வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 27, 2016

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கக்கூடாது ?

தமிழக அரசியலில் பலர் மதிக்கதக்க தலைவர்களில் வை.கோ மிக முக்கியமானவர். அரசியல் மட்டுமல்லாமல் இலக்கிய சொற்பொழிவிலும் முதன்மையாக திகழ்பவர். தி.மு.கவை என்ன எதிர்த்து விமர்சனம் செய்தாலும், பல தி.மு.கக்காரர்கள் இவர் மீது சாப்ட் கார்னர் இருப்பது மறுக்க முடியாது. அப்படிப்பட்டவர், உதிரிக்கட்சிகளை எல்லாம் ஒருங்கினைத்து ”மக்கள் நலக் கூட்டணி” என்று மூன்றாவது அணி தொடங்கியதும், தமிழக அரசியலில் மாற்று அணி முக்கியத்துவத்தை உணர்த்த சரியான தருணம் என்று பலர் பாராட்டினார்கள். 

’முக்கியமான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர்’ என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நேரத்தில், ’விஜயகாந்த்’ தலைமையை ஏற்று மீண்டும் அதே விமர்சனத்திற்கு தொடர்கதை எழுதியிருக்கிறார். 

விஜயகாந்த் இல்லாத கூட்டணியாக இருந்திருந்தால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அணியாக அமைந்திருக்கலாம். அல்லது வைகோ தலைமையிலான அணியென்றால் கொஞ்சமாவது நம்பிக்கை பிறந்திருக்கும். அரசியலில் பக்குவப்பட்ட வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் சகோதரர்கள் மத்தியில் பக்குவமல்லாத விஜயகாந்த் இருக்கிறார். அதுவும் தலைமை ஏற்றுயிருப்பது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. 

தே.மு.தி.க மக்களின் ஓட்டு பிரிக்கும் சக்தியாக இருக்கிறாரே தவிர மக்கள் நம்பிக்கை பெற்ற சக்தியாக இல்லை என்பதை மக்கள் நலக் கூட்டணிக்கு தெரியாதது இல்லை. அப்படிப்பட்ட கட்சியை தங்கள் கூட்டணியில் இழுத்தது தவறில்லை. ஆனால், ‘தலைமை’ கொடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.



இவர்களை ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கு சில விஷயங்களை பார்ப்போம்.

1. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த தே.மு.தி.க… ஒன்று மக்கள் நலக் கூட்டணி என்ற வட்டத்திற்கு நுழைந்திருக்க வேண்டும் அல்லது தே.மு.தி.க கூட்டணி கட்சிகள் என்ற புதிய வட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்று எதற்காக அழைக்க வேண்டும் ? ’மக்கள் நலம்’ வார்த்தையில் தே.மு.தி.கவுக்கு உடன்பாடு இல்லையா ? பிடிக்காதா ?

2. தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி. வெளிப்படையாக சொல்வதென்றால் சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை அடிப்படையிலோ, செயல்பாடுகளிலோ வெவ்வேறாக இருப்பவர்கள். ஒரு வேளை வெற்றி பெற்றால், இந்த கூட்டணி அடுத்த ஐந்தாண்டு வரை தொடருமா என்பது சந்தேகம் தான். 

3. சாதாரன விஷயத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியவர் விஜயகாந்த். நாளை, பிரதமரிடமோ, வெளிநாட்டு தொழிலதிபர்களிடமோ தமிழ்நாட்டு நலன் குறித்து பேச்சு வார்த்தையில் பக்குவமாக நடந்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. சினிமாவில் நடிப்பது போல் உணர்ச்சிவசப்பட்டால் தமிழ்நாட்டு பெயர் என்ன கதியாகும் என்று யோசித்து பாருங்கள். 

4. விஜயகாந்த் கலைஞரை போல் தனது கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக இருப்பாரா? அல்லது ஜெயலலிதாவை போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பாரா ? என்று பார்த்தால் இரண்டுமே இல்லை. அவர் தனித்து இயங்கக் கூடியவர். எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணித்தால், அவர் வேறு பக்கம் செல்லக்கூடியவர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகும், அவர் அப்படி செயல்பட்டால் 100% மறு தேர்தல் வரும் என்பதில் சந்தேகமில்லை. 

5. மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் “விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை போல் மோசமானவர் இல்லை” என்கிறார். அரசியலில் நல்லவர், கெட்டவர் என்பதை விட நிர்வாகத்திறமை மிக்கவரா என்பது மிக முக்கியம். அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்கக்கூடியவரா ? முக்கிய அரசியல் முடிவுகளுக்கு சரியான முடிவு எடுக்கக்கூடியவரா ? பொருளாதார திட்டத்தை வளர்க்கக்கூடியவரா ? 

மொத்தத்தில் விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை விட ஆளுமை திறமை கொண்டவரா என்றால் ’இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியாக, அவரது எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகி அம்மா பக்கம் சாயும் போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஜெயலலிதாவை சந்தித்ததை சொல்லலாம். தற்போது சந்திரகுமார் பிரச்சனையை கூட விஜயகாந்த்தை விட வைகோ தான் அதிகம் பேசியிருக்கிறார். 

6. ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்பது விஜய்காந்த் உழைப்பால் உருவான கூட்டணியல்ல. வை.கோவின் உழைப்பால் உருவானது. ஒவ்வொரு கட்சி தலைமையிடம் பேசி வை.கோ உருவாக்கியது. தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கூட்டணியை வை.கோ அப்படியே விஜயகாந்த் தலைமைக்கு கொடுத்திருக்கிறார். தான் முதல்வராக வேண்டும் என்பதற்கு உழைக்காத விஜய்காந்த் மக்களுக்காக உழைக்க போகிறாரா ? 

7. விஜயகாந்த் ஊடகத்தின் மீது நம்பிக்கையற்றவர். தனது கட்சியாளர்களை எந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்காதவர். கேமிரா முன் “த்தூ” துப்ப தயங்காதவர். அப்படிப்பட்டவர் முதல்வரானால் ஊடகத்தினரை சந்திப்பாரா ? மக்கள் ஊடகத்தின் வழியாக கேட்க நினைக்கும் கேள்வியை பதிலளிப்பாரா ? ஊடகத்தை ஒரே அடியாக புறக்கணிப்பாரா ? என்பது தெரியவில்லை. 

8. தங்கள் பிரச்சாரத்தில் த.மு.க, அ.தி.மு.க விமர்சிக்கிறார்களே தவிர தங்கள் தேர்தல் அறிக்கையை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வதாக தெரியவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையை விட மக்கள் அதிருப்தி தான் தங்களுக்கு ஓட்டு வங்கி நினைப்பவர்கள், தங்களின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்களா ? 

9. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றால் நல்லது. ஒரு வேளை. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி 70-80 சீட் வெற்றி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். திமுக அல்லது அதிமுக தேர்தலில் 90- 100 சீட் வெற்றி பெறுகிறது. இன்னொரு கட்சி 40-50 என்று வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

 அவர்கள் தி.முக. / அதிமுக ஆட்சி அமைக்க அவர்களை ஆதரிப்பார்களா அல்லது தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவைக் கேட்பார்களா ? அப்படி முக்கியமா பிரச்சனை வரும் பட்சத்தில் ஒன்றுக்கு ஆறு கருத்து உருவாகும். கூட்டணி உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் தேர்தல் தான். 

10. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. “Known devil is better than Unknown Angel”. விஜயகாந்தோ, ம.ந.கூட்டணியோ எந்தக் காலத்திலும் தெரியாத தேவதை என்று சொல்லமுடியாது. தி.மு.கவுக்கு, அ.தி.மு.கவுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்தவர்கள். இந்த முறை பேரம் படியவில்லை என்பதால், எல்லோரும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாற்று கட்சி என்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக, தனது அரசியல் வாழ்க்கையில் கோவில்பட்டியில் நடந்துக் கொண்டது போல் வைகோ இதற்கு முன் நடந்துக் கொண்டதில்லை. இது வரை சம்பாதித்த பெயரையெல்லாம் இந்த தேர்தலில் அடகு வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் தோல்வியுற்றால், தி.மு.க – அ.தி.மு.க அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ம.தி.மு.க தோல்விற்றால் அடுத்த தேர்தல் வரை கட்சி இருக்குமா என்பது தெரியவில்லை. 

 “தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்கிறார். ஏன் அ.தி.மு.க இப்படி செய்யமாட்டார்களா ? கடந்த ஐந்து வருடங்களாக ஜாதி அடிப்படை வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. தர்மபுரி எரிப்பு, காதல் ஆணவக்கொலை, தலித் பெண் டி.ஜி.பி தற்கொலை என்று பல சம்பவங்கள் இருக்கிறது. 

“தி.மு.க – அ.தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்றோ, அல்லது “இரண்டு பெரிய கட்சியின் கூட்டு சதி” என்றோ சொல்லியிருக்கலாமே ! இரண்டு கட்சியை எதிர்த்து போட்டியிடும் போது ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டு தாக்கி பேசுவது ஏன் ? அ.தி.மு.க அதிருப்தி ஓட்டுகளை பெற்று, மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைக்க உதவி செய்யவா ? 

மொத்தத்தில்  பக்குவமில்லாத, எளிதில் உடைந்துவிடக்கூடிய தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வாக்களிப்பதை விட வழக்கம் போல் தி.மு.க – அ.தி.மு.கவுக்கே வாக்களிக்கலாம். அல்லது சுயேட்சை வேட்பாளர், 49 ஓவுக்கு வாக்களிக்கலாம்.

Friday, April 22, 2016

உலக சினிமா : Birdcage Inn

உங்கள் வீட்டின் எதிரே ஒரு விபச்சாரி இருக்கிறாள். தினமும் அவளோடு தங்குவதற்கு ஆண்கள் வந்து போகிறார்கள். சில சமயம் எதிர் வீட்டில் இருக்கும் கூச்சல் சத்தம் உங்கள் வீடு வரை கேக்கிறது. அப்போது உங்களுடைய மனநிலை என்ன ? 

நான் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பேன் என்று கூறி நல்லவர் போல் நடிக்கலாம். ஆனால், உங்கள் மனதில் அவளோடு ஒரு இரவு தங்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கும். அதற்கான விலையை அவளிடம் பேசத் தோன்றும். அதே சமயம் உங்கள் வீட்டு பெண்களுக்கு அந்த விஷயம் தெரியக் கூடாது என்ற அச்சமும் இருக்கும். 

இது ஆண்களுக்கான மனநிலை. மாற்ற முடியாது. ஒரு பெண் தன் வீட்டு எதிரில் விபச்சாரி தங்கியிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்வாள் ? தன் வீட்டின் இருக்கும் ஆண்களை அவளிடத்தில் காப்பாற்ற நினைப்பாள். அவளை அங்கிருந்து துரத்திவிடதான் நினைப்பாள். ஆனால், அவளால் அதிக ஆதாயம் இருக்கும் போது அவளை ஒரு பெண்ணால் எப்படி ஒதுக்கிவிட முடியும். வெளியே சிரித்து நடித்து, உள்ளுக்குள் கோபத்தை வளர்த்துக் கொள்வாள்.



விபச்சாரி எதிர் வீட்டில் இருக்கும் ஆண் – பெண் மனநிலையை கடந்து மூன்றாவது முக்கியமான ஒருவரின் மனநிலை இருக்கிறது. அந்த விபச்சாரியின் மனநிலை. இரவில் பணத்துக்காக ஒருவரோடு இருந்து, மறுநாள் மற்றவர்கள் போல் இயல்பான வாழ்க்கை வாழலாம் என்று நினைக்கும் போது, மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வை எப்படி இருக்கும் ? பகலாக இருந்தாலும் இரவில் செய்யும் வேலையை தான் செய்ய வேண்டும் என்ற சுற்றியிருக்கும் பார்வைகள் நினைக்கும். தன்னுடைய செயல்பாடு நியாயம் சொல்ல முடியாமல், அவர்களின் பார்வையை கடந்து செல்ல முடியாமல் அந்த விபச்சாரியின் மனம் தள்ளாடிக் கொண்டு இருக்கும். 

அந்த விபச்சாரி தங்கியிருக்கும் எதிர் வீட்டில் அவள் வயதுடைய ஒரு பெண் அவளை எப்படி பார்ப்பாள் ? அவளோடு எப்படி பழகுவாள் ? அவர்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கும் ? இப்படி ஒரு விபச்சாரிக்கும், சாராசரி குடும்ப பெண்ணுக்கும் இருக்கும் உறவை சொல்வது தான் "Birdcage Inn" படத்தின் கதை.  

கடற்கரை சிறு ஹோட்டல் விடுதி. ஒரு பெண், தனது சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவள் எதிரில் இன்னொரு பெண் சாமான்களோடு உள்ளே வருகிறாள். அந்தப் புதிய பெண், கிளம்பிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, வழியனுப்புகிறாள். ஆனால், கிளம்பும் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. 

புதிதாக வந்த பெண்ணின் பெயர் ஜின்-ஆ. புதிதாக வந்த இடத்தின் அழகை ரசிக்க கடற்கரை பாறை மீது அமர்கிறாள். அப்போது கண்கள் சொருகி கடலில் விழ, ஒருவர் அவளை காப்பாற்றுகிறார். மீண்டும் விடுதிக்கு வரும் ஜின்-ஆ தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் அவளை முகம் சுளுத்து பார்க்கிறாள். அவள் “Birdcage Inn” நடத்தும் முதலாளியின் மகள் ஹ்யே – மி. 

அந்த விடுதியை நடத்தும் முதலாளிக்கு உதவாத கணவன். பள்ளிக்கு செல்லும் பதின்ம வயதில் ஹ்யூன்- வூ என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறாள். இரவில் தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவோடு, ஜின்-ஆவும் விருந்தாக இருக்கிறாள். அது தான் ஜின்-ஆவின் தொழில் என்பது நமக்கு அப்போது தான் புரிகிறது. 

அந்த விடுதி மூலம் வரும் வருமானத்தில் அதை நடத்து பெண்மணி தனது மகன், மகளை படிக்க வைக்கிறாள். குடும்பமும் நடத்துகிறாள். ஆனால், அவளின் கணவன் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அவனால் ஜின்-ஆ கற்பழிக்கப்படுகிறாள். ஆனால், அதை அவளது மனைவியிடம் கூறவில்லை.

பதின்ம வயது மகன் ஹ்யூன்- வூ புகைப்பட போட்டிக்காக அவளை நிர்வாணப்படத்திற்கு போஸ் கொடுக்க வற்பூறுத்திக் கொண்டே இருக்கிறான். ஜின் – ஆ பல முறை மறுத்தும் அவன் கேட்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் கடற்கரை படகில் அவன் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க, அவளோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்துகிறான். ஜின் – ஆ மறுத்தும் அவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அவளும் இணங்கிறாள். 

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இப்படி இருக்க, முதலாளி பெண்மணியோ அவளை பணம் சம்பாதித்துக் கொடுக்கும் கருவியாக பார்க்கிறாள். தனக்கு நட்பாக பழகக்கூடியவள் ஹ்யே – மி என்று நினைத்து, அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுக்கிறாள். ஆனால், ஹ்யே – மி ஜின் – ஆவின் நட்பை ஏற்றுக் கொள்ளவில்லை. 

இதற்கு நடுவில், ஹ்யே – மிவுக்கு ஒரு காதலன் இருப்பது தெரியவருகிறது. ஹ்யே – மி உடல் உறவுக்கு அழைக்க, திருமணத்திற்கு முன் கிடையாது என்று மறுக்கிறாள். ஹ்யே – மி உறவுக்கு மறுத்த சோகத்தில் போதையோடு ஜின் – ஆவுடன் உறவுக்காக செல்கிறான். 

ஜின் - ஆ வாழும் அறையை பார்க்க ஹ்யே – மி உள்ள நுழைகிறான். அங்கு இருக்கும் பொருட்கள், படங்கள் எல்லாம் பார்த்து அவள் மீது இரக்கம் பிறக்கிறது. தன் சம வயதில் இருக்கும் ஒரு பெண் வாழும் வாழ்க்கை நினைத்து அவள் மீது பரிதாபம் பிறக்கிறது. 

அந்த சமயத்தில் ஹ்யூன்- வூ ஜின் – ஆவை எடுத்த நிர்வாணப்படம் பத்திரிகையில் வெளியாகிறது. அவளின் முன்னாள் தரகர் பத்திரிகையாளர் கொடுத்தப் பணத்தில் பங்குக்கேட்கிறான். தனக்கு யாரும் பணம் தரவில்லை என்று ஜின் – ஆ சொல்லியும் அவன் நம்ப மறுகிறான். கோபத்தில் ஜின் – ஆவை அடிக்கவும் செய்கிறான். அந்த சமயத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். 

