வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 17, 2014

சினிமா 1913 -2013 : 9. குணச் சித்திர நடிகர்கள் !

சினிமாவில் கதாநாயகிகள் அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள் நடிக்கலாம். அதன்பின் அக்கா, அன்னி, அம்மா பாத்திரங்களுக்கு நடிக்க வந்துவிட வேண்டியதாக இருக்கும். நாயகர்கள் அவர்களை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அவர்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் அண்ணன், அப்பா பாத்திரங்களுக்கு மாற வேண்டியது இருக்கும் என்பது தான் சினிமாவின் விதி. (எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் போன்ற விதி விளக்குகளும் சினிமாவில் உண்டு.)

1930, 40 களில் புகழ் பெற்ற நாயகர்களாக கொடிக் கட்டி பறந்து, பின்பு ஐம்பது சினிமாவில் குணச் சித்திர பாத்திரங்களில் பிரபலமானாவர்கள் பலர் இருக்கிறார்கள்.



எம்.ஆர்.ராதா 

1954ல் வெளியான “ரத்தக்கண்ணீர்” படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்புக்கு வித்திட்ட நடிகர். இன்று வில்லன நடிகர்கள் தங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடியாக இருப்பவர் எம்.ஆர்.ராதா அவர்கள் தான்.

எம்.ஆர்.ராதா அவர்கள், தமிழில் சினிமா 1937ல் “ராஜசேகரன்” என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது குதிரை மீது குதிக்கும் காட்சியில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டது. அதன் பிறகு, “பம்பாய் மெயில்” என்ற படத்திலும் நடித்தார். என்ன காரணத்திற்காகவோ அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி நாடகத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

”ரத்தக் கண்ணீர்” வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவருக்கு பொருத்தமான பாத்திரம் கொடுக்க முடிக்க முடியுமா என்று அஞ்சியே யாரும் அவரை அனுகவில்லை. தயாரிப்பு ஒத்துழைப்பு தரமாட்டார் என்ற பேச்சு அப்போது அவர் மேல் இருந்தது.

மூன்று வருடம் கலித்து ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் “நல்ல இடத்து சம்பந்தம்” படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தயாரிப்பாளர் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்தது. மாறுப்பட்ட வேடங்களில் ராதா அண்ணன் நடிக்க முடியும் பலரது நம்பிக்கைப் பெற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

டி.ஆர். மகாலிங்கம். 

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக மின்னியவர் டி.ஆர்.மகாலிங்கம். சிறு வயதில் இருந்தே பாடும் திறமைக் கொண்டவர். 1938ல் ஏவி.எம்மின் படமான “நந்தகுமார்” படத்தின் மூலம் அறிமுகாமானார். அப்போது அவருக்கு வயது 14 !!

தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த டி.ஆர். மகாலிங்கம் பரசுராமர், பூலோக ரம்பை போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் வெளியான “ஸ்ரீ வள்ளி” படம் டி.ஆர்.மகாலிங்கத்தை முக்கிய நடிகராக மாற்றியது. அதை தொடர்ந்து வந்த “நாம் இருவர்” படமும் டி.ஆர்.மகாலிங்கத்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் வேதாள உலகம், ஞானசவுந்தரி, மாயாவதி, பவளக்கொடி என்று பல படங்களில் நடித்தார்.

புகழ் உச்சியில் இருக்கும் போது தனது மகனின் பெயரில் “சுகுமார் புரொடக்ஷனஸ்” என்ற கம்பெனி சொந்தமான படம் தயாரிக்கத் தொடங்கினார். மச்சரேகை, மோகசுந்தரம், சின்னத்துரை, விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். இதில், ’சின்னத்துரை’ படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதில் எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை. அது வரை அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழக்க வேண்டியதாக இருந்தது. கடன்காரர்களை சமாளிக்க முடியாமல் தன் சொத்துக்களை அனைத்தையும் இழந்தார்.

கண்ணதாசன் இவருக்கு உதவுவதற்காக “மாலையிட்ட மங்கை” என்ற படத்தை தயாரித்தார். படம் வெற்றிப் பெற்றாலும், இவரால் மீண்டும் ‘நாயகன்’ அந்தஸ்தில் நடிக்க முடியவில்லை. குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாக இருந்தது. திருவிளையாடல், அகத்தியர், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். 1978ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.

ரஞ்சன் 

’நாயகன்’ என்றால் நல்லவனாக இருக்க வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும், வில்லனோடு சண்டைப் போட வேண்டும் என்று இருந்த காலக்கட்டத்திலே ரஞ்சன் அவர்கள் வில்லன் தன்மைப் பொருந்திய நாயகனாக நடித்தவர். இவர் நடித்த ‘சந்திரலேகா’ இன்று வரை காலத்தால் மறக்க முடியாத காவியப்படமாக இருக்கிறது.

”ரிஷ்யசிருங்கர்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த “மங்கம்மா சபதம்” மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில், அப்பா – மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தாலும், அப்பா பாத்திரத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது.

“சந்திரலேகா” படத்தில் எம்.கே.ராதா தான் நாயகன் என்றாலும், நாயகனுக்கு இணையாக ரஞ்சனின் வில்லன் பாத்திரப்படைப்பு இருந்தது. இறுதிக் காட்சியில் இவர்களின் கத்திச் சண்டை பிரமாதமாக அமைந்தது. எம்.கே.ராதா நடித்த “அபூர்வ சகோதர்கள்” படத்தை இந்தி பதிப்பான “நிஷான்” படத்தில் நாயகனாக நடித்தார்.

வி.நாகையா

தெலுங்கு பட உலகில் கொடிக்கட்டி பறந்தவர் வி.நாகையா. 1938ல் கண்ணம்மாவோடு “கிரகலட்சுமி” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், சுமங்கலி, தேவதா போன்ற பல படங்கள் நடித்தார். 1950ல் தமிழில் இவர் நடித்த “ஏழை படும் பாடு” மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

”என் வீடு” (1953) என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்ததோடு இல்லாமல் டைரக்ஷ்ன், இசை இவரே ஏற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் “சர்வாதிகாரி”, சிவாஜியின் “தெனாலிராமன்”, மீரா, பாவமன்னிப்பு என்ற பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். நடிப்புக்காக மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர், தனது கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தால் சிரமப்பட்டு இறந்தார்.

எஸ்.வி.சகஸ்ரநாமம்

நாடகத்துறை மட்டுமில்லாமல் திரைப்படத்துறையிலும் பல சாதனைப் புரிந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள்.

டி.கே. சண்முகம் அவர்கள் “சண்முகானந்தா சபா” நாடகக் குழுவில் பணியாற்றியவர், 1935ல் “மேனகா” படத்தில் முதன் முதலாக நடித்தார். இந்தப் படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர் என்.எஸ்.கே !!

”என்.எஸ்.கே நாடக சபை” யின் முக்கிய நடிகராக விளங்கியதோடு இல்லாமல் அந்த நாடகக் குழுவின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறைச் சென்ற போது, அந்த காலக்கட்டத்தில் உருவான “பைத்தியக்காரன்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

1949ல் ஏ.வி.எம் தயாரிப்பான “வாழ்க்கை” படத்தில் எதிர்மறை நாயகன் பாத்திரத்தை ஏற்றார். ”பராசக்தி” படத்தில் சிவாஜி அண்ணனாக நடித்தவர், பிறகு சிவாஜி நடித்த பல படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“போஸ்காரன் மகள்” படத்தில் இவர் ஏற்று நடித்த தந்தைப் பாத்திரம் மறக்க முடியாதவை.

எஸ்.வி. ரங்கா ராவ்

ராவணா, கடோத்கஜன், துரியோதனன், இரணியன் என்று புராணப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர் எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள். 1946ல் ’வரோதினி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர், இரு மொழியில் எடுக்கப்பட்ட “பாதாள பைரவி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

ஒரு பக்கம் இராவணன், ஏமன் என்று புராணப் பாத்திரங்கள், இன்னொரு பக்கம் “பேசும் தெய்வம்”, “படிக்காத மேதை”, “முத்துக்கு முத்தாக” படங்களில் குடும்பத் தலைவன் பாத்திரம், மாயஜாலப் படங்களில் வில்லன் பாத்திரம் என்று சகலமும் ஏற்று நடிக்கக் கூடிய வல்லவர்.

”பக்த பிரகலாதா” படத்தில் கிட்டதட்ட பதினைந்து கிலோ எடையுள்ள ஆபரணங்களை அணிந்து நடித்தார்.

“விஸ்வ நாடக சக்கரவர்த்தி” என்று புகழ்ப் பெற்ற இவர் தனது 56வது வயதில் இறந்தார்.

அடுத்த இதழில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள் !!!!

நன்றி : நம் உரத்தசிந்தனை, செப்டம்பர், இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails