வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, August 27, 2014

சினிமா 1913 -2013 - 8. தமிழ் சினிமாவில் ஆரம்ப எழுத்தாளர்கள்

சென்ற மாதம் தொடருக்கு தொலைப்பேசி அழைத்து வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எந்த காலத்திலும் “நடிகைகள்” பற்றி எழுதினால் அதிக வரவேற்பு இருக்கும் என்பதை தங்களின் பாராட்டு நிருபிக்கிறது.

அதில், ஒருவர் 1940,50 சினிமாவில் எழுதிய வசனக்கர்த்தா, பாடலாசிரியர்களை பற்றி சொல்லாமலே 60களில் இருக்கும் சினிமாவுக்கு செல்வதை குறையாக கூறினார்.

1940, 50 சினிமாவில் பிலிம் சுருள்கள் அழிந்த நிலையில் அந்த படங்களுக்கு பாட்டெழுதியவர்கள், வசனம் எழுதியவர்கள் குறிப்பு சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். பிரபலமான படங்களில் பாடல், வசனம் எழுதியவர்கள் விவரங்கள் மட்டுமே கிடைத்தது.

மலையாளப்படங்கள் இன்று விருதுகள் குவிக்கும் பல காரணங்களில் முக்கிய காரணம் கதை, வசனம் இயக்குனர்கள் எழுதுவதில்லை. அதற்கென்று தனி நபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குனர்களே கதை, வசனம் எழுதிவிடுவதால் அதன் பிரிவுப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. கதை, வசனம் எழுத முடிந்தவர்களால் இயக்க முடியும் என்ற மாயை தோன்றிவிட்டது. எது சரி, தவறு என்று இயக்குனருக்கு எடுத்து சொல்லவும் யோசிக்கிறார்கள்.

அடுத்த மாதம் 60களில் வரும் சினிமாவை பார்ப்போம் என்று கூறி, இந்த மாதம் தமிழ் சினிமா ஆரம்பக்கால பாடலாசிரியர், வசனக்கர்த்தா பற்றி பார்ப்போம்.

பாபநாசன் சிவன்

தமிழ்ப்பட உலகில் பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் கொடிக்கட்டிப் பறந்த காலக்கட்டத்தில் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதியவர் பாபநாசன் சிவன் அவர்கள். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். “தமிழ்நாட்டின் தியாகையா” என்று போற்றப்பட்ட இசை மேதை.

1933ல் “சீதா கல்யாணம்” என்ற தமிழ்ப்படத்திற்கு அவர் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தியாகராஜர் அறிமுகமான “பவளக் கொடி” படத்திற்கும் இசை அமைத்தார். அடுத்து தமிழின் மெகா சூப்பர் ஹிட் படமான “சிந்தாமணி” க்கு பாடல் எழுதி இசையமைத்திருக்கிறார். இவர் பாடல் எழுதிய கையோடு, அதை எப்படி பாட வேண்டும் என்ற மெட்டையும் கொடுத்துவிடுவார்.

1933 முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். பக்த குசேலா, குபேர குசேலா, தியாக பூமி போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். பாகவதர் நடித்த “அம்பிகாபதி”, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் போன்ற படங்களுக்கு அவர் எழுதிய பாடல் காலத்தை வென்று இன்றும் இருக்கிறது. இவரின் நினைவாக மைலாப்பூர் சாந்தோம் பகுதியில் இருக்கும் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொத்தமங்கலம் சுப்பு 




எஸ்.எஸ்.வாசனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர், ஜெமினி நிறுவனத்தின் மிகப் பெரிய தூண் என்று சொல்லக் குடியவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.

நடிகர், ’அவ்வையார்’ படத்தின் இயக்குனர் என்பதோடு இல்லாமல் காலத்தால் அழியாத “தில்லானா மோகனாம்பாள்” படத்தின் கதையை எழுதியவர் இவர். பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதி வந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 1941ல் ஜெமினி தயாரித்த “தாசி அபரஞ்சி” என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார்.

அதன்பின் “மிஸ் மாலினி” படத்தை இயக்கி, அந்த படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். 1953ல் ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான “அவ்வையார்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் அழியா புகழ் பெற்றார்.

கவிஞர் கம்பதாசன்

1940களில் மிகப் பெரிய பாடல் ஆசிரியராக விளங்கியவர் கவிஞர் கம்பதாசன். ”வாமனாவதாரம்” என்ற படத்திற்கு ஏழு பாடல்கள் எழுதி தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார்.

“ஞானசவுந்தரி” யில் இவர் எழுதிய “அருள் தாரும் தேவ மாதாவே” என்ற பாடலும், “அவன்” படத்தில் இடம் பெற்ற :கல்யாண ஊர்வலம் வரும்” போன்ற புகழ் பெற்றவை. தனது திருமண வாழ்க்கை முறிவால், மதுவுக்கு அடிமையாக்கி இறுதி வாழ்நாளில் மிகவும் சிரமப்பட்டு இறந்தார்.

நாஞ்சில் ராஜப்பா

பாகவதர் நடித்த “ராஜமுக்தி” படத்திற்கு வசன எழுதிய புதுமைபித்தன் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது, மீதி வசனத்தை எழுதியவர் நாஞ்சில் ராஜப்பா அவர்கள்.

ஆரம்பக்காலங்களில் சில நாடகத்தை டைரக்ட் செய்து, அதில் முக்கிய பாத்திரத்தில் நாஞ்சில் ராஜப்பா நடித்து வந்தார். இவர் நடித்த “திருமழிசை ஆழ்வார்” நாடகம் சென்னையில் தொடர்ந்து ஒரு வருடம் மேல் நடந்தது. 1948ல் “சிட்டாடல் மூவிஸ்” திரைப்பட நிறுவனத்தின் முதல் படமான “ஞானசவுந்தரி” என்ற படத்தில் முதன் முதலாக கதை, வசனம் எழுதினார்.

இதய கீதம், மல்லிகா, விஜய புரி போன்ற 12 படங்களுக்கு கதை – வசனம் எழுதியிருக்கிறார். 1971ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அரசு திரைப்படக் கல்லூரியின் துணை விரிவுரையாளராக நாஞ்சில் ராஜப்பா நியமிக்கப்பட்டார்.

ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ.சாமி அழைக்கப்படும் ஆரோக்கிய சாமி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இன்னொரு முகம். இவர் எழுதிய “பில்ஹணன்” என்ற வரலாற்று நாடகம் 40களில் திருச்சி வானொலி ரேடியோ நாடகமாக ஒலிபரப்பானது. இந்த நாடகத்தை டி.கே.சண்முகம் அவர்கள் மேடை நாடகமாக மாற்றி வெற்றிப் பெற செய்தார்.

இவரின் எழுத்து திறமையை வியந்த ஜூபிடர் பிக்சர்ஸார் தங்கள் படத்தின் கதை பிரிவுக்கு வேலைக்கு அழைத்தனர். பின்னர், அவர்களின் தயாரிப்பான மோகினி, அபிமன்யூ, ராஜகுமாரி போன்ற படங்களை இயக்கவும் வாய்ப்பளித்தனர்.

அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” கதையை திரைப்படமாக எடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதை தொடர்ந்து மர்மயோகி, துளிவிஷம், தங்கப்பதுமை, அரசிளங்குமரி, கற்புக்கரசி போன்ற இயக்கி இருக்கிறார்.

கலைஞர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் போது ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராக பணியாற்றினார். தமிழக முதல்வர்களாக அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற மூன்று முதல்வர்களிடம் பண்யாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஆகஸ்ட், இதழ், 2014


Monday, August 11, 2014

இராக் : அமெரிக்காவின் மௌனம் கலைந்தது !!

திரைப்படங்களுக்கு இரண்டாம் பாகம் வருவது போது, இன்று ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இரண்டாம் பாகம் வரத் வந்துக் கொண்டு இருக்கிறது. சதாம்மை அழித்ததோடு இராக்கில் தங்கள் பணி முடிந்தது என்று அமெரிக்கா இராணுவம் மூட்டைக் கட்டிக் கொண்டு தங்கள் நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். தங்களுக்கு சாதகமான ஷியா முஸ்லிம் தலைமையிலான ஆட்சி அமைந்தது, குர்துஸ்தான் தன்னாட்சியானது என்று எல்லாம் சுபமயமாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது நடப்பது எல்லாம் நேர் எதிர்.

Islamic State of Iraq and the Levant (ISIL) என்று அழைக்கலாம். Islamic State of Iraq and Syria (ISIS) என்று அழைக்கலாம். சுருக்கமாக ISIS என்று கூட அழைக்கலாம். எப்படி அழைத்தாலும் இவர்களின் நோக்கம் லெபனான், சைப்ரஸ், சிரியா, பாலஸ்தீன், ஜோர்டன், இஸ்ரேல், துருக்கியின் சில தென் பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகள் ஒருங்கிணைத்து ”இஸ்லாமிய தேசம்” உருவாக்க வேண்டும் என்பது தான்.

இன்னொரு ஜிஹாத்தி அமைப்பு தான். ஆனால், மற்றவர்களை போல் இவர்கள் என்று நினைத்து விட முடியாது. இவர்கள் முன்வைக்கும் கனவு “”இஸ்லாமிய தேசம்” தான் பலரை ஈர்க்கிறது.

கூகிள் இணையத்தில் ‘isis’ என்று அடித்து பார்த்தால் எகிப்திய காலத்து காவல் தெய்வத்தின் பெயர் வந்து நிற்கும். அதை வழிபடும் முறை, அதன் அருள், பாரப்பரங்கள் எல்லாம் சொல்லும். அதை அடுத்து இப்போது வரும் இன்னொரு லிக் இராக்கில் இருக்கும் “ISIS” அமைப்பைப் பற்றியதாக இருக்கும்.

இவர்களின் பிராதான நோக்கம் இராக்கையும், சிரியா, இன்னும் பல இஸ்லாமிய நாடுகளை கலந்தடித்து ஒரு அகண்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும். இராக், சிரியா இரண்டுமே இஸ்லாமிய தேசம் தான்.

ஒரு மதத்தில் சேர்ந்தவர்கள், உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று தோன்றலாம். அனால், இரண்டு தேசத்திலும் பெரும்பான்மை ஷியா முஸ்லீம் சேர்ந்தவர்கள். ISIS அமைப்பு சன்னி முஸ்லிம் அமைப்பு.

சன்னி முஸ்லிம். இராக் ஐந்தில் ஒரு பங்கு தான். சன்னி முஸ்லீம் சேர்ந்த சதான் ஹூசைன் மட்டும் அங்கு அதிபர் பதவி ஏற்கவில்லை என்றால், இவர்கள் ஆயுத ஏந்தி இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அமெரிக்கவால் ஷியா முஸ்லிம் ஆட்சி அமைந்த பிறகு சன்னி முஸ்லிம்களை ராணுவ, அரசு வேளை ஒதுக்காமல் இருந்திருந்தால் இவர்கள் ஆயுதம் சண்டையிட்டுயிருக்கமாட்டார்கள் என்று வாதிடலாம். அந்த அமைப்பு இத்தனைப் ஷியா முஸ்லீம்களை கொன்று குவித்திருக்க மாட்டார்கள் என்று பேசலாம். முடிந்த சம்பவங்களுக்கு இப்படி பல யூகங்கள், கருத்துக்கள் சொல்லிக் கொண்டு இருப்பதில் எந்த பலனுமில்லை. நடந்துக் கொண்டு இருக்கும் மரணங்களை யாராலும் தடுக்க முடியாது.

ISIS அல் கொயிதாவின் மறு உருவமா, ஆசிர்வாதம் பெற்ற அமைப்பா, நெருக்கமான தொடர்பு உடையவர்களா என்று அமெரிக்க உளவுத்துறை மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒன்று உறுதி. இவர்களின் செயல்பாடுகள் இரண்டு அமைப்புகளுக்கும் அவர்களின் சாயல் இருக்கிறது. இவர்கள் இராக்கின் அல் கொயிதா !!

*

இரண்டு ப்ளாஷ்பேக்

அல் கொயிதாவின் நட்பு அமைப்பான தாலிபன் ஆகஸ்ட் 8, 1998ல் மஸார் ஏ ஷரீஃப்ல் 8000 பேரை சுட்டு கொன்றுள்ளார்கள். இறந்தவர்கள் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அல் கொயிதாவோ, மற்ற அமைப்போ தாலிபனின் இந்த செயலை கண்டித்ததாக தெரியவில்லை. (உபயம் பா.ராவின் ’தாலிபன்’ நூல்)

சதாம் ஹூசைன் காலம். பாக்தாத்துக்கு வடகிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இரான் எல்லையோரம் இருக்கும் ஹல்ப்ஜா என்கிற குர்திஷ் நகரம். இராக் இராணுவம் சுற்றி வளைத்து குண்டு மழைகளை பொழிந்தது. வீடுகள், சாலைகள் அனைத்தையும் அழித்தது. ரசாயன ஆயுதங்களாளும் தாக்கினர். ஐயாயிரம் பேர் மேல் இறந்தனர். பதினெட்டாயிரம் பெயர் மேல் பாதிக்கப்பட்டனர். அனைவரும் ஷியா முஸ்லிம் பிரிவினை சேர்ந்தவர்கள். 

சதாம் காலத்தில் ஷியா வகுப்பினர் கொத்து கொத்துக்காக கொல்லப்பட்டது ஒரு உதாரணம். சந்தேகமே இல்லாத ஒரு இனப்படுகொலையை சதாம் அப்போது செய்திருக்கிறார். (உபயம் பா.ராவின் ’சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்’ நூல்) 

சதாம் ஹூசைன் பத்து வருடம் முன் கலாவதியான பெயர் தான். அவர் இறந்து ஏழு வருடங்களாகிவிட்டது. ஆனால், அவர் விட்டு சென்ற எச்சம், அறிவிக்கப்பட்டாத வாரிசுகாளத் தான் இந்த ISIS அமைப்பாக செயல்ப்படுகிறது.

ISISயின் எழுச்சி, தாக்குதல், படுகொலைகள் பார்த்து அமெரிக்காவுக்கு கலங்கி போய்யிருப்பது மறுக்க முடியாது. மத்திய கிழக்கில் இவர்கள் ஆதிக்கம் வளரத் தொடங்கினால், இஸ்ரேல் போன்ற தேசத்தில் ஆபத்து நிச்சயம். அதனால், ISIS தங்கள் சமூகத்தை சார்ந்தவர்களை காக்க வந்த ஆபத்தாண்டனாக தெரியலாம்.

காஸா காப்பாற்றப்படலாம். அங்கு நடக்கும் இனப்படுகொலை தடுக்கப்பட்டும். ஆனால், ஷியா முஸ்லீம், கிறிஸ்த்துவர்கள், மற்ற மதத்தினர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறி தான். கொசுவுக்கு பயந்து வீட்டை எரிக்கும் கதையாக மாறலாம். இன்னொரு இனப்படுகொலை அரங்கேறாது என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

முன்பு அமெரிக்க தனது படையை அனுப்பாமல் இருந்ததற்கு பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் போன்ற பல பிரச்சனைகள் உள்ளுக்குள் இருந்தது (இப்போதும் இருக்கிறது). ஆனால், யுத்தம் என்பது அவர்களுக்கு சக்கரை பொங்கல். அதை அவர்கள் விட மாட்டார்கள். அப்படி இருந்தும் அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பாமல் மௌனமாக இருப்பது முக்கியக் காரணம் இருக்கிறது.

ஆட்டம் நடந்துக் கொண்டு இருப்பது சன்னி முஸ்லிம் vs ஷியா முஸ்லிம். ISIS சன்னி முஸ்லிம். இராக் அரசு, இராக் இராணுவம் ஷியா முஸ்லிம். அண்டை நாடுகளான சிரியா, லெபானன் பெரும்பான்மை ஷியா மக்கள். ஷியா அரசு. ஒரு போதும் ISIS ஆதரவு தர மாட்டார்கள். லெபானனில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பும் ISISவை ஆதரிக்கவில்லை.

இராக்கில் தங்கள் வேலை முடிந்த கையோடு Round 2வில் ISISயின் அடுத்த டார்கெட்டாக சிரியா இருக்கும். அங்கு உள்நாட்டு கலவரம் நடப்பதாலும், அதிபர் பதவியை விட்டு பஷர் அல் ஆஸாத் இறங்க மாட்டேன் அடம் பிடிப்பதாலும் ISISயின் டார்கெட் சுலபமாக இருக்கலாம். ISISயின் நடவடிக்கையால் உலகளவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு நடுவில் பெரிய பிரிவினையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது அமெரிக்காவுக்கு லாபமே !!

அமெரிக்கா தனது இராணுவத்தை அனுப்பினால், ஆட்டம் அமெரிக்கா vs இஸ்லாமியர்கள் என்று மாறிவிடும் என்று யோசித்தது. அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படலாம். இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கப்படலாம். அதனால், அமெரிக்கா எந்த சேதாரம் இல்லாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது.

ஆனால், இப்போது அமெரிக்கா அந்த மனநிலையில் இல்லை.

காரணம், ஒவ்வொரு வெற்றியிலும் இராக்கின் இராணுவ ஆயுதங்களை கைப்பற்றி போர் செய்கிறார்கள். ஆதாவது, அமெரிக்க இராக்க்கு அனுப்பிய இராணுவ ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள். இராக் இராணுவமும் அவர்கள் பெறும் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஒரு நாட்டின் இராணுவம் எந்த வேகத்தில் பாக்தாத்தை நெருங்க முடியுமோ அந்த அளவுக்கு ISIS வேகமாக நெருங்கியதை உதாரணமாக சொல்லலாம். இப்போது ISIS அடுத்த டார்க்கெட் குர்துஸ்தான் !!

பல போராட்டங்களுக்கு பிறகு குர்துஸ்தான் தன்னாட்சி அடைந்திருக்கிறது. அதை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ISISயை எதிர்த்து முழு மூச்சோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ISIS தாக்குதலில் இஸ்லாமியர்களோடு பல கிறிஸ்துவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் பெரும் வெற்றி ஆயுதப்பலமாக மாறிவருகிறது. குர்துஸ்தான்னில் இருக்கும் அமெரிக்க தூதுரகத்தில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை. இனி அமைதியாக இருந்தால் நல்லது இல்லை. தங்கள் விமானத்தை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா ISISவுக்கு எதிரான தாக்குதல் குர்து வீரர்களுக்கு உத்வேகமாய் அமைந்திருக்கிறது. தங்களுக்கு பின் அமெரிக்கா ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில் ISISவை எதிர்த்து போரிட தொடங்கியிருக்கிறார்கள்.

எண்ணெய் அரசியலில் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவோடு கூட்டு என்பது சாத்தியமில்லை தான். ஆனால், யுத்த அரசியலில் எதுவும் சாத்தியம்.

கட்டுரைக்கு உதவியது 

பா.ராகவன் நூல்கள் – 
1. ஆடிப்பாரு மங்காத்தா 
2. சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் 
3. தாலிபன் 

இணையதளம்

http://en.wikipedia.org/wiki/Islamic_State_of_Iraq_and_the_Levant
http://www.independent.co.uk/news/world/middle-east/iraq-crisis-american-intervention-against-isis-boosts-kurdish-morale-as-president-obama-launches-more-air-strikes-9659493.html http://edition.cnn.com/2014/08/09/world/meast/iraq-crisis/
http://www.vox.com/2014/8/7/5980595/iraq-crisis-bombing

Saturday, August 9, 2014

சினிமா 1913 -2013 – 7. ஆரம்பக் கால கதாநாயகிகள்

எந்த தொழிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பணிப்புரிகிறார்கள். ஓய்வு எடுக்கும் வயது வரை ஆண்கள் வேலை செய்யலாம். ஆனால், பெண்கள் குடும்பம், சொந்த கடமைகள் என்று வலையத்திற்குள் சிக்கி கொள்வதால் தங்களுக்கு திறமையிருந்தும் அந்த துறையில் முழுமையாக பணி செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

மற்ற துறைகள் இப்படி இருக்கும் போது சினிமாத்துறை பற்றி சொல்ல வேண்டியதில்லை. புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு சினிமா விட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு சினிமாவில் தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்ற விரும்பம் இருந்தாலும், வயது காரணமாக ஓரம் கட்டப்படுவார்கள். எந்த தொழிற்துறை காட்டிலிலும் சினிமாவில் பெண்கள் பல சவால்களை சந்தித்துக் கொண்டு தான் சாதிக்கிறார்கள்.

சினிமாவில் வேண்டுமானால் பெண் உரிமைப் பற்றி பேசலாம். ஆனால், சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பெண் உரிமைப் பற்றி பேசினால் ஓதுக்கிவிடுவது இன்றைய சூழ்நிலை. இந்த காலத்திலேயே இப்படி இருக்கும் போது சினிமாவின் ஆரம்பக் காலத்தில் பெண்கள் நடிப்பது என்றாலே கேவலமாக பார்த்த காலத்தில் அவர்களின் நிலைமை அதைவிட பரிதாபம். அதையும் மீறி சாதித்த சில பெண்களை தான் இந்த வாரம் பார்க்க போகிறோம்.

டி.பி.ராஜலட்சுமி 

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி என்று இல்லாமல், முதல் பெண் இயக்குனர் என்ற புகழுக்குரியவர் டி.பி.ராஜலட்சுமி அம்மா அவர்கள். எட்டு வயதில் பாலிய திருமணத்தில் வரதட்சனை கொடுமையால் அம்மா வீட்டுக்கு வந்தார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு குடும்ப சுமையை ஏற்க ராஜலட்சுமி அம்மா சுமக்க வேண்டியதாக இருந்தது.



அப்போது சி.எஸ்.சாமண்ணா நாடக கம்பெனியில் நடிக்க சென்றார். ராஜலட்சுமி அம்மா பார்க்க அழகாகவும், நல்ல குரல் வளமும் இருந்ததால் மாதம் ரூ.30 சம்பளம் கிடைத்தது. (அன்றைய தேதியில் ஒரு சவரன் ரூ.13)

பல நாடகங்களில் நடிக்க பெண் கிடைக்காததால் ஆண்கள் (சிறுவர்கள்) பெண் வேடமிட்டு நடிப்பார்கள். ஆனால், டி.பி.ராஜலட்சுமி அம்மா முதல் முறையாக ‘அர்ஜூனன்’ வேடமிட்டு நடித்தார். முதல் ஆண் வேடமிட்ட பெண் நடிகையும் இவர் தான்.

டி.பி.ராஜலட்சுமி அம்மா தனது ஆபார திறமையால் பல நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கோவலன், உஷா சுந்தரி போன்ற மௌனப் படங்களில் நாயகியாக நடித்ததோடு இல்லாமல், முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தின் நாயகியாகவும் நடித்தார்.

பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இவருக்கு ’சினிமா ராணி’ என்ற பெயரும் சூட்டினர். டி.வி.சுந்தரம் என்பவரை மணந்து கடைசி வரை வசதியுடன் வாழ்ந்து இறந்தார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி 

“பவளக்கொடி” நாடகத்தை பார்த்த அழகப்ப செட்டியாரும், மானகிரி லேனாவும் தாங்கள் தயாரிக்கும் படத்திற்கு இவர்கள் தான் நாயகன், நாயகி என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தை இயக்கவிருந்த கே.சுப்பிரமணியனும் ’சரி’ என்று சொல்லிவிட்டார். அந்த நாடகத்தில் நாயகனாக நடித்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நாயகியாக நடித்தவர் எஸ்.டி.சுப்புலட்சுமி.



தனது கணீர் வசனத்தால் இந்த வாய்ப்பினைப் பெற்றார். ‘பவளக்கொடி’ படத்தில் நடித்த தியாகராஜ பாகவதருக்கு ரூ.1000 சம்பளம். இயக்குனர் கே.சுப்பிரமணியனுக்கு ரூ.700 தான். ஆனால், நாயகியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மாவுக்கு ரூ.2000 சம்பளம் வழங்கப்பட்டது.

கே.சுப்பிரமணியன் இயக்கிய மற்றொரு படமான ‘நவீன சாரங்கதரா” படத்திலும் நடித்தார். கே.சுப்பிரமணியன் முன்பே திருமணமானவர் என்றாலும், எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மா அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கே.பி.சுந்தரம்மாள்

இன்று வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம். மறக்க முடியாத குரல். நினைவில் நிற்கும் பாடல்கள். முதல் படமான “நந்தனார்” படத்தில் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்ற நடிகை என்ற புகழ். அனைத்திற்கும் சொந்தமானவர் கே.பி.சுந்தரம்மாள் அவர்கள்.

இளமையின் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் “வள்ளி திருமணம்”, “கோவலன்”, “ஞானசவுந்தரி” போன்ற பல நாடகங்கள் நடித்ததோடு இல்லாமல் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சுந்தரம்மாளுக்கு 25 வயது இருக்கும் போது கிட்டப்பா அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அதன் பின் துறவி போல் கடவுள் பாடல்கள் மட்டுமே பாடி வந்தார். ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கூட்டங்களில் மட்டும் கலந்துக் கொண்டார்.

அதன் பின் வந்த சினிமா வாய்ப்புகளிலும் பக்தி பாடல்கள் பாடும் பாத்திரங்களை மட்டும் ஏற்று நடித்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி

இன்னும் எத்தனை நூற்றாண்டு கொண்டாடினாலும் ”காற்றினிலே வரும் கீதம்” (’மீரா’ படம்) பாடலை யாராலும் மறக்க முடியாது. காலையில் அவரது சுப்ரபாதம் பாடல் கேட்டாமல் கண் விழிப்பவர்கள் குறைவு. அந்த அளவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் குரல் நம்மை வசியம் செய்து வைத்திருக்கிறது.

“சேவா சதனம்” படத்தில் அறிமுகமான எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள் தமிழ் சினிமா முக்கிய ஆளுமையாக இருக்கிறார். “சாவித்திரி” என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடப்பதற்கு ரூ.40,000 சம்பளமாகவும் பெற்று இருக்கிறார். திரைப்படங்களில் நடித்ததோடு இல்லாமல் பல ஆன்மிக பாடல்களை பாடியும் இருக்கிறார்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையரசி. நான் வெறும் பிரதம மந்திரி தான்” என்று நேரு புகழாராம் சூட்டி இருக்கிறார்.

தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்த சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது 88வது வயதில் இறந்தார்.



டி.ஆர்.ராஜகுமாரி

இன்று தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு என்று அளவுக் கோள் இல்லாமல் இருக்கிறது. சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழை வாங்குவதைக் கூட பெருமையாக நினைக்கும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால், தனது காந்தப் பார்வையாலே பலரது கனவுக் கன்னியாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள்.

“கச்சதேவயானி” என்ற படத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் ‘ஹரிதாஸ்’, சந்திரலேகா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி பாத்திரங்களில் ஏற்று நடித்து ’வில்லி’ பாத்திரத்திற்கு புது இலக்கணத்தை அமைத்திருக்கிறார்.

ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்ற பெயரும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவுக்கே சேரும்.

மேலும் பானுமதி, டி.கே.மதுரம், புஷ்பவல்லி போன்ற நாயகிகளை பட்டியல் போட்டு பேச தொடங்கினால் நீண்டு கொண்டே போகும்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஜூன் இதழ், 2014

Monday, August 4, 2014

மூடப்படும் புத்தகக் கடைகள் !!

2005ல் டைடல் பார்க்கில் இருக்கும் Calsoft நிறுவனத்தில் வேலை செய்யும் போது வாரத்திற்கு மூன்று, நான்கு புத்தகங்கள் படிப்பேன். தினமும் இரண்டு மணி நேர ரயில் பயணம், பிரம்மச்சாரி, பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கை… புத்தகங்களோடு காதல் இனிமையாக இருந்தது.

பெரம்பூர் கிளை நூலகத்தில் இருக்கும் பிடித்தப் புத்தகங்களை படித்துவிடுவேன். ஒரு வாரத்தில் புத்தகங்கள் ரிடிட்டனாகி, அடுத்த இரண்டு புத்தகங்களை எடுத்து விடுவேன். புது புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றால் மட்டும் அலுவலக நேரம் ஒத்துவரமால் இருந்தது. 6 நாள் வேலை. ஞாயிறு மதியம் வரை தூக்கம். மாலை நண்பர்களை யாராவது பார்ப்பது அல்லது மொக்கை தமிழ் படங்களை ரசிப்பது என்று இருப்பேன்.



டைடல் புட் கோர்ட் அருகே ஒரு ஹிக்கின் பாதம்ஸ் ஷோ ரூம் இருந்தது. பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள் இருந்ததால் நான் அங்கு போகாமல் இருந்தேன். ஆனால், என் கண் ஷோ ரூம் பார்க்காமல் செல்லாது. ஒரு நாள் சாண்டில்யன், சுஜாதா, சுகி.சிவம் நூல்கள் வெளியே தெரியும் படி வைத்திருந்தார்கள். அப்போது தான் நான் முதன் முதலில் அங்கு புத்தகம் வாங்கினேன்.

அன்றைய ரசனை நான் சுகி.சிவம், சோ, ஓஷோ, வைரமுத்து போன்றவர்களின் புத்தகங்களை வாங்குவேன். குறைவான தமிழ் புத்தகங்கள் இருந்தாலும், மாதம் என்னால் இரண்டு பில் டைடல் ஹிக்கின் பாதம்ஸ்க்கு வரும். அங்கு வேலை செய்யும் லால் எனக்கு நெருக்கமானார். எனக்காகவே சில நூல்கள் வரவழைத்தார். அங்கு தான் இயக்குனர் Azhagappan Rasi எனக்கு அறிமுகமானார்.

2006ல் திருமணத்திற்கு பிறகு இரண்டு பில், ஒரு பில்லாக மாறியது. 2007ல் வேறு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் பெற்றேன். என் அலுவலக நண்பர்கள் ரூ.1000 ஹிக்கின் பாதம்ஸ்க்கு புத்தகம் வாங்க பரிசாகக் கொடுத்தார்கள். கடைசியாக அங்கு சில புத்தகங்களை வாங்கி டைடல் ஹிக்கின் பாதம்ஸ்யை விட்டு விடைப் பெற்றேன்.

அங்கு கொடுக்கும் வாடகைக்கு பாதிக்கூட புத்தகங்கள் விற்பனையாகிறாதா என்று தெரியவில்லை. ஒரு விளம்பரத்திற்காக அங்கு கடை வைத்திருப்பதாக சொன்னார்கள். ஒரு புத்தகக்கடை வேலை செய்யும் ஐ.டி. நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் லாபமாக இயங்கினால் சந்தோஷம் தான். ஆனால், அது நஷ்டத்தை ஏற்படுத்துவிடக் கூடாது !!!

ஒரு புத்தகக் கடைக்கு பெரிய முதலீடு அதன் வாடகையும், விளம்பரத்திற்கான செலவு மட்டும் தான். புத்தக ரேக், கம்ப்யூட்டர், இத்தாயி பொருட்கள் எல்லாம் நாட்களானாலும் எதோ மதிப்பு இருக்கிறது. ஆனால், விளம்பரத்திற்கு செய்யும் ஆடம்பர செலவு விற்பனையில் வரும் லாபத்தின் மூலமே சரி செய்ய முடியும். எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என்றால், விளம்பரத்திற்கு செய்த செலவு முழுவதும் நஷ்டம் தான். மீண்டும் அந்த பணத்தை எடுப்பது என்பது சிரமம்.

லெண்ட்மார்க் கடைகள் ஒவ்வொன்றாக மூடி வருவதை பார்க்கும் போது எனது பயம் ஹிக்கின் பாத்தம்ஸ் போன்ற புத்தகக்கடைகளுக்கு இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பது தான். அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் வேலையால் அமெரிக்கன் புக் ஹவுஸ் இடம் மாறியிருக்கிறது. இன்னும் புத்தகக் கடைகள் விற்பனை குறைந்திருக்கிறது. அரண்மனைப் போல் இருக்கும் ஹிக்கின் பாத்தம்ஸ் இன்னும் பல தலைமுறை வாசகர்களை உருவாக்க வேண்டும். சில ஆடம்பர செலவுகளை அவர்கள் குறைக்க வேண்டும்.

சென்னையில் லெண்ட்மார்க் தோல்விக்கான காரணங்களை அவர்கள் வெளியிட்டால் ஹிக்கின் பாத்தம்ஸ் மட்டுமில்லாமல், இன்னும் மற்ற புத்தகக் கடைகளுக்கு படிப்பினையாக இருக்கும். புத்தகக் கடை தொடர்ந்து இயங்க உதவியாக இருக்கும்.

மூடு விழா லெண்ட்மார்க் மட்டுமே கடைசியாக இருக்க வேண்டும். புத்தகக் கடைகளுக்கு இருக்கக் கூடாது என்பது தான் எனது ஆசை.

”எனக்கு சிறந்த நண்பன் புத்தகம்.
 எனக்கு பிடித்த கோயில் புத்தகக் கடை.”

LinkWithin

Related Posts with Thumbnails