அந்த தரகர் திரும்பவும் பணத்திற்காக வருவேன் என்று சொல்லி செல்கிறான். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஜின் – ஆ தற்கொலை செய்து கொள்ள தனது கையை அறுத்துக் கொள்கிறாள். ஆனால், சரியான நேரத்தில் ஹ்யே – மி அவளை காப்பாற்றுகிறாள். அந்த வீட்டில் இது வரை கிடைக்காத அன்பும், கனிவும் ஹ்யே – மி மூலம் கிடைக்கிறது. 

ஹ்யே – மி ஜின் – ஆவை கை கட்டோடு அழைத்து வந்து தனது அறையை காட்டுகிறாள். அப்போது, விடுதிக்கு ஒரு வாடிக்கையாளர் வர ஜின் – ஆ பதிலாக ஹ்யே – மி அந்த வாடிக்கையாளரோடு உறவுக் கொள்கிறாள். 


கதை என்று எடுத்துக் கொண்டால் ஒரே இடத்தில் வாழும் சமய வயதுடைய இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை வெறும் உடலாக பார்க்கிறார்கள். அதன் மூலம் வரும் ஆதாயத்தை மட்டும் அனுபவிக்கிறார்கள். இன்னொரு பெண்ணிடம் அன்பாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு பெண்களை நடத்தும் மனிதர்கள் அவர்களுக்குள் ஒரு பாசப்பினைப்பை உருவாக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தனது காதலனுடன் இழக்க விரும்பாத தனது கண்ணித்தன்மையை, ஜின் – ஆவுக்காக இழக்கிறாள். 

மற்ற இயக்குனர்களை காட்டிலும் கிம் கி டுக் இதில் தான் வேறுபட்டு இருக்கிறார். ஏதார்த்த வாழ்க்கை இப்படி நடக்குமா என்ற கேள்வியோடு அதை நடத்தி காட்டி நம்மை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வார். அதை ஏற்றுக்கொண்டால் நாம் கணத்த மனதோடு செல்ல வேண்டும். ஏற்கக்கூடாது என்று நினைத்தால் நாம் கிம் கி டுக்கை முழுவதுமாக புரக்கணிக்க வேண்டும். 

இரண்டு பெண்ணின் வாழ்க்கை காட்டிய கிம் கி டுக்கின் “Birdcage Inn” படைப்பை உங்களால் புரக்கணிக்க முடியாது என்பது தான் உண்மை.

Wednesday, April 20, 2016

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் + மாயா = தாரகை

முந்தைய தினம் நண்பர் விநாயக முருகன் என் பதிவின் பின்னூட்டத்தில் “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என்றெல்லாம் பிரித்து சொல்லும் இலக்கிய அத்தாரிட்டிகள் யார்?” என்று கேட்டார். 

”இது ஒரு நல்ல கேள்வி” என்பதோடு நான் ஜெகா வாங்க வேண்டியதாக இருந்தது. இலக்கிய உலகத்தில் யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது என்பது தான் என் கருத்து. ஒருவர் ”இது வெகுஜன எழுத்து, அது இலக்கிய எழுத்து” என்று கருத்து கூறினால் அதை ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. அதேப் போல், “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டும் ஒன்று தான்” சொன்னாலும் அதை ஏற்று கொள்ள இன்னொரு கூட்டம் இருக்கிறது. 

அவரவர் ரசனைக்கும், வாசிப்பும் தகுந்தாற்போல் வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து பிரித்து பார்த்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சுஜாதாவின் எழுத்து ஒரு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வேறு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வாசகன் தனக்கு பிடித்ததை தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அது அவனுக்கான சுதந்திரம். 

தமிழ்மகன் எழுதிய தாரகை நாவலுக்கும், வெகுஜன - இலக்கிய எழுத்துக்கும், மிக பெரிய தொடர்பு இருக்கிறது. 



தாரகை - இரண்டு நடிகையைப் பற்றிய கதை. ஒன்று தீபிகாவுடையது. இன்னொரு மாயாவுடையது. இரண்டும் ஒரே சமயத்தில் பயணிக்கிறது. ஏறக்குறைய இரண்டு கதையும் ஒரே மாதிரியாக தோன்றும். ஒரு சில விஷயங்களில் உண்மை இருக்கிறது. இன்னும் சில விஷயங்களில் பொய் கலந்திருக்கிறது. இதில் எது உண்மை, பொய் என்பதை தீபிகா – மாயாவுக்கு மட்டுமே தெரியும். அது தான் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம்.

தமிழ்மகன் “தாரகை” நாவலில் பலரது நடிகையை நகல் எடுத்து காட்டுகிறார். அவர்களின் வாழ்க்கையின் பிரதி எடுத்து நம்மோடு புத்தகமாக உரையாடுகிறார். அவளுக்கான நியாயத்தை நம்மிடம் சொல்கிறார். அவளின் நியாயத்தை நாம் கேட்கும் போது நமக்கான அறத்தை மறந்து அவளுடைய அறத்தை மட்டுமே வாசிக்கிறோம். 

’தாரகை’ வித்தியாசமான இலக்கியப்படைப்பாக தெரியலாம். ஆனால், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா என்று இரண்டு வெகுஜன நாவலின் கலவை. 

தமிழ்மகன் 2006ல் எழுதிய ”ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம்”, 2008ல் எழுதிய “மாயா” பலரது கவனம் பேராத நாவல்கள். இரண்டும் வெகுஜன இதழில் தொடராக வந்தது. ஸ்வாரஸ்யம் குறையாத விறுவிறுப்பானது. இரண்டுமே நடிகையைப் பற்றியது. வெகுஜன நாவல் வரிசையில் வரக்கூடியது. 

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா இரண்டும் கலந்து, அதற்கான தொடர்பை உருவாக்கி, ஒரு சில திருத்தங்கள் செய்து இரண்டு நடிகையோடு ஒரே சமயத்தில் நம்மை வாசிக்க வைக்கும் ”தாரகை” நாவலாக தந்திருக்கிறார். 

இரண்டு வெகுஜன நாவலை கலந்து ஒரு அழகிய இலக்கிய படைப்பாக எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு ‘தாரகை’ மிகப் பெரிய உதாரணம். வெகுஜன நாவலை எப்படி இலக்கிய வரிசையில் கொண்டு வரலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறது. 

என்னுடைய ரசனைக்கு, தாரகையை இலக்கிய படைப்பாகவும், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா வெகுஜன படைப்பாகவும் பிரிக்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனைக்கு பிரித்துக் கொள்ளலாம். அதில் நான் தலையிட முடியாது. 

Monday, April 18, 2016

உலக பாரம்பரிய தின வாழ்த்துகள் !!

“நாவலுக்கான நல்ல கண்டெண்ட் எடுத்துக் கொண்டு, வெகுஜன எழுத்துக்களில் உங்களை தொலைத்துவிட்டீர்கள்”. 

சமிபத்தில் விஜய மகேந்திரன் எனது நாவலான “பெரியார் ரசிகன்” குறித்த உரையாடலில், அவர் கூறிய ஒரு விஷயம் இது. 

என்னைப் போன்ற வரலாற்று எழுத்தாளர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல் இது. வெகுஜன நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைகளுக்கு எழுதி பழக்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் இலக்கிய தாகத்தில் சீரியஸ் நாவல் எழுத ஆசை வரும். தீவிர இலக்கிய தாகத்திற்கும், வெகுஜன கட்டுரைகள் எழுதிய பழக்கத்திற்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள். வெகுஜன எழுத்தை இழந்தால் தான் இலக்கியப்படைப்பை சிறப்பாக உருவாக்க முடியும் என்ற எதார்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு படைப்பை எழுதிவிடுவார்கள். 

அப்படிப்பட்ட மனநிலை எழுதியது தான் “பெரியார் ரசிகன்”. 



வெகுஜன எழுத்துகளில் வரும் வருமானம் இலக்கிய எழுத்துகளில் வருவதில்லை. ஆனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் விரும்புவது அந்த ’இலக்கிய எழுத்தாளர்’ என்ற பெயரை தான். வாழும் போது வயிற்றுக்கு உணவு தருவது 'வெகுஜன எழுத்து' என்று தெரிந்தும், நமது கல்லறைக்கு பிறகு வாழ்த்தும் இலக்கியத்தையே மனது விரும்பும். 

தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் தங்களுக்கான அங்கிகாரத்தை வாழ்க்கை இறுதிக்கட்டத்திலோ அல்லது மரணத்திற்கு பிறகோ தான் பெருகிறார்கள். அதைப்பற்றிய உண்மை அறிந்தும் தங்களது இலக்கிய படைப்பில் எத்தனையோ வரலாற்று பதிவுகளை தங்கள் படைப்பில் பதிவு செய்கிறார்கள். உலக பாரம்பரியத்தை தங்களது எழுத்தால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறார்கள். 

அப்படி, உலக பாரம்பரியத்தை, நமது வரலாற்றை, நாவல் வழியாக பதிவு செய்து எழுதும் இலக்கிய எழுத்தாளர்களை ‘உலக பாரம்பரிய தினத்தில்’ வாழ்த்துவோம் !!

Thursday, April 7, 2016

மரணம் ஒரு கொண்டாட்டம் !!!

நாம் யாருக்காக உழைக்கிறோமோ, நேசிக்கிறோமோ, வாழ்ந்துக் கொண்டிருக்கிறமோ அவர்கள் நம்மை பற்றி கவலைப்படாமல் சுயநலமாக நடந்துக் கொள்ளும் போது நமது வாழ்க்கை அர்த்தமற்றது போன்ற ஓர் உணர்வு தோன்றும். அப்போதெல்லாம் மரணத்தை குறித்த சிந்தனை ஏழும். அப்படி பல முறை நமது மரணத்தை குறித்த சிந்தனையை உங்களை சுற்றியிருப்பவர்கள் நினைவுப்படுத்துக் கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கடந்து எதோ ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையில் பயணிப்போம். 

அப்படிப்பட்ட ஒரு மனச்சாட்சியின் உரையாடல் தான் சம்பத்தின் ”இடைவெளி”. 



இந்த நாவலில் வரும் தினக்கரன் மரணத்தை கொண்டாடுபவன். மரணத்தை பற்றியே சிந்திப்பவன். மரணத்தோடு உரையாடுபவன். மரணத்தோடு ஸ்நேகமாக்கி கொள்கிறான். மரணம் என்றால் என்ன ? என்ற கேள்வி எழுப்பி அதற்கான விவாதத்தை முன் வைக்கிறான். 

நாவல் முழுக்க “சாவு” என்ற வார்த்தையில் நமது மரணத்தை நினைவுப்படுத்துகிறார். 

மரணத்தை குறித்த சிந்தனை எவ்வளவு அற்புதமானது. நம்மை சுற்றியிருப்பவர்களின் உண்மையான நிறத்தை காட்டுகிறது. அவர்களின் சுயநலத்தை புரியவைக்கிறது. வாழ்க்கையின் முடிவான ஒரு இடம் இருப்பதை தெளிவுப்படுத்துகிறது. இங்கு எதுவுமே நமக்கானது இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது. 

 வாழ்க்கை எந்த அளவுக்கு அற்புதமானதோ… மரணத்தை குறித்த சிந்தனையும் மிக அற்புதமானதாக இருக்கிறது. 

’நாம் மரணிக்க அஞ்சுகிறோம்’ என்றால் யாரோடு வாழ ஆசைப்படுகிறோம் என்ற கேள்வி எழுப்பிப்பாருங்கள். நாம் அன்பு காட்டிய மனைவி அல்லது காதலி, மகன் / மகள், பெற்றோர்கள், நண்பர்கள் அவர்களோடு வாழும் சந்தர்ப்பத்தை இழக்க மனம் ஏற்காமல் இருக்கலாம். 

உண்மையில், நம் மரணத்தை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் தான். நாம் அவர்களுக்கு தேவை. நம் அன்போ, பணமோ, சேவையோ அவர்களுக்கு தேவை இருக்கிறது. அதைக் குறித்த அச்சமே அவர்களின் சோகத்தை காரணமாக அமைகிறது. 

உண்மையில் நாம் மரணத்தை குறித்து அஞ்சுகிறோம் என்றால், நமக்காக எதையும் செய்யக் கூடிய நபர்கள் இருப்பவர்களை நினைத்து தான் கவலைப்பட வேண்டும். நமது பிறந்த நாளை கொண்டாடுபவர்கள், நமக்கு பிடித்ததை செய்பவர்கள், நமது அன்பை பெருவதை நோக்கமாக கொண்டவர்கள். நமது கவனத்தை தங்கள் பக்கம் வைத்திருப்பதை விரும்புபவர்கள். அப்படி ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால், சந்தோஷப்படுங்கள். நீங்கள் மரணத்தை குறித்து அஞ்சத் தேவையில்லை. 

இந்த உலகத்தில் நாம் இறக்கும் போது எதையும் இழக்கப்போவதில்லை. நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை இழக்கிறார்கள். இந்த உலகில் பிறப்பு பிறகு போதுவானதாகவும், அடிப்படையாகவும் ஒன்று உண்டு என்றால் அது ’மரணம்’ தான். 

மரணத்திற்கு நம்மை தயார்ப்படுத்துக் கொண்டுவிட்டால், எந்த விதமாக பிரச்சனைகளையும் சமாளித்துவிட முடியும். எல்லா காரியங்களும் துசிப் போன்றதாக இருக்கும். எப்பேர்ப்பட்ட துரோகத்தை சகித்துக் கொள்ள முடியும். சுற்றத்தின் சுயநலத்தை மன்னிக்கும் பக்குவம் வரும். 

 உங்கள் மரணத்தை நீங்கள் தயார்ப்படுத்துக் கொண்டு சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை வாசிக்கவும். ஒர் அற்புதமான உணர்வு உங்களுக்காக காத்திருக்கிறது. 

குறிப்பு : சம்பத்தின் ”இடைவெளி” நாவல் அச்சுப்புத்தகமாக இல்லை. வாசிக்க விரும்புபவர்கள், கீழ் காணும் இணையதளத்தில் e-book ஐ download செய்துக் கொள்ளலாம். 

Tuesday, April 5, 2016

ஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்தனின் மிக முக்கியமான ஆவணப்படம். 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட ஆவணப்படம் என்று சொல்லலாம். 

ஜூலை 11, 1997 

ராமாபாய் நகரில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தற்காக தலித் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்க வந்த காவல்துறையினர் சரமாரியாக தூப்பாக்கி சூடு நடத்தியது. அதில் பத்து பேர் இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். 

காவல்துறை தரப்பில் காவலர்களின் டான்க்கர் லாரியை தாக்க வந்ததால் தற்காப்புக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். ஆனால், இறந்தவர்களின் ஒருவர் சடலம் கூட டான்க்கர் லாரி அருகில் இல்லை. அதற்கு சாட்சியாக பெட்ரோல் பங்க்கில் இருப்பவரின் வீடியோ கவரேஜ் காட்டப்படுகிறது.

தூப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையாக கொடுக்கப்பட்டது. சிவ சேனா போன்ற இந்து கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தனமான பேச்சை வெளிப்படுத்தும் காட்சிகளை இடம்பெறுகிறது.



அடுத்து, இரண்டாம் பாகத்தில் கைர்லன்ஜி கிராமத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ’குன்பி’ என்ற ஆதிக்க சமூகத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் சடலமும் நிர்வாணமாய் கிடக்கிறது. ஆனால், அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று காவல் அதிகாரிகள் சொல்கின்றனர். அதற்கான பிரேதப் பரிசோதனையும் காவலர்கள் நடத்தவில்லை. 

அடுத்து, அம்பேத்கர் எழுச்சி பாடல்கள் பாடும் ’கபீர் கலா மன்ச்’ பற்றியது. அந்த குழுவினருக்கும் நக்ஸல்பாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தேடுதல் நடத்தப்படுகிறது. தங்களை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதை காவல்துறையினர் குறியாக இருக்கிறது என்று ’கபீர் கலா மன்ச்’ கூறுகிறார்கள்.

எல்லாவற்றிருக்கும் உச்சக்கட்டமாக, எந்த ராமப்பாய் நகரில் தூப்பாக்கிச் சூடு நடந்ததோ, அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.கவினரோடு தங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களின் தலைவரும் பிரச்சாரம் செய்கிறார். 

இந்திய அரசியல் சட்டப்படி தலித் மக்களை ’இந்துக்கள்’ என்று சொல்கிறது. இந்துத்துவத்தினர் எல்லோரையும் இணைப்பது தான் தங்கள் லட்சியம் என்று சொல்கிறார்கள். 

 ஆனால், அவர்களே தலித் மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails