வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, September 28, 2017

Blind ( Korean Thriller - 2011)

பிரபுதேவா, கார்த்திக் நடித்த “உள்ளம் கொள்ளை போகுதே” படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காவல் அதிகாரி கண் பறிப்போன விவேக்கிடம், “மின்னல்ல அடிப்பட்டவன் உயிருக்கு போராடிட்டு இருக்கான். அவன் செத்தா நீ தான் Eye witness” என்பார். அதற்கு விவேக், “Eye இல்லடா. என்ன எப்படிடா Eye witness சொல்லுறீங்க?” என்பார். 

அந்த நகைச்சுவைக் காட்சி தான் இந்தப் படத்தின் த்ரிலாரான ஒன் – லைன். பார்வையற்ற பெண் ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக இருக்கிறாள். அதனால், அவளை தொடர்ந்து கொலை செய்யும் முயற்சிகள் நடக்கிறது என்பது தான் கதை. 



நகரத்தில் மர்மமான முறையில் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் சடலம் கூட கிடைக்கவில்லை. பெண்களை கடத்தும் மர்மமான நபரைக் குறித்து எந்த தடயமும் கிடையாது. இந்த நிலைமையில் பார்வையற்ற நாயகியை அவன் கடத்த முயற்சிக்க, அதில் இருந்து அவள் தப்பிக்கிறாள். அவளுக்கு பதிலாக வேறு ஒரு பெண் கடத்திவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான் மர்ம மனிதன். அந்த கடத்தலுக்கு சாட்சியாக அந்தப் பெண் இருக்கிறாள். 

கடத்தியவன் ஒரு சைகோ கொலைகாரன். கடத்திய பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்பவன். பார்வையற்றப் பெண் தனக்கு எதிரான சாட்சியாக இருப்பதால் அவளை கொலை செய்ய முயற்சிக்கிறான். அவளைப் பற்றி எல்லா விபரமும் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அவளை தொடர்ந்து கண்காணிக்கிறான். 

காவலர்களுக்கும் நடந்த சம்பவத்திற்கு இவள் மட்டுமே சாட்சியாக இருப்பதால், அவள் கூறும் தகவலை வைத்து ’சைகோ’ கொலைக்காரனை கண்டுப்பிடிக்க முயற்சிக்கிறார்கள். 

பார்வையற்ற அந்தப் பெண்ணின் உதவியோடு காவலர்கள் சைகோ கொலைக்காரனை எப்படி பிடிக்கிறார்கள் ? சைகோவிடம் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறாள் ? என்பது தான் விறுவிறுப்பான திரைக்கதை. 

ஆரம்பக் காட்சியிலையே தனது தம்பியையும், பார்வையையும் இழக்கும் நாயகியைக் காட்டிவிடுகிறார்கள். அவளின் வேலைக்கொண்டே அவளின் தனித்தன்மை எதுவென்று நமக்கு புரிகிறது. 

கொலைக்காரன் நாயகியை கடத்தும் முயற்சியில் இருந்து படம் வேகமாக நகர்கிறது. தம்பி செண்டிமெண்ட் காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. 

பார்வையற்றப் பெண் எப்படி நடந்துகொள்வார் என்பதை Kim Ha-neul தனது நடிப்பால் ஒவ்வொரு காட்சியும் புரிய வைக்கிறார். பார்வையற்றவர்கள் எந்த மாதிரியான சாதனங்கள் பயன்படுத்துவார்கள், சில கருவிகள் அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும், அதிர்வுகளை வைத்து எப்படி உணர்வார்கள் என்பதை நம்பும் படியான காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. 

அதேப் போல், டெலிவரி பாய், காவல் அதிகாரியின் நடிப்பு கனக்கச்சிதம். காவல் அதிகாரி நாயகியிடம் அசடு வளிவதும், பேசும் போது வியப்பதும் அவனுள் இருக்கும் மெல்லிய காதல் தெரிகிறது. 

இரயில் நிலையத்தின் நடைப்பாதையில் ஒரு நேர்கொட்டில் மட்டும் சதுரங்க கல் வைத்து வெள்ளைநிறத்தில் பையிண்ட் அடித்திருப்பார்கள். எதோ அழகுக்கான செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், பார்வையற்ற மாற்றுதிறனாளிக்கானது என்பதில் அவள் சைகோ கொலைக்காரனிடம் தப்பிக்கும் காட்சியில் உங்களுக்கு புரியும். 

பார்வையற்றவர்களுக்காக இரயில் நிலையத்தில் ஒரு பாதை இருக்கிறதா? நாங்கள் கவனித்ததில்லையே ? என்ற நீங்கள் வியக்கலாம். நாயகி தப்பிக்கும் பரப்பரப்பான காட்சியை பார்த்தப் பிறகு செண்டரல் ரயில் நிலையம் தவிர ஒரு சில இரயில் நிலையத்தில் தேடிப் பார்த்தேன் கண்ணில் இல்லை. பெரு நகர பஸ் நிலையிலோ ரயில் நிலையத்தில் பார்வையற்றவர்களுக்கான பாதை என்று நாம் இதுவரை யோசித்திருக்கிறோமா என்பதை இந்தக் காட்சி நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. 

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படத்தில் பார்வையற்றப் பெண் உலகத்தை இந்தப் படம் அழகாக காட்டியிருக்கிறது. இதுவரை தனக்கான உலகமாக இருந்தது, பார்வை பரிப்போனதும் தன்னை அந்நியமாகப் பார்க்கும் வலியை நாயகியின் பாத்திரம் உணர்த்துகிறது. தம்பி செண்டிமெண்ட்டோடு சொல்லியிப்பதால் நம்மை படத்தை ஒன்ற செய்கிறது. 

அவசியம் பார்க்க வேண்டிய த்ரில்லர் செண்டிமெண்ட் படம்.

Wednesday, September 20, 2017

கமலின் தனி கட்சி ?

ஒரு காலத்தில் கமல் அரசியலுக்கு வருவார். கமல் தனிக் கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் கமலுக்கு கூட இருந்திருக்காது. ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் பார்த்தால் கமல் அரசியலுக்கு வந்தால் அவர் தொடங்கும் கட்சியின் Agenda என்னவாக இருக்கும் என்பதில் இதை எழுதிகிறேன். 



முதல் Agenda. தேர்தலில் போட்டியிடும் கட்சியாக இருக்காது. அதாவது, அவர் தொடங்கும் கட்சி அரசியல் கட்சியாக இருக்காது. ஒரு இயக்கமாக இருக்கும். 

தேர்தல் அரசியலில் வராததற்கு எதற்காக கட்சி தொடங்க வேண்டும் ? என்ற கேள்வி வரலாம். 

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில், “தேர்தல் அரசியல் போட்டியிட்டால், நாம் யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களோடு சமரசம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். அதனால், தனது தி.க இயக்கம் தேர்தல் அரசியலில் போட்டியிடாது” என்றார். இன்று வரை, தி.கவினர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எந்த தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டதில்லை. 

கமல் தனது பல பேட்டிகளில் இதை தான் குறிப்பிட்டுவருகிறார். “தமிழகத்தில் ஆளும் வர்க்கத்தை கேள்விக் கேட்கும் சக்தி வாய்ந்த இயக்கம் இல்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர் இல்லை”. 


இரண்டாவது Agenda. மக்களை ஆளும் அதிகாரம் தேவையில்லை. மக்களோடு மக்களாக அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை. 

கமல் அரசியல் அதிகாரத்தை விரும்புபவராக தன்னை காட்டியதில்லை. மற்ற நடிகர்களை போல் தனது படத்தில் ஏழை பங்காளனாகவோ, நல்லவனாகவோ, உத்தப்புத்திரனாகவோ காட்டிக்கொண்டதில்லை. தனது சொந்த வாழ்க்கையை கூட திறந்தப் புத்தகமாகவே வாழ்ந்திருக்கிறார். கட்சி தொடங்கி முதல்வர் ஆசையெல்லாம் கமலுக்கு இருக்காது என்று நம்புகிறேன். 

கமல் தொடங்கும் இயக்கம் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை கேள்வி கேட்கும் முதல் குரலாக இருக்கும் என்று கூறலாம். இன்று பலர் தங்கள் அரசியல் அதிகார அதிருப்தியை சமூக வலைதளங்கள் எதோ ஒரு வகையில் பதிவு செய்துவருகிறார்கள். அதை ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று தேவைப்படுகிறது. அதை கமல் மேற்கொள்ளலாம். 


மூன்றாவது Agenda. எப்போதும் கமல் சொல்வது தான். ஒரு இந்திய குடிமகனாக சரியாக வரி கட்ட வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டும். 

கமல் தொடங்கவிருக்கும் இயக்கம் இதை முன்மொழியும். அதற்கானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். 

கமல் தேர்தல் அரசியல் தவிர்த்து அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இயக்கமாக இருந்தால் பலர் அவருக்கு ஆதரவாக வருவார்கள். அவரும் தேர்தல் அரசியலில் குதிக்கும் கட்சியாக இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருப்பார். 

** 

ஆக கமல் தொடங்கும் இயக்கம் (கட்சி அல்ல)….. ஆளும் கட்சி யாராக இருந்தாலும் (அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க இன்னும் பல) அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் குரலாக இருக்கும் இயக்கத்தை தான் தொடங்குவார் என்பது என் கணிப்பு. 

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் அரசியலில் கோடிக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும். பொதுகூட்டம், பிரச்சாரம், போஸ்டர் என்று ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கிறது. அதற்கு பல கோடிகள் தேவைப்படுகிறது.

கமல் அப்பழுக்கற்ற, 100% உண்மையான கலைஞன். கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் தேர்தலுக்கு செலவு செய்யமாட்டார். ’மருதநாயகம்’ படம் தான் எடுப்பார்.

Wednesday, September 13, 2017

Slow Video ( 2014 - Korean )

உலகமே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் மெதுவாக செயல்பட்டால் உங்களை என்ன சொல்வார்கள் ? சோம்பேறி என்று சொல்லும். முன்னேற்றத்தில் அக்கரை இல்லாதவன் என்று விமர்சனம் செய்யும். இப்படி இருக்கும் போது ஒருவரின் பார்வை மெதுவாக இருந்தால் என்னவென்று சொல்வீர்கள்.

 என்னது… பார்வை மெதுவாக இருக்குமா ? புரியவில்லையா ? நீங்கள் ஒரு வீடியோவை Slow ( ¼) play செய்து பார்த்தால் எப்படி இருக்கும் ? ஒரு நொடிக்கு செல்ல வேண்டிய காட்சி நான்கு நோடிக்கு மெதுவாக செல்லும். வேகமாக செல்லும் 100 கிலோமீட்டர் வாகனம் 25 கி.மீ வேகத்தில் செல்வது போல் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கிரிக்கெட் மேட்ச்சை Action Replay வேகத்தில் அவர்களின் பார்வை இருக்கும். 

இது சூப்பர் பவராச்சே !!! கிரிக்கெட் வீரனாக இருந்தால் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்து தள்ளலாம். விரைவாக செல்லுவதை எதையும் நினைவில் வைத்துகொள்ளலாம். இப்படிப்பட்ட பார்வை கொண்டவன் தான் Slow Video படத்தின் நாயகன். ஆனால், அவனை சூப்பர் பவர் கொண்டவனாக படத்தில் காட்டவில்லை என்பது தான் திரைக்கதை.



பார்க்கும் காட்சிகள் அனைத்தும் ‘Slow’ வாக தெரிவதால் பள்ளியில் ஜங்-பூவை ‘Slow Video’ என்று கேலி செய்கிறார்கள். அதனாலே அவனுக்கு பள்ளியில் நண்பர்கள் இல்லை. போங்-சூமி என்னும் சிறுமி மட்டும் அவனிடம் நல்ல தோழியாக பழகுகிறாள். அவளிடம் பழகும் போது அவன் பார்வைக்கு மெதுவாக நகர்வதால், அந்த மகிழ்ச்சியான பொழுதை அவனால் நினைவில் வைத்து வரைய முடிகிறது. அதை அவளுக்கு பரிசாக கொடுக்கிறான். நாளாக நாளாக போங்-சூமிக்கு அவனை பிடிக்காமல் போக அவளும் அவனை விட்டு பிரிகிறாள். 

இப்போது, ஜங்-பூ முப்பது வயது இளைஞனாக CCTV கண்ட்ரோல் செண்டரில் வேலை செய்கிறான். நகரத்தில் குற்றம் செய்து தப்பிக்கும் குற்றவாளிகளை CCTVவில் பார்த்து காவலர்களுக்கு தகவல் கொடுக்கும் வேலை. ஜங்-பூ பார்வைக்கு மெதுவாக காட்சி தெரிவதால் குற்றவாளிகள் எவ்வளவு வேகமாக வண்டியில் சென்றால் கூட அவன் பார்வைக்கு சீக்கிவிடுவார்கள். அவன் பார்வைக்கோளாறு அவனின் வேலைக்கு உதவியாக இருக்கிறது. 

ஒரு நாள் தனது பள்ளி தோழியான போங்-சூமியை CCTV காமிராவில் பார்க்கிறான். CCTVல் அவளை கண்காணிக்கிறான். பிறகு அவளை பின் தொடர்கிறான். அதன் பின் என்ன நடந்தது என்பது திரையில் பார்க்கவும்.

ஆரம்பக்காட்சியில் ஒரு பெண் ஸ்கர்ட் மேல பறக்க, அந்த பெண் ஸ்கர்ட்டை கால் வரை மூட சிறுவனான நாயகன் பார்வைக்கு அந்த காட்சி மெதுவாக தெரியும். சூப்பர் பவர் கொண்ட நாயகன் படம் , நகைச்சுவை படம் என்று எதிர்பார்த்தால், நமது எதிர்ப்பார்பை உடைக்கிறது. 

நாயகனுக்கு இருப்பது சூப்பர் பவர் அல்ல , பார்வைக் கோளாறு என்று அவர்கள் காட்டும் அடுத்த அடுத்த காட்சி நமக்கு உணர்த்துகிறது. அதனால், நாயகன் தனக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துகொள்கிறான். மற்றவர்களிடம் உரையாடுவதை தவிர்க்கிறான். CCTVல் பார்த்த பாத்திரங்களோடு பழக்குகிறான், விளையாடுகிறான், பேசுகிறான். அவனுக்கென்று ஒரு தனி உலகம் உருவாக்கி கொள்ளும் தனிமை விரும்பியாக மாறுவதை நாம் பார்க்கும் போது அவன் மீது இரக்கம் பிறக்கிறது. 

ஆரம்பக்காட்சியில் நாயகிக்கு தெரியாமல் அவளை பின்தொடருவது போல், இறுதுக்காட்சியில் நாயகனுக்கு தெரியாமல் நாயகி பின் தொடரும் காட்சிகள் அழகான காதல் காட்சியாக இருக்கிறது. 

திரைக்கதை எந்த விஷயத்தை தூக்கிப்பிடித்து காட்டுகிறதோ அந்த விஷயம் தான் பார்வையாளன் மனதில் பதியும். பார்வை பிரச்சனையை சூப்பர் பவராக காட்டமால், ஒரு மாற்று திறனாளிக்கு இருக்கும் தாழ்வுமான்மையை காட்டும் போது அந்த சூப்பர் பவரில் இருக்கும் வலி புரிகிறது. இதுப்போன்ற வலிகளை Spiderman, Superman படங்களின் நாயகர்களை பார்த்திருப்போம். ஆனால், அடுத்த அடுத்த Action காட்சிகள் நாயகனின் வலியை நமக்கு புரியாமல் இருக்கும். 

மற்றவர்கள் போல் இயல்பாக இல்லாமல் இருப்பது வரம் அல்ல… சாபம் என்பதை தான் நாயகன் பாத்திரம் காட்டுகிறது. அதை விட மிக முக்கியமான விஷயம், இந்த உலகத்தில் நாம் என்வாக இருந்தாலும் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நம்மை நேசித்துகொண்டு தான் இருப்பார்கள் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. 

ஒரு நல்ல Feel good love story படம். அவசியம் பார்க்கவும்.

LinkWithin

Related Posts with Thumbnails