வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 18, 2014

சினிமா 1913 -2013 – 6. இயக்குனர்களின் சினிமா

"சார் ! நீங்க நூறு பேர ஒரு கொம்பால சுத்தி சுத்தி அடிக்கிறது. அதுலையும் கடைசி பத்து பேரு உங்க சுண்டு விரல் பட்டதும் விழுந்துடுறாங்க..."

 "இந்த படத்துல மூனு ஹீரோயின். மூனு பேரு உங்கள மாத்தி மாத்தி லவ் பண்ணுறாங்க. ஆனா, நீங்க கண்பார்வையில்லாதவளுக்கு வாழ்க்கை கொடுக்குறீங்க.."

 "உங்க அப்பா, அம்மாவ ஒருத்தர் கொன்னுடுறான். அவன நீங்க வளர்ந்து அப்புறம் பழி வாங்குறீங்க" 

“ஒரே பாட்டுல பெரிய பணக்காரர் ஆகுறீங்க..”

 தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களின் இன்றைய நிலை இது தான். கதாநாயகர்களுக்கு என்று பத்து கதைவைத்து திருப்பி திருப்பி எடுத்து, தங்கள் நாயகர்களை திருப்தி படுத்துகிறார்கள். நாயகர்களை சந்தோஷப்படுத்துவது போல் கதை சொல்லிவிட்டால் சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று நிலை. நாயகன் சம்மதித்துவிட்டால், தயாரிப்பாளரும் தானாகவே வந்துவிடுகிறார். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் சலித்துவிட்டது.

 சினிமாவை தொடங்கிய காலத்தில் இயக்குனர்கள் தான் பிரதானம். இயக்குனர் சொன்னதை செய்வார்கள். நடிகர், நாயகிகள், மற்றவர்கள் அனைவரும் அவர் சொல்லும் வேலை தான் செய்பவர்கள். இன்றும் அப்படி தான். ஆனால், படப்பிடிப்பு தளங்களில் தயாரிப்பாளர், இயக்குனர்கள் காட்டிலும் நாயகனுக்கு தான் அதிக மரியாதை வழங்கும் சூழ்நிலை.

 1930, 1940 களில் இயக்குனர்களுக்கான சினிமா இல்லை. தியாகராஜர் பாகவதர், சின்னப்பா போன்றவர்களுக்கு மவுசு இருந்தாலும் தின வேலைகளின் நடுவில் திரைப்படத்திற்கு செலவு செய்து படம் பார்க்கும் அளவிற்கு இல்லாத காலக்கட்டம். சினிமா வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இல்லாத காலக்கட்டத்தில் மிக முக்கியமாக திகழ்ந்த இயக்குனர்களை பார்ப்போம்.

ராஜா சாண்டோ 



  புதுகோட்டையில் பிறந்த ராஜா சாண்டோ அவர்கள் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முகம். மௌனப்படக் காலங்களில் இருந்து மறக்க முடியாத சகாப்தம். இன்று பல இயக்குனர் தயாரித்து நடிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ராஜா சாண்டோ தான் முன்னோடி.

 தமிழ் சினிமாவில் முத்த காட்சிகளை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இதிகாசப் படங்களில் இருந்த தமிழ் சினிமாவை சமூகக் கதைகளை படமாக்கினார். "உங்கள் கதையை படமாக பார்க்க தவறாதீர்கள்" என்று விளம்பரப்படுத்தினார். தமிழ் சினிமாவின் எடுக்கப்பட்ட மௌனப்படங்கள் இப்போது ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்றாலும், இவரைப் பற்றிய பதிவுகள் மட்டும் அழிந்து போகவில்லை.

 ’பக்த போதனா’ (1922) மௌனப் படத்தின் மூலம் நடைக்க தொடங்கியவர், 'ஸ்நேக் ஜோதி' (1928) என்ற மௌனப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பேசும் படம் வந்த பிறகு தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். ‘சந்திரகாந்தா’ என்ற படத்திற்கு திரைக்கதையும் அமைத்திருக்கிறார்.

 இவர் இயக்கிய கடைசி படம் தியாகராய பாகவதர் நடித்த 'சிவகாமி' (1943). அந்த படத்தில் தயாரிப்பாளருடன் கருத்துவேறுபாட்டோடு படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இறுதியில் அந்தப்படத்தின் தயாரிப்பாளரே இயக்க வேண்டியதாக இருந்தது.

40, 50 களில் இருந்த மிகப் பெரிய சினிமா கலைஞர்கள் எல்லாம் இவரோடு பணியாற்றியிருக்கிறார்கள். தமிழக அரசு இவர் பெயரில் வருடா வருடம் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

கே.சுப்பிரமணியம்

 பிரபல பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை. ராஜா சண்டோவின் மௌனப்படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.

 'பவளக்கோடி' படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். அந்தபடத்தில் தான் எம்.கே.தியாகராய பாகவதரும் அறிமுகமானர். தமிழ் சினிமாவில் முதல் தடை செய்யப்பட்ட படமான 'தியாக பூமி' படத்தை இயக்கியவரும் இவர் தான். பாலயோகி, சேவா சாதனம் போன்ற படங்களையும்இயக்கியிருக்கிறார்.

எல்லி டங்கன் 



 கே.பி.சுந்தரம்மாளுக்கு ஒரு லடசம் ரூபாய் சம்பளம் வழங்கியதாக சொல்லும் ‘நந்தனார்’ (1935) படம் தான் இவருடைய முதல் படம். ஆனால், இயக்குனரின் பெயர் மனிக் லால் தண்டோன் என்பவர் இருந்தது. அதன் பின் இவர் இயக்கி, எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936) படம் இவருக்கு அதிக பெயர் எடுத்துக் கொடுத்தது.

 அமெரிக்காவில் பிறந்த டங்கன் அவர்கள் தனது நண்பரோடு இந்திய சினிமாவில் பணியாற்றத்தொடங்கினார். பின்னாளில், 1950ல் வரை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக மாறிவிட்டார். இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மீரா, மந்திரி குமாரி, பொன்மூடி போன்ற பல படங்களில் தமிழில் இருக்கியிருக்கிறார். 1950களுக்கு பிறகு ஆங்கில படங்கள் இயக்குவதில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார்.

ஆர். பத்மநாபன் 

 1930களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர். ஆரம்பத்தில் திரைப்படங்களில் விநியோகம் செய்வதில் தொடங்கிய இவரது திரைப்பயணம் திரைப்படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார். சேது பந்தம், ஆசை, துரோபதி வஸ்த்ராபிஹாரம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

டி.ஆர். சுந்தரம் 



இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ கார்ப்பிரேட் நிறுவனங்கள் படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் கார்ப்பிரேட் கலாச்சாரம் இல்லாத காலத்தில் கார்ப்பிரேட் நிறுவனம் போல் ‘மார்டன் தியேட்டர்’ நிர்வாகம் செய்திருக்கிறார். இரண்டு மாதத்திற்கு ஒரு படமாவது மார்டன் தியேட்டரில் மூலம் வெளிவரும் அளவிற்கு அவரது நிறுவனம் செயல்பட்டது.

 சதி அகால்யா, பத்ம ஜோதி , மாணிக்கவாசகர், உத்தம புத்திரன் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். திரையுலகின் தயாரிப்பாளர்கள் தான் ‘முதலாளி’. ஆனால், தமிழ் திரையுலகில் முதலாளி என்று கூறினால் அது டி.ஆர்.சுந்தரம் அவர்கள் தான். இன்னும் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். படச் சுருல் அழிந்தது போலவே அவர்களுடைய பெயர்களும் அழிந்துவிட்டது. ஒரு படத்தின் வெற்றி இயக்குனர் கையில் இருந்தாலும், வியாபாரத்திற்கு நாயர்கள் நம்பி தான் இருக்கிறது.

அதையும் மீறி சில இயக்குனர்கள் ரசிகர்களுக்கான படங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, மே இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails