்தைக்கு செய்கை செய்து அழுதார். அவர்கள் அழுது தொண்டை அடைத்துக் கொண்டதால் பேசுவது சரியாக புரியவில்லை. ஆனால், சைகை செய்தது என்ன சொல்ல நினைத்து அழுகிறார்கள் புரிந்தது.

அப்போது மாமா அப்பாவிடம், " சின்ன வயசுல எங்க அம்மாவுக்கு இவங்க இரண்டு பேரை தான் ரொம்ப பிடிக்கும். நான் பேசுறதக் கூட இவங்க ரெண்டு பேரு தான் அம்மாவுக்கு சைகையில புரிய வைப்பாங்க. இப்போ எங்க அம்மா இல்ல. ஆனா, இவங்களால சைகையில பேசாம்ம இருக்க முடியல.." என்று அழுதுக் கொண்டு சொன்னார்.

சைகையில் அம்மா, பெரியம்மா பேசுவதற்கு காரணம் என் பாட்டி ஊமை, காது கேளாமல் இருந்தது காரணம் என்பதை புரிந்துக் கொண்டேன். தன் அம்மா மீது எவ்வளவு பாசம் இருந்திருந்தால் சைகை மொழி தங்கள் இரத்தத்தில் உரும் அளவிற்கு இருவரும் வளர்ந்திருப்பார்கள்.

பசிக்கும் போது உணவு கேட்க , தன்னை குளிப்பாட்ட, வெளியே அழைத்து செல்ல, தலை சீவிவிட என்று வாத்தைகள் அல்லாமல் சைகையால் பாட்டிக்கு புரிய வைத்திருப்பார். என் உணர்வை அம்மாவுக்கு புரிய வைக்க நான் பெரிய முயற்சி எடுக்கவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் பாதி நாள் உடல் மொழி தன் அம்மாவுடன் அன்பு, பாசம், தேவையை பரிமாறியிருக்கிறார்.

என் அம்மா அவரின் அம்மா மீது வைத்த பாசம், நான் பாதிக்கூட வைக்க வில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு நிமிடம் என் மீது எனக்கே கோபமாக இருந்தது.

மரணம் தன் சர்பாக கண்ணீர், துயரம் என்று எதையாவது விட்டு செல்ல விரும்புகிறது. ஆனால், என் பாட்டியின் மரணம் என் அம்மா மீது பாசத்தை வளர வைக்க அடித்தளமாக இருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails