வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 11, 2017

A Violent Prosecuter ( 2016) (Crime movie – Korean )

தமிழில் நல்லப்படங்கள் வரும் போது அந்த கருத்தை உடைப்பதற்காகவே ”இது கொரியன் படத்தின் காப்பி” என்று விமர்சனம் வரும். கொரியன் படத்தை எப்படி தமிழில் காப்பி அடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்தப்படத்தை பார்ப்பார்கள். இப்படி, உலகத்தை தன் பக்கம் பார்க்க வைக்கும் கொரிய சினிமா மட்டும் சொந்தமாக சிந்திக்கிறார்களா என்றால் இல்லை என்று சொல்லலாம். அதற்கு சிறந்த உதாரணம் ”A Violent Prosecuter”. ஏறக்குறைய ஆங்கிலத்தில் வெளியான ’The Shawshank Redemption’ பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். 



ஆரம்பக் காட்சியில் பறவைகள் சரணாயமான இடத்தை அழித்து கார்ப்ரேட் கட்டிடம் கட்டும் நிறுவனத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்களை தடுத்து காவலர்கள் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அப்போது ஒரு சிலர் போராட்டக்காரர்கள் உடையில் உள்ளே நுழைந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு காவலர்களும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கிறது. 

மறு நாள் எல்லா ஊடகங்களும் காவலர்களை தாக்கியப் போராட்டக்காரர்களை குறித்து செய்தி ஒளிப்பரப்பாகிறது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தரப்பில் வழக்கு நடத்த ப்யூன் ஜே-வூக் நியமிக்கப்படுகிறான். அவன் இயல்பிலே கோபமாக நடந்து கொள்பவன். க்ளைட் என்று பார்க்காமல் கோபத்தை காட்ட தயங்காதவன். 

வழக்குக்காக கைது செய்யப்பட்ட போராட்டக்காரன் ஒருவனை விசாரிக்க தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறான். தனது வழக்கமான பாணியில் அவனை விசாரிக்கிறான். எந்த உண்மையும் சொல்லாத போராட்டக்காரன் அடுத்த நாள் இறக்கிறான். அவனது மரணத்திற்கு ப்யூன் தான் காரணம் என்று கைது செய்யப்பட்டு பதினைந்து வருட சிறை தண்டனை கிடைக்கிறது. 

சிறையில் அடைக்கப்படும் ப்யூன் ஜே-வூக் தனது சட்ட ஆலோசனையின் மூலம் சில அதிகாரிகளுக்கு உதவ, அவனுக்கு சிறையில் பல சலுகைகளும், நண்பர்களும் கிடைக்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து அந்த சிறையில் சி-வோன் என்பவன் அடைக்கப்படுகிறான். பறவைகளை குறித்து அவன் பேசும் வார்த்தைகள், தனது பாதுகாப்பில் இருந்து இறந்தவனின் வார்த்தைகளும் ஒன்றாய் இருக்க பியூன் சி-வோனின் உதவியை நாடுகிறான். 

போராட்டக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க கார்ப்ரேட் நிறுவனம் பயிற்சி கொடுத்ததை, அதற்காக தங்களை தயார்ப்படுத்தியதையும் சி-வோன் கூறுகிறான். இதற்கு பின்னால் கார்ப்ரேட் மூளை மட்டுமல்ல, அவனது சீனியர் வக்கீல் சூழ்ச்சியும் இருக்கிறது என்பதை ப்யூன் தெரிந்து கொள்கிறான். 

ப்யூன் சிறையில் இருந்த ஐந்து வருடக்காலத்தில் குழப்பத்தை விளைவித்த கார்ப்ரேட் நிறுவனம் நகரத்தின் முக்கியமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவனது சீனியர் வக்கீல் விருப்ப ஓய்வு பெற்று அரசியல் களத்தில் குதித்து தேர்தலை சந்திக்கும் முக்கிய வேட்பாளராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறையில் இருந்தப்படி சி-வோன் உதவியோடு ப்யூன் தனது வக்கில் மூளையைக் கொண்டு எப்படி வெளியே வருகிறான் என்பது தான் மீதி கதை. 

ஆரம்பச் சிறைக்காட்சிகளும், சிறை வார்டனிடம் நல்லப் பெயர் எடுக்கும் காட்சியை பார்க்கும் போது ஆங்கிலப்படமான் ’ The Shawshank Redemption’ உங்கள் நினைவுக்கு வரலாம். அதேப் போல் தன் மீது இருக்கும் கொலைப்பழியை நீக்குவதற்கு சிறையில் இருப்பவனின் உதவியை நாடுவதையும் நினைவுக்கு வரும். 

The Shawshank Redemption பாதிப்பு பல இடங்களில் தெரிந்தாலும் 2016ல் தென் கொரியாவில் வெளியான பட வசூலில் A Violent Prosecuter இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த கமர்ஷியல் படமாக இந்தப்படம் விளங்குகிறது. 

இனிமே கொரியன் காரன் காப்பி அடிக்கமாட்டான் என்று யாராவது சொல்லுவீங்களா ?

Thursday, July 6, 2017

Sairat (2016 – Marathi )

ஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என்று தெரியவில்லை. ) 

படத்தின் பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் இதைக் குறித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே மீள முடியும். அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம். 

முதல் பாதி முழுக்க சாதாரண கல்லூரி காதல் படம் போல் நகர்கிறது. அவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, வழக்கமான காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆந்திராவில் ரோட்டுக்கடை அம்மாவிடம் அடைக்களமாகிறார்கள். அதன்பின் அவர்கள் வாழும் வாழ்க்கையும், இறுதி முடிவும் அனைவரையும் இந்தப்படம் பேச வைத்திருக்கிறது. 



ஜாலியான கமர்ஷியல் படமாக தொடங்கி, கொஞ்சம் எதார்த்தப்படமாக நகர்ந்து, முகத்தில் அறையும் அரசியல் படத்தின் முடிவாக முடிகிறது. எல்லாத்தரப்பினருக்கு திருப்தி தரும்படியான ஒரு காதல் காவியமாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப்படம் வெற்றிப்பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். 

ஒட்டுமொத்தப்படத்தை தூக்கி நிறுத்துவது படத்தின் நாயகி தான். பொதுவாக, காதல் கதையென்றால் ஆண் பாத்திரம் முன்னிருத்தப்படும். காதலி அழும்போது ஆறுதல் சொல்லும் வீர ஆண்மகனைத் தான் சினிமா காட்டியிருக்கிறது. ’சைரட்’ படத்தில் காதலனைக் காப்பாற்றும் வீரமகளாக காட்டியிருக்கிறார்கள். 

முதல் பாதியில் தனது காதலை நாயகனுக்கு தெரியப்படுத்துவதும், அண்ணனின் புல்லட் ஓட்டுவதும், காதலனை தாக்கும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்றுவதும், காவல் நிலையத்தில் ‘நான் தான் அவனை கடத்தினேன்’ என்று கத்தும்போதும் காதலில் பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது. கதைப்படி அதிகார வர்க்க சாதியில் பிறந்தப் பெண்ணாக காட்டப்படுவத்தால் தைரியமானப் பெண் என்று நினைத்தால், பிற்பாதியில் காதல் கணவனின் குணமாற்றத்தில் தடுமாறும் சராசரிப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நல்ல நிலைமைக்கு வரும் போது கணவனை தனக்கு பின் இருக்கையில் அமர வைத்து வண்டி ஓட்டும்போது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தப் பெண்ணாகவும் காட்டுகிறார். (இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடாது என்பது என்பது என் ஆவா !!) 


ஏதார்த்த இளைஞனாகவும், பிறகு சந்தேகப்படும் கணவனாகவும் நாயகன். தமிழ் சினிமாவின் நாயகிப் போல் காதலியின் காதல் பார்வையில் வேட்கப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கும் பாத்திரம். 

முதல் பாதி முழுக்க காதல், மோதல், செண்டிமெண்ட். இரண்டாம் பாதி முழுக்க வீட்டை விட்டு ஓடிவந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறது. பல பிரச்சனையில் இருந்து மீண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு… நமக்கு தெரிந்த அரசியலாக மாறுகிறது. 

கமர்ஷியல் படம் போல் தான் இருந்தாலும், சில காட்சியில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் முகத்தை கிழிக்கிறார் இயக்குனர். பூங்காவில் காதலர்களை தண்டிப்பதாக இருக்கும், இறுதிக்காட்சியும் ஒரு அரசியல் படத்திற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஓடி வந்த காதலர்கள் சமூகத்தில் என்ன பிரச்சனை சந்திப்பார்கள், அவர்களது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது. 

சைரட் 100 கோடிக்கு மேல் வசூலான முதல் மராத்திப் படம். கன்னடத்திலும் ரீ-மேக்கில் இதில் நடித்த நாயகி தான் கன்னடத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தி ரீ-மேக் உரிமையை கரன் ஜோஹர் வாங்கியிருக்கிறார். 

உண்மையில் வேற்றுமொழிப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வராதப்படம். தமிழ் நாட்டில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக தான் இந்தப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலையும் பேசுகிறது. இதேக் கதையில் பல தமிழ் படம் வேறு வேறுவிதமாக வந்திருந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தில்லை. 

அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

Wednesday, July 5, 2017

அஜ்வா – சரவணன் சந்திரன்

நபிகள் நாயகம் உண்ட பழத்தின் பெயரான ‘அஜ்வா’ பெயர் தாங்கி நாவல் பழமாக வந்திருக்கிறது. 

சென்னை புத்தகக் கண்காட்சியில் பல வாசக நண்பர்களிடம் ஜீவ கரிகாலன் “அஜ்வா” நாவலை பற்றி சொல்லும் போது எனக்கும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் ‘அஜ்வா’ வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 


போதை மருந்து உட்கொள்பவனும், அவனை சுற்றி நடக்கும் உலகமான கதையில் நம்மை அறியாமல் போதை மருந்து மீது விருப்பத்தை வளர வைக்கிறார். போதை மருந்துக்கும், குடிப் போதைக்கும் கொடுக்கும் ஒப்பீடு ரசிக்க முடிகிறது. ஆனால், கருத்தளவில் என்னால் ஏற்க முடியவில்லை. 

”எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக பெருதன்மையுடன் நடந்துகொள்வதும் பழிவாங்கும் உணர்ச்சிதான்.” இப்படி பல இடங்களில் பாத்திரங்கள் பேசும் வசனம் போதை மருந்தை உண்பதற்கான பல நியாயங்களை கற்பிக்கிறது. 

குறிப்பாக 16வது அத்தியாயத்தில் கிண்டி சமாதியில் போதை மாஃபியா எப்படி இயங்குகிறது சொல்கிறார். 

80களில் சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” குடிப்போதையில் பாதிக்கப்பட்ட தியாகு பாத்திரத்தை பேசியதோ, போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கையை பேசுவதில் “அஜ்வா” முக்கிய நாவலாக திகழ்கிறது. 

வாழ்த்துகள் சரவணன் சந்திரன் !! 

இணையத்தில் வாங்க...

LinkWithin

Related Posts with Thumbnails