வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 14, 2013

சினிமா 100 (1913 - 2013)

சலனப்பட காலங்கள் 

சினிமா - அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை கொண்டாடக் கூடிய ஒரே விஷயம். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு ரசனை இருந்தாலும், சினிமாவை ஒதிக்கிவிட முடியாதபடி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக கலந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதல்வர்களை தந்ததும், கோடிஸ்வரர்களை தெருவுக்கு கொண்டு வந்தது சினிமா தான். பொழுதுபோக்குக்கும் சரி, குடும்பத்துடன் செல்வதற்கும் சரி, தனிமையை மறப்பதற்கும் சரி சினிமா பலரின் தோழனாக இருக்கிறது.

இப்படிப்பட்ட சினிமா நூறு ஆண்டுகள் கடந்திருக்கிறது மிகவும் பிரமிப்பான விஷயம். எத்தனையோ தொழிற்துறை நூறு ஆண்டுகளை கடந்திருக்கிறது. சினிமாவுக்கு முன்பு தோன்றிய தொழிற்துறை இன்றும் இருக்கிறது. ஆனால், சினிமா நூற்றாண்டை கொண்டாடுவது போல் வேறு எந்த துறையை கொண்டாடியதில்லை. கொண்டாடப் போவதுமில்லை. காரணம், மற்ற தொழிற்துறையை விட சினிமா பல முதலாளிகளை உறுவாக்கியிருக்கிறது. தன் வரலாற்றை சரியாக பதிவு செய்து வளர்ந்த ஒரே துறை சினிமா மட்டும் தான்.


அழுது சத்தம் போட்டுக் கொண்டே பிறக்கும் குழந்தைப் போல் சினிமா தோன்றவில்லை. சினிமாவின் பிறப்பு மௌனமாக முறையில் தான் இருந்தது. திரையில் படம் பார்ப்பவர்களுக்கு சிறு சத்தம் கூட திரையில் இருந்து கேட்காது. ஓளியை மட்டும் பதிவு செய்யும் சாதனமாக தான் சினிமா தோன்றியது.

முதன் முதலில் இந்தியாவில் திரையிடப்பட்ட படம் ”ஸ்ரீ புண்டலிக்’ என்னும் மராத்தியில் எடுக்கப்பட்ட சலனப்படம் தான். மே 18, 1912ல் தாதாசாகேப் டோர்ன் என்பவர் மும்பையில் முதல் முதலாக படத்தை திரையிட்டார். இதில் பணியாற்றிய கெமிராமேன் ஜான்சான் வெள்ளையன் என்பதாலும், படத்தின் வேளைகள் முழுக்க முழுக்க லண்டனில் நடந்ததாலும் இதை முதல் இந்திய சினிமாவாக யாரும் கருவதில்லை.

முதல் இந்திய சினிமாவாக நாம் சொல்வது மராத்தியில் தாதாசாகேப் பால்கே அவர்கள் இயக்கிய “ராஜா ஹரிசந்திரா” படம் தான். மே 3, 1913ல் மும்பையில் திரையிடப்பட்டது. ஒரே ஒரு பிரதி மட்டும் எடுக்கப்பட்டு திரையிட்டனர். வியாபார ரிதியாகவும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது.

ராஜா ஹரிசந்திரா படத்தின் வெற்றிக்கு பிறகு மோகினி பஸ்மசூர், சத்தியவான் சாவித்திரி, லன்கா தாஹன், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மா போன்ற படங்களை பால்கே இயக்கினார். ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவுக்கு சினிமாவை அறிமுகப்படுத்திய பால்கே, தனது நிறுவனம் நஷ்டத்தில் முழ்கி கையில் பணமில்லாமல் இறந்தார்.

சினிமாவில் வாழ்நாள் சாதனையானையாளர்களுக்கு பால்கே நினைவாக “தாதாசாகேப் பால்கே” விருது வழங்கிவருகிறோம். இந்திய சினிமாவின் தந்தையாக பால்கேவை தான் நாம் கொண்டாடுகிறோம்.

இந்திய சினிமா எடுத்தத்தில் பால்கே எப்படி மிக முதன்மையாக திகழ்ந்தாரோ ஜம்ஷத்ஜி ப்ராம்ஜி மதன் படத்தை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் மிக முக்கியமானவர். எல்பின்ஸ்டோன் பயாஸ்கோப் என்று நிறுவனத்தின் மூலம் பல குறும்படங்களை தயாரித்திருக்கிறார். அல்பர்ட் தியேட்டரை தொடங்கினார். முதல் பெங்காலிப் படத்தை தயாரித்தப் பெருமையும் இவரையே சாரும்.

பால்கே, ஜம்ஷத்ஜி இருவரால் சினிமாவை வட இந்தியாவில் பரப்ப முடிந்த அளவிற்கு, தென்னிந்தியாவில் பெரிதும் பரப்ப முடியவில்லை. தென்னிந்தியாவில் சினிமாக் கலை பரவியதற்கு மிக முக்கியமானவர் ரகுபதி வெங்கையா நாயுடு. தெலுங்கு திரையுலகின் தந்தையாக திகழ்கிறார். வருடந்தோறும், ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருது விழாவில் திரைப்பட கலைஞர்களுக்கு “ரகுபதி வெங்கையா” விருது வழங்கி வருகிறது.

அண்ணா சாலையில் இருக்கும் கெய்டி தியேட்டர், புரசையில் இருக்கும் க்ளோப் தியேட்டர், மிண்ட் தெருவில் இருக்கும் க்ரவுன் தியேட்டர் என்று சென்னையில் இருக்கும் பல முக்கிய தியேட்டர்கள் இவரால் நிறுவப்பட்ட வை. கஜேந்திர மோட்சம், நந்தனார் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

சினிமாத் துறை இந்தியாவில் வளர்வதை கண்ட வெள்ளையர்கள் 1927ல் இந்திய சினிமா அமைப்பை உருவாக்கினர். ஆனால், இந்திய சினிமா வளர்ச்சிக்கு உதவுவதற்கு பதிலாக வெள்ளையர்கள் தங்கள் படங்களை கொண்டு செல்வதில் தான் அதிக கவனம் செலுத்தியது. அதனால், இந்த அமைப்பு விரைவிலே கலைக்கப்பட்டது.

இந்திய சினிமா வளர்ச்சிக்கு மிக ஆரம்பப் புள்ளியாக இருந்தது மௌனப்படங்கள் என்பது மறுக்க முடியாது. ஆனால், அதை நாம் பாதுகாக்கவில்லை என்பது தான் வரலாறு சொல்கிறது.

சமிபத்தில் தமிழ் ஸ்டுடியோ ஏற்பாடு செய்த சினிமா நூற்றாண்டு நிகழ்ச்சியில் 1913ல் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் சினிமா என்று சொல்லப்படும் “ராஜா ஹரிசந்திரா” படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நாற்பது நிமிடங்கள் உள்ளப் படம் வேறும் இருபது நிமிடங்கள் தான் பார்க்க கிடைத்திருக்கிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிந்துள்ளது.

அதே நிகழ்ச்சியில், 1903ல் எடுக்கப்பட்ட “The Great Train Robbery" என்ற அமெரிக்கப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டதை பார்த்தேன். 14 நிமிடங்கள் எடுக்கப்பட்ட படம். எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவில் 1936 முன்பு வரை 1500 சலனப்படங்கள் வந்துள்ளது. அதில் “மார்த்தாண்ட வர்மன்” என்ற படம் மட்டும் தப்பி பிழைத்து புனே திரைப்பட காப்பகத்தில் இருப்பது 'தமிழ் ஸ்டூடியோ' அருண் கூறினார். 23 வருட வரலாற்றை காப்பாற்ற முடியாமல் இந்திய சினிமாத்துறை இருந்துள்ளது. சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இந்நேரத்தில் சினிமாவை தந்த முன்னோர்களின் பொக்கிஷத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அசையும் படங்கள் மக்கள் மனதில் அதிக வரவேற்பு பெற்றாலும், ரசிகர்களுக்கு எதோ ஒரு குறை இருந்துக் கொண்டு தான் இருந்தது. அதைக் குறையை நீக்க பேசும் படம் இந்திய சினிமாவில் மெல்ல அடியெடுத்து வைத்தது.

இன்னும் பேசுவோம்.

(நன்றி : நம் உரத்தசிந்தனை மாத இதழ், நவம்பர் )

Monday, November 11, 2013

சிரியா - இன்னொரு இராக் வேண்டாம் !

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா சிரியாமீது போர் தொடுக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று இரு நாடுகளையும் மேஜைக்கு முன்னால் எதிரெதிரே அமர வைத்ததில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பங்கு முக்கியமானது. சிரிய அரசு தன் வசமுள்ள ரசாயன ஆயுதங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அழித்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இப்போது போர் மேகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சிரியா தனது சொந்த மக்கள்மீது ரசாயனத் (விஷவாயு) தாக்குதல் நடத்தி 1300ம் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ‘ரசாயன ஆயுதம் கூடாது’ என்னும் சிவப்புக் கோட்டை சிரியா தாண்டிவிட்டதால் துருப்புகளை அனுப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தன் தரப்பை நியாயப்படுத்தியது அமெரிக்கா.


2011 தொடங்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் காரணமாக இருந்துள்ளார் என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. இனப்படுகொலையை நோக்கி சிரியா நகர்ந்து சென்றுகொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

சிரியா என்பது ஆசாத் குடும்பத்தின் சொத்தாகவே திகழ்கிறது. 1971ல் சிரியாவின் அதிபராக ஆசாத்தின் தந்தை ஹஃபிஸ் அல் ஆசாத் பொறுப்பேற்றுக் கொண்டார். முப்பது வருடங்கள் பதவி அனுபவித்த கையோடு, தனது அதிபர் பதவியை மகன் பஷர் அல் ஆசாத்திடம் ஒப்படைத்துவிட்டார் அவர். இவர் கடந்த பதிமூன்று வருடங்களாக அதிபராக இருந்து வருகிறார். தேர்தல், ஜனநாயகம் ஏதுமின்றி சிரியா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை அடக்க ஆசாத் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. இதற்காகவே உலக நாடுகளில் இருந்து தனது போருக்கான ஆயுதங்களை சிரியா அரசு வாங்கியிருக்கிறது.

இங்கேதான் அமெரிக்க நுழைகிறது. பல வருடங்களுக்கு முன்பு இரான் மீது யுத்தம் நடத்த அமெரிக்க சொன்ன அதே காரணத்தைத் தற்போது சிரியாவுக்கும் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. ஆனால் இரானுக்கும் சிரியாவுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டை சிரியா மக்களே ஆதரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்கு இந்தப் போரில் உடன்பாடு இல்லை என்பது தெரிகிறது. அமெரிக்க செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்காவின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் தோல்வியடைய, வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியதாகிவிட்டது.

உண்மையில் இந்தப் போரில் அமெரிக்காவுக்கு கூட விருப்பமில்லை. இருந்தாலும் தனது வல்லரசு மிதப்பை விட்டுக் கொடுக்காமல் சிரியாவை மிரட்டிப் பார்க்க விரும்பியிருக்கிறது. இரண்டு வருடங்களாக பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது அமைதி காத்த அமெரிக்கா திடீரென்று இப்போது எதிர்ப்பதற்கும் மிரட்டுவதற்கும் காரணம் எண்ணெய் என்றும் சொல்லலாம். ஆனால், அதுதான் முக்கியக் காரணம் என்றால், உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோதே அமெரிக்கா தலையிட்டிருக்கும். இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஏன்?


ஆரம்பத்திலேயே அமெரிக்கா தலையிட்டிருந்தால், இஸ்லாமிய விரோத மனப்பான்மை, எண்ணெய் வளத்துக்கான ஆசை போன்றவை பகிரங்கமாகத் தெரிந்திருக்கும். எனவே நேரடியாக இறங்காமல் உள்ளூர் போராளிகளை ஆசிர்வதித்து அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய தூண்டிவிட்டது அமெரிக்கா. இப்போது, சிரியா அரசு தனது தாக்குதல் மூலம் சிரியப் போராளிகளை ஒரளவுக்கு அடக்கிவிட்டது. அதனால் விழித்துக்கொண்டது அமெரிக்கா. ஆசாத்தின் ஆட்சி மட்டுமல்ல அவர் குடும்பத்தின் ஆட்சியும் தொடரக்கூடாது என்று விரும்பிய அமெரிக்கா தலையிடுவதற்கு இதுவே தருணம் என்று முடிவு செய்தது.

சரி, அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையிலான இந்த மோதலில் ரஷ்யா எப்படி வந்தது? ரஷ்யா, 2000 முதல் 2010 வரை சிரியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. தங்களது முக்கிய வாடிக்கையாளராக இருக்கும் சிரியாவைக் காக்கும் பொறுப்பு ரஷ்யாவுக்கு இருக்கிறது. போர் இல்லாவிட்டாலும் ஆயுதங்களுக்கான தேவை எப்போதும் இருக்கும் என்று ரஷ்யாவுக்குத் தெரியும். காரணம், மத்தியக் கிழக்குப் பகுதியில் ஓயாமல் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்கா எது செய்தாலும் அதை எதிர்ப்பது சீனாவின் கொள்ளை என்பதால் இந்த முறையும் சிரியா மீதான அமெரிக்காவின் தலையீட்டை சீனா எதிர்த்துள்ளது. கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சிரியாவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று இனியும் இருந்துவிடமுடியாது. சிரியாவில் யுத்தம் மூண்டால் கச்சா எண்ணெய் அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல் மானியச் சுமை அழுத்தும். மானியத்தைக் குறைக்க விலையை உயர்த்தினால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையும். சிரியா யுத்த அபாயம் வெளிப்பட்ட அன்றே சென்செக்ஸ் பங்குச்சந்தை 700 புள்ளிகள் வரை சரிந்தது. ஒருவேளை யுத்தம் நடந்தால், மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.

அப்படி எதுவும் நேராது, சிரியா யுத்த அபாயம் நீங்கிவிட்டது என்கிறார்கள் சிலர். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவால் முன்னேறமுடியாது. ஐ.நாவின் ஒப்புதலும் கிடைக்காது. இங்கிலாந்து பின்வாங்கிவிட்டது. எப்படி மூளும் யுத்தம் என்கிறார்கள் இவர்கள்? இன்னொரு பிரிவினரோ தற்போது நிலவுவது தாற்காலிக அமைதியே என்று எச்சரிக்கிறார்கள். ரசாயன ஆயுத ஒப்பந்த விஷயத்தில் சிரியா ஒத்துழைப்பு தராது என்றும் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம் என்றும் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில் பல லட்சக்கணக்கான சிரிய மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். அவர்களைக் குடியமர்த்துவது சிரியாவுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே உலக நாடுகள் தலையிட்டு போரைத் தவிர்க்கவேண்டும் என்னும் கோரிக்கை பலம் பெற்றுவருகிறது. இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் இன்னொரு இராக் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.

(நன்றி : ஆழம், அக்டோபர் இதழ்)

LinkWithin

Related Posts with Thumbnails